2014-06-22
P.241 - அன்னியூர் (பொன்னூர்)
(மயிலாடுதுறை அருகே உள்ளது)
–-------------------------
(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தான தான தானனா - அரையடி;
தான என்பது தனன என்றும் ஒரோவழி வரலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி");
(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று");
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்.
1)
ஏற மர்ந்த எம்மிறை .. ஏல ஓதி மாதுமை
கூற மர்ந்த அன்பினான் .. கூர்ம ழுப்ப டைக்கரன்
நீற ணிந்த மேனியான் .. நெற்றி மேலொர் கண்ணினான்
ஆற ணிந்த சென்னியான் .. அன்னி யூரில் அண்ணலே.
ஏறு அமர்ந்த எம் இறை - இடபவாகனத்தை விரும்பிய எம் இறைவன்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);
ஏல-ஓதி மாது-உமை கூறு அமர்ந்த அன்பினான் - வாசக்குழலினளான உமாதேவி ஒரு பாகமாக விரும்பிய அன்பன்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (ஓதி - கூந்தல்);
கூர்-மழுப்படைக் கரன் - கூரிய மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்;
நீறு அணிந்த மேனியான் - திருமேனியில் திருநீற்றைப் பூசியவன்;
நெற்றிமேல் ஒர் கண்ணினான் - நெற்றிக்கண்ணன்; (ஓர் - ஓர்; குறுக்கல்விகாரம்);
ஆறு அணிந்த சென்னியான் - கங்கையைத் திருமுடிமேல் அணிந்தவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்; (அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்; கடவுள்);
2)
இரவில் மாந டஞ்செயும் .. இன்பன் அன்பர் ஏத்திடும்
கரவி லாத கையினான் .. கைகள் கூப்பி வானவர்
பரவ நின்ற பண்பினான் .. பால்ம திக்குப் பக்கமோர்
அரவ ணிந்த சென்னியான் .. அன்னி யூரில் அண்ணலே.
இரவில் மா-நடம் செயும் இன்பன் - நள்ளிரவில் பெருங்கூத்து ஆடுகின்ற, இன்பவடிவினன்;
அன்பர் ஏத்திடும் கரவு இலாத கையினான் - பக்தர்கள் போற்றுகின்ற வள்ளல்; (கரவு - வஞ்சனை; ஒளித்தல்);
கைகள் கூப்பி வானவர் பரவ நின்ற பண்பினான் - தேவர்கள் கைகூப்பிப் போற்றுகின்ற ஈசன்;
பால்மதிக்குப் பக்கம் ஓர் அரவு அணிந்த சென்னியான் - பால் போன்ற வெண்திங்களுக்கு அருகே ஒரு பாம்பைத் திருமுடிமேல் அணிந்தவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;
3)
மும்ம லங்கள் அற்றவன் .. மூப்பி றப்பி லாதவன்
அம்ம லர்ச்ச ரத்தனை .. அட்ட நெற்றி நேத்திரன்
நம்மை ஈன்ற தாயவன் .. நாடி னார்க்கு நல்லவன்
அம்மை பாகம் ஆயினான் .. அன்னி யூரில் அண்ணலே.
மும்மலங்கள் அற்றவன் - மும்மலக்கட்டு இல்லாதவன்;
மூப்பு இறப்பு இலாதவன் - முதுமையும் மரணமும் இல்லாதவன்;
அம்-மலர்ச்-சரத்தனை அட்ட நெற்றி-நேத்திரன் - அழகிய மலரை அம்பாக உடைய அந்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (அம் - அழகு); (அ - பண்டறிசுட்டு); (அப்பர் தேவாரம் - 4.84.10 - "கைம்மா வரிசிலைக் காமனை அட்ட கடவுள்முக்கண் எம்மான்");
நம்மை ஈன்ற தாய் அவன் - நம்மைப் பெற்ற தாய் அவன்;
நாடினார்க்கு நல்லவன் - சரணடைந்தவர்களுக்கு நன்மை செய்பவன்;
அம்மை பாகம் ஆயினான் - உமையொரு பங்கன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;
4)
மினலை ஆரு(ம்) நுண்ணிடை .. வெற்பன் மங்கை பங்கினான்
கனலை ஒக்கும் வார்சடை .. காட்டு கின்ற சென்னிமேல்
புனலி னோடு போழ்மதி .. புற்ற ராப்பு னைந்தவன்
அனலை ஏந்து கையினான் .. அன்னி யூரில் அண்ணலே.
