Saturday, December 24, 2016

03.04.026 - சிவன் - மாட்டுவண்டி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-14

3.4.26 - சிவன் - மாட்டுவண்டி - சிலேடை

--------------------------------------------------------------------

எருதூர்தி இட்டம்போல் இங்குமங்கும் சென்று

வரும்காட்சி யும்கிட்டும் மக்கள் பருகுவரின்

பச்சிறு மாபொருள் வையார் அறிவுடையோர்

மெச்சுவண்டி வான்கயிலை வேந்து.


சொற்பொருள்:

ஊர்தி - 1. வாகனம்;

இட்டம் - இஷ்டம்;

இங்குமங்கும் - 1. பல இடங்களுக்கும்; / 2. பூலோகமும் வானுலகமும்;

மக்கள் - 1. குழந்தைகள்; / 2. மனிதர்கள்;

பருகுதல் - அனுபவித்தல்;

இன்பு - இன்பம்;

அச்சிறு மாபொருள் - 1. அச்சு இறும் மா பொருள்; அச்சு இறுமா பொருள்; / 2) அச் சிறு மா பொருள்;

இறுமா - இறுமாறு - இறும்படி;

இறுதல் - முறிதல்;

மா - பெரிய;

வையார் - 1. வைக்கமாட்டார்கள்; (வைத்தல்) / 2. இகழமாட்டார்கள் (வைதல்);

மெச்சுதல் - புகழ்தல்;

வேந்து - மன்னன்; இறைவன்;

இலக்கணக் குறிப்பு: "செய்யும்" என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள "உம்" விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.


மாட்டுவண்டி:

எருதூர்தி - காளைமாட்டைக் கொண்டு இயங்கும் வாகனம்.

இட்டம் போல் இங்கும் அங்கும் சென்று வரும் காட்சியும் கிட்டும் - (வண்டியோட்டியின்) விருப்பம் போல அங்குமிங்கும் போய்வரும் காட்சியைக் காணலாம்;

மக்கள் பருகுவர் இன்பு - (அவ்வண்டியில் சென்றால்) குழந்தைகளுக்கு இன்பம் உண்டாகும்;

அச்சு இறுமா பொருள் வையார் அறிவுடையோர் - அறிவுள்ளவர்கள் வண்டியின் அச்சு முறியும்படி பெரும்பொருளை ஏற்றமாட்டார்கள்;

(அறிவுடையோர்) மெச்சு வண்டி - (இவை சுற்றுப்புறத்தை அதிகம் மாசுபடுத்தாமையால், அறிஞர்கள்) புகழ்கின்ற மாட்டுவண்டி;


சிவன்:

எருதூர்தி - இடபவாகனம் உடையவன்;

இட்டம் போல் இங்கும் அங்கும் சென்று வரும் - தன் திருவுள்ளம்போல் எவ்வுலகிற்கும் சென்றுவருவான்;

காட்சியும் கிட்டும் மக்கள் பருகுவர் இன்பு - அவன் தரிசனம் கிட்டும் மக்களுக்குப் பேரின்பம் வரும்;

அச்-சிறு மா பொருள் வையார் அறிவுடையோர் - அந்த நுண்மையும் பெருமையும் உடைய மெய்ப்பொருளை அறிவுடையோர் இகழமாட்டார்கள்; (சம்பந்தர் தேவாரம் - 2.20.8 - "பெரியாய் சிறியாய் பிறையாய்");

(அறிவுடையோர்) மெச்சு வான்-கயிலை வேந்து - அறிவுடையோர் புகழ்கின்ற, அழகிய கயிலைமலைக்கு இறைவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment