Sunday, May 20, 2018

04.29 – வைகாவூர் (திருவைகாவூர்)


04.29வைகாவூர் (திருவைகாவூர்)



2013-12-01
வைகாவூர் (திருவைகாவூர்)
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")



1)
அருவையோர் அன்பரழை உருவெல்லாம் ஆயவனைத்
தெரிவையோர் பங்கினனைச் சேவேறும் கொடியினனைத்
திருவைகா மேயவனைச் சேவடியில் மலர்தூவி
இருகையால் தொழுதேத்தி இனிதிருப்பாய் என்னெஞ்சே.



அருவை, ஓர் அன்பர் அழை உரு எல்லாம் ஆயவனைத் - அருவமாகவும், தியானிக்கும் பக்தர்கள் அழைக்கின்ற எல்லா வடிவங்களையும் ஏற்பவனை; (ஓர்தல் - சிந்தித்தல்);
தெரிவை ஓர் பங்கினனைச் - அர்த்தநாரீஸ்வரனை;
சேவேறும் கொடியினனைத் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனை;
திருவைகா மேயவனைச் - திருவைகாவூரில் எழுந்தருளியிருப்பவனை;
சேவடியில் மலர் தூவி இரு கையால் தொழுதேத்தி இனிது இருப்பாய் என் நெஞ்சே - என் மனமே, அவனது சிவந்த திருவடியில் பூக்களைத் தூவி இரு கைகளால் வணங்கி இன்புற்று வாழ்வாயாக;



2)
தரையினிலோர் ஆழியிட்டுச் சலந்தரனைத் தடிந்தானை
விரைமலராக் கண்ணிடுமால் வேண்டஅது கொடுத்தானைத்
திரையுலவு சடையானைச் செய்யவனைக் கொள்ளிடத்தின்
கரையிலணி வைகாவூர்க் கண்ணுதலை அடைநெஞ்சே.



தரையினில் ஓர் ஆழி இட்டுச் சலந்தரனைத் தடிந்தானை - தரையில் ஓர் வட்டம் இட்டுச் சலந்தரனை அழித்தவனை;
விரைமலராக் கண்ணிடுமால் வேண்ட அது கொடுத்தானைத் - தாமரைப் பூவாகத் தன் கண்ணையே தோண்டி இட்டு அர்ச்சித்த திருமாலுக்கு அச்சக்கராயுதத்தைக் கொடுத்தவனை;
(சலந்தராசுரனது தோற்றம் முதலிய வரலாறுகளையும், அவனை அழித்த சக்கரத்தைத் திருமால் சிவபெருமானை வழிபட்டுப் பெற்றதையும் கந்த புராணத் ததீசி உத்தரப் படலத்துட் காண்க. )
திரை உலவு சடையானைச் - கங்கை உலவுகின்ற சடையானை;
செய்யவனைக் - செம்மேனியானை;
கொள்ளிடத்தின் கரையில் அணி வைகாவூர்க் கண்ணுதலை அடைநெஞ்சே - கொள்ளிட நதியின் கரையில் உள்ள அழகிய திருவைகாவூரில் வீற்றிருக்கும் நெற்றிக்கண்ணனை, நெஞ்சே அடைவாயாக.



3)
கொக்கிறகு கொன்றைமலர் கூவிளம்தண் புனல்மதியம்
அக்கரவம் அணிந்தானை அணிவைகா அமர்ந்தானை
முக்கணனை மூவாத மூத்தவனைப் புரமெரிய
நக்கவனை அடியார்க்கு நல்லவனை நாடுநெஞ்சே.



கொக்கிறகு, கொன்றை மலர், கூவிளம், தண் புனல், மதியம், அக்கு, அரவம் அணிந்தானை - கொக்கின் இறகும், கொன்றமலரும், வில்வமும், குளிர்ந்த ஆற்றையும், திங்களையும், எலும்பையும், பாம்பையும் அணிந்தவனை;
அணி வைகா அமர்ந்தானை - அழகிய திருவைகாவூரில் விரும்பி வீற்றிருப்பவனை;
முக்கணனை மூவாத மூத்தவனைப் - நெற்றிக்கண்ணனை, என்றும் இளமையோடு இருக்கும் பழையவனை;
புரம் எரிய நக்கவனை - முப்புரங்களும் எரியும்படி சிரித்தவனை;



4)
போழிளவெண் மதியோடு புற்றரவம் புனைந்தானைக்
கேழிலனை வேட்டுவனாய்க் கேழற்பின் சென்றானை
ஏழிசைவண் டார்பொழில்சூழ் எழில்வைகா அமர்ந்தானை
ஊழிபல கடந்தானை உமைகோனை உன்னுநெஞ்சே.



போழ் இள வெண் மதி - பிளவுபட்ட இளம் வெண் திங்கள்;
புற்றரவம் - புற்றில் வாழும் இயல்பு உடைய பாம்பு;
கேழ் இலனை - ஒப்பற்றவனை;
வேட்டுவனாய்க் கேழற்பின் சென்றானை - (அருச்சுனனுக்குப் பாசுபதம் அருள) வேடனாகி ஒரு பன்றிப்பின் சென்றவனை;
ஏழ் இசை வண்டு ஆர் பொழில்சூழ் எழில் வைகா அமர்ந்தானை - ஏழு சுரங்களை வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த அழகிய திருவைகாவூரில் விரும்பி வீற்றிருப்பவனை;
ஊழி பல கடந்தானை - பல ஊழிகளையும் கடந்து இருப்பவனை;
உமைகோனை உன்னு நெஞ்சே - பார்வதி மணாளனை, நெஞ்சே நினைவாயாக.



5)
தந்தைதனைத் தாள்துணித்த சண்டிக்குப் பெரும்பதவி
தந்தவனை ஆரூரில் தண்டிக்குக் கண்தந்த
அந்திநிறச் சுந்தரனை அணிவைகா அமர்ந்தானைச்
சந்திரனை அணிந்தானைத் தமிழ்பாடிச் சார்நெஞ்சே.



சண்டி - சண்டேசுர நாயனார்;
பெரும் பதவி - சண்டேசுரப் பதவி; (திருப்பல்லாண்டு - 9.29.10 - "தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கு .... தொண்டர்க்கு நாயகமும் பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே");
தண்டி - தண்டியடிகள் நாயனார்;
அந்தி நிறச் சுந்தரனை - மாலைக் காலத்துச் செவ்வானம் போன்ற நிறத்தை உடைய அழகனை;



6)
அந்தகனை அயிலாரும் சூலத்தால் அழித்தானைக்
கந்தமலர்க் கணையேவு காமனைமுன் காய்ந்தானைச்
செந்தழல்போல் மேனியனைத் திருவைகா அமர்ந்தானைச்
சந்ததமும் சந்தமலி தமிழ்பாடிச் சார்நெஞ்சே.



அந்தகனை அயில் ஆரும் சூலத்தால் அழித்தானைக் - அந்தகாசுரனைக் கூர்மை பொருந்திய சூலாயுதத்தால் கொன்றவனை;
கந்த மலர்க் கணை ஏவு காமனை முன் காய்ந்தானைச் - வாச மலர்க்கணையை ஏவிய மன்மதனை முன்பு எரித்தவனை;
சந்ததமும் சந்தமலி தமிழ் பாடிச் சார் நெஞ்சே - எந்நாளும் சந்தம் மிகுந்த தேவாரம் பாடி, நெஞ்சே அடைவாயாக.



7)
நரியையெலாம் பரிசெய்யும் நாடகனை மலைபோன்ற
கரியையுரி செய்தானைக் கறைதிகழும் மிடற்றானை
வரியரவம் புனைந்தானை மணிவைகா மகிழ்ந்தானை
பிரியையொரு பங்கமரும் பெரியவனைப் பேணுநெஞ்சே.



பரி - குதிரை;
நாடகன் - கூத்தன்;
கரியை உரி செய்தானைக் - யானையைக் கொன்று தோலை உரித்தவனை;
கறை திகழும் மிடற்றானை - நீலகண்டனை;
வரி அரவம் - வரிகளை உடைய பாம்பு;
மணி - அழகு;
பிரியை - மனைவி; அன்புடையவள்;
பங்கு அமரும் - பாகமாக விரும்பும்;



8)
தேரோட மலையிடந்த தென்னிலங்கைக் கோன்கண்ணில்
நீரோட ஒருவிரலால் நெரித்திசைகேட் டருள்வானை
ஓரோடு தனிற்பலிதேர்ந் துழல்வானை வைகாவில்
பாரோடு விண்பணியும் பரம்பரனை அடைநெஞ்சே.



தேர் ஓட மலைடந்த தென்லங்கைக்கோன் கண்ணில் நீர் ஓட ஒரு விரலால் நெரித்து இசை கேட்டு அருள்வானை - தன் இரதம் ஓடுவதற்காகக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது கண்களில் நீர் பெருகி ஓடும்படி அவனை ஒரு கால்விரலை ஊன்றி நசுக்கிப் பின் அவன் பாடிய இசையைக் கேட்டு வரங்கள் அருளியவனை;
ஓர் ஓடுதனில் பலி தேர்ந்து உழல்வானை - பிரமனது மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிபவனை;
வைகாவில் பாரோடு விண் பணியும் பரம்பரனை அடை நெஞ்சே - திருவைகாவூரில் மண்ணுலகத்தொரும் வானவரும் வழிபடும் பரம்பொருளை, மனமே, அடைவாயாக;



9)
மாயவனும் மலரவனும் மண்ணகழ்ந்தும் விண்பறந்தும்
போயடைய ஒண்ணாது போற்றநின்ற பரஞ்சுடரை
நேயமிகும் அன்பரகம் நீங்கானை வைகாவில்
மேயவனை மேலைவினை வீடநினை மடநெஞ்சே.



மாயவன் - திருமால்;
மலரவன் - பிரமன்;
நேயம் மிகும் அன்பர் அகம் நீங்கானை - அன்புடைய பக்தர்கள் நெஞ்சத்தில் நீங்காமல் உறைபவனை;
மேலைவினை வீட நினை - பழவினைகள் நீங்குமாறு நினைவாயாக; ( அப்பர் தேவாரம் 4.90.3 - "முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான்" - மேலைவினை - ஆகாமிய கருமம் ; சஞ்சித கருமமும் ஆம் . "மேல்" காலத்தால் இறந்ததையும் இடத்தால் எதிர்வதையும் குறிக்கும் . கீழ் , முன் , பின் எல்லாம் அன்ன);



10)
மைகாவும் வன்னெஞ்சர் மறைநெறியை இகழ்ந்துபல
பொய்கூவி வலைவிரிப்பர் போற்றாமல் விடுமின்கள்
எய்காமன் தனையெரித்த எம்மானை இரும்பொழில்சூழ்
வைகாவில் உறையரனை வந்திக்க மகிழ்வாமே.



மை - இருள்; குற்றம்; பாவம்;
காவுதல் - சுமத்தல்;
போற்றாமல் விடுமின்கள் - அவர்களது பொய்வார்த்தைகளை நீங்கள் நீங்குங்கள்;
எய்தல் - அம்பு ஏவுதல்;
இரும் பொழில் சூழ் - பெரிய சோலைகள் சூழ்ந்த;



11)
பணிசூடு முடியானைப் பண்டுவிடம் உண்டருளும்
அணிநீல மிடற்றானை ஆயிழைசேர் இடத்தானை
மணிநீர்சூழ் வைகாவில் மன்னிறையை மலர்தூவிப்
பணிவார்தம் பழவினைகள் படரெரிசேர் விறகாமே.



பணி - நாகப்பாம்பு;
பண்டு - முன்பு;
மிடற்றானை - கண்டம் உடையவனை;
ஆயிழை - பெண்;
மணி நீர் - பளிங்குமணி போன்ற தெளிந்த நீர்; (மணி = 'அழகு' என்றும் பொருள்கொள்ளலாம்);
மன்னுதல் - நிலைத்து இருத்தல்;
படர் எரி சேர் விறகு ஆம் - பரவுகின்ற தீச் சேர்ந்த விறகுகள் போல் சாம்பலாகி அழியும்;
(அப்பர் தேவாரம் - 4.11.3 - "விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை ஒன்று மில்லையாம்...");



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) திருவைகாவூர் - வில்வவனேசுவரர் திருக்கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=395
----------- --------------

No comments:

Post a Comment