Monday, September 17, 2018

04.50 – புத்தூர் (திருப்புத்தூர்)


04.50புத்தூர் (திருப்புத்தூர்)



2014-02-08
புத்தூர் (திருப்புத்தூர் - பாண்டிய நாட்டுத் தலம். இக்கால வழக்கில் 'திருப்பத்தூர்')
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. சிறப்புக் குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க.)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.12.1 - "சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே");



1)
நெருப்புச்சேர் கண்திகழும் நெற்றியினான் ஏனத்தின்
மருப்புப்பூண் மார்புடையான் மடவார்கள் இடுபலிக்கு
விருப்புற்றோர் விடையேறி வருமீசன் மேயநகர்
திருப்புத்தூர் வணங்குமவர் தீவினைகள் தீருமன்றே.



நெருப்புச் சேர் கண் திகழும் நெற்றியினான் - நெற்றிக்கண்ணில் தீயை உடையவன்;
ஏனத்தின் மருப்புப் பூண் மார்புடையான் - மார்பில் பன்றிக்கொம்பைப் பூண்டவன்;
மடவார்கள் இடுபலிக்கு விருப்புற்று ஓர் விடையேறி வரும் ஈசன் மேய நகர்- பெண்கள் இடும் பிச்சையை விரும்பி ஓர் இடபவாகனத்தின்மேல் வரும் ஈசன் உறையும் தலம் ஆன; (மடவார்கள் - பெண்கள்); (பலி - பிச்சை);
திருப்புத்தூர் வணங்குமவர் தீவினைகள் தீருமன்றே. - திருப்புத்தூரை வணங்குபவர்களது பாவங்கள் எல்லாம் தீரும்;



2)
தவமேசெய் மார்க்கண்டர் தம்முயிரைத் தயையின்றிக்
கவர்வேனென் றடைநமனைக் கழலாலே உதைகாலன்
சிவகாமி மணவாளன் திருப்புத்தூர்த் திருத்தளியான்
தவறாது தொழுவார்தம் பவநோய்க்குத் தனிமருந்தே.



தயை - இரக்கம்; கருணை;
கவர்தல் - அகப்படுத்துதல்;
நமன் - எமன் - கூற்றுவன்;
திருப்புத்தூர் - தலத்தின் பெயர்; திருத்தளி - கோயிலின் பெயர்;
இத்தலத்து இறைவன், இறைவி திருநாமங்கள் - திருத்தளிநாதர், சிவகாமி;
பவநோய் - பவரோகம் - பிறவிப்பிணி;
தனி - ஒப்பற்ற;
மருந்து - ஔஷதம்; அமுதம்;



3)
நலந்திகழ வலைபின்னி நாள்தோறும் போற்றிசெய்த
சிலந்தியையோர் அரசாக்கும் திருப்புத்தூர்த் திருத்தளியான்
சலந்திகழும் சடையுடையான் சலமில்லாத் தன்மையினான்
வலந்திகழும் கழலுடையான் வந்திப்பார்க் கருந்துணையே.



* சிலந்தியை ஓர் அரசு ஆக்கும் - கோச்செங்கட்சோழ நாயனார் வரலாறு.


சலம் - 1) நீர்; 2) வஞ்சனை;
வலம் - வலப்பக்கம்; வெற்றி;
வலம் திகழும் கழல் உடையான் - 1) வலப்பக்கம் கழல் அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்; 2) வெற்றியை உடைய வீரக்கழல் அணிந்தவன்;
வந்திப்பார்க்கு - தொழுவார்களுக்கு ;



4)
கனலாரும் கண்ணுதலாற் காமனுடல் காய்ந்தபிரான்
மினலாரும் செஞ்சடைமேல் விரைக்கொன்றை புனையீசன்
புனலாரும் புத்தூரில் திருத்தளியான் புகழ்பாட
அனலாரும் அருவினைகள் அடியோடு கெடும்தானே.



ஆர்தல் - 1) பொருந்துதல்; 2) ஒத்தல்; 3) நிறைதல்;
கனல் - நெருப்பு;
கண்ணுதல் - கண்+நுதல் - நெற்றிக்கண்;
மினல் ஆரும் - மின்னல் ஒக்கும்;
விரைக்கொன்றை - மணம் மிக்க கொன்றைமலர்; (அப்பர் தேவாரம் - 6.76.1 - "....விரைக்கொன்றைக் கண்ணியன்காண் .... திருப்புத் தூரில் திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே");
அனல் - உஷ்ணம்;



5)
துடியாரும் கையுடையான் துணையாரும் இல்லாதான்
கொடியாரும் இடையாளோர் கூறாக உடையான்வெண்
பொடியாரும் மேனியினான் புத்தூரில் திருத்தளியான்
கடியாரும் கவிபாடும் அடியாருக் கருந்துணையே.



ஆர்தல் - 1) பொருந்துதல்; 2) ஒத்தல்; 3) நிறைதல்;
துடி ஆரும் கை உடையான் - கையில் உடுக்கினை ஏந்தியவன்; (துடி - உடுக்கு);
துணை ஆரும் இல்லாதான் - ஒப்பு இல்லாதவன்; (துணை - ஒப்பு );
கொடி ஆரும் இடையாள் ஓர் கூறாக உடையான் - கொடிபோல் சிற்றிடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;
வெண்பொடி ஆரும் மேனியினான் - திருநீற்றை மேனிமேல் பூசியவன்; (வெண்பொடி - திருநீறு);
புத்தூரில் திருத்தளியான் - திருப்புத்தூரில் திருத்தளியில் உறைகின்றவன்;
கடி ஆரும் கவி பாடும் அடியாருக்கு அரும் துணையே - மணக்கின்ற தமிழ்ப்பாமாலைகள்; பாடுகின்ற அடியவர்களுக்கு அரிய துணை ஆவான்; (கடி - வாசனை);



6)
உம்பருமான் கரமுடையாய் ஒண்மதியம் சூடிறையே
எம்பெருமான் என்றேத்தி இணையடியைத் தொழநின்ற
செம்பெருமான் திருப்புத்தூர்த் திருத்தளியான் சேவமரும்
நம்பெருமான் அடியாரை நலிவினைகள் நண்ணாவே.



உம்பரும், "மான் கரம் உடையாய்! ஒண் மதியம் சூடு இறையே! எம்பெருமான்!" என்று ஏத்தி - தேவர்கள், "மானைக் கையில் ஏந்தியவனே! ஒளிவீசும் சந்திரனைச் சூடிய இறைவனே! எம்பெருமானே!" என்று போற்றி; ("உம்பரும்" என்றதில் "உம்" அசை என்று கொள்ளலாம்; சிறப்பும்மை என்றும் கொள்ளலாம்);
இணையடியைத் தொழ நின்ற செம்பெருமான் - தன் இரு திருவடிகளை வழிபாடு செய்யும்படி நின்ற செம்மேனியன்;
திருப்புத்தூர்த் திருத்தளியான் - திருப்புத்தூரில் திருத்தளியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்;
சே அமரும் நம்பெருமான் அடியாரை நலி வினைகள் நண்ணாவே - இடப வாகனனான நம் பெருமானை வழிபடும் அடியவர்களை, வருத்தும் வினைகள் நெருங்கமாட்டா; (நலித்தல் - துன்புறுத்துதல்);



7)
அந்தகனைச் சூலத்தால் அழித்தானை முப்புரங்கள்
வெந்துவிழச் சிரித்தானை விடந்திகழும் மிடற்றானைச்
செந்தழல்போல் மேனியனைத் திருப்புத்தூர்த் திருத்தளியிற்
பந்துவென நின்றவனைப் பரவவினை பற்றறுமே.



அந்தகன் - அந்தகாசுரன்;
பந்து - உறவு; சுற்றம்;



8)
உருமொக்கக் கத்தியுயர் பொருப்பிடந்த அரக்கனழ
மருமிக்க மலர்ப்பாத விரலூன்றும் மாதேவன்
தருமிக்குத் தமிழ்ப்பாடல் தந்தருளும் தனிப்புலவன்
இருமைக்கும் துணைபுத்தூர்த் திருத்தளியான் இணையடியே.



உரும் ஒக்கக் கத்தி - இடி போலக் கத்திக்கொண்டு ;
உயர் பொருப்பு இடந்த அரக்கன் அழ - உயர்ந்த கயிலைமலையைப் பெயர்த்த அரக்கனான இராவணன் அழும்படி;
மரு மிக்க மலர்ப்பாத விரல் ஊன்றும் மாதேவன் - வாசம் மலிந்த மலர் போன்ற திருப்பாதத்தின் விரலை ஊன்றிய மகாதேவன்; (மரு - வாசனை);
தருமிக்குத் தமிழ்ப்பாடல் தந்தருளும் தனிப்புலவன் - தருமிக்குப் பாடல் ஒன்று தந்தருளிய ஒப்பற்ற புலவன்; (தனி - ஒப்பற்ற); (அப்பர் தேவாரம் - 6.76.3 - "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்");
* தருமிக்குப் பாடல் தந்ததைத் திருவிளையாடற்புராணத்திற் காண்க.
இருமைக்கும் துணை புத்தூர்த் திருத்தளியான் இணையடியே - இம்மை மறுமை இரண்டிற்கும் திருப்புத்தூர்த் திருத்தளிநாதன் திருவடியே துணை; (இருமை - இம்மை, மறுமை என்ற இரண்டு);



9)
பன்றியுருக் கொண்டரியும் பறவையுருக் கொண்டயனும்
அன்றுமிக நேடவுயர் அழலானான் நிழல்மழுவன்
தென்றலிலே மணங்கமழும் திருப்புத்தூர்த் திருத்தளியில்
நின்றபரன் அடியிணையே நினையவினை நெருங்காவே.



பன்றி உருக் கொண்டு அரியும் பறவை உருக் கொண்டு அயனும் அன்று மிக நேட உயர் அழல் ஆனான் - பன்றியாகித் திருமாலும் அன்னமாகிப் பிரமனும் தேடும்படி ஓங்கிய சோதி ஆனவன்;
நிழல் மழுவன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்;;



10)
சின்னநெறிச் செல்கின்றார் திருநீறு புனையாதார்
சொன்னமொழி மதியேன்மின் தொழுவார்தம் துயர்தீர்ப்பான்
முன்னமறை நான்கினையும் முனிவர்களுக் குரைத்தபரன்
சென்னிமிசைப் பிறையணிந்த திருப்புத்தூர்ப் பெருமானே.



சின்ன - சிறிய; இழிந்த;
திருநீறு புனையாதார் - திருநீற்றை அணியாதவர்கள்;
சொன்ன மொழி மதியேன்மின் - அவர்கள் சொன்ன பேச்சைப் பொருட்படுத்தாதீர்கள்; (மதியேன்மின் - பொருட்படுத்தாதீர்கள்);
முன்னம் மறை நான்கினையும் முனிவர்களுக்கு உரைத்த பரன் - தட்சிணாமூர்த்தி;
சென்னிமிசைப் பிறைணிந்த - தலைமேல் சந்திரனை அணிந்த;



11)
கொண்டலெனத் திகழ்கண்டன் கொன்றையொடு கூவிளமும்
இண்டையென மதியுமணி எம்பெருமான் வானோர்கள்
தெண்டனிடும் திருப்புத்தூர்த் திருத்தளியான் சேவடியை
அண்டுமடி யாரைவினை அவலங்கள் அடையாவே.



கொண்டல் எனத் திகழ் கண்டன் - மேகம் போல் திகழும் நீலகண்டன்; (கொண்டல் - மேகம்);
கொன்றையொடு கூவிளமும் இண்டைன மதியும் அணி எம்பெருமான் - திருமுடிமேல் கொன்றைமலர், வில்வம், இண்டைமாலை போல் சந்திரன் இவற்றையெல்லாம் அணியும் எம்பெருமான்; (கூவிளம் - வில்வம்); (இண்டை - தலையில் அணியும் ஒருவகை மாலை);
வானோர்கள் தெண்டனிடும் திருப்புத்தூர்த் திருத்தளியான் - தேவர்களால் தொழப்படுகின்ற திருப்பூத்தூர்த் திருத்தளிநாதனது; (தெண்டனிடுதல் - தண்டனிடுதல் - விழுந்து வணங்குதல்);
சேவடியை அண்டும் அடியாரை வினை அவலங்கள் அடையாவே - சிவந்த திருவடியைச் சரண்புக்க அடியார்களை வினைகளும் துன்பங்களும் அடையமாட்டா; (அண்டுதல் - சரண் அடைதல்; ஆசிரயித்தல்);



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) திருப்புத்தூர் - திருத்தளிநாதர் கோயில் - தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=326
தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=206
----------- --------------

No comments:

Post a Comment