மினலை ஆரு(ம்) நுண்ணிடை வெற்பன் மங்கை பங்கினான் - மின்னல் போன்ற நுண்ணிடை உடையவளும் மலையான் மகளுமான உமையை ஒரு பங்காக உடையவன் ; (மினலை - மின்னலை; இடைக்குறைவிகாரம்); (ஆர்தல் - ஒத்தல்);
கனலை ஒக்கும் வார்சடை காட்டுகின்ற சென்னிமேல் - தீப் போன்ற நீள்சடை திகழும் திருமுடிமேல்;
புனலினோடு போழ்மதி புற்று-அராப் புனைந்தவன் - கங்கை, திங்களின் துண்டம், புற்றில் வாழும் தன்மையையுடைய பாம்பு ஆகியவற்றை அணிந்தவன்; (போழ் - துண்டம்);
அனலை ஏந்து கையினான் - கையில் தீயை ஏந்தியவன்; (அனல் - நெருப்பு);
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;
5)
பொங்கு நஞ்சு கண்டுவான் .. போற்ற உண்டு கார்மணி
தங்கு மாமி டற்றினான் .. தக்கன் வேள்வி சாடினான்
எங்கு(ம்) நாகம் ஆர்ந்தவன் .. ஏழை பங்கன் நான்மறை
அங்கம் ஆறும் ஓதினான் .. அன்னி யூரில் அண்ணலே.
பொங்கு நஞ்சு கண்டு வான் போற்ற உண்டு கார்மணி தங்கு மா மிடற்றினான் - பொங்கிய ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சித் தேவர்கள் இறைஞ்ச அவ்விடத்தை உண்டு நீலமணி திகழும் அழ்கிய கண்டத்தை உடையவன்; (கார் - கருமை; கரிய); (மா - அழகு); (மிடறு - கண்டம்);
தக்கன் வேள்வி சாடினான் - தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்;
எங்கும் நாகம் ஆர்ந்தவன் - திருமேனியில் பல பாம்புகளை அணிந்தவன்; (ஆர்தல் - அணிதல்);
ஏழைபங்கன் - உமைபங்கன்; (ஏழை - பெண்);
நான்மறை அங்கம் ஆறும் ஓதினான் - நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பாடியருளியவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;
6)
கருணை யற்ற காலனைக் .. காலி னாலு தைத்தவன்
மரணம் அற்ற வாழ்வினை .. மாணி யார்க்கு நல்கினான்
சரணம் என்று சார்ந்தவர் .. தம்ப யங்கள் தீர்ப்பவன்
அரண(ம்) மூன்றை அட்டவன் .. அன்னி யூரில் அண்ணலே.
மரணம் அற்ற வாழ்வினை மாணியார்க்கு நல்கினான் - மார்க்கண்டேயர்க்கு இறப்பின்மையை அருள்புரிந்தவன்; (மாணி - மார்க்கண்டேயர்);
சரணம் என்று சார்ந்தவர் தம் பயங்கள் தீர்ப்பவன் - சரண் புகுந்தவர்களது அச்சத்தைத் தீர்த்து அபயம் அளிப்பவன்;
அரணம் மூன்றை அட்டவன் - மும்மதில்களை எரித்தவன்;
7)
பல்லில் ஓட்டில் உண்பலி .. பாவை மாரி டம்பெறச்
செல்லும் வள்ளல் வாலுடைச் .. சேவ தேறும் சேவகன்
வில்லில் அம்பு கோத்தெயில் .. வேவு மாறு நக்கவன்
அல்லில் நட்டம் ஆடுவான் .. அன்னி யூரில் அண்ணலே.
பல் இல் ஓட்டில் உண்பலி பாவைமாரிடம் பெறச் செல்லும் வள்ளல் - பல் இல்லாத மண்டையோட்டினில் பிச்சையைப் பெண்களிடம் பெறுவதற்காகப் போகின்ற வள்ளல்; ("பல் இல் – பல வீடுகளில்" என்றும் பொருள் கொள்ளல் ஆம்);
வாலுடைச் சேவது ஏறும் சேவகன் - வெள்ளை-எருதை வாகனமாக உடைய வீரன்; (வால் - வெண்மை); (சே - எருது; அது - பகுதிப்பொருள்விகுதி); (சேவகன் - வீரன்); (அப்பர் தேவாரம் - 4.63.9 - "வாலுடை விடையாய்");
வில்லில் அம்புக் கோத்து, எயில் வேவுமாறு நக்கவன் - மேருவில்லில் ஒரு கணையைக் கோத்து, முப்புரங்களும் எரியும்படி சிரித்தவன்; (எயில் - கோட்டை);
அல்லில் நட்டம் ஆடுவான் - இருளில் திருநடம் செய்பவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;
8)
வரையி டந்த தூர்த்தனை .. வாட ஊன்று தாளினான்
கரையி லாத அன்பினான் .. கண்கள் மூன்று காட்டினான்
உரையி றந்த சீரினான் .. உம்பர் நாதன் நாணென
அரையில் நாகம் ஆர்த்தவன் .. அன்னி யூரில் அண்ணலே.
வரை இடந்த தூர்த்தனை - கயிலைமலையைப் பெயர்த்த கொடியவனான இராவணனை; (இடத்தல் - பெயர்த்தல்);
வாட ஊன்று தாளினான் - வாடி வருந்துமாறு விரலை ஊன்றிய திருப்பாதன்;
கரை இலாத அன்பினான் - அளவற்ற அன்பு உடையவன்; (கரையில்லாத கருணைக்கடல்); (கரை - எல்லை; கடற்கரை);
கண்கள் மூன்று காட்டினான் - முக்கண்ணன்;
உரை இறந்த சீரினான் - சொல்லற்கு அரிய புகழ் உடையவன்; (இறத்தல் - கடத்தல்);
உம்பர்-நாதன் - தேவர்கள் தலைவன்;
நாண் என அரையில் நாகம் ஆர்த்தவன் - அரையில் நாணாகப் பாம்பைக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;
9)
சுழலி லங்கு வானதி .. தூய திங்கள் சூடினான்
நிழல்ம ழுப்ப டைக்கரன் .. நீல வண்ணன் நான்முகன்
கழலு(ம்) மேலு(ம்) நேடியும் .. காணொ ணாத வண்ணமோர்
அழல தாகி ஓங்கினான் .. அன்னி யூரில் அண்ணலே.
சுழல் இலங்கு வானதி தூய திங்கள் சூடினான் - சுழல்கள் இருக்கும் கங்கையையும் வெண்பிறைச் சந்திரனையும் சூடியவன்; (வானதி - வான் நதி - கங்கை);
நிழல்-மழுப்படைக்-கரன் - ஒளிவீசும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்; (நிழல் - ஒளி);
நீலவண்ணன் நான்முகன் கழலும் மேலும் நேடியும் காணொணாத வண்ணம் ஓர் அழல்அது ஆக ஓங்கினான் - கரிய திருமாலும் பிரமனும் தன் அடியையும் முடியையும் மிகவும் தேடியும் காண இயலாதவாறு ஓர் எல்லையற்ற ஜோதியாகி நீண்டவன்; (நேடுதல் - தேடுதல்);
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;
10)
பொக்க(ம்) மிக்க நெஞ்சினர் .. பொய்த்த வத்தைப் பேசுவார்
துக்க(ம்) ஆர்க்கும் அம்மொழி .. துச்சம் என்று தள்ளுமின்
செக்கர் வான்நி றத்தினான் .. செல்வம் இன்ப(ம்) நல்குவான்
அக்கின் ஆரம் பூண்டவன் .. அன்னி யூரில் அண்ணலே.
பொக்கம் மிக்க நெஞ்சினர் பொய்த்தவத்தைப் பேசுவார் - வஞ்சகம் நிறைந்த நெஞ்சை உடையவர்கள் பொய்யான தவத்தைப் பேசுவார்கள்; (பொய்த்தவத்தைப் பேசுவார் = "பொய்த்து அவத்தைப் பேசுவார்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம்); (பொய்த்தல் - பொய்யாகப் பேசுதல்; வஞ்சித்தல்); (அவம் - பயனின்மை; கேடு);
துக்கம் ஆர்க்கும் அம்மொழி துச்சம் என்று தள்ளுமின் - துன்பத்தில் பிணிக்கும் அவர் வார்த்தைகளைத் துச்சம் என்று தள்ளுங்கள்; மதிக்கவேண்டா; (ஆர்த்தல் - கட்டுதல்); (துச்சம் - இழிவு; பொய்);
செக்கர்-வான் நிறத்தினான் - செவ்வானம் போன்ற நிறத்தை உடையவன்; (செக்கர் - சிவப்பு);
செல்வம் இன்ப(ம்) நல்குவான் - (பக்தர்களுக்குச்) செல்வத்தையும் இன்பத்தையும் அருள்பவன்;
அக்கின் ஆரம் பூண்டவன் - எலும்பை மாலையாக அணிந்தவன்; (அக்கு - எலும்பு);
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;
11)
மலர்கள் எய்த காமனை .. மாய நோக்கி காதலி
வலவ எம்பி ரானென .. வாழ்த்த ஈந்த அங்கணன்
உலக நாதன் உம்பரான் .. உன்னு(ம்) நெஞ்சில் உள்ளவன்
அலகி லாத சோதியான் .. அன்னி யூரில் அண்ணலே.
மலர்கள் எய்த காமனை மாய நோக்கி - மலர்க்கணையை எய்த மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் நோக்கியவன்; (நோக்கி - நோக்கியவன்);
காதலி, "வலவ; எம்பிரான்" என வாழ்த்த ஈந்த அங்கணன் - பின் அவன் மனைவியான இரதி, "வல்லவனே, எம்பெருமானே" என்று துதித்து இறைஞ்சவும், அவனை மீண்டும் உயிர்பெறச் செய்து (அவளது வாட்டத்தைத் தீர்த்த) அருட்கண் உடைய பெருமான்; (காதலி - மனைவி); (வலவ - வலவனே என்ற விளி; வலவன் - சமர்த்தன்; வெற்றியாளன்); (* இத்தலத்தில் இரதி வழிபட்டது - தலபுராணச் செய்தி);
உலகநாதன், உம்பரான் - அகில உலகங்களுக்கும் தலைவன், சிவலோகன்; (அப்பர் தேவாரம் - 5.62.7 - "உம்பரானை உருத்திர மூர்த்தியை");
உன்னும் நெஞ்சில் உள்ளவன் - தியானிக்கும் பக்தர்கள் நெஞ்சில் உறைகின்றவன்;
அலகு இலாத சோதியான் - அளவற்ற ஜோதி-வடிவினன்; (அலகு - அளவு);
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;
வி. சுப்பிரமணியன்
-------------------
No comments:
Post a Comment