Sunday, October 11, 2015

02.30 – கண்டியூர் - (திருக்கண்டியூர்)

02.30 – கண்டியூர் - (திருக்கண்டியூர்)



2011-09-26
திருக்கண்டியூர்
----------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - "தானனாதன தானனா தானனாதன தானனா")

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தான தானன தானனா தான தானன தானனா")

(சம்பந்தர் தேவாரம் - 2.77.1 - "பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா")




1)
ஆவிபோய்மனை யாரெலாம் ஐயகோவென நாலுபேர்
காவியங்கியி டாமுனம் கண்கள்மூன்றுடை நாயகன்
தேவிபங்கினன் கையிலோர் சிரமதேந்திய செல்வனூர்
காவிரிக்கரைக் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
ஆவி போய் மனையார் எலாம் ஐயகோ என நாலுபேர்
காவி அங்கி இடாமுனம் கண்கள் மூன்றுடை நாயகன்
தேவி பங்கினன் கையில் ஓர் சிரமது ஏந்திய செல்வன் ஊர்
காவிரிக்கரைக் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


ஐயகோ - இரக்கம் துக்கங்களின் குறிப்பு (An exclamation of pity, sorrow);
காவுதல் - தோளிற் சுமத்தல் (To carry on the shoulder);
அங்கி - நெருப்பு;
நாலுபேர் காவி அங்கி இடாமுனம் - நான்குபேர் சுமந்து நெருப்பு இடுவதன் முன்னம்;
கையில் ஓர் சிரமது ஏந்திய செல்வன் - கையில் பிச்சைக்காக ஒரு மண்டையோட்டை ஏந்திய செல்வன்;
காவிரிக்கரைக் கண்டியூர் - காவிரியின் கரையில் இருக்கும் கண்டியூர்;
கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்;


(சம்பந்தர் தேவாரம் - 3.38.1 -
"வினவினேனறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்")



2)
எந்தநாளெம தூதுவர் எய்துவாரறி கின்றிலோம்
அந்தநாளடை யாமுனம் ஆதிஅந்தமி லாதவன்
வெந்தநீறணி வேதியன் வெண்டலைக்கரன் மேவிய
கந்தமார்பொழிற் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
எந்த நாள் எம தூதுவர் எய்துவார் அறிகின்றிலோம்;
அந்த நாள் அடையாமுனம், ஆதி அந்தம் இலாதவன்,
வெந்த நீறு அணி வேதியன், வெண்தலைக் கரன் மேவிய
கந்தம் ஆர் பொழிற் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


அந்த நாள் - அந்நாள்; இறுதி நாள்;
வெண்தலைக் கரன் - வெள்ளை மண்டையோட்டைக் கையில் ஏந்தும் சிவபெருமான்;
கந்தம் ஆர் பொழில் - வாசம் கமழும் சோலை;



3)
நாளைநாளையென் றெண்ணியே நாள்கள்போய்நம னார்வரும்
வேளைவந்தடை யாமுனம் மென்மலர்க்கணை ஏவிய
வேளைநீறது வாக்கிய விமலன்மாதொரு பங்கினன்
காளைவாகனன் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
நாளை நாளைன்று எண்ணியே நாள்கள் போய் நமனார் வரும்
வேளை வந்து அடையாமுனம் மென் மலர்க்கணை ஏவிய
வேளை நீறது க்கிய விமலன் மாது ஒரு பங்கினன்
காளை வாகனன் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


மென் மலர்க்கணை ஏவிய வேளை நீறது ஆக்கிய - மென்மையான மலரம்பைச் செலுத்திய மன்மதனைச் சாம்பல் ஆக்கிய;



4)
ஆட்டமானதென் றுற்றவர் அழுதுகானிடை இட்டெரி
மூட்டுநாளடை யாமுனம் முளைமதிக்கயல் பாம்பையும்
கூட்டுசென்னியன் வாசமார் குழலிபங்கினன் ஓர்விழி
காட்டுநெற்றியன் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
ஆட்டம் ஆனது என்றுற்றவர் அழுது கானிடை இட்டு எரி
மூட்டு நாள் அடையாமுனம் முளைமதிக்கு அயல் பாம்பையும்
கூட்டு சென்னியன் வாசம் ஆர் குழலி பங்கினன் ஓர் விழி
காட்டு நெற்றியன் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


ஆட்டம் - விளையாட்டு (game); One's turn in a game; சஞ்சாரம் (Moving about);
கான் - சுடுகாடு;
முளைமதி - பிறைச்சந்திரன்;
அயல் - அருகு (adjacent place);
முளைமதிக்கு அயல் பாம்பையும் கூட்டு சென்னியன் - பிறைச்சந்திரனோடு பாம்பையும் சேர்க்கும் தலையினன்;
வாசம் ஆர் குழலி - மணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி;



5)
காதல்மாதொடு மக்களும் கண்கலங்கிடப் பாடைமேல்
போதலென்பதெய் தாமுனம் புரமெரித்தவன் கையினில்
வேதன்வெண்டலை ஏந்திய வேணியன்குழை தாங்கிய
காதன்மேவிய கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
காதல் மாதொடு மக்களும் கண் கலங்கிடப் பாடைமேல்
போதல் என்பது எய்தாமுனம், புரம் எரித்தவன், கையினில்
வேதன் வெண்லை ஏந்திய வேணியன், குழை தாங்கிய
காதன் மேவிய கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


காதல் மாது - அன்புடைய மனைவி;
வேதன் வெண்டலை - வேதன் வெண்லை - பிரமனின் மண்டையோடு;
வேணியன் - சடையினன்;
தாங்குதல் - அணிதல் (To assume, wear, as crown);
குழை தாங்கிய காதன் - காதில் குழை அணிந்தவன்;



6)
நண்ணிவந்தடை தூதுவர் நரகினில்விழுத் தாமுனம்
விண்ணுலாவிய முப்புரம் வேவநக்கவன் நற்பெயர்
எண்ணிலாரருள் செய்பவன் ஈரமாகிய செஞ்சடைக்
கண்ணுதற்பரன் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
நண்ணிவந்து அடை தூதுவர் நரகினில் விழுத்தாமுனம்,
விண்லாவிய முப்புரம் வேவ நக்கவன் நற்பெயர்
எண்ணில் ஆர் அருள் செய்பவன், ஈரமாகிய செஞ்சடைக்
கண்ணுதல் ரன் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


விழுத்துதல் - விழச்செய்தல் (To cause to fall; to throw down);
நண்ணிவந்து அடை தூதுவர் நரகினில் விழுத்தாமுனம் - எம தூதர்கள் நெருங்கி வந்து அடைந்து, நம்மை நரகத்தில் விழச்செய்யும் முன்;
விண்லாவிய முப்புரம் வேவ நக்கவன் - விண்ணில் திரிந்த முப்புரங்களும் சாம்பலாகச் சிரித்தவன்;
நற்பெயர் எண்ணில் ஆரருள் செய்பவன் - நன்மை அளிக்கும் திருநாமத்தை தியானித்தால் மிகவும் அருள்புரிபவன்;
ஈரமாகிய செஞ்சடைக் கண்ணுதல் ரன் - கங்கை தங்கும் செஞ்சடையும் நெற்றிக்கண்ணும் உடைய பரமன்;
கண்டியூர் கருதி உய்ம்மட நெஞ்சமே - அப்பெருமான் உறையும் திருக்கண்டியூரைக் கருதி உய்வாய் பேதை மனமே!



7)
மெய்யைவிட்டுயிர் போனது விரைந்தெடுங்களெ னாமுனம்
செய்யமேனியன் மாற்றிலாச் செம்பொன் ஏறமர் பெற்றியன்
வையம்வானகம் வந்தடி வாழ்த்துமன்னவன் மான்மறிக்
கையன்மேவிய கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
மெய்யை விட்டுயிர் போனது விரைந்து எடுங்கள் எனாமுனம்,
செய்ய மேனியன், மாற்று இலாச் செம்பொன், று அமர் பெற்றியன்,
வையம் வானகம் வந்து அடி வாழ்த்து மன்னவன், மான்மறிக்
கையன் மேவிய கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


மெய் - உடல்;
செய்ய மேனியன் - செம்மேனியன்;
மாற்று இலாச் செம்பொன் - உயர்ந்த பொன் போன்றவன்;
று அமர் பெற்றியன் - இடபத்தை ஊர்தியாக விரும்பும் பெருமை உடையவன்;
வையம் வானகம் - மண்ணுலகமும் வானுலகும்;
மான்மறிக் கையன் - மான்கன்றை ஏந்திய கரத்தினன்;



8)
விண்டதாவியென் றுற்றவர் மிகவருந்துவ தன்முனம்
அண்டன்வெற்பசைத் தான்சிரம் அஞ்சொடஞ்சுநெ ரித்தவன்
அண்டுன்பர கத்தினன் அமுதமாகவி டத்தையுண்
கண்டன்மேவிய கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
விண்டது ஆவி என்று உற்றவர் மிக வருந்துவதன் முனம்,
அண்டன் வெற்பு அசைத்தான் சிரம் அஞ்சொடு அஞ்சு நெரித்தவன்,
அண்டும் அன்பர் அகத்தினன், அமுதமாக விடத்தைண்
கண்டன் மேவிய கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


