Saturday, October 28, 2017

04.03 – அவளிவணல்லூர் (அவள் இவள் நல்லூர்)

04.03 – அவளிவணல்லூர் (அவள் இவள் நல்லூர்)


2013-08-04

அவளிவணல்லூர் (அவள் இவள் நல்லூர்)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு.

(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")

(கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.7 - 'இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற')


1)

இம்மை அம்மை இன்பம் எய்த எண்ணுதி யேல்மனமே

எம்மை ஆளும் ஈச னேயென் றிணையடி ஏத்தியடை

அம்மைக் கண்டன் அண்டர் அண்டன் ஆரழல் ஏந்திநடம்

அம்மை காண ஆடும் ஐயன் அவளிவள் நல்லூரே.


இம்மை - இப்பிறப்பு;

அம்மை - 1) இப்பிறப்பின் பின் எய்தும் நிலை; 2) அன்னை;

எண்ணுதியேல் - நீ எண்ணினால்;

அம் மைக் கண்டன் - அழகிய கரிய கண்டன்;

அண்டரண்டன் - தேவதேவன்;


நெஞ்சே! நீ இகபர சௌபாக்கியம் அடைய எண்ணினால், "எம்மை ஆள் உடைய ஈசனே" என்று இருதிருவடிகளைப் போற்றி, அழகிய நீலகண்டத்தை உடையவனும், தேவதேவனும், உமையம்மை காணத் தீயை ஏந்தித் திருநடம் செய்யும் தலைவனும் ஆன சிவபெருமான் உறையும் அவளிவணல்லூரை அடைவாயாக.



(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.14.4 -

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்

அம்மையேல் பிறவித்துயர் நீத்திடும்

எம்மை ஆளும் இடைமருதன் கழல்

செம்மையே தொழுவார் வினை சிந்துமே.)


(9.24.2 - திருவிசைப்பா - "அன்ன நடையார் ... மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே.")


2)

மாட்சி இல்லா வலிய வினைகள் மாயவும் மண்ணுலகில்

மீட்சி இல்லா மேன்மை பெறவும் விரைகழல் ஏத்தியடை

காட்சிக் கரியன் கண்டங் கரியன் கண்ணுதல் மூவுலகும்

ஆட்சி உடைய சாட்சி நாதன் அவளிவள் நல்லூரே.


* சாட்சிநாதன் - அவளிவணல்லூர் ஈசன் திருநாமங்களுள் ஒன்று;


மாட்சி - உயர்வு; சிறப்பு;

மீட்சி - மீளுதல்;

விரைகழல் ஏத்தி அடை - மணம்கமழும் திருவடியைத் துதித்து அடைவாயாக; (விரை - வாசனை); (ஏத்துதல் - துதித்தல்);

காட்சிக்கரியன் - காட்சிக்கு அரியன்;

கண்டம் கரியன் - நீலகண்டன்;

கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்;


3)

வெய்ய வினைகள் மேவா தொழிய வேண்டுதி யேல்மனமே

செய்ய என்றும் மெய்ய என்றும் சேவடி ஏத்தியடை

தையல் பங்கன் அன்பர் மகிழத் தன்திரு வாய்மொழியால்

ஐயம் நீக்கி அருளும் ஐயன் அவளிவள் நல்லூரே.


வெய்ய - வெம்மையான;

மேவாது ஒழிய வேண்டுதியேல் மனமே - நம்மேல் பொருந்தாமல் நீங்கிவிட விரும்பினால், நெஞ்சே;

செய்ய - செய்யனே - சிவந்த நிறம் உடையவனே;

மெய்ய - மெய்யனே - மெய்ப்பொருளே;

தையல் பங்கன் - அர்த்தநாரீஸ்வரன்; (தையல் - பெண்);

அன்பர் மகிழத் தன் திருவாய்மொழியால் ஐயம் நீக்கி அருளும் ஐயன் - 'அவளே இவள்' என்று ஈசன் சொல்லிச் சந்தேகத்தைத் தீர்த்தருளியதை அவளிவணல்லூர்த் தலவரலாற்றிற் காண்க.


4)

தழலைப் போலத் தகிக்கும் வினைகள் சாய்ந்திட வேண்டுதியேல்

தொழலை மறவார் துணைவன் தாளைத் துதித்திடச் சேர்மனமே

கழலன் றடைந்த மார்க்கண் டர்க்காக் காலனைக் காய்ந்தபிரான்

அழலை ஏந்தி ஆடும் ஐயன் அவளிவள் நல்லூரே.


