Sunday, October 29, 2017

04.04 – சேறை (திருச்சேறை)

04.04சேறை (திருச்சேறை)



2013-08-10
சேறை (திருச்சேறை)
----------------------------------
(எழுசீர்ச் சந்த விருத்தம் - 'தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தம்.
ஒரோவழி 'தான' என்பது 'தனன' என்று வரும்.
இப்பாடல்களில், ஈற்றடிதோறும் 3-ஆம் சீரிலும் எதுகை அமைந்துள்ளது.)
(சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்")
(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்")



1)
தொல்வி னைத்தொடர் இம்மை யிற்பல
.. துன்ப மேதரக் கண்டுநான்
வெல்வி டைக்கொடி வேந்த னேசரண்
.. வேண்டி வந்தடி போற்றினேன்
வில்வ ளைத்தெரி அம்பி னைப்புரம்
.. வேவ எய்தமுக் கண்ணனே
செல்வ னேயருள் நல்கி டாய்அணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.



தொல்வினைத்தொடர் இம்மையிற் பல துன்பமே தரக் கண்டு நான் - பழவினைகளின் தொகுதி இப்பிறப்பில் பல துன்பங்களைத் தருவதை உணர்ந்து நான்; (தொல்வினை - பழவினை); (இம்மை - இப்பிறவி);
வெல்விடைக்கொடி வேந்தனே, சரண் வேண்டி வந்து அடி போற்றினேன் - வெற்றியுடைய இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய அரசனே, அடைக்கலம் வேண்டி வந்து உன் திருவடியை வழிபட்டேன்; (சரண் - அடைக்கலம்);
வில் வளைத்து எரி அம்பினைப் புரம் வேவ எய்த முக்கண்ணனே - முப்புரங்களும் வெந்து அழியும்படி மேருமலையை வில்லாக வளைத்து எரிக்கின்ற கணை ஒன்றை ஏவிய நெற்றிக்கண்ணனே; (எரி அம்பினை - எரிக்கின்ற கணையை);
செல்வனே அருள் நல்கிடாய் அணி சேறைச் செந்நெறி அப்பனே - செல்வனே, அழகிய திருச்சேறையில் உறையும் செந்நெறி அப்பனே, அருள்வாயாக; (அணி - அழகிய);



2)
ஆவி யைத்தொடர் முன்வி னைத்தொடர்
.. அல்ல லேதரக் கண்டுநான்
நாவி னில்திரு வைந்தெ ழுத்தினை
.. நம்பி வைத்துனைப் போற்றினேன்
பாவி னால்புகழ் பாடு வார்க்கருள்
.. பண்ப னேகறைக் கண்டனே
தீவி னைக்கொரு தீர்வி னைத்தரும்
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
ஆவியைத் தொடர் முன்வினைத்தொடர் அல்லலே தரக் கண்டு நான்
நாவினில் திரு ஐந்தெழுத்தினை நம்பி வைத்து உனைப் போற்றினேன்;
பாவினால் புகழ் பாடுவார்க்கு அருள் பண்பனே; கறைக்கண்டனே;
தீவினைக்கு ஒரு தீர்வினைத் தரும் சேறைச் செந்நெறி அப்பனே.


ஆவி - ஆன்மா;
அல்லல் - துன்பம்;
நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்;
தொடர்தீவினைத்தொடர் - தொடர்கின்ற தீவினைச் சங்கிலி;
கறைக்கண்டன் - நீலகண்டன்;
தீர்வு - நீங்குகை (Removal, separation); பரிகாரம் (Antidote, remedy);



3)
துன்னி வல்வினை துன்ப மேதரத்
.. தொய்யும் என்குறை தீர்த்திடாய்
முன்னம் வானவர் வந்தி றைஞ்சவும்
.. முப்பு ரம்பொடி ஆக்கினாய்
மின்னல் நுண்ணிடை மாதி னுக்கிடம்
.. மேனி யில்தரும் அன்பினாய்
சென்னி யிற்பிறை பின்ன ராவணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
துன்னி வல்வினை துன்பமே தரத் தொய்யும் என் குறை தீர்த்திடாய்,
முன்னம் வானவர் வந்து இறைஞ்சவும் முப்புரம் பொடி ஆக்கினாய்;
மின்னல் நுண்-இடை மாதினுக்கு இடம் மேனியில் தரும் அன்பினாய்;
சென்னியிற் பிறை, பின்னு அரா அணி சேறைச் செந்நெறி அப்பனே.


துன்னுதல் - நெருங்குதல்; அடைதல்;
தொய்தல் - இளைத்தல்; சோர்தல்;
பொடி ஆக்கினாய் - சாம்பலாக்கியவனே;
மின்னல் நுண்-இடை மாதினுக்கு இடம் மேனியில் தரும் அன்பினாய் - மின்னல் போன்ற சிற்றிடை உடைய உமைக்குத் திருமேனியில் இடப்பக்கத்தைத் தந்த அன்பனே;
பின்னுதல் - பின்னிப் பிணைதல் (entwine); தழுவுதல் (To embrace;);
சென்னி - தலை;
பிறை பின்னராவணி - பிறை பின்னு அரா அணி - பிறைச்சந்திரனையும், பின்னிப் பிணைகின்ற பாம்பையும் அணிகின்ற;



4)
பாவ மாயின பாற வேவுனைப்
.. பாடி வந்தடி போற்றினேன்
மேவ லர்புரம் வேவ அன்றொரு
.. மேரு வில்லினை ஏந்தினாய்
சேவ லார்கொடிச் சேந்த னைத்தரும்
.. தேச னேஉமை நேசனே
சேவ தேறிய தேவ னேஅணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
பாவம் ஆயின பாறவே உனைப் பாடி வந்து அடி போற்றினேன்,
மேவலர் புரம் வேவ அன்று ஒரு மேரு வில்லினை ஏந்தினாய்;
சேவல் ஆர் கொடிச் சேந்தனைத் தரும் தேசனே; உமை நேசனே;
சே-அது ஏறிய தேவனே; அணி சேறைச் செந்நெறி அப்பனே.


பாற - அழிய; (பாறுதல் - அழிதல்; நிலைகெட்டு ஓடுதல்);
மேவலர் - பகைவர்;
சேவல் ஆர் கொடிச் சேந்தன் - சேவற்கொடி உடைய முருகன்;
தேசன் - ஒளியுருவினன்; (தேசு - தேஜஸ் - ஒளி);
சே - இடபம்;



5)
நித்த லுந்துயர் நல்கு தீவினை
.. நீங்க நின்னடி போற்றினேன்
கத்து மாகடல் கக்கு நஞ்சினைக்
.. கண்டம் இட்டிருள் காட்டினாய்
மத்த னேமதி சூடி னாய்மழு
.. வாளி னாய்சரண் நீயெனச்
சித்தம் ஒன்றிய பத்தர் ஏத்திடும்
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
நித்தலும் துயர் நல்கு தீவினை நீங்க நின் அடி போற்றினேன்;
"கத்து மா-கடல் கக்கு நஞ்சினைக் கண்டம் இட்டு இருள் காட்டினாய்;
மத்தனே; மதி சூடினாய்; மழு வாளினாய்; சரண் நீ" எனச்
சித்தம் ஒன்றிய பத்தர் ஏத்திடும் சேறைச் செந்நெறி அப்பனே.


நித்தலும் - தினமும்;
கத்து மா கடல் - அலைகள் ஆர்ப்பரிக்கும் பெரிய பாற்கடல்;
கக்கு நஞ்சு - உமிழ்ந்த விஷம்;
நஞ்சினைக் கண்டம் இட்டு இருள் காட்டினாய் - விஷத்தைக் கண்டத்தில் வைத்து அங்கே கறுப்புநிறத்தைக் காட்டியவனே;
மத்தன் - உன்மத்தன் (பித்தன்); 'ஊமத்தை மலரைச் சூடியவன்' எனலுமாம்;
சித்தம் ஒன்றிய பத்தர் - ஒன்றியிருந்து நினையும் அன்பர்கள்; (அப்பர் தேவாரம் - 4.81.2 - "ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை" -- ஒன்றியிருந்து நினைதல் - சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சாய் இடைவிடாது நினைத்தல். ஊனம் - குறை. );



6)
கெழுமு தீவினை யாவும் வேரொடு
.. கெட்டு நற்கதி எய்தவே
கழும லத்தவர் கோன்த மிழ்த்தொடை
.. காத லாய்நினைந் தேத்தினேன்
மழுவி னாய்தொழு மாணிக் காநமன்
.. மாள வீசிய தாளினாய்
செழுவ யல்புடை தழுவு சீரணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
கெழுமு தீவினை யாவும் வேரொடு கெட்டு நற்கதி எய்தவே,
கழுமலத்தவர் கோன் தமிழ்த்தொடை காதலாய் நினைந்து ஏத்தினேன்;
மழுவினாய்; தொழு மாணிக்கா நமன் மாள வீசிய தாளினாய்;
செழு-வயல் புடை தழுவு சீர்-அணி சேறைச் செந்நெறி அப்பனே.


கெழுமுதல் - பொருந்துதல் (To attain, join, unite); கிட்டுதல் (To approach);
கெடுதல் - அழிதல்;
நற்கதி எய்த - நான் நன்னிலை அடைய;
கழுமலத்தவர்கோன் தமிழ்த்தொடை - கழுமலம் என்ற பெயரும் உடைய சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பாடியருளிய தமிழ்ப்பாமாலையான தேவாரம்;
காதலாய் - காதலாகி; (சம்பந்தர் தேவாரம் - 3.49.1 - "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது....");
தொழு மாணிக்கா நமன் மாள வீசிய தாளினாய் - தொழுத மார்க்கண்டேயரைக் காப்பதற்காக எமன் மாளுமாறு அவன் மார்பில் உதைத்தவனே;
செழு-வயல் - செழுமையான வயல்கள்;
புடை - பக்கம்;
தழுவுதல் - சூழ்தல் (To surround);
சீர் அணி - அழகிய; பெருமையுடைய; (சீர் - அழகு; பெருமை);



7)
அரித்த லேபுரி பண்டை வல்வினை
.. அற்றி டப்பரி வெய்திடாய்
தரித்த கங்கையின் நீர்ந னைத்திடு
.. சங்க ராமத மாகரி
உரித்த தோலது போர்வை ஆகிய
.. உம்பர் நாயக பக்கெனச்
சிரித்து மூவரண் எரித்த சேவக
.. சேறைச் செந்நெறி யப்பனே.



அரித்தலே புரி பண்டை வல்வினை அற்றிடப் பரிவு எய்திடாய் - என்னை இமிசிக்கும் பழைய வலிய வினைகள் தீருமாறு இரங்கி அருள்வாயாக; (அரித்தல் - இமிசித்தல்; தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்தல்; To corrode, consume, as acids; துருமுதலியன தின்னுதல்); (பரிவு - இரக்கம்; அன்பு);
(அப்பர் தேவாரம் - 5.1.3 - "அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்");
தரித்த கங்கையின் நீர் நனைத்திடு சங்கரா - முடிமேல் தங்கிய கங்கைப் புனல் நனைக்கின்ற சங்கரனே;
மத மாகரி உரித்த தோலது போர்வை ஆகிய உம்பர் நாயக - மதம் உடைய பெரிய ஆண்யானையின் உரித்த தோலைப் போர்வையாகப் போர்த்துக்கொண்ட தேவர்தலைவனே;
பக்கெனச் சிரித்து மூ அரண் எரித்த சேவக - வாய்விட்டுச் சிரித்து முப்புரங்களையும் எரித்த வீரனே; (பக்கெனல் - onomatopoeic expression of bursting, as with sudden laughter; சிரிப்பின் ஒலிக்குறிப்பு); (மூ அரண் - மூன்று கோட்டைகள்); (சேவகன் - வீரன்);
சேறைச் செந்நெறி அப்பனே - திருச்சேறையில் செந்நெறியப்பன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானே;



8)
அலையெ னத்தொடர் தீவி னைத்துயர்
.. அற்று நான்மகிழ் வெய்தவே
கலையை ஏந்திய கையி னாய்மிகு
.. காத லோடுனை ஏத்தினேன்
மலையை ஆட்டிய வல்ல ரக்கனின்
.. வாய்கள் பத்தழ ஓர்விரல்
சிலையின் மேலிடு தலைவ னேஅணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
அலை எனத் தொடர் தீவினைத் துயர் அற்று நான் மகிழ்வு எய்தவே,
கலையை ஏந்திய கையினாய், மிகு காதலோடு உனை ஏத்தினேன்;
மலையை ஆட்டிய வல்-அரக்கனின் வாய்கள் பத்து அழ ஓர் விரல்
சிலையின்மேல் இடு தலைவனே; அணி சேறைச் செந்நெறி அப்பனே.


கலை - மான்;
வல்-அரக்கன் - இராவணன்;
சிலை - மலை;



9)
கரிய மாலொடு போதின் மேலவன்
.. காண்கி லாவணம் ஓங்கிய
எரியன் வெள்விடை ஏறி வெண்டலை
.. ஏந்தி உண்பலி ஏற்பவன்
பெரியன் வெண்பிறை சூடு பிஞ்ஞகன்
.. பெண்ணொர் பங்கினன் எங்கணும்
திரியும் முப்புரம் எரிய எய்தவன்
.. சேறைச் செந்நெறி யப்பனே.



போதின் மேலவன் - பூவின்மேல் வீற்றிருக்கும் பிரமன்; (போது - பூ);
காண்கிலாவணம் - காண இயலாதபடி;
எரியன் - சோதியன்;
பெரியன் - பெரியவன் - மகாதேவன்; (அப்பர் தேவாரம் - 5.12.8 - "எரியினார் இறையார் ...
பெரியனார் ....");
பிஞ்ஞகன் - தலைக்கோலம் அணிந்தவன்;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;
எங்கணும் - எங்கும்;



10)
பொக்க மேமலி நெஞ்சர் நீற்றினைப்
.. பூசி டார்உரை பொய்வழி
துக்க மேதரும் என்ப தால்அவர்
.. சொல்லை விட்டொழி மின்களே
நக்க னேஉமை நாத னேஅருள்
.. நல்கி டாய்எனில் காப்பனே
செக்கர் வானினை ஒக்கும் மேனியெம்
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
பொக்கமே மலி நெஞ்சர், நீற்றினைப் பூசிடார் உரை பொய்வழி
துக்கமே தரும் என்பதால் அவர் சொல்லை விட்டு-ஒழிமின்களே;
"நக்கனே, உமை நாதனே, அருள் நல்கிடாய்" எனில் காப்பனே,
செக்கர் வானினை ஒக்கும் மேனி எம் சேறைச் செந்நெறி அப்பனே.


பொக்கம் - பொய்; வஞ்சகம்;
நீற்றினைப் பூசிடார் - திருநீற்றைப் பூசாதவர்கள்;
அவர் சொல்லை விட்டொழிமின்கள் - அவர்கள் சொற்களை மதிக்க வேண்டா. விட்டு நீங்குங்கள்; (விடுதல் - நீங்குதல்; ஒழிதல் - நீங்குதல்);
நக்கன் - நிர்வாணி;
காப்பன் - காப்பான்; (அப்பர் தேவாரம் - 5.42.3 - "வேட்களத்துறை வேதியன் ... காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.")
செக்கர்வான் - செவ்வானம்;



11)
வென்றி வெள்விடை ஊர்தி யான்மத
.. வேளை நீறெழ நோக்கினான்
என்றும் உள்ளவன் ஈர வேணியன்
.. ஏழை பங்கினன் ஆடக
மன்றில் ஆடலன் துன்று வல்வினை
.. மாய வண்டமிழ் வாயராய்ச்
சென்று போற்றிட நன்ற ளிப்பவன்
.. சேறைச் செந்நெறி யப்பனே.



வென்றி வெள்விடை ஊர்தியான் - வெற்றி பொருந்திய இடபத்தை வாகனமாக உடையவன்;
மதவேளை நீறு எழ நோக்கினான் - மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்; (மதவேள் - மன்மதன்; காமன்);
என்றும் உள்ளவன் - அழிவற்றவன்;
ஈர வேணியன் - சடையில் கங்கையை உடையவன்; (வேணி - சடை);
ஏழை பங்கினன் - உமைபங்கன்;
ஆடக மன்றில் ஆடலன் - பொன்னம்பலத்தில் ஆடுகின்றவன்; (ஆடக மன்று - பொற்சபை; ஆடகம் - பொன்); (ஆடலன் - ஆடுதலைச் செய்பவன்); (அப்பர் தேவாரம் - 5.19.8 - "அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்");
துன்று வல்வினை மாய வண்-தமிழ் வாயராய்ச் சென்று போற்றிட நன்று அளிப்பவன் சேறைச் செந்நெறி அப்பனே - னம்மைச் சூழும் வலிய வினைகளெல்லாம் அழியத் தேவாரம் திருவாசகம் பாடி வழிபட்டால் நன்மை செய்பவன் திருச்சேறையில் உறைகின்ற செந்நெறியப்பனான சிவபெருமான்; (துன்றுதல் - பொருந்துதல்; நெருங்குதல்); (வண்டமிழ் - வண் தமிழ் - வளம் மிக்க தமிழ் - தேவாரம், திருவாசகம், முதலியன);



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) திருச்சேறை - சாரபரமேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=1002
திருச்சேறை - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=139

----------- --------------

No comments:

Post a Comment