Sunday, October 29, 2017

03.05.001 – பொது - ஓதம் அதுபுடை சூழும் உலகினில் - (வண்ணம்)

03.05.001 – பொது - ஓதம் அதுபுடை சூழும் உலகினில் - (வண்ணம்)

2006-08-14

3.5.1 - ஓதம் அதுபுடை சூழும் - (பொது)

-------------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான )

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


ஓதம் அதுபுடை சூழும் உலகினில்

.. .. ஊசல் எனமனம் .. அசையாமல்

.. ஊனம் அறுதிரு நாமம் அனுதினம்

.. .. ஓதி அடியிணை .. தொழுவேனே;

தீதை இழையமண் மாய வருமொரு

.. .. தீரர் நதியினில் .. இடுமேடு

.. சேடு திகழ்திசை ஏகி வெலவருள்

.. .. தேவ; ஒளிகிளர் .. புரிநூலா;

வேத(ம்) மொழிதிரு நாவ; எயிலெரி

.. .. வீர; உமையவள் .. ஒருகூறா;

.. வேலை விடமொரு நீல மணியென

.. .. மேவி அணிமிட .. றுடையானே;

பாத மலர்தனை நால்வர் அருளிய

.. .. பாடல் அவைகொடு .. தொழுவார்கள்

.. பாரை இனியடை யாத படிவினை

.. .. பாற இனிதருள் .. பெருமானே.


பதம் பிரித்து:

ஓதம்அது புடை சூழும் உலகினில்

.. .. ஊசல் என மனம் .. அசையாமல்,

.. ஊனம் அறு திருநாமம் அனுதினம்

.. .. ஓதி அடியிணை .. தொழுவேனே;

தீதை இழை-அமண் மாய வரும் ஒரு

.. .. தீரர் நதியினில் .. இடும் ஏடு

.. சேடு திகழ் திசை ஏகி வெல அருள்

.. .. தேவ; ஒளி கிளர் .. புரிநூலா;

வேத(ம்) மொழி திருநாவ; எயில் எரி

.. .. வீர; உமையவள் .. ஒரு கூறா;

.. வேலை-விடம் ஒரு நீலமணி

.. .. மேவி அணி மிடறு டையானே;

பாதமலர்தனை நால்வர் அருளிய

.. .. பாடல் அவை-கொடு .. தொழுவார்கள்

.. பாரை இனி டையாதபடி வினை

.. .. பாற இனிது-அருள் .. பெருமானே.


ஓதம்அது புடை சூழும் உலகினில் ஊசல் என மனம் அசையாமல் - கடல் நாற்புறமும் சூழும் உலகில் ஒரு ஊஞ்சல் போல் என் மனம் இங்கும் அங்கும் அசைந்து கலங்காமல்; (ஓதம் - கடல்); (அசைதல் - இயங்குதல்; கலங்குதல்);

ஊனம் அறு திரு நாமம் அனுதினம் ஓதி அடியிணை தொழுவேனே - குற்றத்தையெல்லாம் தீர்க்கின்ற திருநாமத்தைத் தினமும் ஓதி உன் இரு திருவடிகளை வணங்குவேன்; (ஊனம் - குற்றம்); (அறுத்தல் - நீக்குதல்; இல்லாமற் செய்தல்);


தீதை இழை-அமண் மாய வரும் ஒரு தீரர் நதியினில் இடும் ஏடு சேடு திகழ் திசை ஏகி வெலருள் தேவ - தீங்கையே செய்த சமணர்கள் அழியுமாறு வந்த ( / அவதரித்த) ஒப்பற்ற திட்பம் உடையவரான திருஞான சம்பந்தர் வைகையில் இட்ட ஏடு உயரம் திகழும் திசையில் (ஆற்றை எதிர்த்து மேல் நோக்கிச்) சென்று வெல்ல அருளிய தேவனே; (அமண் - சமணமதம்; சமணர்); (மாய்தல் - அழிதல்); (தீரர் - தீரம் உடையவர் - இங்கே சம்பந்தர்; தீரம் - தைரியம்; வலிமை; அறிவு); (சேடு - உயரம்); (ஏகுதல் - போதல்); (வெல - வெல்ல - இடைக்குறையாக வந்தது);

ஒளி கிளர் புரிநூலா - ஒளி வீசும் முப்புரிநூல் அணிந்தவனே;


வேதம் மொழி திரு நாவ - வேதங்களைப் பாடியருளியவனே;

எயில் எரி வீர - முப்புரங்களை எரித்த வீரனே; (எயில் - கோட்டை);

உமையவள் ஒரு கூறா - உமை ஒரு கூறு ஆனவனே; (உமையவள் - உமை; அவள் - பகுதிப்பொருள்விகுதி);

வேலை-விடம் ஒரு நீலமணி மேவி அணி மிடறுடையானே - கடல்விடத்தை விரும்பி உண்டு ஒரு கரிய மணி போல அணிந்த கண்டத்தை உடையவனே; (வேலை - கடல்); (மேவுதல் - உண்ணுதல்; விரும்புதல்);


பாதமலர்தனை நால்வர் அருளிய பாடல் அவைகொடு தொழுவார்கள் பாரை இனிடையாதபடி வினை பாற இனிது அருள் பெருமானே - உன் திருவடித்தாமரையைச் சமயக் குரவர் நால்வர் பாடல்களால் வழிபடும் பக்தர்கள் இனிப் பூமியில் பிறவாதபடி அவர்களது வினைகள் அழிய அருளும் பெருமானே; (பார் - பூமி); (பாறுதல் - அழிதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment