Saturday, September 15, 2018

04.45 – சேய்ஞலூர் - ('சேங்கனூர்')


04.45சேய்ஞலூர் - ('சேங்கனூர்')



2014-01-15
சேய்ஞலூர் - (திருச்சேய்ஞலூர்) - (இக்கால வழக்கில் 'சேங்கனூர்)
----------------------------
(கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
(திருஞானசம்பந்தர் தேவாரம் - 1.25.1 - "மருவார் குழலி மாதோர் பாகமாய்த்");



1)
மூவர் புரங்கள் எரியில் மூழ்கவோர்
ஏவ தெய்த ஈசன் ஏறமர்
தேவன் செய்ய ணிந்த சேய்ஞலூர்ச்
சேவ கன்பேர் சிந்தை செய்ம்மினே.



மூவர் புரங்கள் எரியில் மூழ்க - அசுரர்கள் மூவரின் கோட்டைகள் தீப்புக்கு அழியுமாறு;
ஓர் ஏ அது எய்த ஈசன் - ஓர் அம்பை எய்த பெருமான்; (ஏ – அம்பு);
ஏறு அமர் தேவன் - இடபத்தை ஊர்தியாக விரும்பிய கடவுள்;
செய் அணிந்த சேய்ஞலூர்ச் சேவகன் - வயல் சூழ்ந்த சேய்ஞலூரில் உறைகின்ற வீரன்; (செய் - வயல்); (சேவகன் - வீரன்);
பேர் சிந்தை செய்ம்மினே - அப்பெருமானின் திருநாமத்தை எண்ணுங்கள்; (மின் - முன்னிலைப் பன்மை ஏவல் விகுதி);



2)
பாலன் உயிரைப் பறிக்கப் பாய்ந்தவன்
காலன் மாள உதைத்த காலினான்
சீலன் செய்ய ணிந்த சேய்ஞலூர்ச்
சூலன் நாமம் சொல்லி உய்ம்மினே.



பாலன் - மார்க்கண்டேயர்;
பாய்ந்த வன் காலன் - பாய்ந்த வலிய எமன்; (சுந்தரர் தேவாரம் - 7.22.6 - "... கடியவன் காலன்றன்னைக் கறுத்தான் ..." - பாதத்தால் கொடிய வலிய காலனைக் காய்ந்தவன்);



3)
அல்லில் ஆடும் அடிகள் ஆரணம்
சொல்லும் தூயன் திங்கள் சூடிய
செல்வன் செய்ய ணிந்த சேய்ஞலூர்
நல்லன் நாமம் நவிற்றி உய்ம்மினே.



அல்லில் ஆடும் அடிகள் - இரைல் கூத்து ஆடும் இறைவன்;
ஆரணம் சொல்லும் தூயன் - வேதம் ஓது தூயவன்; (ஆரணம் - வேதம்);



4)
பித்தன் பிறைய ணிந்த பிஞ்ஞகன்
சுத்தன் அரையிற் புலியின் தோலினன்
சித்தன் செய்ய ணிந்த சேய்ஞலூர்
அத்தன் அடியை அடைந்து வாழ்மினே.



பிஞ்ஞகன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - தலைக்கோலம் அணிந்தவன்;
சுத்தன் - தூயன்;
அரையிற் புலியின் தோலினன் - புலித்தோலை அரையில் ஆடையாகக் கட்டியவன்;
அத்தன் - தந்தை;



5)
அட்ட மூர்த்தி ஆலம் ஆர்ந்தவன்
இட்ட மாக எருதொன் றேறுவான்
சிட்டன் செய்ய ணிந்த சேய்ஞலூர்
நட்டன் நாமம் நவிற்றி உய்ம்மினே.



அட்ட மூர்த்தி - ஐம்பூதங்கள், சூரிய சந்திரர்கள், ஆன்மா என்ற எட்டு வடிவங்கள் உடையவன்;
ஆலம் ஆர்ந்தவன் - நஞ்சை உண்டவன்;
சிட்டன் - சிஷ்டன்;
நட்டன் - நடம் செய்பவன்;



6)
சென்னி மீது பாம்பு திங்களைப்
பின்னி உலவ வைத்த பிஞ்ஞகன்
தென்னன் செய்ய ணிந்த சேய்ஞலூர்
மன்னன் பாதம் வாழ்த்தி வாழ்மினே.



பிஞ்ஞகன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - தலைக்கோலம் அணிந்தவன்;
தென்னன் - அழகியவன்;



7)
தோடன் குழையன் தொண்டர் சொற்றமிழ்ப்
பாடல் மிகவும் விரும்பும் பண்பினன்
சேடன் செய்ய ணிந்த சேய்ஞலூர்
ஆடி பாதம் அடைந்து வாழ்மினே.



தோடன் குழையன் - தோடும் குழையும் அணிந்த அர்த்தநாரீஸ்வரன்;
தொண்டர் சொற்றமிழ்ப் பாடல் மிகவும் விரும்பும் பண்பினன் - பக்தர்கள் பாடும் தமிழ்ச்சொல்மாலைகளை மிகவும் விஉம்புபவன்;
சேடன் - பெரியவன்; கடவுள்; (சேடு - பெருமை; உயரம்); ('சேஷம்' என்ற வடமொழிச் சொல்லை அடியாகக் கொண்டால், 'எஞ்சியிருப்பவன்' என்று பொருள்படும்);
ஆடி - கூத்தன்;



8)
கார ரக்கன் கதறக் கண்கள்நீர்
சோர விரலை ஊன்று தூயவன்
சீரன் செய்ய ணிந்த சேய்ஞலூர்
வீரன் பாதம் விரும்பி உய்ம்மினே



கார் அரக்கன் கதறக், கண்கள் நீர் சோரத் - கரிய நிறத்து அரக்கனான இராவணன் கதறும்படியும் அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழியும்படியும் ;
விரலை ஊன்று தூயவன் - தன் திருப்பாதத்து ஒரு விரலை ஊன்றிய தூயன்;
சீரன் - புகழ் உடையவன்;
செய் அணிந்த சேய்ஞலூர் வீரன் பாதம் விரும்பி உய்ம்மினே - வயல் சூழ்ந்த சேய்ஞலூரில் உறைகின்றவனும் வீரனுமான சிவபெருமான் திருவடியை அன்போடு வணங்கி உய்யுங்கள்;



9)
மாயன் பிரமன் நேட மாவழல்
ஆய முக்கண் அண்ணல் அங்கையில்
தீயன் செய்ய ணிந்த சேய்ஞலூர்
நாயன் நாமம் நவிற்றி உய்ம்மினே.



மாயன் பிரமன் நேட மா அழல் ஆய முக்கண் அண்ணல் - விஷ்ணுவும் பிரமனும் தேடும்படி பெரிய சோதி வடிவில் உயர்ந்தவன் முக்கட்பெருமான்; (மாயன் - திருமால்); (நேடுதல் - தேடுதல்);
அங்கையில் தீயன் - கையில் தீயை ஏந்தியவன்;
செய் அணிந்த சேய்ஞலூர் நாயன் - வயல் சூழ்ந்த சேய்ஞலூரில் உறைகின்ற தலைவன்; (நாயன் - தலைவன்; கடவுள்);
நாமம் நவிற்றி உய்ம்மினே - அப்பெருமானாரின் திருப்பெயரைச் சொல்லி உய்யுங்கள்;



10)
மெய்யன் பர்க்கு மெய்யன் மிண்டுரை
பொய்யர் கட்குப் பொய்யன் பூதியன்
செய்யன் செய்ய ணிந்த சேய்ஞலூர்
ஐயன் அடியை அடைந்து வாழ்மினே.



மெய்யன்பர்க்கு மெய்யன் - உண்மைத்தொண்டர்களுக்கு என்றும் அருள் உள்ள மெய்ப்பொருள்;
மிண்டுரை பொய்யர்கட்குப் பொய்யன் - பொய்யர்களுக்கு என்றும் இல்லாதவன். (மிண்டு - இடக்கர்ப் பேச்சு ;. செருக்கிக் கூறும் மொழி );
(அப்பர் தேவாரம் - 4.16.1 - "செய்யர் வெண்ணூலர் ... மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே");
பூதியன் - திருநீறு பூசியவன்;
செய்யன் - சிவந்த நிறம் உடையவன்;
ஐயன் - தலைவன்;



11)
தேய்ந்த மதியைச் சூடி திண்சிலை
ஏந்தி எயில்கள் எரிய எய்தவன்
சேந்தன் போற்றி செய்த சேய்ஞலூர்
வேந்தன் பாதம் விரும்பி வாழ்மினே.



தேய்ந்த மதியைச் சூடி - பிறைச்சந்திரனை அணிந்தவன்; (சூடி - சூடியவன்);
திண்சிலை ஏந்தி எயில்கள் எரிய எய்தவன் - மேருமலை என்ற வலிய உறுதி மிக்க வில்லை ஏந்தி முப்புரங்கள் எரியுமாறு கணையை எய்தவன்; (திண்மை - வலிமை; உறுதி); (சிலை - வில்; மலை); (எயில்கள் - முப்புரங்கள்);
(அப்பர் தேவாரம் - 6.54.8 - "பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் ... திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போரானைப் ...);
சேந்தன் - முருகன்;
* முருகன் வழிபட்டதால் சேய் (முருகன்) நல் ஊர் - சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. 'சேய் அடைந்த சேய்ஞலூர்' (தி.1 .48 பா.11) எனக் காழிப்பிள்ளையாரும் அருளுவர். கந்தபுராணத்துக் குமாரபுரிப் படலத்து இந்நகர் இப்பெயரால் அழைத்தற்குரிய காரணமும் குறிக்கப்பட்டிருப்பது அறியத்தக்கது.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) சேய்ஞலூர் - ('சேங்கனூர்') - சத்தியகிரீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=380
-------------- --------------

No comments:

Post a Comment