Saturday, December 24, 2016

03.04.030 - சிவன் - புல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-17

3.4.30 - சிவன் - புல் - சிலேடை

-------------------------------------------------

உண்டியிட ஓடும் எருதும் விரும்பியங்கே

கண்டவிடம் தோன்றும் களையென்று விண்டுமக்கள்

உச்சிமேல் கொள்வரே கட்டுகளை நாதனொரு

பொச்சம் இலாவரன் புல்.


சொற்பொருள்:

உண்டி - 1. Food of birds and beasts in general; பறவை முதலியவற்றின் இரை; / 2. உணவு; சோறு;

விரும்பி - 1. ஆசைப்பட்டு; / 2. விரும்புபவன்; (சூடி - சூடியவன், என்பது போல்);

அங்கே - 1. அந்த இடத்திற்கு; / 2. அசைச்சொல்;

கண்டவிடம் - 1. கண்ட இடம்; / 2. கண்ட விடம்;

களை - 1. களைச்செடி; / 2. அழகு; குற்றம்;

விள்ளுதல் - சொல்லுதல்;

உச்சி - தலை;

கொள்தல் - 1. வைத்துக்கொள்ளுதல்; / 2. நன்கு மதித்தல்; கொண்டாடுதல்;

கட்டு - 1. Bundle, packet, pack, bale; மூட்டை / 2. பந்தம்;

களைதல் - நீக்குதல்;

பொச்சம் - குற்றம்; பொய்;


புல்:

உண்டி இட ஓடும் எருதும் விரும்பி அங்கே - (மாட்டுக்கு) உணவாகும் அதனை இட, (அது கண்டு, உண்ண) விரும்பி எருதும் அந்த இடத்திற்கு ஓடும்.

கண்ட இடம் தோன்றும் களை என்று விண்டு மக்கள் - எல்லா இடத்திலும் முளைக்கும் களை என்று மக்கள் சொல்லி;

உச்சிமேல் கொள்வரே கட்டுகளை - (அப்புல்லை வெட்டி, அந்தப் புல்லின்) கட்டுகளைத் தலைமேல் சுமப்பர்.

புல் - புல்.


சிவன்:

உண்டி இட ஓடும் எருதும் விரும்பி - (பிறர் பிச்சை) உணவை இடுவதற்காகக் கையில் ஓடு ஏந்துவதையும், (தன் வாகனமாக ஒரு) எருதையும் விரும்புபவன்.

அங்கே கண்ட விடம் தோன்றும் - (அவனது) கண்டத்தில் உள்ள விஷம் (நீலமணியாகத்) தென்படும்.

களை என்று விண்டு மக்கள் உச்சிமேல் கொள்வரே - (அதனை) அழகு என்று பக்தர்கள் சொல்லித் (தங்கள் கரங்களைத்) தலைமேல் வைத்துக் கும்பிடுவார்கள். (-அல்லது- மிகவும் போற்றி மனத்தில் இருத்திக்கொள்வார்கள்).

கட்டு களை நாதன், ஒரு பொச்சம் இலா அரன் - (அடியார்களது) பந்தத்தை நீக்கும் நாதன், எவ்விதக் குற்றமும் இல்லாத ஹரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment