Saturday, June 29, 2019

04.69 – கோடிகா - (திருக்கோடிக்காவல்)


04.69 – கோடிகா - (திருக்கோடிக்காவல்)



2014-06-15
கோடிகா (திருக்கோடிகா - திருக்கோடிக்காவல்)
---------------------------------------------------------------
(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு)
(காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் - 11.2.9 - "துத்தம்கைக் கிள்ளை விளரி தாரம்" )
(சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - “புண்ணியர் பூதியர் பூத நாதர்”)



1)
தளிர்மதி தாழ்சடைத் தாங்கி னானைத்
.. தன்னிகர் இல்லியைச் சாந்த மாக
ஒளிர்பொடி பூசிய மார்பி னானை
.. ஒண்டமிழ் மாலைகள் ஓதி ஏத்தி
அளிபவர் வேண்டு வரங்கள் எல்லாம்
.. அருளிடும் அண்ணலை வண்டு பாடும்
குளிர்பொழில் சூழ்திருக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



தளிர்மதி தாழ்சடைத் தாங்கினானைத் - இளமதியைத் தாழும் சடையில் தரித்தவனை;
தன் நிகர் இல்லியைச் - தனக்கு ஒப்பு இல்லாதவனை;
சாந்தமாக ஒளிர்பொடி பூசிய மார்பினானை - சந்தனம் போல் வெண்திருநீற்றை மார்பில் பூசியவனை; (சாந்தம் - சந்தனம்);
ஒண் தமிழ் மாலைகள் ஓதி ஏத்தி அளிபவர் வேண்டு வரங்கள் எல்லாம் அருளிடும் அண்ணலை - ஒளியுடைய தமிழ்ப் பாமலைகளைப் பாடித் துதித்து உருகுகின்ற அன்பர்கள் வேண்டிய வரங்களையெல்ளாம் கொடுத்தருளும் தலைவனை; (அளிதல் - மனம் குழைதல்);
வண்டு பாடும் குளிர்பொழில் சூழ் திருக்கோடிகாவிற் கூத்தனை - வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



2)
வெங்கரி ஈருரி போர்த்தி னானை
.. விருப்பொடு மாலொரு கண்ணி டந்து
பங்கயம் என்றிடக் கண்டோர் ஆழி
.. பரிவொடு தந்தருள் பண்பி னானைப்
பொங்கர வத்தினை நாண தாகப்
.. பூண்ட புராணனை வண்டு பாடும்
கொங்கலர் ஆர்பொழிற் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



வெம் கரி ஈர் உரி போர்த்தினானை - கொடிய யானையின் உரித்த தோலைப் போர்த்தியவனை;
விருப்பொடு மால் ஒரு கண் இடந்து பங்கயம் என்று இடக் கண்டு ஓர் ஆழி பரிவொடு தந்தருள் பண்பினானைப் - பக்தியோடு திருமால் தன் கண் ஒன்றைத் தோண்டித் தாமரைப்பூவாக இட்டுப் பூசிக்கவும் அது கண்டு இரங்கி அவனுக்குச் சக்கராயுதத்தை அருளியவனை;
பொங்கு அரவத்தினை நாண்அது ஆகப் பூண்ட புராணனை - சீறும் பாம்பை அரையில் நாணாகக் கட்டிய பழமையானவனை;
வண்டு பாடும் கொங்கு அலர் ஆர் பொழிற் கோடிகாவிற் கூத்தனை - வண்டுகள் ஒலிக்கின்ற வாச மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



3)
வெண்டிரை வேலையை வெற்பு மத்தால்
.. விண்ணவர் கடைய எழுந்த நஞ்சைக்
கண்டவர் அஞ்சி இறைஞ்ச உண்டு
.. காத்தமு தீந்தருள் நீல கண்டன்
பண்டடர் கானிடை ஏனம் எய்து
.. பார்த்தனுக் கோர்படை தந்த வேடன்
கொண்டலு லாம்பொழிற் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



வெண் திரை வேலையை வெற்பு மத்தால் விண்ணவர் கடைய - வெண்மையான அலைகளை உடைய பாற்கடலை ஒரு மலையை மத்தாக நிறுவித் தேவர்கள் கடைந்தபோது;
எழுந்த நஞ்சைக் கண்டு அவர் அஞ்சி இறைஞ்ச உண்டு காத்து அமுது ஈந்து அருள் நீலகண்டன் - தோன்றிய விடத்தைக் கண்டு அவர்கள் பயந்து துதிக்கவும், அவ்விடத்தை உண்டு இரட்சித்து அவர்களுக்கு அமுதத்தைத் தந்த நீலகண்டன்;
பண்டு அடர் கானிடை ஏனம் எய்து பார்த்தனுக்கு ஓர் படை தந்த வேடன் - முன்பு, அடர்ந்த காட்டின் இடையே ஒரு பன்றியை அம்பால் எய்து அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள்செய்த வேடன்;
கொண்டல் உலாம் பொழில் கோடிகாவில் கூத்தனை நாள்தொறும் கூறு நாவே - மேகம் உலவுகின்ற சோலை சூழந்த திருக்கோடிகாவில் உறையும் கூத்தனைத் தினந்தோறும் சொல்லு நாக்கே!



4)
செக்கர் இளங்கதிர் போல்நி றத்துச்
.. சிவபெரு மானை அரண்கள் மூன்றை
நக்கெரி செய்ய வலானை நாக
.. நாணரை ஆர்த்த பிரானை அன்று
சக்கரம் ஒன்றை நிலத்திற் கீறிச்
.. சலந்தரன் தனதுடல் கீண்ட தேவைக்
கொக்கிரை தேர்வயற் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



செக்கர் இளங்கதிர் போல் நிறத்துச் சிவபெருமானை - இளம் செஞ்சூரியன் போன்ற செம்மேனிச் சிவபெருமானை; (செக்கர் - சிவப்பு);
அரண்கள் மூன்றை நக்கு எரிசெய்ய வலானை - முப்புரங்களைச் சிரித்து எரிக்க வல்லவனை;
நாக நாண் அரை ஆர்த்த பிரானை - நாகத்தை அரைநாணாகக் கட்டிய தலைவனை;
அன்று சக்கரம் ஒன்றை நிலத்திற் கீறிச் சலந்தரன் தனது உடல் கீண்ட தேவைக் - முன்பு தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து சலந்தரனுடைய உடலைப் பிளந்த தேவனை; (கீறுதல் - எழுதுதல்; வரைதல்); (கீள்தல் - கிழித்தல்);
கொக்கு இரை தேர் வயற் கோடிகாவிற் கூத்தனை - கொக்குகள் இரைதேர்கின்ற நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



5)
தயிரொடு பாலுகந் தாடி னானைத்
.. தாணுவை அந்தகன் தன்னைச் செற்ற
அயில்நுனை மூவிலை வேலி னானை
.. அங்கையில் ஆரழல் ஏந்தி னானை
மயிலன மாதொரு பங்கி னானை
.. வண்டினம் தேன்மலர் நாடிப் பாடக்
குயில்பயில் குளிர்பொழிற் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



தயிரொடு பால் உகந்து ஆடினானைத் - தயிர் பால் இவற்றால் அபிஷேகத்தை விரும்பியவனை;
தாணுவை - தாணு என்ற திருநாமம் உடைய சிவனை;
அந்தகன் தன்னைச் செற்ற அயில்நுனை மூவிலை வேலினானை - அந்தகாசுரனை அழித்த கூரிய முனையையுடைய திரிசூலத்தை ஏந்தியவனை;
அங்கையில் ஆரழல் ஏந்தினானை - கையில் நெருப்பை ஏந்தியவனை;
மயில் அன மாது ஒரு பங்கினானை - மயில் போன்ற உமையம்மையை ஒரு பங்காக உடையவனை;
வண்டு இனம் தேன்மலர் நாடிப் பாடக் குயில் பயில் குளிர்பொழிற் கோடிகாவிற் கூத்தனை - வண்டுகள் மது நிறைந்த பூக்களை நாடி இசை எழுப்பக், குயில்கள் ஒலிக்கின்ற குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



6)
வெடிபடு தமருகம் ஏந்தி னானை
.. விண்ணவர் ஏத்த அவர்க்கி ரங்கிக்
கடிமதில் மூன்றொர் கணத்தில் வேவக்
.. கணைதொடு மாமலை வில்லி னானைப்
பொடியணி மார்பனைத் தொண்டு செய்து
.. போற்றி மகிழ்ந்திடும் அன்பர் நெஞ்சில்
குடிகொளும் ஈசனைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



வெடிபடு தமருகம் ஏந்தினானை - வெடி போன்று ஒலிக்கும் உடுக்கையை ஏந்தியவனை; (தமருகம் -உடுக்கை);
விண்ணவர் ஏத்த அவர்க்கு இரங்கிக் கடிமதில் மூன்று ஒர் கணத்தில் வேவக் கணைதொடு மாமலை வில்லினானைப் - தேவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு இரங்கிக் , காவலுடைய முப்புரங்களும் ஒரு கணப்பொழுதில் வெந்து சாம்பலாகும்படி மேருமலையை வில்லாக ஏந்திக் கணையைத் தொடுத்தவனை; (கடி - காவல்); (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);
பொடி அணி மார்பனைத் - திருநீற்றை மார்பில் பூசியவனை;
தொண்டு செய்து போற்றி மகிழ்ந்திடும் அன்பர் நெஞ்சில் குடிகொளும் ஈசனைக் - திருத்தொண்டு செய்து வணங்கி மகிழும் பக்தர்கள் மனமே கோயிலாகக் கொண்ட ஈசனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



7)
கழலிணை போற்றிடும் அன்பர் தம்மைக்
.. கடலிடைப் புணையெனக் காக்கும் தேவை
நிழலெறி கூர்மழு வாளி னானை
.. நெற்றியிற் கண்ணனை நீற்றி னானை
அழலன வேணியிற் றிங்கட் டுண்டம்
.. அரவொடு வைத்துகந் தானை ஏலக்
குழலுமை கூறனைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



கழல் இணை போற்றிடும் அன்பர் தம்மைக் கடலிடைப் புணை எனக் காக்கும் தேவை - இரு திருவடிகளை வழிபடும் பக்தர்கள் வினைக்கடலில் (/துன்பக்கடலில்) ஆழாதபடி அவர்களைக் காக்கின்ற மரக்கலம் போன்ற தேவனை;
நிழல் எறி கூர் மழு வாளினானை - ஒளி வீசும் கூரிய மழுவாயுதத்தை ஏந்தியவனை; (நிழல் - ஒளி); (எறித்தல் - ஒளிவீசுதல்);
நெற்றியிற் கண்ணனை நீற்றினானை - முக்கண்ணனைத், திருநீற்றைப் பூசியவனை;
அழல் அன வேணியில் திங்கள் துண்டம் அரவொடு வைத்து உகந்தானை - தீப்போன்ற செஞ்சடையில் பிறைச்சந்திரனைப் பாம்போடு வைத்து மகிழ்ந்தவனை;
ஏலக் குழல் உமை கூறனைக் - நறுமணம் கமழும் கூந்தலை உடைய உமையம்மையை ஒரு கூறாக உடையவனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



8)
வஞ்சி நடுங்கிட வெற்ப சைத்த
.. வல்லவு ணன்முடி பத்த டர்த்த
மஞ்சனை இன்னிசை பாடக் கேட்டு
.. வாளொடு நாளருள் செய்த கோனை
நஞ்சணி கண்டனை வேத மோது
.. நாவனை நூலணி மார்பி னானைக்
குஞ்சியில் ஆற்றனைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



வஞ்சி நடுங்கிட வெற்பு அசைத்த வல் அவுணன் முடி பத்து அடர்த்த மஞ்சனை - உமையம்மை நடுங்குமாறு கயிலைமலையைப் பெயர்த்த வலிய கொடிய இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கிய வீரனை; (வஞ்சி - பெண்); (மஞ்சன் - மைந்தன் - வீரன்);
(அவுணன், அரக்கன் என்ற இரு சொற்களும் ஒத்த பொருள் உடையனவென்றே கருதுகின்றேன். இராவணனை அவுணர்கோன் என்றும் தேவாரத்திற் கூறக் காணலாம். - சம்பந்தர் தேவாரம் - 1.51.8 - "... இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால் துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.")
இன்னிசை பாடக் கேட்டு வாளொடு நாள் அருள்செய்த கோனை - பின்னர் அவன் இசைபாடக் கேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளையும் நீண்ட ஆயுளையும் கொடுத்த தலைவனை;
நஞ்சு அணி கண்டனை - நீலகண்டனை;
வேதம் ஓது நாவனை - வேதங்களைப் பாடியருளிய நாவை உடையவனை;
நூல் அணி மார்பினானைக் - மார்பில் பூணூல் அணிந்தவனை;
குஞ்சியில் ஆற்றனைக் - தலையில் கங்கையை அணிந்தவனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



9)
பார்தனை அகழ்திரு மாலும் அன்னப்
.. பறவையும் நேட வளர்ந்த தீயைச்
சீர்தனைப் பாடிய மாணி வாழத்
.. திருவடி யால்கொடுங் கூற்று மாள
மார்பில் உதைத்தருள் செய்பெம் மானை
.. வாணுத லாளொரு பங்கி னானைக்
கூர்மழு வாளனைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



பார்தனை அகழ் திருமாலும் அன்னப் பறவையும் நேட வளர்ந்த தீயைச் - பன்றியுருவில் நிலத்தை அகழ்ந்த திருமாலும் அன்னப்பறவை உருவில் சென்ற பிரமனும் தேடும்படி ஓங்கிய சோதியை; (பார் - நிலம்); (நேடுதல் - தேடுதல்);
சீர்தனைப் பாடிய மாணி வாழத் திருவடியால் கொடுங் கூற்று மாள மார்பில் உதைத்தருள்செய் பெம்மானை - புகழ் பாடி வழிபட்ட மார்க்கண்டேயர் இறவாமல் வாழும்படி கொடிய நமனை மார்பில் உதைத்து அழித்தவனே; (மாணி - பிரமசாரி - மார்க்கண்டேயர்);
வாள் நுதலாள் ஒரு பங்கினானைக் - ஒளி பொருந்திய நெற்றியை உடைய உமையை ஒரு பங்காக உடையவனை; (வாள் - ஒளி); (நுதல் - நெற்றி);
கூர் மழுவாளனைக் - கூரிய மழுவை ஏந்தியவனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



10)
நாவினிற் பொய்யணி வஞ்ச கர்க்கு
.. நன்மையி லாதவன் அன்பர் பாலன்
ஆவினில் அஞ்சுகந் தாடும் ஐயன்
.. அஞ்சடை மேல்மணம் நாறு கொன்றைப்
பூவிள நாகம் அலைத்தொ லிக்கும்
.. புனல்தலை மாலைவெண் திங்க ளோடு
கூவிளம் சூடியைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



நாவினில் பொய் அணி வஞ்சகர்க்கு நன்மை இலாதவன் - நாவால் ஓயாமல் பொய்யுரைத்து வஞ்சிக்கும் கீழோர்க்கு அருள் இல்லாதவன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - “சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்”);
அன்பர் பாலன் - பக்தர்கள் அருகில் இருப்பவன்; பக்தர்களைக் காப்பவன்; (பால் - பக்கம்); (பாலன் - காப்பவன்; பூபாலன், கோபாலன், முதலியன போல்);
ஆவினில் அஞ்சு உகந்து ஆடும் ஐயன் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் விரும்பும் தலைவன்;
அம் சடைமேல் மணம் நாறு கொன்றைப்பூ, இள நாகம், அலைத்து ஒலிக்கும் புனல், தலைமாலை, வெண் திங்களோடு கூவிளம் சூடியை - அழகிய சடையின்மேல் வாசம் கமழும் கொன்றைமலர், இளம் பாம்பு, அலைமோதி ஒலிக்கின்ற கங்கை, மண்டையோட்டுமாலை, சந்திரன், வில்வம் ஆகியவற்றை அணிந்தவனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



11)
கன்றினைக் கொன்றதன் மைந்தன் மேல்தேர்க்
.. காலுற ஊர்ந்துயர் நீதி காட்டி
நின்றசெங் கோல்மனு விற்கி ரங்கு
.. நின்மல னைப்புரை ஒன்றி லானை
வென்றி விடைக்கொடி யானைக் காம
.. வேளுடல் வெந்தற நோக்கி னானைக்
கொன்றையந் தாரனைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



* முதல் இரண்டு அடிகள் மனுநீதிச்சோழன் வரலாற்றைச் சுட்டின. பெரியபுராணத்திற் காண்க.


கன்றினைக் கொன்ற தன் மைந்தன்மேல் தேர்க்கால் உற ஊர்ந்து உயர் நீதி காட்டி நின்ற – (அரசகுமாரன் தேரோட்டும்போது சிக்கி உயிரிழந்த கன்றின் தாய்ப்பசுவைக் கண்டு ) அக்கன்றைக் கொன்ற தன் மைந்தன் மீது தன் தேர்ச்சக்கரத்தை ஏற்றிச் செலுத்தி உயர்ந்த நீதியை வழங்கிய; (கால் - சக்கரம்); (ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்);
செங்கோல் மனுவிற்கு இரங்கு நின்மலனை - செங்கோல் வழுவாத மனுநீதிச் சோழனுக்கு இரங்கி அருளிய தூயனை;
புரை ஒன்றிலானை - ஓப்பற்றவனைக், குற்றமற்றவனை; (புரை - ஒப்பு ; குற்றம்);
வென்றி விடைக்கொடியானை - வெற்றியுடைய இடபக்கொடி உடையவனை;
காமவேள் உடல் வெந்து அற நோக்கினானை - மன்மதனது உடல் வெந்து அழியும்படி அவனை நெற்றிக்கண்ணால் பார்த்தவனை;
கொன்றையந் தாரனை - கொன்றைமாலை அணிந்தவனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :
எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு.
விளச்சீர் வரும் இடத்தில் மாங்காய்ச்சீரோ மாச்சீரோ வரலாம். விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் இவ்வமைப்பு என்று கருதுகின்றேன்.
2) காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் - 11.2.1 -
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
.. குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
.. பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
.. தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
.. அப்ப னிடந்திரு ஆலங் காடே.
3) கோடிகா - (திருக்கோடிக்காவல்) - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=1064
-------------------

No comments:

Post a Comment