Sunday, July 17, 2016

03.02-51 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



51)
பிறப்பிலான் பொன்னடியைப் பேசாநாள் எல்லாம்
சிறப்பிலா நாளேநம் செந்தீ நிறப்பிரான்
வங்கக் கடலோர வான்மியூர் மாதேவன்
அங்கழல் போற்றலுய்யும் ஆறு.



பதம் பிரித்து:
பிறப்பு இலான் பொன் அடியைப் பேசா நாள் எல்லாம்
சிறப்பு இலா நாளே; நம் செம் தீ நிறப் பிரான்,
வங்கக் கடல் ஓர வான்மியூர் மாதேவன்
அம் கழல் போற்றல் உய்யும் ஆறு.


பிறப்பு இலான் = பிறப்பு இல்லாத இறைவன்;
செம் தீ நிறப் பிரான் - சிவந்த நெருப்பை ஒத்த நிறம் உடைய தலைவன் - சிவன்;
வங்கம் - கப்பல்; அலை;
அம் கழல் - அழகிய கழல் அணிந்த திருவடி(சம்பந்தர் தேவாரம் - 3.72.6 - "புலியுமானும் அல்லாத சாதிகளும் அங்கழல்மேல் கைகூப்ப");
போற்றல் - போற்றுதல்; வழிபடுதல்
உய்யும் ஆறு - உய்யும் வழி;


அப்பர் தேவாரம் - திருமுறை 6.1.1 - "அரியானை......பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே".



52)
ஆறும் பிறையும் அரவும் உமையொரு
கூறும் உடையஎம் கோன்புகழைக் - கூறும்
வழிஅறி யேனும் மருந்தீசன் அன்பால்
எழுதுகிறேன் ஓர்பாடல் இன்று.



ஆறு - கங்கை;
அரவு - பாம்பு;
உமை ஒரு கூறு - உமாதேவியை உடலில் ஒரு பங்கு;
கோன் - அரசன்; தலைவன்;
கூறும் வழி அறியேனும் - புகழும் முறையை அறியேனாகிய நானும்;
மருந்தீசன் அன்பால் - மருந்தீசன் மேல் கொண்ட பக்தியால்; மருந்தீசன் கருணையினால்; (அன்பு - பக்தி; கருணை);



53)
இன்று பொழுதில்லை; இன்னொரு நாள்தொழலாம்
என்று பொழுதுபோக் கென்னெஞ்சே! ஒன்றுகேள்;
மாயும் பொழுதென்றோ? வான்மியூர் சென்றான்றோர்
ஆயும் அரனை அடை.



பதம் பிரித்து:
இன்று பொழுது இல்லை; இன்னொரு நாள் தொழலாம்
என்று பொழுது போக்கு என் நெஞ்சே! ஒன்று கேள்;
மாயும் பொழுது என்றோ? வான்மியூர் சென்று, ஆன்றோர்
ஆயும் அரனை அடை.


பொழுது போக்கு என் நெஞ்சே - காலத்தை வீணே போக்குகின்ற என் மனமே;
ஆன்றோர் ஆயும் - ஞானிகள் ஆராயும்;
அரனை அடை - ஹரனைச் சரண்புகுவாயாக; (அடைதல் - To take refuge in; சரண்புகுதல்);


(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்றுநன்று நாளைநன்று என்றுநின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்..." - இன்றைய நாள் நல்லது, நாளைய நாள் நல்லது என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந்தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள்);



54)
அடைந்தவர்க் கெம்மையன் அள்ளித் தருவான்;
மடநெஞ்சே, ஏனோ மறந்தாய்; விடையேறி
வந்தருளும் வான்மியூர் வள்ளல் பெயர்தனை
முந்தைவினை போக மொழி.



அடைந்தவர்க்கு - இறைவனது திருவடியை அடைந்து தொழுபவர்க்கு;
எம் ஐயன் அள்ளித் தருவான் - எம் தலைவன் வரங்களை அள்ளிக்கொடுப்பான்;
மடநெஞ்சே, ஏனோ மறந்தாய்; - பேதை மனமே, அதனை நீ ஏன் மறந்தாய்?
விடை ஏறி வந்து அருளும் வான்மியூர் வள்ளல் - இடபத்தின்மேல் ஏறி அடியவர் இருக்கும் இடம் வந்து அருள்கின்ற, வான்மியூரில் உறைகின்ற வள்ளலான சிவபெருமான்; (விடை - இடபம்; எருது);
பெயர்தனை - பெயரை; திருநாமத்தை;
முந்தைவினை போக மொழி - பழவினைகள் தீர்வதற்குச் சொல்வாயாக;



55)
மொழிவாய் புகழ்நாமம்; முன்னடைந்தோர் சொன்ன
வழியாம் அதுவே; மனமே, பழிபாவம்
தீர்க்கும் மருந்தீசன் சேவடி போற்றிடும்
ஆர்க்கும் அருள்வான் அரன்.



மொழிவாய் புகழ்நாமம்; - மனமே, புகழ் பொருந்திய திருநாமத்தைச் சொல்வாயாக;
முன் அடைந்தோர் சொன்ன வழிம் அதுவே; மனமே, - மனமே, அதுவே ஈசனை முன்னமே அடைந்த பெரியோர்கள் சொன்ன வழி ஆகும்;
பழி பாவம் தீர்க்கும் மருந்தீசன் சேவடி - பழியையும் பாவத்தையும் மர்ந்தீசன் சேவடி தீர்க்கும்;
போற்றிடும் ஆர்க்கும் அருள்வான் அரன் - வழிபடும் எவருக்கும் சிவபெருமான் அருள்வான்;


(சம்பந்தர் தேவாரம் - 3.49.5 - "கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே.");



56)
அரன்மேல் எறிகல்லை அன்பறிந்து போதாச்
சிரமேற்றான் நெஞ்சே தினமும் உரைசெய்
கருணைக் கடல்ஆம் மருந்தீசன் பேரை;
ஒருதுயர் இல்லை உனக்கு.



அரன் மேல் எறி கல்லை அன்பு அறிந்து போதாச் சிரம் ஏற்றான் - (சாக்கிய நாயனார்) அரன் மீது எறிந்த கல்லையும், அவர் அன்பின் தன்மையை அறிந்து, பூவாகத் திருமுடிமேல் ஏற்றான்; (போதா - போதாக; போது - பூ);
நெஞ்சே தினமும் உரைசெய் கருணைக்கடல் ஆம் மருந்தீசன் பேரை - மனமே, கருணைக்கடலான மருந்தீசன் திருப்பெயரைத் தினந்தோறும் சொல்லு;
ஒரு துயர் இல்லை உனக்கு - உனக்கு ஒரு துன்பமும் இல்லை;






57)
உனக்குள்ள ஆசைக் கொருவரை இல்லை;
தினம்இதனால் தீவினையே செய்தாய்; மனமே!
இடர்போக, வான்மியூர் ஈசன் கழலை
இடைவிடா தெண்ணி இரு.



பதம் பிரித்து:
உனக்கு உள்ள ஆசைக்கு ஒரு வரை இல்லை;
தினம் இதனால் தீவினையே செய்தாய்; மனமே!
இடர் போக, வான்மியூர் ஈசன் கழலை
இடைவிடாது எண்ணி இரு.


வரை - 12. Limit, boundary; எல்லை; 13. Measure; extent; அளவு;



58)
"இருளார் மிடறா, இறவாப் பிறவாப்
பொருளாய் இருக்கும், புனிதா, அருளாய்!"
எனவேண் டிடுவோர்க் கிலையே இடரே
மனமே, தினமும் வழுத்து.



பதம் பிரித்து:
"இருள் ஆர் மிடறா; இறவாப் பிறவாப்
பொருளாய் இருக்கும், புனிதா; அருளாய்!"
என வேண்டிடுவோர்க்கு இலையே இடரே;
மனமே, தினமும் வழுத்து.


"இருள் ஆர் மிடறா; - கருமை பொருந்திய கண்டனே; (மிடறு - கண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா மழுவா ளுடையாய்");
இறவாப் பிறவாப் பொருளாய் இருக்கும், புனிதா; - இறப்பும் பிறப்பும் இல்லாத பொருள் ஆகி என்றும் இருக்கும் தூயவனே;
அருளாய்!" என வேண்டிடுவோர்க்கு - அருள்வாயாக" என்று இறைஞ்சும், அடியவர்களுக்கு;
இலையே இடர் - துன்பம் இல்லையே;
ஏ மனமே தினமும் வழுத்து - ஏ மனமே, அப்பெருமானைத் தினமும் வணங்கு; (- 1. An exclamation inviting attention; ஒரு விளிக்குறிப்பு; அசைச்சொல்லாகவும் கொள்ளலாம்);



59)
வழுத்துவாய் நெஞ்சே, மறவா தவன்அஞ்
செழுத்தை; விடம்உண் டிருண்ட கழுத்துடை
ஐயன் மருந்தீசன் அன்பால் உளம்நைவார்
வெய்யவினை அற்று விடும்.



பதம் பிரித்து:
வழுத்துவாய் நெஞ்சே, மறவாது அவன் அஞ்சு
எழுத்தை; விடம் உண்டு இருண்ட கழுத்துடை
ஐயன், மருந்தீசன் அன்பால் உளம் நைவார்
வெய்ய வினை அற்று விடும்.


மறவாது - மறத்தல் இன்றி;
அன்பு - பக்தி;
உளம் நைதல் - உள்ளம் கனிதல்;
வெய்ய வினை - கொடிய வினை;
அற்றுவிடும் - தீர்ந்துவிடும்;



60)
விடாது தொடரும் வினைகளெல்லாம் உன்னைத்
தொடாது விலகவழி சொல்வேன் படாரெனத்
தூணிலிருந் தன்றுவந்தான் தோண்டியும் காணாத்தாள்
பேணிலறும் பின்னைப் பிறப்பு.



பதம் பிரித்து:
விடாது தொடரும் வினைகள் எல்லாம் உன்னைத்
தொடாது விலக வழி சொல்வேன்; படார் எனத்
தூணிலிருந்து அன்று வந்தான் தோண்டியும் காணாத் தாள்
பேணில் அறும் பின்னைப் பிறப்பு.


படார் எனத் தூணிலிருந்து அன்று வந்தான் தோண்டியும் காணாத் தாள் பேணில் - (தூணைப் பிளந்துகொண்டு தோன்றிய நரசிம்மன் ஆன) திருமால் (பன்றி வடிவில்) நிலம் அகழ்ந்தும் காணாத திருவடியைப் போற்றினால்; (பேணில் - பேணினால் - போற்றினால்);
அறும் பின்னைப் பிறப்பு - இனி வரவிருக்கும் பிறவிகள் எல்லாம் இல்லாதொழியும்;
குறிப்பு: 'மனமே' என்ற விளி தொக்கு நிற்கின்றது.
(சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு - 9.29.1 - "மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் ... பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே"



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment