Sunday, June 23, 2019

04.66 – வலிதாயம் (பாடி)


04.66 – வலிதாயம் (பாடி)



2014-06-02
வலிதாயம் (திருவலிதாயம் - பாடி) (இது சென்னைப் புறநகர்ப் பகுதியில் உள்ளது. 'திருவல்லீஸ்வரர் கோயில்')
----------------------------------
(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு.)
(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல")
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்")



1)
வேடன் உருவிற் சென்றன்று .. விசய னுக்குப் படையீந்தான்
காட ரங்காக் கனலேந்திக் .. கணங்கள் சூழ நடஞ்செய்வான்
வாடல் தலையைக் கையேந்தி .. மனைகள் தோறும் பலிக்குழல்வான்
மாடம் சூழ்ந்த வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



வேடன் உருவிற் சென்று அன்று விசயனுக்குப் படை ஈந்தான் - முன்பு ஒரு வேடன் வடிவத்திற் போய் அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைக் கொடுத்தவன்;
காடு அரங்காக் கனல் ஏந்திக் கணங்கள் சூழ நடம் செய்வான்- சுடுகாடே நடம் செய்யும் அரங்கமாகத் தீயை ஏந்திப் பூதகணங்கள் சூழ ஆடுபவன்;
வாடல் தலையைக் கையேந்தி மனைகள் தோறும் பலிக்கு உழல்வான் - உலர்ந்த மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்களில் பிச்சைக்குத் திரிபவனான சிவபெருமான் உறைகின்ற; (2.112.2 - "வாடல் வெண்டலை யங்கையேந்தி...");
மாடம் சூழ்ந்த வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - மாடி வீடுகள் சூழ்ந்த, திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்; ("பாடி" என்ற சொல்லை இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);
(மாடம் - உபரிகை (உப்பரிகை) உள்ள வீடு); (பெரிய புராணம் - 12.28.447 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் - “வேதநெறி வளர்ப்பவரும் . . . மாதர் மடப்பிடி பாடி வணங்கினார்...”);



2)
கலைமான் மழுவாள் ஏந்தியவன் .. கருதார் புரங்கள் மூன்றுசெற்ற
சிலையான் சீறு பாம்போடு .. திரையார் நதியும் திகழ்கின்ற
தலையான் வலிய சலந்தரனைச் .. சக்க ரத்தால் தடிந்தஅரன்
மலையான் மருகன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



கலைமான் மழுவாள் ஏந்தியவன் - மானையும் மழுவையும் கையில் ஏந்தியவன்;
கருதார் புரங்கள் மூன்று செற்ற சிலையான் - பகைவர்களது முப்புரங்களை அழித்த மேருமலை வில்லை உடையவன்; (கருதார் - பகைவர்); (செற்ற – அழித்த); (சிலை - மலை; வில்);
சீறு பாம்போடு திரை ஆர் நதியும் திகழ்கின்ற தலையான் - சீறுகின்ற பாம்பையும் அலை மிக்க கங்கையையும் தலையில் அணிந்தவன்;
வலிய சலந்தரனைச் சக்கரத்தால் தடிந்த அரன் - வலிமை மிக்க சலந்தராசுரனைச் சக்கரத்தால் அழித்த ஹரன்; (தடிதல் - அழித்தல்);
மலையான் மருகன் - இமவானுக்கு மருமகன் உறைகின்ற; (அப்பர் தேவாரம் - 6.38.1 - "மலையான் மருகனாய் நின்றாய் நீயே");
வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;



3)
அறையார் கடலில் அன்றெழுந்த .. ஆலம் தன்னை அமுதுசெய்த
கறையார் கண்டன் நெற்றியிலோர் .. கண்ணி லங்கு கடவுளென்றும்
மறையான் பிறையான் செம்பவள .. வண்ண அண்ணல் திருவாயால்
மறைநான் கோதி வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



அறை ஆர் கடலில் அன்று எழுந்த ஆலம் தன்னை அமுதுசெய்த கறை ஆர் கண்டன் - ஒலிக்கின்ற கடலில் முன்பு தோன்றிய ஆலகால விடத்தை உண்ட கறையைக் கழுத்தில் உடையவன்;
நெற்றியில் ஓர் கண் இலங்கு கடவுள் - நெற்றிக்கண் உடைய கடவுள்;
என்றும் மறையான் - எப்போதும் அழிவின்றி இருப்பவன்;
பிறையான் - பிறைசூடி;
செம்பவள வண்ண அண்ணல் - செம்பவளம் போல் செம்மேனியை உடைய தலைவன்;
திருவாயால் மறை நான்கு ஓதி - திருவாயால் நால்வேதங்களை ஓதியவன் உறைகின்ற;
வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;



4)
பொய்யா மறைகள் புகழ்நாதன் .. பூதப் படையான் ஆவின்பால்
நெய்யால் ஆட்டு மகிழ்பெம்மான் .. நிழலார் மழுவன் மான்மறிசேர்
கையான் அமரர் தமக்கிரங்கிக் .. கடலின் நஞ்சைக் கரந்திட்ட
மையார் கண்டன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



பொய்யா மறைகள் புகழ் நாதன் - என்றும் பொய்த்தல் இல்லாத வேதங்களால் துதிக்கப்படும் தலைவன்;
பூதப் படையான் - பூதகணப்படையை உடையவன்;
ஆவின் பால் நெய்யால் ஆட்டு மகிழ் பெம்மான் - பசுவின் பால், நெய் இவற்றால் அபிஷேகம் விரும்பும் பெருமான்; (ஆட்டு - அபிஷேகம்); (அப்பர் தேவாரம் - 6.95.2 - "ஆன்அஞ்சும் ஆட்டு கந்த செம்பவள வண்ணர்" - );
நிழல் ஆர் மழுவன் - ஒளி பொருந்திய மழுவை ஏந்தியவன்; ( நிழல் - ஒளி);
மான்மறி சேர் கையான் - மான்கன்றைக் கையில் ஏந்தியவன்;
அமரர் தமக்கு இரங்கிக் கடலின் நஞ்சைக் கரந்திட்ட மை ஆர் கண்டன் - தேவர்களுக்கு இரங்கி ஆலகால விஷத்தை ஒளித்த நீலகண்டத்தை உடையவன் உறைகின்ற; (கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்); (மை - கருமை);
வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;



5)
சரங்கள் ஓரைந் துடைமதனைத் .. தழலார் நுதலால் பொடிசெய்தான்
சிரங்கள் கோத்த மாலையணி .. சென்னிப் பரமன் சிவபெருமான்
கரங்கள் குவித்துக் கழலிணையைக் .. கருதும் அன்பர் விரும்புகின்ற
வரங்கள் அருள்வான் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



சரங்கள் ஓர் ஐந்து உடை மதனைத் தழல் ஆர் நுதலால் பொடிசெய்தான் - அம்புகள் ஐந்து உடைய மன்மதனை நெற்றிக்கண் நெருப்பால் சாம்பலாக்கியவன்; (தழல் - நெருப்பு); (நுதல் - நெற்றி);
சிரங்கள் கோத்த மாலை அணி சென்னிப் பரமன் சிவபெருமான் - தலைக்குத் தலைமாலை அணிந்த பரமன் சிவபெருமான்;
கரங்கள் குவித்துக் கழலிணையைக் கருதும் அன்பர் விரும்புகின்ற வரங்கள் அருள்வான் - கைகூப்பி இருதிருவடிகளை வழிபடும் பக்தர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அருள்பவன் உறைகின்ற;
வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;



6)
அளத்த லாகாப் பெருமையினான் .. அணியாம் கண்டக் கருமையினான்
உளத்துக் கோயில் மகிழ்சூலன் .. உமைம டந்தை ஒருபாலன்
கிளத்தல் செய்யற் களவில்லாக் .. கீர்த்தி உடையான் மேருவில்லா
வளைத்த மைந்தன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



குறிப்பு: முதல் மூன்று அடிகளிலும் அரையடி ஈற்றில் இயைபுத்தொடை அமைந்த பாடல்.
அளத்தல் ஆகாப் பெருமையினான் - அளக்க ஒண்ணாத பெரியவன்; (பெருமை - பருமை - Bigness, largeness);
அணி ஆம் கண்டக் கருமையினான் - அழகிய நீலமணிகண்டன்;
உளத்துக் கோயில் மகிழ் சூலன் - மனக்கோயிலில் மகிழ்ந்து வீற்றிருக்கும் சூலபாணி; (பூசலார் நாயனார், வாயிலார் நாயனார் வரலாறுகளைக் காண்க);
உமை மடந்தை ஒரு பாலன் - உமாதேவியை ஒரு பக்கத்தில் உடையவன்;
கிளத்தல் செய்யற்கு அளவு இல்லாக் கீர்த்தி உடையான் - சொல்லொணாத புகழ் உடையவன்; (கிளத்தல் - சொல்லுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.54.4 - "ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா" - இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும், பழமை வாய்ந்த புகழ்களும் கேட்கவும், சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன. ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா.);
மேரு வில்லா வளைத்த மைந்தன் - மேருமலையை வில்லாக வளைத்த வீரன் உறைகின்ற;
வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;



7)
அழகன் அமலன் அருளாளன் .. அழிவில் ஒருவன் கண்டத்தில்
மழையன் என்று நாமங்கள் .. மறவா தேத்தும் அடியார்தம்
பழவல் வினைகள் தீர்த்தருள்வான் .. பால்வெண் ணீறு திகழ்மார்பன்
மழவெள் ளேற்றன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



அழகன் அமலன் அருளாளன் - சுந்தரன், தூயவன், அருளின் உறைவிடம்;
அழிவு இல் ஒருவன் கண்டத்தில் மழையன் - இறவாதவன், கண்டத்தில் மேகம் போன்ற கறையை உடையவன்; (மழை - மேகம்);
என்று நாமங்கள் மறவாது ஏத்தும் அடியார்தம் பழ வல் வினைகள் தீர்த்தருள்வான் - என்று திருநாமங்களைத் தினமும் சொல்லித் துதிக்கின்ற பக்தர்களது பழைய வலிய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்பவன்; (என்று நாமங்கள் = என்று நாமங்கள் / என்றும் நாமங்கள்);
பால்வெண்ணீறு திகழ் மார்பன் - பால் போன்ற வெண்மை திகழும் திருநீற்றை மார்பில் பூசியவன்;
மழவெள் ஏற்றன் - இளவெள் விடையை வாகனமாக உடையவன் உறைகின்ற;
வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;



8)
கடந்து போகாத் தேர்கண்டு .. கைகள் நாலஞ் சாற்கயிலை
இடந்து வீச முனைந்தானை .. எண்ணில் காலம் அம்மலைக்கீழ்க்
கிடந்து வாட விரலூன்றிக் .. கீதம் கேட்டு வாளீந்தான்
மடந்தை பாகன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



கடந்து போகாத் தேர் கண்டு - வானில் கயிலையைக் கடந்து செல்லாது கீழே இறங்கிவிட்ட தேரைக் கண்டு;
கைகள் நாலஞ்சால் கயிலை இடந்து வீச முனைந்தானை - இருபது கரங்களால் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனை; (இடத்தல் - பெயர்த்தல்);
எண் இல் காலம் அம்மலைக்கீழ்க் கிடந்து வாட விரல் ஊன்றிக் - நெடுநாள்கள் அந்த மலையின்கீழ் அவன் கிடந்து வாடும்படி திருப்பாத விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி;
கீதம் கேட்டு வாள் ஈந்தான் - பின் அவன் பாடிய கீதத்தைக் கேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளையும் அருள்செய்தவன்;
மடந்தை பாகன் - உமைபங்கன் உறைகின்ற;
வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;



9)
பங்க யத்தில் உறைஅயனும் .. பாம்பின் மீது துயில்மாலும்
எங்கும் நேடி அடிமுடியை .. எய்தற் கொண்ணா எரியுருவன்
வெங்கண் உழுவைத் தோலரையில் .. வீக்கும் பெருமான் வெற்பரையன்
மங்கை பங்கன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



பங்கயத்தில் உறை அயனும் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும்;
பாம்பின் மீது துயில் மாலும் - பாம்பணைமேல் படுத்திருக்கும் திருமாலும்;
எங்கும் நேடி அடிமுடியை எய்தற்கு ஒண்ணா எரி உருவன் - எங்கும் தேடியும் அடிமுடியை அடைய இயலாத சோதி வடிவினன்;
வெங்கண் உழுவைத் தோல் அரையில் வீக்கும் பெருமான் - சினம் மிக்க கண்களையுடைய புலியின் தோலை அரையில் கட்டும் பெருமான்;
வெற்பு அரையன் மங்கை பங்கன் - இமவான் மகளான உமையை ஒரு பங்கில் உடையவன் உறைகின்ற; (வெற்பு - மலை; அரையன் - அரசன்);
வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;



10)
உரையில் உண்மை ஒன்றில்லார் .. உயர்தத் துவமும் தாமறியார்
கரையில் இடும்பைக் கடலாழ்த்தும் .. கட்டுக் கதைகள் விட்டுவம்மின்
அரையில் அரவக் கச்சார்த்தான் .. அடங்கார் புரங்கள் மூன்றெரித்த
வரைவில் லேந்தி வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



உரையில் உண்மை ஒன்றில்லார் - பேச்சில் சற்றும் உண்மை இல்லாதவர்கள்;
உயர் தத்துவமும் தாம் அறியார் - உயர்ந்த தத்துவத்தை அறியாதவர்கள்; (தத்துவம் - உண்மைப்பொருள்);
கரை இல் இடும்பைக்கடல் ஆழ்த்தும் கட்டுக்கதைகள் விட்டு வம்மின்- அளவில்லாத துன்பக் கடலில் மூழ்கச்செய்யும் அவர்களது பொய்க்கதைகளை நீங்கி வாருங்கள்; (கரை - எல்லை); (இடும்பை - துன்பம்); (வம்மின் - வாருங்கள்; வருவீராக); (மின் - முன்னிலை ஏவற் பன்மை விகுதி);
அரையில் அரவக் கச்சு ஆர்த்தான் - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவன்; (அப்பர் தேவாரம் - 6.31.7 - "பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் ... புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும் பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே");
அடங்கார் புரங்கள் மூன்று எரித்த வரைவில் ஏந்தி - பகைவர்களாகிய அசுரர்களது முப்புரங்களை எரித்த மேருமலைவில்லை ஏந்தியவன் உறைகின்ற; (அடங்கார் - பகைவர்); (வரை - மலை);
வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;



11)
பணியோ டிளவெண் மதியத்தைப் .. பாங்கா முடிமேற் பயிலவைத்தான்
பணியே மேவி நாள்தோறும் .. பாதம் பணிவார்க் கருள்புரிந்து
தணியாப் பிறவி நோய்தீர்ப்பான் .. தனியன் இனியன் அணியான
மணியார் கண்டன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.



பணியோடு இள வெண் மதியத்தைப் பாங்கா முடிமேற் பயில வைத்தான் - பாம்பையும் இளவெண் திங்களையும் அழகுற நெருங்கி இருக்கும்படி திருமுடிமேல் வாழவைத்தான்; (பணி - நாகப்பாம்பு); (பாங்கா - பாங்காக); (பாங்கு - அழகு; பக்கம்); (பயில்தல் - தங்குதல்);
பணியே மேவி நாள்தோறும் பாதம் பணிவார்க்கு அருள்புரிந்து - திருத்தொண்டே செய்து தினமும் திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிந்து; (பணி - தொண்டு);
தணியாப் பிறவிநோய் தீர்ப்பான் - அவர்களுடைய நீங்காத பிறவிப்பிணியைத் தீர்ப்பவன்;
தனியன் இனியன் - தனித்து இருப்பவன், ஒப்பற்றவன், இனியவன்;
அணி ஆன மணி ஆர் கண்டன் - ஆபரணம் ஆன / அழகான நீலமணி பொருந்திய கண்டத்தை உடையவன் உறைகின்ற;
வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) திருவலிதாயம் - (பாடி) - வல்லீஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : https://temple.dinamalar.com/New.php?id=13
தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=246
----------- --------------

No comments:

Post a Comment