Friday, June 28, 2019

04.68 – பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)


04.68 – பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)



2014-06-15
பந்தணைநல்லூர் (இக்காலத்தில் 'பந்தநல்லூர்')
--------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதானா தனதன தனதானா” என்ற சந்தம்.
தனதன என்பது தானன என்றும் வரலாம். தனதானா என்பது தானானா என்றோ தானதனா என்றோ வரலாம்.)
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - 'வடியுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்து')



1)
அசுரரும் இமையோரும் அலைகடல் கடைநாளில்
விசுவம தழிநஞ்சே வெளிவர அதுவுண்டான்
பசுமயில் உமைபங்கன் பசுபதி பதியென்பர்
பசிதணி வயல்சூழ்ந்த பந்தணை நல்லூரே.



* பசுபதீசுவரர் - திருப்பந்தணைநல்லூர் ஈசன் திருநாமம்;
கடைநாளில் - வினைத்தொகை - கடைந்த சமயத்தில்;
விசுவமது அழிநஞ்சு - அகிலத்தை அழிக்கும் விடம்;
அது உண்டான் - அதனை உண்டவன்;
பசுமயில் உமை - பசிய மயில் போன்ற உமையம்மை;
பசிதணி வயல் - உலகின் பசியைத் தணிக்கும் வயல்;



2)
சுடரெரி கரமேந்தி சுடலையில் நடமாடி
இடர்புரி எயில்மூன்றும் நொடியினில் எரிமூழ்கிப்
படவொரு கணையெய்த பசுபதி பதியென்பர்
படர்பொழில் புடைசூழ்ந்த பந்தணை நல்லூரே.



சுடரெரி கரம் ஏந்தி - சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கையில் ஏந்தியவன்;
சுடலையில் நடமாடி - சுடுகாட்டில் கூத்தாடுபவன்;
இடர்புரி எயில் மூன்றும் நொடியினில் எரிமூழ்கிப் பட - துன்பம் செய்த முப்புரங்களும் கணப்பொழுதில் தீப்பற்றி அழியும்படி;



3)
நிலவினைச் சடைமீது நிலவிட அருளண்ணல்
நிலைபெறத் தமிழ்பாடி நிரைகழல் தொழுவார்க்குப்
பலவினின் பழமொக்கும் பசுபதி பதியென்பர்
பலசுரம் அளிபாடும் பந்தணை நல்லூரே.



நிலவுதல் - நிலைத்திருத்தல்; தங்குதல்;
நிலைபெறுதல் - துன்பமற்ற நிலையை அடைதல்;
நிரைகழல் - வரிசையாகக் கழல் அணிந்த திருவடி;
பலவின் இன் பழம் ஒக்கும் - பலாவின் இனிய பழம் போன்ற; (பலவு - பலா);
பலசுரம் அளி பாடும் - பல சுரங்களை வண்டுகள் பாடுகின்ற;



4)
அங்கமும் மறைநாலும் அருளிய திருநாவன்
அங்கமும் அணியீசன் அணிமயில் உமைபங்கன்
பங்கமில் புகழாளன் பசுபதி பதியென்பர்
பைங்கிளி பயில்சோலைப் பந்தணை நல்லூரே.



அங்கமும் மறைநாலும் - நால்வேதமும் ஆறங்கமும்;
அங்கமும் அணி ஈசன் - எலும்பையும் பூணுகின்ற தலைவன்;
அணி மயில் உமை பங்கன் - அழகிய மயில் போன்ற உமையம்மையை ஒரு பங்காக உடையவன்;
பங்கம் இல் புகழாளன் - குற்றமற்ற புகழை உடையவன்;
பைங்கிளி பயில் சோலை - பசிய கிளிகள் ஒலிக்கும் சோலை; (பயில்தல் - ஒலித்தல்; தங்குதல்);



5)
துணிமதி புனைதூயன் சுடுபொடி துதைமார்பன்
அணியிழை ஒருபாகன் அருவிடம் அடைகண்டன்
பணியினை அரையார்த்த பசுபதி பதியென்பர்
பணிபவர் பவம்நீக்கும் பந்தணை நல்லூரே.



துணிமதி - பிளவுபட்ட திங்கள்;
சுடுபொடி - சுடுநீறு - திருநீறு;
துதைதல் - படிதல் (To be steeped);
அணியிழை - பெண் (Woman, as adorned with jewels);
அருவிடம் அடைகண்டன் - கொடிய நஞ்சை அடைத்த கண்டத்தை உடையவன்;
பணியினை அரை ஆர்த்த - நாகப்பாம்பை அரையில் நாணாகக் கட்டிய;
பவம் - பிறவி; பாவம்;



6)
சுறவமர் கொடியானைச் சுடுநுதற் கணனெந்தை
இறவொடு பிறவில்லான் இணையிலி இடுகானிற்
பறையொலி தரவாடும் பசுபதி பதியென்பர்
பறவைகள் பயில்சோலைப் பந்தணை நல்லூரே.



சுற / சுறவு - சுறா - மகரமீன் (Shark);
சுறவு அமர் கொடியான் - மகரக்கொடி உடைய மன்மதன்; (சம்பந்தர் தேவாரம் - 2.23.4 - "சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய் உறநெற் றிவிழித் தஎம் உத் தமனே....");
இறவு, பிறவு - இறப்பு, பிறப்பு;
இணையிலி - இணை இல்லாதவன்;
பறை ஒலிதர ஆடும் - பறை ஒலிக்க ஆடும்; (தருதல் - ஒரு துணைவினை);
பயில்தல் - ஒலித்தல்; தங்குதல்;



7)
இனியவன் எருதேறும் இறையவன் மறைபாடும்
தனியவன் வரம்யாவும் தருபவன் அலைமோதும்
பனிநனை சடையேந்தல் பசுபதி பதியென்பர்
பனிமதி தொடுசோலைப் பந்தணை நல்லூரே.



தனியவன் - ஒப்பற்றவன்; (தனி - ஒப்பின்மை);
பனி நனைசடை - நீர் நனைக்கின்ற சடை;
ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்;
பனிமதி - குளிர்ச்சி பொருந்திய சந்திரன்;



8)
நிசியன வணமேனி நிசிசரன் முடிபத்தும்
நசிவுற விரலூன்றி நனியருள் புரிபெம்மான்
பசியெனப் பலிதேரும் பசுபதி பதியென்பர்
பசியதண் பொழிலாரும் பந்தணை நல்லூரே.



நிசி அன வண மேனி நிசிசரன் முடி பத்தும் - இருளைப் போன்ற கரிய நிறத்து அரக்கனான இராவணனின் பத்துத்தலைகளும்; (நிசி - இரவு; இருள்); (நிசிசரன் - இரவில் திரிபவன் - அசுரன்; அரக்கன்); (அப்பர் தேவாரம் - 5.65.11 - "மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை புக்கெ டுத்தலும் ..." - மைக்கடுத்த நிறத்து அரக்கன் - கரிய இருளை ஒத்த நிறத்தினை உடைய இராவணன்.);
நசிவுற விரல் ஊன்றி நனி அருள் புரி பெம்மான் - நெரிவுற ஒரு விரலை ஊன்றிப் பின் பேரருள் செய்த பெருமான்; (நசிவு - நெரிவு - Bruise, contusion); (நனி - மிகவும்);
பலி - பிச்சை;
பசிய தண் பொழில் ஆரும் - பசுமையான குளிர்ந்த சோலைகள் பொருந்திய;



9)
மண்ணகழ் அரிவேதன் மலரடி முடிகாணார்
கண்ணமர் நுதலெந்தை கழலிணை தொழுமன்பர்
பண்ணிய வினைதீர்க்கும் பசுபதி பதியென்பர்
பண்ணிசை மிகுசோலைப் பந்தணை நல்லூரே.



மண் அகழ் அரி வேதன் - நிலத்தை அகழ்ந்த திருமாலும் பிரமனும்;
கண் அமர் நுதல் எந்தை - நெற்றிக்கண் திகழும் எம் தந்தை;
கழல் இணை - இரு திருவடிகள்;
பண் இசை மிகு சோலை - வண்டுகள் முரல்வதால் பண் இசை மிகுந்த பொழில் சூழ்ந்த;



10)
நுழைவிலர் பலபொய்கள் நுவல்பவர் உரைநம்பேல்
மழையன மணிகண்டன் மலரடி மறவாதார்
பழவினைத் தொடர்நீக்கும் பசுபதி பதியென்பர்
பழமலி பொழில்சூழ்ந்த பந்தணை நல்லூரே.



நுழைவு இலர் - (நுழைவு - நுட்பவறிவு - Keen understanding or perception);
நுவல்தல் - சொல்லுதல்;
நம்பேல் - நம்ப வேண்டா;
மழை அன மணிகண்டன் - மேகம் போன்ற நீலமணி திகழும் கண்டத்தை உடையவன்;
பழமலி பொழில் - பழங்கள் மிகுந்த சோலை;



11)
கடிமலர் பலதூவிக் கசிவொடு தமிழ்பாடி
அடியிணை தொழுவாரை அமர்சிவ புரமேற்றும்
படியென அருள்கையன் பசுபதி பதியென்பர்
படியுறு பசிதீர்செய்ப் பந்தணை நல்லூரே.



கடிமலர் பல தூவிக் கசிவொடு தமிழ் பாடி - வாசமலர்கள் பல தூவி உருகிச் செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாடி; (கடி - வாசனை);
அடியிணை தொழுவாரை அமர் சிவபுரம் ஏற்றும் - இரு திருவடிக்ஃளை வழிபட்டாரை விரும்பிய சிவலோகத்திற்கு ஏற்றுகின்ற ; (அமர்தல் - விரும்புதல்);
படி என அருள் கையன் பசுபதி பதி என்பர் - படி போல அருள்கின்ற திருக்கையை உடைய பசுபதி உறைகின்ற இடம் என்பர்;
படி உறு பசி தீர் செய்ப் பந்தணை நல்லூரே - உலகின் பசியைத் தீர்க்கும் வயல் சூழ்ந்த திருப்பந்தணைநல்லூர் ஆகும்; (படி பூமி); (உறுபசி - உற்ற பசி; மிக்க பசி); (செய் - வயல்);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
-------------- --------------

No comments:

Post a Comment