Saturday, June 17, 2017

03.04.043 - சிவன் - நான்கு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-23

3.4.43 - சிவன் - நான்கு - சிலேடை

-------------------------------------------------------------

மக்களுக்கு வாழ்வின் நிலையாம் நெறிகாட்டும்

திக்குமாம் செப்பும் படையாகும் தக்க

இலக்காம் மறைகளவை எல்லாமாம் எண்ணில்

நலத்தையருள் நாரிபங்கன் நான்கு.


சொற்பொருள்:

வாழ்வினிலை - வாழ்வின் நிலை; / வாழ்வில் நிலை;

நிலை - 1. ஆசிரமம்; / 2. நெறி; உறுதி;

இன் - 1. சாரியை; 2. ஏழாம் வேற்றுமை உருபு;

நெறி - வழி;

திக்கு - 1. திசை; / 2. புகலிடம்;

படை - 1. சேனை; / 2. ஆயுதம்;

இலக்கு - இலட்சியம்; நாடும் பொருள்; குறி;

எண்ணில் - 1. எண்களில்; / 2. a. எண் + இல் (எண்ணற்ற); b. எண்ணினால் (சிந்தித்தால் / தியானித்தால்);

நாரி - பெண்;


நான்கு:

மக்களுக்கு வாழ்வின் நிலை ஆம் - மனிதருக்கு வாழ்க்கையின் நிலைகள் நான்கு - (பிரமசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம்);

நெறி காட்டும் திக்கும் ஆம் - வழி காட்டும் திசைகள் நான்கு;

செப்பும் படை ஆகும் - சொல்லப்படும் படைகள் நான்கு - (யானை, தேர், பரி, காலாள்);

தக்க இலக்கு ஆம் - தகுந்த குறிக்கோள்கள் நான்கு - (அறம், பொருள், இன்பம், வீடு).

மறைகளவை எல்லாம் ஆம் - வேதங்கள் நான்கு.

எண்ணில் நான்கு - எண்களில் நான்கு;


சிவன்:

மக்களுக்கு வாழ்வின் நிலை ஆம் நெறி காட்டும் திக்கும் ஆம் - மக்களுக்கு வாழ்க்கையில் ஸ்திரமான நிலை ஆகும் நன்னெறி காட்டும் புகலிடம் ஆவான்;

செப்பும் படை ஆகும் - (நாவால்) சொல்லும் ஆயுதம் ஆவான்; (அவன் திருநாமம் நம்மைக் காக்கும்); (அப்பர் தேவாரம் - 4.81.8 – "படைக்கலமாக உன் நாமத்தெழுத் தஞ்சென் நாவிற்கொண்டேன்" - என்னைத் தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந்தெழுத்தை என் நாவில் எப்பொழுதும் தாங்கியுள்ளேன்");

தக்க இலக்கு ஆம் - நல்ல குறிக்கோள் ஆவான்;

மறைகளவை எல்லாம் ஆம் - வேதங்கள் எல்லாம் அவன். (அப்பர் தேவாரம் - 6.5.8 - "நான்மறையோ டாறங்கம் ஆனாய் போற்றி");

எண்ணில் நலத்தை அருள் நாரிபங்கன் - நினைப்பவர்களுக்கு எண்ணற்ற நலங்கள் அருள்கின்ற உமைபங்கன்; (எண்ணில் - என்ற சொல்லை இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment