Saturday, September 15, 2018

04.42 – பொது - சொல்லக் குதிக்கும் என் நெஞ்சு


04.42பொது - சொல்லக் குதிக்கும் என் நெஞ்சு



2014-01-11
சொல்லக் குதிக்கும் என் நெஞ்சு - (பொது)
----------------------
(வஞ்சிவிருத்தம் - "மா மா காய்' என்ற வாய்பாடு; எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")



1)
கல்லைக் கொண்டு கழல்தொழினும்
எல்லை இன்றி இனிதருள்வான்
கொல்லை ஏற்றுக் கோமான்சீர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



* முதல் ஈரடிகள் - சாக்கியநாயனார் வரலாற்றைச் சுட்டின;
கொல்லை ஏறு - (அப்பர் தேவாரம் - 5.33.1 - "கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்" - கொல்லை ஏறு - முல்லை நிலத்துக்குரிய இடபம்);
(திருவிசைப்பா - 9.19.3 - "அல்லியம் பூம்பழனத் .... கொல்லை விடையேறி... " - 'கொல் விடை' என்பது ஐகாரம் பெற்று நின்றது. கொல்விடை போலும் விடை என்றபடி.);
குதித்தல் - பாய்தல்; கூத்தாடுதல் (To dance with joy);.



2)
வல்ல ரண்கள் மாயமலை
வில்லை ஏந்து வீரனவன்
நல்ல நாமம் நாவினிக்கச்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



வல் அரண்கள் மாய மலை வில்லை ஏந்து வீரனவன் - வலிய முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக ஏந்திய வீரன்;;



3)
பல்லில் ஓட்டிற் பலிகொள்ளச்
செல்லும் செல்வன் சிவபெருமான்
அல்லில் ஆடும் அவன்புகழைச்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



பல் இல் ஓட்டில் பலிகொள்ள - பல்லில்லாத மண்டையோட்டில் பிச்சை ஏற்க; பல இல்லங்களில் மண்டையோட்டில் பிச்சை ஏற்க; (பல்லில் - பல் இல் - 1. பல் இல்லாத; 2. பல வீடுகளில்);
அல் - இரவு;



4)
வெல்ல வந்த வினைப்பகையை
ஒல்லை ஓட்டி உய்திதர
வல்ல மங்கை பங்கன்சீர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



ஒல்லை - சீக்கிரம்; உய்தி - உய்வு;



5)
நெல்லின் கதிரார் நீள்வயல்சூழ்
நல்லம் நகரான் நரையேற்றன்
புல்லும் உமையோர் புடையான்பேர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



நல்லம் - திருநல்லம் - இக்காலத்தில் இத்தலம் கோனேரிராஜபுரம் என்று வழங்கப்பெறுகின்றது;
நரை ஏற்றன் - வெள்ளை இடப ஊர்தியான்;
புல்லுதல் - தழுவுதல்; புடை - பக்கம்;



6)
வெல்லம் பைந்து விடுகருப்பு
வில்லன் உடலை விழித்தழித்தான்
நல்லன் சடையில் நதியன்பேர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



வெல் அம்பு ஐந்து விடு - வெல்லும் ஐந்து மலர்க்கணைகளைப் பிரயோகிக்கும்;
கருப்பு வில்லன் - கரும்பை வில்லாக உடையவன் - மன்மதன்;
(குறிப்பு : வில்லை உடையவன் என்பது வில்லன், வில்லான், வில்லி, என்றெல்லாம் வரும். உதாரணம்: அப்பர் தேவாரம் - 4.66.8 - "போகமார் மோடி ... பாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும் ...");
நல்லன் - நல்லவன்;



7)
அல்லும் பகலும் அடிபோற்று
நல்லன் பருக்கா நமற்செற்றான்
எல்லி ஆடும் ஈசன்பேர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



நல் அன்பருக்கா நமற் செற்றான் - நல்ல பக்தருக்காக நமனை அழித்தான்;
எல்லி - இரவு;
இலக்கணக் குறிப்பு : "நமனைச் செற்றான்" என்பது இரண்டாம் வேற்றுமைத்தொகையில் "நமற்செற்றான்" என்று னகரம் றகரமாகத் திரிந்து வரும்;



8)
கல்லைப் பெயர்த்தான் கதறியழ
மெல்ல விரலை வெற்பிட்டான்
முல்லை முறுவல் உமைகோன்சீர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



கல்லைப் பெயர்த்தான் கதறியழ மெல்ல விரலை வெற்பு இட்டான் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் கதறி அழும்படி சிறிதளவே தன் பாதவிரல் ஒன்றை மலைமேல் ஊன்றியவன்; (கல் - மலை - இங்கே கயிலைமலை); (வெற்பு - மலை);
முல்லை முறுவல் உமை கோன் சீர் - முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமைக்குத் தலைவனான சிவபெருமானது புகழை; (சுந்தரர் தேவாரம் - 7.20.5 - "முல்லை முறுவலுமை ஒரு பங்குடை முக்கணனே");



9)
கல்லும் கரியான் அயன்காணா
எல்லை இல்லா எரியானான்
வெல்லங் கழலான் மிகுபுகழைச்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



கல்லும் கரியான் அயன் காணா எல்லை இல்லா எரினான் - நிலத்தை அகழ்ந்த திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாத எல்லையற்ற ஜோதி ஆனவன்; (கல்லுதல் - தோண்டுதல்); (கரியான் - திருமால்);
வெல்லங்கழலான் - வெல் கழலான், அம் கழலான் - வெல்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியை உடையவன், அழகிய கழல் அணிந்த திருவடியை உடையவன்;



10)
புல்லர் புகலும் பொய்யுரைகள்
அல்லற் புகுத்தும் அறிவோமே
வல்லன் மழுவன் வரதன்பேர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



புல்லர் புகலும் பொய்யுரைகள் அல்லற் புகுத்தும் அறிவோமே - கீழோர்கள் சொல்லும் பொய்ம்மை நிறைந்த பேச்சுகள் கேட்பவரைத் துன்பத்தில் ஆழ்த்தும் என்று அறிவோம்;
வல்லன் மழுவன் வரதன் பேர் - சர்வ வல்லமையும் உடையவனும், மழுவாளை ஏந்தியவனும், வரம் அளிப்பவனுமான சிவபெருமானது திருநாமத்தையும் புகழையும்;



11)
மல்லெண் தோளன் மணிகண்டன்
கொல்லும் கூற்றைக் குமைகாலன்
தில்லைக் கூத்தன் திருப்புகழைச்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.



மல் எண் தோளன் - வலிமை மிக்க எட்டுத் தோள்களை உடையவன்; (௳ல் - வலிமை);
மணிகண்டன் - நீலகண்டன்;
கொல்லும் கூற்றைக் குமைகாலன் - காலகாலன்; (குமைத்தல் - அழித்தல்);
திருப்புகழ் - இறைவனது புகழ்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு : வஞ்சிவிருத்தம் - "மா மா காய்' என்ற வாய்பாடு;
இதில் எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடியில் முடிவன.
'தனனா தனனா தனதானா' என்ற சந்தத்தில் சம்பந்தர் தேவாரம் உண்டு. (சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்");
ஆனால் என் பாடல்களில் அவ்வகைச் சந்தக் கட்டுப்பாடு இல்லை.



2) -------- some Q&A on this set ----------
song #8:
Q) "கல்லைப் பெயர்த்தான் கதறியழ மெல்ல விரலை வெற்பிட்டான்"
என்ற வரிகள் எளிமையும் இனிமையும் கலந்து மிளிர்கின்ற. ஓர் ஐயம். இங்கு விரல் என்பது கால் விரலைத்தானே குறிக்கின்றது? விரல் என்பதை கால் விரலாகப் பொருள் கொள்ளும் இடம் தேவாரத்தில் உள்ளதா?


A) My Response: I am sure there are other songs as well - but this is the one that comes to mind immediately!
சம்பந்தர் தேவாரம் 2.18.8:
இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் ....
3) Padhigam Background: சந்தவசந்தக் கவியரங்கம் - 37 - "சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்" என்ற தலைப்பிற்குப் பாடல் எழுதிய சமயத்தில் 'சொல்லக் குதிக்கும் என்னெஞ்சு' என்று எழுதியது இது.
-------------- --------------

No comments:

Post a Comment