Friday, September 27, 2019

04.72 – கடம்பந்துறை (கடம்பர்கோயில் - குளித்தலை)


04.72 – கடம்பந்துறை (கடம்பர்கோயில் - குளித்தலை)


2014-08-06
கடம்பந்துறை (இக்காலத்தில் - கடம்பர்கோயில் - குளித்தலை. )
---------------------------------------------------------------
(கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை மையாளொடும் உடனாகிய ருவன்....");
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா ");


1)
மயலுற்றிரு நிலமீதினில் வாடும்மட நெஞ்சே
புயலொத்திருள் கண்டத்தினன் பொடிபூசிய மார்பன்
கயிலைக்கிறை உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
வெயிலொத்தெரி வினையாயின விடுமேசுகம் மிகுமே.


மயல் - மயக்கம்; அறியாமை;
இருநிலம் - பூமி (Wide world, vast expanse of earth);
மீதினில் - இத்தகைய பிரயோகத்தைத் திருப்புகழிலும் காணலாம். "ஆலப் பணி மீதினில் மாசு அறும் ஆழிக்கு இடையே துயில் மாதவன்"; ("ஏலப்பனி நீரணி மாதர்கள்" - திருப்புகழ் - மதுரை);
புயல் - மேகம்;
பொடி - திருநீறு;
கயிலைக்கு இறை - திருக்கயிலைக்கு இறைவன்; (அப்பர் தேவாரம் - 5.66.1 - "ஓத மார்கட லின்விட முண்டவன் பூத நாயகன் பொற்கயி லைக்கிறை");
கருதுதல் - எண்ணுதல்; மதித்தல்; விரும்புதல்;
வெயில் ஒத்து எரி வினை ஆயின விடுமே - வெயில் போலச் சுட்டெரிக்கும் தீவினைகள் நீங்கும்;


2)
எண்மீறிய நசையால்தினம் இடருற்றிடும் நெஞ்சே
தண்மாநதி வெண்மாமதி சடைமேலணி தலைவன்
கண்மூன்றினன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
மண்மீதினி வாராநிலை வந்தெய்திடும் திடனே.


எண் மீறிய நசையால் - எண்ணற்ற, அளவு கடந்த ஆசைகளால்; (எண் - Bound, limit; வரையறை); (மீறுதல் - மேற்போதல் - To go beyond, exceed); (நசை - ஆசை);
தண் மா நதி - குளிர்ந்த பெரிய ஆறு - கங்கை;
வெண் மா மதி - வெண்மையான அழகிய சந்திரன்;
திடன் - திடம் - உறுதி; நிச்சயம்; (சம்பந்தர் தேவாரம் - 1.125.2 - "படரொளி சடையினன் ... சிவபுர மடையநம் இடர்கெடு முயர்கதி பெறுவது திடனே.");


3)
துணையற்றிடர்த் தொடரால்மிகத் துவளும்மட நெஞ்சே
இணையற்றவன் எங்குந்திரி எயில்மூன்றவை எரியக்
கணைதொட்டவன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
விணையெட்டிய மலைபோல்வினை விடுமேசுகம் மிகுமே.


இடர்த்தொடர் - துன்பத்தொடர்;
துவளுதல் - வாடுதல்; வருந்துதல்;
இணையற்றவன் - ஒப்பில்லாதவன்;
எயில் மூன்று - முப்புரங்கள்;
விணை எட்டிய - விண்ணை எட்டிய - வானளாவிய; (விணை - விண்ணை என்பதன் இடைக்குறை விகாரம்);


4)
இறையேனுமென் உரைகேள்மட நெஞ்சேஎதிர் இல்லான்
நறையார்மலர்க் கொன்றைச்சடை நம்பன்கடல் நஞ்சுண்
கறையார்மிட றுடையான்பதி கடம்பந்துறை கருதாய்
பறையாவினை பகலோன்வரப் பனிபோல்விடும் திடனே.


இறையேனும் - சற்றேனும்;
எதிர் இல்லான் - ஒப்பற்றவன்; (எதிர் - ஒப்பு );
நறை ஆர் மலர்க்கொன்றை - தேன் பொருந்திய கொன்றைமலர்;
நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - விரும்பத்தக்கவன்;
கடல் நஞ்சு உண் கறை ஆர் மிடறு உடையான் - கடல்விடத்தை உண்ட கறை பொருந்திய கண்டத்தை உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.49.10 - "... நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே");
பறையா வினை பகலோன் வரப் பனிபோல் விடும் - அழியா வினைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் ஒழியும். (பறைதல் - அழிதல்);


5)
நிலையாததை நேசித்திடும் நெஞ்சேநிழல் மழுவன்
மலையான்மகள் ஒருபங்கினன் மணிமார்பினில் நூலன்
கலைமான்கரன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
மலைபோலுள பழவல்வினை மாயும்திரு வருமே.


நிலையாததை நேசித்திடும் நெஞ்சே - நிலையற்றதையே மிகவும் ஓம்புகின்ற மனமே; (நிலையற்றது = உடல், பொருள், உலகவாழ்வு இத்யாதி);
நிழல் மழுவன் - ஒளி திகழும் மழுவை ஏந்தியவன்;
மணி மார்பினில் நூலன் - அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்;
கலைமான் கரன் - கலைமானைக் கையில் ஏந்தியவன்;
திரு - செல்வம்; நன்மை;


6)
சுற்றத்தினர் காவும்படி துஞ்சாமுனம் நெஞ்சே
ஒற்றைச்சின விடையூர்தியன் உமைகோன்நதி உலவும்
கற்றைச்சடை உடையான்பதி கடம்பந்துறை கருதாய்
பற்றித்தொடர் பழவல்வினை பறையும்திரு வருமே.


சுற்றத்தினர் காவும்படி துஞ்சாமுனம் - உறவினர்கள் தோளிற் சுமந்துசெல்லும்படி உயிர்போவதன் முன்னமே; (காவுதல் - தோளிற் சுமத்தல்); (துஞ்சுதல் - இறத்தல்);
ஒற்றைச் சின விடை ஊர்தியன் - ஒப்பற்ற, சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவன்;
பறையும் - அழியும்;
7)
உண்டிங்குய ஒருநல்வழி உணரென்மட நெஞ்சே
பெண்டங்கிய பாகத்தினன் பிறைசூடிய பெருமான்
கண்டங்கிய நுதலான்பதி கடம்பந்துறை கருதாய்
மண்டங்கிட வைக்கும்வினை மாயும்திரு வருமே.


பதம் பிரித்து:
உண்டு இங்கு உ[ய்]ய ஒரு நல்வழி; உணர் என் மட நெஞ்சே;
பெண் தங்கிய பாகத்தினன், பிறை சூடிய பெருமான்,
கண் தங்கிய நுதலான் பதி கடம்பந்துறை கருதாய்;
மண் தங்கிட வைக்கும் வினை மாயும்; திரு வருமே.

மண் தங்கிட வைக்கும் வினை மாயும் - இப்பூமியில் ஓயாமல் பிறவிகளைத் தரும் வினை அழியும்;


8)
நனிநாள்பல நினைவால்மிக நலியும்மட நெஞ்சே
முனிநால்வருக் கறம்சொன்னவன் முடிபத்தினன் பாடக்
கனிவோடருள் செய்தான்பதி கடம்பந்துறை கருதாய்
இனிவாடுதல் செய்யும்வினை இல்லாநிலை தானே.


நனி நாள் - பல நாள்கள்;
முனி நால்வருக்கு அறம் சொன்னவன் - சனகாதியருக்கு மறைப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி;
முடி பத்தினன் - பத்துத்தலைகள் உடைய இராவணன்;


9)
சும்மாநிதம் துரிசேநினை தொழில்மேவிய நெஞ்சே
அம்மாலயன் அறியாவணம் அழலாகிய ஐயன்
கைம்மாவுரி போர்த்தான்பதி கடம்பந்துறை கருதாய்
வெம்மாவினைப் பகையாயின விடுமேதிரு வருமே.


சும்மா - பயனின்றி; அடிக்கடி;
துரிசு - குற்றம்;
மேவிய - விரும்பிய;
அம் மால் அயன் - அந்தத் திருமாலும் பிரமனும்;
கைம்மா உரி - யானைத்தோல்;
வெம் மா வினைப்பகை ஆயின விடுமே - கொடிய பெரிய வினைப்பகை எல்லாம் நீங்கும்;


10)
நட்டப்பெரு மானைத்தொழ நண்ணாதவர் சொல்லும்
வெட்டிச்சொலை விட்டுத்தினம் மிகவேத்திடு வார்க்குக்
கட்டிக்கரும் பொத்தான்பதி கடம்பந்துறை கருதாய்
ஒட்டித்தொடர் உறுதீவினை ஓயும்திரு உறுமே.


நட்டப் பெருமான் - நடராஜன்; (நட்டம் - கூத்து);
நண்ணுதல் - அடைதல்;
வெட்டிச்சொலை - வெட்டிச்சொல்லை; (வெட்டிச்சொல் - வெட்டிப்பேச்சு - வீண் வார்த்தை);
கட்டிக்கரும்பு - கருப்பங்கட்டி / கருப்புக்கட்டி - வெல்லம்;
தினம் மிக ஏத்திடுவார்க்குக் கட்டிக்கரும்பு ஒத்தான் - தினமும் மிகவும் துதிக்கும் அன்பர்களுக்கு வெல்லம் போல் இனிமை பயப்பவன்;
உறு தீவினை - மிகுந்த பாவங்கள்;
திரு உறும் - செல்வம்/நன்மை வந்தடையும்;
(அப்பர் தேவாரம் - 4.31.4 -
"பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே.");

11)
அருமாமணி மார்க்கண்டரை அடைகூற்றினைச் செற்ற
பெருமானணி யாகப்பணி பிறைசூடிய இறைவன்
கருமாமணி கண்டன்பதி கடம்பந்துறை கருதாய்
மருவாமுனை வினையாயின மறையாப்புகழ் வருமே.


அரு மா மணி மார்க்கண்டரை அடை கூற்றினைச் செற்ற பெருமான் - அரிய சிறந்த மணி போன்ற மார்க்கண்டேயரை நெருங்கிய காலனை அழித்த பெருமான்; (செறுதல் - அழித்தல்);
அணியாகப் பணி பிறை சூடிய இறைவன் - ஆபரணமாகப் பாம்பையும் பிறைச்சந்திரனையும் அணிந்த கடவுள்;
கரு மா மணி கண்டன் பதி கடம்பந்துறை கருதாய் - கரிய அழகிய மணியைக் கண்டத்தில் உடைய சிவன் உறையும் தலமான திருக்கடம்பந்துறையைக் கருதுவாயாக;
மருவா முனை வினை ஆயின - முன்னை வினைகள் எல்லாம் நெருங்கமாட்டா; (மருவுதல் - நெருங்குதல்);
மறையாப் புகழ் வருமே - அழியாத புகழ் வரும்;


அன்போடு,
வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :
1) கடம்பந்துறை (கடம்பர்கோயில் - குளித்தலை) - கடம்பவனேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=83
-------------------

No comments:

Post a Comment