Saturday, September 15, 2018

04.40 – ஆலங்குடி (இரும்பூளை)


04.40ஆலங்குடி (இரும்பூளை)



2014-01-04
ஆலங்குடி (தேவாரத்தில் இத்தலம் 'இரும்பூளை')
---------------
(கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை மையாளொடும் உடனாகிய ருவன்....");
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா ");



1)
காலின்மிகு வானோர்விழக் கடல்நஞ்சினை உண்டான்
பாலின்மிக ஆடும்பரன் பணிமாலையன் மறைகள்
நாலின்பொருள் சனகாதியர் நால்வர்க்குரை செய்ய
ஆலின்புடை அமர்ந்தானிடம் ஆலங்குடி அதுவே.



காலில் விழுதல் - பாதத்தில் விழுந்து வணங்குதல்; புகலடைதல்;
ஆடுதல் - அபிஷேகம் செய்யப்பெறுதல்; பணி - நாகம்; ஆல் - கல்லால மரம்;
இலக்கணக் குறிப்புகள்:
1) இல், இன் - ஏழாம் வேற்றுமை உருபு; இக்காலத்தில் 'இல்' என்ற உருபே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது;
2) புணர்ச்சிவிதி : லகர ஒற்றை அடுத்து மெல்லினம் வரின், லகரம் னகரமாகத் திரியும். (காலில் + மிகு = காலின்மிகு; பாலில் மிக - பாலின்மிக);


மிகுந்த தேவர்கள் வந்து திருவடியில் விழுந்து வணங்கியபொழுது, அவர்களைக் காப்பதற்காக ஆலகால விடத்தை உண்டவன்; பால் அபிஷேகம் உடையவன்; பாம்பை மாலையாக அணிந்தவன்; நால்வேதத்தின் பொருளை சனகாதி முனிவர்களுக்கு விளக்குவதற்காகக் கல்லால மரத்தின்கீழ் அமர்ந்த தட்சிணாமூர்த்தி; அப்பெருமான் உறையும் இடம் ஆலங்குடி ஆகும்.



2)
குழலார்மொழி உமையாளொரு கூறாமகிழ் குழகன்
நிழலார்மழுப் படையோர்கரம் நிகழும்சிவ பெருமான்
அழலார்சடை அதன்மேற்பிறை அணியும்பரன் இடமாம்
அழகார்வயல் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.



குழல் - புல்லாங்குழலின் இசை; ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்;
குழகன் - இளைஞன்; அழகன்;
குழல் ஆர் மொழி உமையாள் ஒரு கூறா மகிழ் குழகன் - குழல் போன்ற இனிய மொழி பேசும் உமையை ஒரு பாகமாக விரும்பும் இளைஞன்/அழகன்;
நிழல் ஆர் மழுப்படை - ஒளி திகழும் மழுவாயுதம்; (நிழல் - ஒளி; நிகழ்தல் - விளங்குதல்; தங்குதல்);
அழல் ஆர் சடை - தீப்போன்ற செஞ்சடை; பரன் - மேலானவன்;
தாதல் - தருதல் - ஒரு துணைவினை;
அழகார்வயல் புடைசூழ்தரும் ஆலங்குடி - அழகிய வயல்கள் நாற்புறமும் சூழ்ந்த ஆலங்குடி;



3)
பிணிதீவினை தீராயெனப் பெருமான்கழல் பேணிப்
பணிவார்களுக் கருளுஞ்சிவன் படருஞ்சடை மீது
துணிமாமதி மணமார்மலர் சூடும்பரன் இடமாம்
அணியார்வயல் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.



பிணிதீவினை - பிணியையும் தீவினையையும்; பிணிக்கின்ற தீவினையை;
பேணுதல் - போற்றுதல்;
துணி மா மதி - பிளவுபட்ட அழகிய சந்திரன்; (துணிதல் - வெட்டுண்ணுதல் - To be cut, severed; துணித்தல் - வெட்டுதல் - To cut);
மணம் ஆர் மலர் - வாசனை பொருந்திய பூக்கள்;
அணி ஆர் வயல் - அழகிய வயல்கள்;



4)
கொடியாரிடை மடவாளொரு கூறாவிடம் உடையான்
துடியார்த்திடச் சுடுகாட்டிடைச் சுழலும்திரு நட்டன்
இடியார்குரல் ஏறேறிடும் இறைவன்மகிழ் இடமாம்
அடியார்பலர் வழிபாடுசெய் ஆலங்குடி அதுவே.



கொடி ஆர் இடை மடவாள் ஒரு கூறா இடம் உடையான் - கொடி போன்ற இடைய உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;
துடி ஆர்த்திடச் சுடலைக்கு இடைச் சுழலும் திரு நட்டன் - உடுக்கைகள் ஒலித்திடச் சுடுகாட்டின் நடுவே சுழன்று திருநடம் செய்பவன்;
இடி ஆர் குரல் ஏறு ஏறிடும் இறைவன் மகிழ் இடம் ஆம் - இடி போன்ற குரலை உடைய இடபத்தின்மேல் ஏறுகின்ற கடவுள் விரும்பி உறையும் இடம் ஆகும்;
அடியார் பலர் வழிபாடு செய் ஆலங்குடி அதுவே - பல அடியவர்கள் வந்து வழிபடுகின்ற ஆலங்குடி.



5)
கலையார்மதி காலில்விழக் கண்டின்னருள் செய்தான்
மலையான்மகள் ஒருபங்கினன் வானோர்தொழ வரையைச்
சிலையாவளை வித்துப்புரம் செற்றான்மகிழ் இடமாம்
அலையாய்நிதம் அடியார்திரள் ஆலங்குடி அதுவே.



கலை ஆர் மதி - ஒற்றைக் கலை பொருந்திய சந்திரன்;
வரையைச் சிலையா வளைவித்துப் புரம் செற்றான் - மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை அழித்தவன்; (வளைவித்தல் - வளைத்தல் - சம்பந்தர் தேவாரம் - 1.13.2 - "மாறார்புர மெரியச்சிலை வளைவித்தவன் ");
அலையாய் நிதம் அடியார் திரள் ஆலங்குடி - அலைபோல நாள்தோறும் பல அடியவர்கள் திரள்கின்ற ஆலங்குடி; (அலை - மிகுதி);



6)
இன்பால்தயிர் புனலாற்கழல் இணையேதொழு தார்மேல்
வன்பாசம தெறிகாலனை மார்பில்லுதை வல்லான்
முன்பாலடி முனிவர்க்கறம் மொழிசெய்தவன் இடமாம்
அன்பாலடி தொழுவார்திரள் ஆலங்குடி அதுவே.



இன் பால், தயிர், புனலால் கழல் இணையே தொழுதார்மேல் - இனிய பால், தயிர், நீர் இவற்றால் ஈசன் திருவடி இணையைப் பூசித்த மார்க்கண்டேயர்மேல்;
வன் பாசமது எறி காலனை மார்பில் உதை வல்லான் - வலிய பாசத்தை வீசிய காலனை மார்பில் உதைத்த வல்லவன்; (இலக்கணக் குறிப்பு : மார்பில்லுதை - மார்பில் உதை - ஓசைக்காக லகர ஒற்று விரித்தல் விகாரம்);
முன்பு ஆல் அடி முனிவர்க்கு அறம் மொழிசெய்தவன் இடம் ஆம் - முன்னம் கல்லால மரத்தின்கீழ் நான்கு முனிவர்களுக்கு அறங்கள் உரைத்த சிவபெருமான் உறையும் இடம் ஆகும்;
அன்பால் அடி தொழுவார் திரள் ஆலங்குடி அதுவே - பக்தியோடு திருவடியைத் தொழும் அன்பர்கள் திரள்கின்ற ஆலங்குடி;



7)
கடையுங்கடல் உமிழ்நஞ்சினைக் கண்டஞ்சிய தேவர்
விடையின்மிசை வருவாயருள் விமலாவெனக் காத்தான்
சடையின்மதி தங்கற்கிடம் தந்தானிடம் மேகம்
அடையும்பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.



பதம் பிரித்து:
கடையும் கடல் உமிழ் நஞ்சினைக் கண்டு அஞ்சிய தேவர்,
"விடையின்மிசை வருவாய்! அருள் விமலா!" எனக் காத்தான்;
சடையில் மதி தங்கற்கு இடம் தந்தான் இடம், மேகம்
அடையும் பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.


தங்கற்கு - தங்குவதற்கு;



8)
பிளிறுங்கரி ஒத்தான்மலை பேர்த்தான்முடி பத்தைத்
தளிரங்கழல் விரலொன்றினைத் தரையிட்டடர் ஈசர்
ஒளிரும்பிறை சடையின்மிசை உடையார்மகிழ் இடமாம்
அளியின்னிசை பாடும்பொழில் ஆலங்குடி அதுவே.



பிளிறும் கரி ஒத்தான் மலை பேர்த்தான் முடி பத்தைத் - பிளிறுகின்ற மதயானை போன்றவனும் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டவனும் ஆன இராவணனின் பத்துத் தலைகளையும்;
தளிர் அம் கழல் விரல் ஒன்றினைத் தரை இட்டு அடர் ஈசர் - தளிர்போன்ற அழகிய மென்மையான திருவடியின் விரல் ஒன்றைத் தரையில் ஊன்றி நசுக்கிய இறைவர்;
ஒளிரும் பிறை சடையின்மிசை உடையார் மகிழ் இடம் ஆம் - பிரகாசிக்கும் பிறைச்சந்திரனைச் சடையின்மேல் அணிந்தவர் விரும்பி உறையும் தலம்;
அளி இன்னிசை பாடும் பொழில் ஆலங்குடி - வண்டுகள் இனிய இசையைப் பாடும் சோலைகள் சூழ்ந்த ஆலங்குடி;


தளிர் அம் கழல் - தளிர் போன்ற அழகிய திருவடி;
(திருவாசகம் - திருவெம்பாவை - 20 - "போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்" - எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்);



9)
நறவந்திகழ் மலர்மேலயன் நாராயணன் இவரால்
இறையுங்கழல் முடிகாண்பதற் கியலாவெரி உருவன்
பிறைவண்டிரை சடைமேல்திகழ் பெருமான்மகிழ் இடமாம்
அறைவண்டினம் அடையும்பொழில் ஆலங்குடி அதுவே.



நறவம் திகழ் மலர்மேல் அயன் நாராயணன் இவரால் - தேன் திகழும் தாமரைப்பூமேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால்;
இறையும் கழல் முடி காண்பதற்கு இயலா எரி உருவன் - சிறிதும் கீழும் மேலும் காண்பதற்கு இயலாத சோதி வடிவினன்; (சம்பந்தர் தேவாரம் - 1.14.9 - "...மறையும்மவை யுடையானென நெடியானென விவர்கள் இறையும்மறி வொண்ணாதவன்" - நான்முகன் திருமால் ஆகிய இருவரும் சிறிதும் அறிய முடியாதவன்);
பிறை, வண் திரை சடைமேல் திகழ் பெருமான் மகிழ் இடம் ஆம் - பிறைச்சந்திரனும் கங்கையும் சடைமேல் விளங்கும் சிவபெருமான் விரும்பி உறையும் இடம் ஆகும்; ("வண்டிரை = வண் + திரை / வண்டு + இரை" என்று இருவிதமாகவும் பிரிக்கல் ஆம்; திரை - அலை/நதி; இரைதல்/இரைத்தல் = ஒலித்தல்; ஆகவே, "பிறையானது வண்டுகள் ஒலிக்கும் சடையின்மேல் விளங்குகின்ற பெருமான்" என்றும் பொருள்கொள்ளல் ஆம். "கொன்றை முதலிய பூக்களை அணிந்த சடை" என்பது வண்டுகள் ஒலிக்கும் என்றதனால் குறிப்பால் பெறப்படும்);
அறை வண்டு இனம் அடையும் பொழில் ஆலங்குடி அதுவே - ஒலிக்கின்ற வண்டுகள் அடைகின்ற சோலை சூழ்ந்த ஆலங்குடி;



10)
பார்க்கும்விழி இலர்போலிகள் பதரொத்தவர் பாவம்
தீர்க்கும்திரு நீறற்றவர் செப்பும்வழி பேணேல்
ஆர்க்கும்கழல் போற்றில்வரம் அருளும்பரன் இடமாம்
ஆர்க்கும்குயில் அமரும்பொழில் ஆலங்குடி அதுவே.



பார்க்கும் விழி இலர் போலிகள், பதர் ஒத்தவர், பாவம் தீர்க்கும் திருநீறு அற்றவர் செப்பும் வழி பேணேல் - (கண்கள் இருந்தும்) குருடர்கள் போன்றவர்கள்; வஞ்சகர்கள்; பயனற்றவர்கள்; பாவத்தைத் தீர்க்கும் திருநீற்றைப் பூசாதவர்கள்; அவர்கள் சொல்லும் வழியை மதிக்கவேண்டா; (போலிகள் - போன்றவர்கள்; வஞ்சகர்கள்); (பதர் - பயனற்றவர்கள்; உள்ளீடற்ற நெல்);
ஆர்க்கும் கழல் போற்றில் வரம் அருளும் பரன் இடம் ஆம் - திருவடியைப் போற்றும் எவருக்கும் வரம் அருள்கின்ற பரமன் இடம் ஆகும்; (ஆர்க்கும் - எவர்க்கும்; யாருக்கும்);
ஆர்க்கும் குயில் அமரும் பொழில் ஆலங்குடி அதுவே - ஒலிக்கின்ற குயில்கள் விரும்பித் தங்கும் சோலை சூழ்ந்த ஆலங்குடி: (ஆர்த்தல் - ஒலித்தல்); (அமர்தல் - விரும்புதல்);



11)
கந்தங்கமழ் குழலிக்கிறை கைதந்திடும் துணைவன்
சந்தங்கமழ் தமிழ்மாலைகள் சாத்திப்பணி வார்க்குப்
பந்தங்களைப் பாற்றிப்பரி பாலிப்பவன் இடமாம்
அந்தண்பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.



* முதல் அடி ஆலங்குடியில் இறைவி, இறைவன் திருநாமங்களைச் சுட்டியது. இறைவி - ஏலவார்குழலி; இறைவன் - ஆபத்சகாயர்;


கந்தம் கமழ் குழலிக்கு இறை - வாசக்குழலியான உமைக்குக் கணவன்;
கைதந்திடும் துணைவன் - இடுக்கண் தீர்த்து உதவிசெய்பவன்; (கைதருதல் - வறுமை இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல்); (துணைவன் - உதவிசெய்பவன்);
சந்தம் கமழ் தமிழ்மாலைகள் சாத்திப் பணிவார்க்குப் - பெருமானுக்குச் சந்தம் மிக்க தமிழ்ப்பாமாலைகளை அணிந்து வணங்கும் பக்தர்களுக்கு;
பந்தங்களைப் பாற்றிப் பரிபாலிப்பவன் இடம் ஆம் - வினைக்கட்டுகளை நீக்கி அருள்புரியும் சிவபெருமான் இடம் ஆகும்; (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பரிபாலித்தல் - அனுக்கிரகித்தல்);
அம் தண் பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே - அழகிய, குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஆலங்குடி.
இலக்கணக்குறிப்பு : "சந்தங்கமழ் தமிழ்மாலைகள் சாத்திப்பணி வார்க்கு" - இச்சொற்றொடர் இடைநிலைத்தீவகமாக நின்று, "கைதந்திடும் துணைவன்" என்ற சொற்றொடரோடும், "பந்தங்களைப் பாற்றிப்பரி பாலிப்பவன்" என்ற சொற்றொடரோடும் இயைத்துப் பொருள்கொள்ளுமாறு அமைந்தது.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) ஆலங்குடி (இரும்பூளை) - இத்தலம் கும்பகோணம் - நீடாமங்கலம் வழியில் உள்ளது.
2) ஆலங்குடி (இரும்பூளை) - ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=927
-------------- --------------

No comments:

Post a Comment