தழலைப் போலத் தகிக்கும் வினைகள் சாய்ந்திட வேண்டுதியேல் - தீப் போல் சுடுகின்ற வினைகள் அழியவேண்டும் என்று நீ விரும்பினால்; (சாய்தல் - அழிதல்);

தொழலை மறவார் துணைவன் தாளைத் துதித்திடச் சேர்மனமே - தினந்தோறும் மறவாமல் வழிபடும் பக்தர்களுக்குத் துணைவனான சிவபெருமான் திருவடியைப் போற்றச் சென்று அடை மனமே; (தொழல் - தொழுதல்);

கழல் அன்று அடைந்த மார்க்கண்டர்க்காக் காலனைக் காய்ந்த பிரான் - அன்று தன் திருவடியை அடைந்த மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்த பெருமான்;

அழலை ஏந்தி ஆடும் ஐயன் அவளிவள் நல்லூரே - தீயை ஏந்தித் திருநடம் செய்யும் தலைவன் உறையும் அவளிவணல்லூரை;


5)

துன்ப வினைகள் தொலைய வேண்டில் துதிசெயச் சேர்மனமே

என்பும் தோலும் ஏனத் தெயிறும் எழிலுறப் பூணுமரன்

முன்பின் நடுவாம் முக்கட் பரமன் முத்தமி ழாற்பணியும்

அன்பர்க் கின்பம் அருளும் ஐயன் அவளிவள் நல்லூரே.


என்பு - எலும்பு ;

ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு ;

எழிலுறப் பூணும் அரன் - அழகுற அணியும் ஹரன்;

முன் பின் நடு ஆம் - அனைத்திற்கும் முன்னும், அனைத்தின் பின்னும், எப்போதும் உள்ளவன்;

(பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 125 -

"மூவாத முதலாகி நடுவாகி முடியாத சேவாருங் கொடியாரைத் ...." - எஞ்ஞான்றும் அழியாத முதலாகி, நடுவாகி, முடிதலும் இல்லாத ஆனேற்றுக் கொடியையுடைய சிவபெருமானை);

முக்கட் பரமன் - மூன்று கண்களையுடைய பரமன்;


6)

பிழைக்கும் வழியாய்ப் பிழையே செய்யும் பேதைமை தீர்ந்துநலம்

தழைக்கும் வழியைச் சார வேண்டில் தாளிணை ஏத்தியடை

உழைக்கும் போதும் உண்ணும் போதும் உறங்கிடும் போதிலும்பேர்

அழைக்கும் அன்பர்க் கருளும் ஐயன் அவளிவள் நல்லூரே.


பிழைக்கும் வழி - சீவனம் பண்ணுதல் (To get on in life, subsist);

பிழை - குற்றம்;

பேதைமை - மடமை (Folly);

சார்தல் - பொருந்தியிருத்தல்; சென்றடைதல்;

தாளிணை ஏத்தியடை - இரு திருவடிகளைப் போற்றி அடைவாயாக;

பேர் அழைக்கும் அன்பர்க்கு அருளும் ஐயன் - திருநாமத்தைச் சொல்லி வணங்கும் பக்தர்களுக்கு அருள்செய்யும் தலைவன்;

(சம்பந்தர் தேவாரம் - 1.50.5 - "துஞ்சும்போதும் துற்றும்போதும் சொல்லுவன் உன் திறமே ... ... வலிவல[ம்] மேயவனே." -- திருவலிவலம் மேவிய இறைவனே, உறங்கும் போதும் உண்ணும்போதும் உன்றன் புகழையே சொல்லுவேன்....)


7)

தொல்லை வினைகள் சூழா முன்னம் துதிசெயச் சேர்நெஞ்சே

வில்லை ஏந்தும் வேட னாகி விசயனை வென்றருள்வான்

அல்லும் பகலும் அரனைப் போற்றி அன்புசெய் வார்க்கிரங்கி

அல்லல் நீக்கி அருளும் ஐயன் அவளிவள் நல்லூரே.


தொல்லை வினைகள் சூழாமுன்னம் துதிசெயச் சேர் நெஞ்சே - மனமே, பழவினைகள் வந்து நம்மைச் சூழ்ந்துகொள்வதன்முன் நீ போற்றச் சென்று அடைவாயாக; (தொல்லை - பழைய);

வில்லை ஏந்தும் வேடன் ஆகி விசயனை வென்று அருள்வான் - ஒரு வேடன் உருவில் வில்லை ஏந்திச் சென்று அருச்சுனனோடு போர்செய்து வென்று அவனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள்செய்தவன்;


8)

வரையில் வினைகள் மாய வேண்டில் வாழ்த்திடச் சேர்மனமே

வரையை அசைத்த வல்ல ரக்கன் மணிமுடி பத்தடர்த்த

அரையன் இசைகேட் டருள்கள் செய்தான் அஞ்சடை மேற்பிறையன்

அரையில் அரவம் ஆர்த்த ஐயன் அவளிவள் நல்லூரே.


வரை இல் வினை மாய வேண்டில் வாழ்த்திடச் சேர் மனமே - நெஞ்சே, அளவில்லாத வினைகள் எல்லாம் அழிய வேண்டுமென்றால், துதிப்பதற்குச் சென்று அடைவாயாக;

வரையை அசைத்த வல்லரக்கன் மணிமுடி பத்து அடர்த்த அரையன் - கயிலைமலையை அசைத்த கொடிய அரக்கனான இராவணணது பத்துத் தலைகளையும் நசுக்கிய தலைவன்; (அடர்த்தல் நசுக்குதல்); (அரையன் - அரசன்);

இசைகேட்டு அருள்கள் செய்தான் - இராவணன் அழுது இசைபாடித் தொழக் கேட்டு இரங்கி அவனுக்கு அருள்கள் செய்தவன்; (நீண்ட ஆயுள், சந்திரஹாஸம் என்ற வாள், இராவணன் என்ற பெயர், முதலியன);

அம் சடைமேல் பிறையன் - அழகிய சடையின்மீது பிறைச்சந்திரனை அணிந்தவன்;

அரையில் அரவம் ஆர்த்த ஐயன் அவளிவள் நல்லூரே - பாம்பை இடையில் கச்சாகக் கட்டிய தலைவன் உறைகின்ற அவளிவள் நல்லூரை;


9)

தளைகள் நீங்கித் தணியா இன்பம் சார்ந்திட வேண்டுதியேல்

வளையும் அணியெம் மானே என்று வழுத்திடச் சேர்மனமே

கிளறு கேழல் முளரி மேலான் கீழொடு மேலடையா

அளவில் எரியாய் அன்றோங் கையன் அவளிவள் நல்லூரே.


தளைகள் நீங்கித் தணியா இன்பம் சார்ந்திட வேண்டுதியேல் - கட்டுகள் நீங்கி, என்றும் குறையாத இன்பம் சேரவேண்டும் என்றால்; (தளைகள் - பந்தங்கள்);

வளையும் அணி எம்மானே என்று வழுத்திடச் சேர் மனமே - வளையையும் அணியும் அர்த்தநாரீஸ்வரனே என்று போற்றச் சென்றடை மனமே;

கிளறு கேழல் - நிலத்தை அகழ்ந்த பன்றி - திருமால்;

முளரி மேலான் - தாமரைமேல் இருப்பவன் - பிரமன்;

கீழொடு மேல் அடையா - இவர்களால் திருவடியையும் திருமுடியையும் அடைய ஒண்ணாத;

அளவு இல் எரியாய் அன்று ஓங்கு ஐயன் அவளிவள் நல்லூரே - அளவில்லாத சோதியாக அன்று உயர்ந்த தலைவன் உறைகின்ற அவளிவள் நல்லூரை;


10)

வெஞ்சொல் பேசி வேத நெறியை விட்டு வரச்சொலுமவ்

வஞ்ச நெஞ்சர் வார்த்தை ஒழிமின் வாழ்வினில் இன்புறலாம்

அஞ்செ ழுத்தை அன்போ டியம்பி அனுதினம் தொண்டுசெயின்

அஞ்சல் அளிக்கும் ஐயன் உறைவ தவளிவள் நல்லூரே.


வேதநெறி - வேதமார்க்கம் ; வைதிகமார்க்கம் ;

ஒழிமின் - ஒழியுங்கள்; நீங்குங்கள்;

செயின் - செய்யின் - செய்தால்;

அஞ்சல் அளிக்கும் ஐயன் உறைவது - அபயம் அளிக்கும் தலைவன் உறைகின்ற தலம்; (அஞ்சலளித்தல் - அபயங்கொடுத்தல் - To give refuge, as saying, 'Fear not');


11)

பணியும் பத்தர்க் கணியன் பாதம் பரவிடச் சேர்மனமே

பிணியும் நீக்கிப் பெரிதும் அருள்வான் பிறையொடு செஞ்சடைமேல்

பணியும் அணியாம் பரமன் மிடற்றில் பாற்கடல் நஞ்சதுவும்

அணியும் மணியாம் அருளார் ஐயன் அவளிவள் நல்லூரே.


பணியும் பத்தர்க்கு அணியன் - வணங்கும் பக்தர்களுக்கு அருகில் இருப்பவன்;

பாதம் பரவிடச் சேர் மனமே - அப்பெருமான் திருவடியைப் போற்றிடச் சென்றடை மனமே;

பிணியும் நீக்கிப் பெரிதும் அருள்வான் - அப்பெருமான் பிணிகளை எல்லாம் தீர்த்துப் பேரருள் செய்பவன்; (பிணியும் என்றதில் 'உம்' எச்சவும்மை - (something understood). துன்பத்தையும் நோய்களையும் இன்ன பிறவற்றையும் பிறவிப்பிணியையும் என்பதைச் சுட்டியது);

பிறையொடு செஞ்சடைமேல் பணியும் அணி ஆம் பரமன் - செஞ்சடைமேல் பிறைச்சந்திரனும் நாகப்பாம்பும் ஆபரணம் ஆகும் பரமன்;

மிடற்றில் பாற்கடல் நஞ்சு அதுவும் அணியும் மணி ஆம் அருள் ஆர் ஐயன் - பாற்கடலில் எழுந்த விஷமும் கண்டத்தில் அணிகின்ற நீலமணி ஆகும் அருளாளன்;

அவளிவள் நல்லூரே - உறைகின்ற அவளிவணல்லூரை.


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1) யாப்புக் குறிப்பு :

அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு.

அடி ஈற்றுச்சீர் பெரும்பாலும் கூவிளங்காய்.

5-6 சீர்களிடையே வெண்டளை பயிலும். 5-ஆம் சீர் மாச்சீராக வரின், 6-ஆம் சீர் தனா என்ற சந்தத்தில் தொடங்கும்.

(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")

( கண்டராதித்தர் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.20.5 -

களிவான் உலகிற் கங்கை நங்கை காதல னேஅருளென்

றொளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடி யார்க்கருளும்

தெளிவா ரமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்

ஒளிவான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ.);


2) தலவரலாறு: அவள் + இவள் + நல்லூர் = அவளிவணல்லூர்.

பழங்காலத்திலே இப்பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பூசித்த ஆதிசைவ அந்தணர் ஒருவர்க்கு இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களில் மூத்த பெண்ணை மணந்தவர் காசியாத்திரைக்குச் சென்றிருந்தனர். சென்றபின் அம்மூத்தபெண் அம்மைவார்க்கப்பெற்று உருவின் நிறம் மாறிக் கண் இழந்திருந்தனர். தந்தையார் இளைய பெண்ணை வேறு ஒருவர்க்கு மணஞ்செய்து கொடுத்திருந்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர்க் காசியாத்திரை சென்றவர் திரும்பிவந்தார். அக்காலம் இளைய பெண்ணும் கணவன் வீட்டிலிருந்து வந்திருந்தனர். மூத்த பெண்ணின் நிற வேறுபாட்டைக் கண்டு 'இளையவளே தம் மனைவி. மூத்தவளைத் தம் மனைவி என்று சொல்லி ஆதி சைவ அந்தணர் ஏமாற்றுகின்றனர்', எனக் கூறி மூத்த பெண்ணை மணந்தவர் வழக்கிட்டனர்.

இறைவன் இடபவாகனத்தில் எழுந்தருளி மூத்த மகளே இவரது மனைவி என்னும் பொருளில் அவள் இவள் எனச் சுட்டிக்காட்டிய காரணத்தால், நல்லூர் என்னும் பெயரோடு, அவள் இவள் என்னும் தொடரையும் சேர்த்து அவளிவணல்லூர் என்னும் பெயர் எய்திற்று என்பர்.)


3) அவளிவணல்லூர் - சாட்சிநாதர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=293

அவளிவணல்லூர் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=12


4)

***** some Q&A on this padhigam *****

Q-1) Song #9: "...... கிளறு கேழல் முளரி மேலான் கீழொடு மேலடையா ......"

Question from SDN: Beautiful lines. Why you had mentioned the panRi uruvam for Vishnu and left Brahma as is?

My Response: I cannot think of any specific reason for this - where Vishnu's boar form is mentioned but Brahma's swan form is not explicitly mentioned.

Occasionally one can see such usage in thevaram.

sambandar thevaram - 3.111.9

துன்று பூமகன் பன்றி யானவ னொன்று மோர்கிலா மிழலை யானடி

சென்று பூம்புன னின்று தூவினார் நன்று சேர்பவரே.

----------

Q-2) Song #10: "வெஞ்சொல் பேசி வேத நெறியை விட்டு வரச்சொலுமவ் ....."

Question from A: முதலடி 5-ஆம் சீர் மாச்சீராக உள்ளதை நோக்கவும்.

My Response: Good observation.

அதனை அடுத்த சீர் தனா என்ற சந்தத்தில் தொடங்குவதால் ஒலி சரியாக அமையும்.

விட்டு வரச்சொலுமவ் = "விட்டுவ ரச்சொலுமவ்" என்று வகையுளியாக நோக்கலாம்.

உதாரணமாக: சம்பந்தர் தேவாரம் - 1.63.10 - 4-ஆம் அடியில் சீர்கள் 5-6-ஐ நோக்கவும்:

நிழலான் மலிந்த கொன்றை சூடி நீறுமெய் பூசிநல்ல

குழலார் மடவார் ஐயம் வவ்வாய் கோல்வளை வவ்வுதியே

அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள்முடிய

கழல்நா கரையன் காவ லாகக் காழி யமர்ந்தவனே.

***********************

----------- --------------

No comments:

Post a Comment