Saturday, December 24, 2016

03.04.025 - சிவன் - கடல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-13

3.4.25 - சிவன் - கடல் - சிலேடை

-------------------------------------------------------

வந்து புகுவார் மலத்தினைப் போக்குவதால்

சுந்தரத் தோற்றத்தால் காதலிப்பார் சிந்தை

கவர்வதால் தாங்கும் கலத்தினால் இங்கே

சிவனலை ஆர்க்கின்ற சிந்து.


சொற்பொருள்:

மலம் - 1. அழுக்கு; / 2. மும்மலங்கள்; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.13 - "தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்");

தோற்றம் - 1. காட்சி; / 2. வேடம்; உருவம்;

சிந்தை - மனம்; எண்ணம்;

தாங்குதல் - சுமத்தல்;

கலம் - 1. கப்பல்; படகு; / 2. பாத்திரம்;

ஆர்த்தல் - ஒலித்தல்;

சிந்து - கடல்;


கடல்:

வந்து புகுவார் மலத்தினைப் போக்குவதால் - (அதனுள்) புகுந்து குளிப்பவர்களுடைய அழுக்கைப் போக்கும்.

சுந்தரத் தோற்றத்தால் - பார்க்க மிக அழகான காட்சியாய் இருக்கும்.

காதலிப்பார் சிந்தை கவர்வதால் - காதலிப்பவர்களுடைய மனத்தைக் கவரும். (அவர்கள் கடற்கரையை விரும்புவார்கள்).

தாங்கும் கலத்தினால் - அது கப்பலைத் தாங்கும்.

இங்கே அலை ஆர்க்கின்ற சிந்து - இப்பாடலில், அலை ஒலிக்கின்ற கடல்;


சிவன்:

வந்து புகுவார் மலத்தினைப் போக்குவதால் - அவனைத் தஞ்சம் புகுவாரது மும்மலங்களைப் போக்குவான்.

சுந்தரத் தோற்றத்தால் - அழகிய திருவேடம் கொள்வான்.

காதலிப்பார் சிந்தை கவர்வதால் - பக்தர்களுடைய மனத்தைக் கவர்வான்.

தாங்கும் கலத்தினால் - பிச்சைப் பாத்திரத்தை (நான்முகனது மண்டையோட்டை) ஏந்துவான்;

இங்கே சிவன் - இப்பாடலில், சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment