Monday, September 17, 2018

04.51 – சிவசைலம்


04.51சிவசைலம்



2014-02-15
சிவசைலம்
-------------------------------------------
(கலிவிருத்தம் - 'விளம் காய் விளம் காய்' என்ற வாய்பாடு;
விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி காய்ச்சீரும் வரலாம்.)
(சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்");
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப்");



1)
வெண்பிறை விடநாகம் வேணியில் அணிவோனே
கண்புனை நுதலானே கடுவினை தீர்த்தருளாய்
பண்பயில் மொழிமாது பரமகல் யாணியொடும்
தெண்புனற் கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.



* சிவசைலத்தில் இறைவன், இறைவி திருநாமங்கள் - சிவசைலநாதர், பரம கல்யாணி;
விடநாகம் - விஷமுடைய நாகப்பாம்பு;
வேணி - சடை;
நுதல் - நெற்றி;
கடுவினை - கொடிய வினை;
தெண் புனல் - தெளிந்த நீர்;
கடனா - சிவசைலத்தில் ஓடும் நதியின் பெயர்;
அமர்தல் - விரும்புதல்; உறைதல்;



2)
வரைதனை வளைவித்து மாற்றலர் புரமெய்தாய்
அரைதனில் அரவார்த்தாய் அயன்தலைப் பலிகொள்வாய்
குரைகழல் தொழுவேன்றன் கொடுவினை தீர்த்தருளாய்
திரைமலி கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.



வரைதனை வளைவித்து மாற்றலர் புரம் எய்தாய் - மலையை வில்லாக வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவனே; (வரை - மலை); (மாற்றலர் - பகைவர்); (வளைவித்தல் - வளைத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.2 - "மலையார் சிலையா வளைவித் தவனே" - மலையை வில்லாக வளைத்தவனே);
அரைதனில் அரவு ஆர்த்தாய் - பாம்பை அரைணாகக் கட்டியவனே; (ஆர்த்தல் - கட்டுதல்);
குரைகழல் தொழுவேன்றன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியைத் தொழும் என்னுடைய;
கொடுவினை - கொடிய வினை;
திரைமலி கடனாபாய் - அலைகள் மிக்க கடனா நதி பாய்கின்ற; (திரை - அலை);



3)
சாம்பலை உடற்பூசித் தாளிணை தனையென்றும்
ஓம்பிடும் ஒருமாணி உயிர்க்குறு துணையானாய்
பாம்பணி மணிமார்பா பழவினை தீர்த்தருளாய்
தேம்புனற் கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.



சாம்பல் - திருநீறு;
ஓம்புதல் - போற்றுதல்;
பாம்பு அணி மணி மார்பா - பாம்பை மாலையாக அழகிய மார்பில் அணிந்தவனே;
தேம்புனல் - இனிய நீர்;



4)
வாயினில் தமிழ்மாலை மறப்பிலா அடியார்க்குத்
தாயினும் நல்லவனே சங்கரா ஒருகண்ணில்
தீயினை உடையானே தீவினை தீர்த்தருளாய்
சேயிழை ஒருகூறா சிவசைலம் அமர்ந்தவனே.



தமிழ்மாலை - தேவாரம், திருவாசகம், முதலியன;
மறப்பிலா - மறப்பு இலா - மறத்தல் இல்லாத;
சேயிழை - பெண் - உமையம்மை;
ஒருகூறா - ஒரு கூறனே - ஒரு பங்காக உடையவனே;



5)
வான்மனம் மிகவாடி வணங்கிட விடமுண்டாய்
மான்மறி மழுவேந்தீ மதகரி உரிமூடீ
பான்மதிச் சடையானே பழவினை தீர்த்தருளாய்
தேன்மலி பொழில்சூழ்ந்த சிவசைலம் அமர்ந்தவனே.



வான் - தேவர்கள்;
மான்மறி மழுவேந்தீ - மான்கன்றையும் மழுவையும் ஏந்தியவனே;
மதகரி உரிமூடீ - ஆண்யானையின் தோலைப் போர்த்தவனே;
பான்மதிச் சடையானே - பால் போன்ற வெண்ணிறப் பிறைச்சந்திரனை சடையில் அணிந்தவனே;
தேன் - வாசனை; வண்டு;



6)
கூனணி மதிநாகம் கூவிளம் புனைவோனே
மானன விழிமாது மருவிய மணவாளா
கானகம் தனிலாடீ கடுவினை தீர்த்தருளாய்
தேனறை பொழில்சூழ்ந்த சிவசைலம் அமர்ந்தவனே.



கூன் அணி மதி, நாகம், கூவிளம் புனைவோனே - வளைந்த அழகிய சந்திரனையும், பாம்பையும், வில்வத்தையும் சூடியவனே; (கூன் - வளைவு); (அணி - அழகு; அணிதல் - பொருந்துதல்); (கூவிளம் - வில்வம்);
மான் அன விழி மாது மருவிய மணவாளா - மான் போன்ற விழியையுடைய உமைக்குக் கணவனே; (அன - அன்ன - போன்ற); (மருவுதல் - கலத்தல்; தழுவுதல்);
கானகம் - காடு - சுடுகாடு;
ஆடீ - ஆடுபவனே;
கடுவினை - கொடிய வினைகள்;
தேன் அறை பொழில் - வண்டுகள் முரலும் சோலை; (தேன் - வண்டு);



7)
பிறையணி சடையானே பெண்ணொரு புடையானே
கறையணி மிடறானே கண்ணுதல் உடையானே
துறைபல அடைபெம்மான் தொல்வினை தீர்த்தருளாய்
சிறையளி முரல்சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.



புடை - பக்கம்;
மிடறானே - மிடற்றானே - கண்டத்தை உடையவனே;
கண்ணுதல் - நெற்றிக்கண்;
துறை பல அடை பெம்மான் - பல துறைகளால் அடையப்பெறும் பெருமானே; (துறை - வழி);
(பெம்மான் - அண்மை விளியாக வந்தது - பெம்மானே; பெருமானே);
சிறைளி முரல் சோலை - சிறகுகளையுடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் பொழில்; (சிறை - இறகு); (அளி - வண்டு);



8)
மழுவலன் உடையாய்நின் மலைபெயர் இலங்கைக்கோன்
அழுதிட விரலிட்டாய் அணிமலர்க் குழல்மாது
தழுவிய தடமார்பா பழவினை தீர்த்தருளாய்
செழுமலர் மலிசோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.



மழு வலன் உடையாய் - மழுப்படையை வலக்கையில் உடையவனே; (வலன் - வலம் - வலப்பக்கம்);
நின் மலை பெயர் இலங்கைக்கோன் அழுதிட விரல் இட்டாய் - உன் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி அம்மலையின்மேல் விரலை ஊன்றியவனே;
அணிமலர்க் குழல்மாது தழுவிய தடமார்பா - அழகிய மலர்களைக் கூந்தலில் அணிந்த உமையம்மை தழுவிய, அகன்ற மார்பை உடையவனே; (தடம் - பெருமை; அகலம்); (இராவணன் கயிலைமலையை அசைத்தபோது உமை அஞ்சி ஈசனைத் தழுவியதைச் சுட்டியது);
பழவினை தீர்த்தருளாய் - என் பழைய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
செழு மலர் மலி சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே - செழுமையான மலர்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த சிவசைலத்தில் எழுந்தருளிய சிவபெருமானே;



9)
அன்றுல களந்தானும் அணிமலர் மிசையானும்
நின்றிரு வடிவாழ்த்த நீளெரி எனநின்றாய்
உன்றனைப் பணிவேன்றன் உறுவினை ஒழித்தருளாய்
தென்றலில் மணம்வீசும் சிவசைலம் அமர்ந்தவனே.



அன்று உலகு அளந்தானும் அணிமலர் மிசையானும் - முன்பு (மஹாபலியிடம் மூவடி மண் யாசித்து) உலகத்தையே அளந்த திருமாலும், அழகிய தாமரைமலர்மேல் உறையும் பிரமனும்;
நின் திருவடி வாழ்த்த நீள் எரி என நின்றாய் - உன் திருவடியை வணங்கும்படி எல்லையின்றி நீண்ட சோதி என நின்றவனே;
உன்றனைப் பணிவேன்றன் - உன்னைப் பணியும் என்னுடைய;
உறுவினை - மிகுந்த வினைகள்; (உறு - மிக்க); (உறுதல் - இருத்தல்; மிகுதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.121.10 - "இடை மருதுகை தொழுதெழும் அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.");



10)
மெய்ம்மையை அறியாத மிண்டர்கள் விளம்பரஞ்செய்
பொய்ம்மைகள் பொருளல்ல புரிசடைப் பெருமானே
எம்மிறை என்றுகழல் ஏத்துவார்க் கருள்செல்வன்
செம்மலர் திகழ்சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.



மெய்ம்மை - உண்மை;
மிண்டர்கள் - கல் நெஞ்சர்கள்; அறிவிலிகள்;
விளம்பரஞ்செய் பொய்ம்மைகள் பொருள் அல்ல - விளம்பரம் செய்யும் பொய்கள் பொருளற்றவை ; (பொருள் - தத்துவம்; மதிக்கப்படுவது);
புரிசடைப் பெருமானே எம்மிறை என்று கழல் ஏத்துவார்க்கு அருள் செல்வன் - "முறுக்குண்ட சடையை உடைய பெருமானே எம் இறைவன்" என்று கழல் அணிந்த திருவடியைத் துதிக்கும் பக்தர்களுக்கு வரங்களை அருளும் செல்வன்; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்); ("எம்மிறை" என்பதை அண்மைவிளியாகவும் கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்); (செல்வன் - எல்லாத் திருவும் உடையவன்) ; (அப்பர் தேவாரம் - 6.87.1 - "வானவன்காண் ... சென்றடையாச் செல்வன் றான்காண் சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே"):
செம்மலர் - சிவந்த மலர்; அழகிய மலர்;



11)
முன்னடு முடிவானாய் மூளெரி வடிவானாய்
உன்னடி போற்றிடுவார் ஊழ்வினை பாற்றிடுவாய்
சென்னியில் நதியானே சிவசைலப் பதியானே
பன்னகம் அணிவோனே பதமலர் பணிவேனே.



முன் நடு முடிவு ஆனாய் - ஆதியும் இடையும் அந்தமும் ஆனவனே; (திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.8 - "முந்திய முதல்நடு இறுதியு மானாய்");
மூள் எரி வடிவு ஆனாய் - மூளும் சோதி வடிவினனே;
உன் அடி போற்றிடுவார் ஊழ்வினை பாற்றிடுவாய் - உன் திருவடிகளைப் புகழும் பக்தர்களுடைய பழவினைகளைத் தீர்ப்பவனே; (ஊழ்வினை - பழவினை); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.76.1 - "பொருவ னார்புரி நூலர் ... வாஞ்சியத் துறையும் ஒருவனார் அடி யாரை ஊழ்வினை நலியஒட் டாரே");
சென்னியில் நதியானே சிவசைலப் பதியானே - கங்காதரனே, சிவசைலத் தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.
பன்னகம் அணிவோனே பதமலர் பணிவேனே - பாம்பை அணிந்தவனே, உன் பாதமலரை வணங்குவேன். (பன்னகம் - பாம்பு );
குறிப்பு : இப்பாடலில் அடிதோறும் 2-ஆம் 4-ஆம் சீர்களிடையே எதுகை/இயைபுத்தொடை அமைந்துள்ளது.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) சிவசைலம் : பாண்டிய நாட்டுத் தலம். திருநெல்வேலி - தென்காசி இடையே ஆழ்வார்குறிச்சி அருகுள்ளது. தேவாரத்தில் 6.71.8-இல் வரும் அத்தீச்சுரம் என்ற தலம்.
இத்தல விவரங்களை இங்கே காணலாம்: http://www.sailapathiparamakalyani.com/about-tamil.html
சிவசைலநாதர் கோயில் - தினமலர தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=1867
----------- --------------

No comments:

Post a Comment