Saturday, December 24, 2016

03.04.031 - சிவன் - மேகம் - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-18

3.4.31 - சிவன் - மேகம் - சிலேடை - 1

-------------------------------------------------------------

கருநிறமும் வெண்ணிறமும் காண நினைத்த

உருவம் எடுத்தே உயரத் திருப்பதால்

ஆலத்தை ஆர்ந்துதிகழ் கோலத்தால் மூவிலைச்

சூலத்தன் தண்முகில் சொல்.


சொற்பொருள்:

ஆலம் - 1. நீர்; / 2. விடம்;

ஆர்தல் - உண்தல்;

கோலம் - அழகு; வடிவம்;


மேகம்:

கருநிறமும் வெண்ணிறமும் காண - சில சமயம் கருமையாகவும், சில சமயம் வெண்மையாகவும் தோன்றி;

நினைத்த உருவம் எடுத்தே - (பார்ப்பவர்கள்) நினைத்த உருவமாகத் தோன்றி;

உயரத்து இருப்பதால் - உயரத்தில் இருப்பதால்;

ஆலத்தை ஆர்ந்து திகழ் கோலத்தால் - நீரை உண்டு விளங்குகின்ற வடிவத்தால்;

தண்முகில் சொல் - குளிர்ச்சி பொருந்திய மேகம் என்று கூறு.


சிவன்:

கருநிறமும் வெண்ணிறமும் காண - (கழுத்தில்) கரிய நிறமும், (திருநீற்றுப் பூச்சால்) வெண்ணிறமும் மேனியில் தோன்றும். (அர்த்தநாரீஸ்வரனாக வலப்புறம் திருநீற்றால் வெண்ணிறமும் இடப்புறம் உமையம்மையின் கருநிறமும் காட்டுவான்);

நினைத்த உருவம் எடுத்தே - தான் நினைத்த வடிவம் எடுப்பவன். (பக்தர் எவ்வுருவை வழிபடுகின்றார்களோ அவ்வுருவில் தோன்றுவான்);

உயரத்து இருப்பதால் - வானில் (விண்ணுலகில்) இருப்பவன். மிகவும் உயர்ந்தநிலையில் இருப்பவன்;

ஆலத்தை ஆர்ந்து திகழ் கோலத்தால் - விடத்தை உண்டு (அழியாமல்) விளங்குகின்றவன்; விடத்தை உண்டு விளங்கும் அழகிய நீலகண்டம் உடையவன்;

மூவிலைச் சூலத்தன் சொல் - மூன்று இலை போன்ற நுனிகளையுடைய திரிசூலத்தை ஏந்தியவன் என்று கூறு.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment