Tuesday, June 25, 2019

04.67 – எறும்பியூர் (திருவெறும்பூர்)


04.67எறும்பியூர் (திருவெறும்பூர்)



2014-06-08
திருவெறும்பூர் (தேவாரத்தில் - திரு-எறும்பியூர்)
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. )
(மாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் - என்ற வாய்பாடு. ஒரோவழி வேறு காய்ச்சீர் வரக்கூடும்.)
(சம்பந்தர் தேவாரம் - 3.63.1 - "பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்");
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")

1)
கடியாரும் மலர்தூவிக் கழல்போற்றும் சுரர்தங்கள்
மிடியாவும் துடைபெம்மான் விரிகொன்றை மலர்சூடி
இடியாரும் குரலேற்றன் எழிலாரும் எறும்பூரில்
அடியாருக் கருள்செய்வான் அலையாரும் முடியானே.

கடி ஆரும் மலர் தூவிக் கழல் போற்றும் சுரர்தங்கள் மிடி யாவும் துடை பெம்மான் - மணம் மிகுந்த பூக்களைத் தூவித் திருவடியை வழிபட்ட தேவர்களது துன்பங்களையெல்லாம் தீர்த்த பெருமான்; (கடி வாசனை); (சுரர் - தேவர்); (மிடி - துன்பம்); (துடைத்தல் - அழித்தல்);
விரிகொன்றை மலர் சூடி - விரிகின்ற கொன்றைமலரைச் சூடியவன்;
இடி ஆரும் குரல் ஏற்றன் - இடி போன்ற குரல் உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவன்; (ஆர்தல் - ஒத்தல்);
எழில் ஆரும் எறும்பூரில் அடியாருக்கு அருள்செய்வான் - அழகிய திருவெறும்பூரில் பக்தர்களுக்கு அருள்புரிபவன்;
அலை ஆரும் முடியான் - கங்காதரன்;

2)
கருதார்தம் புரமூன்றைக் கணையொன்றால் எரியீசன்
ஒருதூவெண் மதிசூடி உமைமங்கை இடமாக
எருதேறல் மகிழ்ஏந்தல் எழிலாரும் எறும்பூரில்
இருதாளைப் பணிவார்தம் இடர்தீர்க்கும் பெருமானே.

கருதார்தம் புரம் மூன்றைக் கணை ஒன்றால் எரி ஈசன் - பகைவர்களது முப்புரங்களை ஓர் அம்பால் எய்து எரித்த ஈசன்; (கருதார் - பகைவர்);
ஒரு தூ வெண் மதி சூடி - தூய பிறைச்சந்திரனைச் சூடியவன்;
உமைமங்கை இடம் ஆக எருது ஏறல் மகிழ் ஏந்தல் - உமை இடப்பாகம் ஆக, இடப வாகனத்தில் ஏறுகின்ற தலைவன்; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்);
எழில் ஆரும் எறும்பூரில் இருதாளைப் பணிவார்தம் இடர் தீர்க்கும் பெருமானே - அழகிய திருவெறும்பூரில் தனது இரு திருவடிகளை வழிபடும் அன்பர்களது துன்பத்தைத் தீர்க்கும் பெருமான்;
(எழிலாரும் எறும்பூரில் இருதாளைப் பணிவார்தம் இடர்தீர்க்கும் பெருமான் = 1. "தனது" என்ற சொல்லை வருவித்து, "எழிலாரும் எறும்பூரில் தனது இருதாளைப் பணிவார்தம் இடர்தீர்க்கும் பெருமான்”; 2. “எழிலாரும் எறும்பூரில் பெருமான்”, “இருதாளைப் பணிவார்தம் இடர்தீர்க்கும் பெருமான்” என்று தனித்தனி இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்.)

3)
நீலத்தை மிடறேற்றான் நிலவைத்தன் முடிவைத்த
கோலத்தன் அழிவில்லான் கொடியாரூர் அழிவில்லான்
ஏலப்பூங் குழலாள்கோன் எழிலாரும் எறும்பூரில்
சூலத்தன் அடிபோற்றத் துயரில்லை ஞாலத்தே.

நீலத்தை மிடறு ஏற்றான் - ஆலகால விடத்தை நீலமணியாகக் கண்டத்தில் ஏற்றவன்;
நிலவைத் தன் முடி வைத்த கோலத்தன் - பிறையைச் சென்னிமேல் சூடியவன்;
அழிவில்லான் - அழிவு அற்றவன்;
கொடியார் ஊர் அழி வில்லான் - கொடியவர்தம் முப்புரங்களை அழித்த வில்லினன்;
ஏலப் பூங்குழலாள் கோன் - மயிர்ச்சாந்து அணிந்த மென்மையான கூந்தலை உடைய உமைக்குக் கணவன்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (7.15.5 - “மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்”);
எழில் ஆரும் எறும்பூரில் சூலத்தன் அடிபோற்றத் துயர் இல்லை ஞாலத்தே - அழகிய திருவெறும்பூரில் சூலபாணியான சிவபெருமானது திருவடியை வழிபடும் அன்பர்களுக்கு இவ்வுலக வாழ்வில் துன்பங்கள் திரும்;

4)
சுமையாக விறகேந்தி விளையாடல் புரிசெல்வன்
அமைதேரின் மிசையேறி அரண்மூன்றுக் கழல்மூட்டி
இமையோர்கட் கிரங்கீசன் எழிலாரும் எறும்பூரில்
உமையோடும் உறைபெம்மான் எமையாளும் கமையானே.

* அடி-1 - திருவிளையாடற்புராணத்தில் விறகு விற்ற படலத்தைச் சுட்டியது;
சுமையாக விறகு ஏந்தி விளையாடல் புரி செல்வன் - விறகு விற்றுத் திருவிளையாடல் புரிந்த செல்வன்;
அமை தேரின்மிசை ஏறி அரண் மூன்றுக்கு அழல் மூட்டி இமையோர்கட்கு இரங்கு ஈசன் - தேவர்கள் செய்த தேரின்மேல் ஏறி முப்புரங்களை எரித்துத் தேவர்களுக்கு அருள்புரிந்த ஈசன்;
எழில் ஆரும் எறும்பூரில் உமையோடும் உறை பெம்மான் - அழகிய திருவெறும்பூரில் உமாதேவியோடு உறைகின்ற பெருமான்;
எமை ஆளும் கமையான் - எம்மை ஆள்கின்ற அருள்வடிவினன்; (விடை - விடையான்; அதுபோல், கமை - கமையான்); (கமை - பொறுமை; அருள்; - க்ஷமை என்ற வடசொல்லின் தமிழ் வடிவம்); (அப்பர் தேவாரம் - 6.55.8 - "... கமையாகி நின்ற கனலே போற்றி ...");

5)
போரேறு தனிலேறி புலித்தோலை அரைவீக்கி
ஓராறு சடையேற்றான் ஒருகோட்டை உடைமைந்தன்
ஈராறு கரன்தாதை எழிலாரும் எறும்பூரில்
சீரேறு பதம்போற்றச் செறுபாவம் சேராவே.

போர் ஏறுதனில் ஏறி - போர் செய்யும் இடபத்தை வாகனமாக உடையவன்; (ஏறி, வீக்கி - ஏறியவன்; வீக்கியவன் என்ற பெயர்ச்சொற்கள்);
புலித்தோலை அரை வீக்கி - ஆரையில் புலித்தோலைக் கட்டியவன்;
ஓர் ஆறு சடை ஏற்றான் - கங்கையைச் சடையில் ஏற்றவன்;
ஒரு கோட்டை உடை மைந்தன் ஈர் ஆறு கரன் தாதை - ஒரு தந்தத்தை உடைத்த/உடைய மகனான கணபதிக்கும் பன்னிருகை முருகனுக்கும் தந்தை;; (கோடு - தந்தம்); (தாதை - தந்தை);
எழில் ஆரும் எறும்பூரில் சீர் ஏறு பதம் போற்றச் செறு பாவம் சேராவே - அழகிய திருவெறும்பூரில் அப்பெருமானது சீர் மிக்க திருவடியை வழிபட்டால் துன்புறுத்தும் தீவினைகள் தீரும்; (செறுதல் - வருத்துதல்);


6)
அலையூர்கள் அவைவேவ அரிகால்தீக் கணையேவச்
சிலையாக மலையேந்தி திருநீற்றன் மழவேற்றன்
இலையாரும் நுனைவேலன் எழிலாரும் எறும்பூரில்
நிலையாக உறைவான்தாள் நினைவார்க்கு வினைவீடே.

அலை ஊர்கள் அவை வேவ - எங்கும் அலைந்த முப்புரங்கள் வெந்து அழியும்படி;
அரி கால் தீக் கணை ஏவச் - விஷ்ணு வாயு அக்னி இம்மூவரும் ஒன்றாகச் சேர்ந்த அம்பை ஏவுவதற்கு; (கால் - வாயு);
சிலையாக மலை ஏந்தி - வில்ளாக மேருமலையை ஏந்தியவன்; (சிலை - வில்);
திருநீற்றன் மழவேற்றன் - திருநீற்றைப் பூசியவன், இளைய இடபத்தை ஊர்தியாக உடையவன்;
இலை ஆரும் நுனை வேலன் - இலை போன்ற நுனியை உடைய சூலத்தை ஏந்தியவன்;
எழில் ஆரும் எறும்பூரில் நிலையாக உறைவான் தாள் நினைவார்க்கு வினை வீடே - அழகிய திருவெறும்பூரில் நீங்காமல் என்றும் உறைகின்ற பெருமானது பாதத்தை நினையும் பக்தர்களது வினை நீங்கும்; (வினைவீடு - வினைநீக்கம்);

7)
ஒருமான்கை தனிலேந்தி உரகத்தைத் தலையேந்தி
அருநான்மா மறைபாடி அடலானை உரிமூடி
இருநான்கு வரைத்தோளன் எழிலாரும் எறும்பூரில்
பெருமான்தன் அடியார்க்குப் பெருங்காப்பாய் வருவானே.

ஏந்தி, பாடி, மூடி - ஏந்தியவன், பாடியவன், மூடியவன் என்ற பெயர்ச்சொற்கள்;
ஒரு மான் கைதனில் ஏந்தி - கையில் ஒரு மானை ஏந்தியவன்;
உரகத்தைத் தலை ஏந்தி - தலைமேல் பாம்பைத் தரித்தவன்; (உரகம் - பாம்பு);
அரு நான் மா மறை பாடி - அரிய நால்வேதங்களைப் பாடி அருளியவன்;
அடல் ஆனை உரி மூடி - வலிய கொலை யானையின் தோலைப் போர்த்தவன்;
இருநான்கு வரைத்தோளன் - மலைபோன்ற எட்டுப் புயங்களை உடையவன்;
எழில் ஆரும் எறும்பூரில் பெருமான் - அழகிய திருவெறும்பூரில் உறைகின்றவன்;
தன் அடியார்க்குப் பெரும் காப்பாய் வருவானே - எப்பெருமான் தன் அடியவர்களுக்கு பெரிய காவல் ஆவான்; (காப்பு - பாதுகாவல்);

8)
மடமாட்ட இலங்கைக்கோன் மலையாட்ட விரலூன்றிப்
படமாட்டா வலிதந்து பரவப்பின் பெயர்தந்தான்
இடுகாட்டில் நடமாடி எழிலாரும் எறும்பூரில்
நடுகாட்டி பதம்போற்ற நமையின்னல் நணுகாவே.

மடம் ஆட்ட இலங்கைக்கோன் மலை ஆட்ட விரல் ஊன்றிப் - அறியாமை ஆட்டுவிக்க அதனால் இலங்கை மன்னன் கயிலைமலையை அசைத்துப் பெயர்க்க முயன்றபொழுது ஈசன் ஒரு திருப்பாத விரலை ஊன்றி; (மடம் - அறியாமை); (ஆட்டுதல் - ஆடச்செய்தல் (இயக்குதல்); அசைத்தல்);
படமாட்டா வலி தந்து பரவப் பின் பெயர் தந்தான் - அவனுக்குப் பொறுக்கமுடியாத நோவைத் தந்து, பின் அவன் அழுது துதித்துப் பாடக் கேட்டு இரங்கி அவனுக்கு இராவணன் என்ற பெயரைத் தந்தான்; (பரவுதல் - துதித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.17.8 - "...கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த ஏரார்தரு மிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே." - குணநாமம் - அழுகைக் குணத்தால் வந்த பெயராகிய இராவணன் என்பது);
இடுகாட்டில் நடம் ஆடி - சுடுகாட்டில் கூத்தாடுபவன்;
எழில் ஆரும் எறும்பூரில் நடு காட்டி - அழகிய திருவெறும்பூரில் பாரபட்சம் இன்மையைக் காட்டுபவன்; (நடு - நடுநிலை; நீதி); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்..." - சலம் - கோட்டம்; பட்சபாதம் - நடுநிலை திறம்புகை - Partiality, as swerving from uprightness);
பதம் போற்ற நமை இன்னல் நணுகாவே - அப்பெருமானது திருவடியைப் போற்றினால் நம்மைத் துன்பங்கள் நெருங்கமாட்டா;

9)
கரியானும் கடிநாறும் கமலத்தில் உறைவானும்
தெரியாது மிகநேடித் திகைத்தேத்த முடிவில்லா
எரியாக எழுபெம்மான் எழிலாரும் எறும்பூரைப்
பிரியாதான் கழல்பேணும் பிரியத்தார் பெறுவாரே.

கரியானும் கடி நாறும் கமலத்தில் உறைவானும் - கரிய திருமாலும் வாசனை கமழும் தாமரையில் உறையும் பிரமனும்;
தெரியாது மிக நேடித் திகைத்து ஏத்த - அடிமுடி காணாமல் மிகவும் தேடி மனம் மயங்கித் துதிக்கும்படி; (நேடி - தேடி); (திகைத்தல் - மயங்குதல்);
முடிவு இல்லா எரியாக எழு பெம்மான் - எல்லை இல்லாத சோதி வடிவில் உயர்ந்த பெருமான்;
எழில் ஆரும் எறும்பூரைப் பிரியாதான் - அழகிய திருவெறும்பூரை என்றும் நீங்காதவன்;
கழல் பேணும் பிரியத்தார் பெறுவாரே - அப்பெருமானது திருவடியைப் போற்றும் அன்பர்கள் அவன் அருளை/நற்கதியை/விரும்பிய வரங்களைப் பெறுவார்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.93.9 - “..பிரியரா மடியவர்க் கணியராய்ப் ..”);

10)
அணைவில்லார் தினந்தோறும் அலர்தூற்றித் திரிவாரோர்
துணையில்லார் உரைகொள்ளேல் சுடுநீற்றன் புரிநூலன்
இணையில்லான் பரமேட்டி எழிலாரும் எறும்பூரில்
புணைவல்லான் அடிபோற்ற வினையெல்லாம் பொடியாமே.

அணைவு இல்லார் தினந்தோறும் அலர்தூற்றித் திரிவார் - ஈசனைச் சாராதவர்கள் நாள்தோறும் இகழ்ந்து பேசித் திரிவார்கள்; (அணைவு - சார்தல்; பொருந்துதல்); அலர்தூற்றுதல் - இகழ்ந்து பேசுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.36.10 - "துணைநன் மலர்தூய்த் .... அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே");
ஓர் துணை இல்லார் உரை கொள்ளேல் - அவர்கள் ஒரு துணை இல்லாதவர்கள்; அவர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;
சுடுநீற்றன் புரிநூலன் - சுட்ட திருநீற்றையும் முப்புரி நூலையும் அணிந்தவன்;
இணை இல்லான் பரமேட்டி - ஒப்பற்றவன், பரமன்;
எழில் ஆரும் எறும்பூரில் புணை வல்லான் அடிபோற்ற வினையெல்லாம் பொடி ஆமே - அழகிய திருவெறும்பூரில் பிறவிக்கடலைக் கடப்பிக்கும் மரக்கலமாக உள்ள அப்பெருமானது திருவடியை வழிபட்டால் எல்லா வினைகளும் சாம்பலாகும்; (புணை - மரக்கலம்); (திருவாசகம் - திருப்பூவல்லி - 8.13.1 - "...அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ");

11)
காடில்லா உடைநாதன் கமலத்தான் தலையல்லால்
ஓடில்லான் பலிதேர உமைநல்லாள் ஒருகூறன்
ஈடில்லான் வரைவில்லான் எழிலாரும் எறும்பூரிற்
கேடில்லான் மலர்த்தாளை நாடில்வான் தருவானே.

காடு இல்லா உடை நாதன் - சுடுகாடே இடமாகக் கொண்ட தலைவன்; (இல்லா - இல்லாக என்பது கடைக்குறையாக வந்தது);
கமலத்தான் தலை அல்லால் ஓடு இல்லான் பலி தேர - தாமரைமேல் இருக்கும் பிரமன் மண்டையோட்டைத் தவிரப் பிச்சையெடுக்க வேறு ஓடு இல்லாதவன்;
உமைநல்லாள் ஒரு கூறன் - உமையை ஒரு கூறாக உடையவன்;
ஈடு இல்லான் - ஒப்பற்றவன்;
வரைவில்லான் - 1. வரைவு இல்லான் (அளவற்றவன்); 2. வரை வில்லான் (மேருமலையை வில்லாக ஏந்தியவன்);
எழில் ஆரும் எறும்பூரிற் கேடு இல்லான் - அழகிய திருவெறும்பூரில் உறைகின்ற அழிவற்றவன்;
மலர்த்தாளை நாடில் வான் தருவானே - அப்பெருமானது மலரடியை விரும்பி வழிபட்டால் வானுலகை அளிப்பான்;

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) திருவெறும்பியூர் (திருவெறும்பூர்) - எறும்பீசர் கோயில் - தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=152
தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=47
----------- --------------

No comments:

Post a Comment