விள்ளுதல் - நீங்குதல் (To be separated from; to leave);
அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன் - கடவுள்;
விண்டது ஆவின்றுற்றவர் மிக வருந்துவதன் முனம் - "இவர் உயிர் பிரிந்தது" என்று உற்றார் உறவினர் எல்லாம் மிகவும் துக்கம் அடைவதன் முன்னமே;
அண்டன் வெற்பு அசைத்தான் சிரம் அஞ்சொடு அஞ்சும் நெரித்தவன் - சிவனாரின் மலையை அசைத்த இராவணனின் பத்துத்தலைகளையும் நசுக்கியவன்;
அண்டும் அன்பர் அகத்தினன் - சரண்புகுந்த பக்தர்களின் மனத்தில் இருப்பவன்;
அமுதமாக விடத்தை உண் கண்டன் - அமுதமாக விஷத்தை உண்ட நீலகண்டன்;



9)
பிரியமானவர் தாமழப் பிரியுமாவிய தன்முனம்
அரியும்வேதனும் நேடியும் அடியுமுச்சியும் காண்பதற்
ரியசோதியன் ஆதியன் ஆறுபாய்சடை யன்களம்
கரியவன்பதி கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
பிரியமானவர் தாம் அழப் பிரியும் ஆவி; தன் முனம்,
அரியும் வேதனும் நேடியும் அடியும் உச்சியும் காண்பதற்கு
அரிய சோதியன், ஆதியன், ஆறு பாய் சடையன், களம்
கரியவன் பதி கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


களம் - கண்டம் (Throat);
பிரியமானவர் தாம் அழப் பிரியும் ஆவி; அதன் முனம் - சுற்றத்தினர் அழுமாறு உயிர் நீங்கும்; அதற்கு முன்னே;
அரியும் வேதனும் நேடியும் அடியும் உச்சியும் காண்பதற்கு அரிய சோதியன் - திருமாலும் பிரமனும் தேடியும் அடியும் முடியும் காணாத அருஞ்சோதி;
ஆதியன்; ஆறு பாய் சடையன் - முதல்வன்; கங்கை பாயும் சடையன்;
களம் கரியவன் பதி கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே - நீலகண்டன் உறையும் தலம் திருக்கண்டியூரைக் கருதி உய்வாய் பேதை மனமே!



10)
தங்கையாலரன் தாள்தொழாச் சழக்கர்பொய்ம்மொழி கைவிடார்
அங்கயல்விழி மாதினை அன்பினாலிடம் ஏற்றவன்
பொங்கழல்புரை மேனியன் போற்றுவார்வினை தீர்ப்பவன்
கங்கைசூடரன் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
ம் கையால் அரன் தாள் தொழாச்ழக்கர் பொய்ம்மொழி கைவிடார்;
ம் கயல்விழி மாதினை அன்பினால் இடம் ஏற்றவன்,
பொங்கு அழல் புரை மேனியன், போற்றுவார் வினை தீர்ப்பவன்,
கங்கை சூடு அரன் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


சழக்கர் - தீயவர்;
ம் கயல்விழி மாது - அழகிய கயல் போன்ற கண்கள் உடைய பார்வதி;
புரைதல் - ஒத்தல்;
பொங்கு அழல் புரை மேனியன் - தீப்போன்ற செம்மேனியன்;



11)
ஓலமிட்டுற வாரழ உடலைவிட்டுயிர் செல்லுமுன்
கோலவெண்மதி கோளரா குளிர்புனல்முடி வைத்தவன்
ஆலமுண்டவன் அன்பரை அணுகுகாலனை வீட்டிய
காலன்மேவிய கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
ஓலமிட்டுறவார் அ உடலை விட்டுயிர் செல்லுமுன்,
கோல வெண்மதி கோள் அரா குளிர் புனல் முடி வைத்தவன்,
ஆலம் உண்டவன், அன்பரை அணுகு காலனை வீட்டிய
காலன் மேவிய கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


கோல வெண்மதி - அழகிய வெண்பிறைச்சந்திரன்;
கோள் அரா - கொடிய பாம்பு;
குளிர் புனல் - குளிர்ந்த கங்கை;
வீட்டுதல் - கொல்லுதல்; அழித்தல்;
அன்பரை அணுகு காலனை வீட்டிய காலன் - மார்க்கண்டேயரை நெருங்கிய எமனை உதைத்த காலினன்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம். "தானனாதன தானனா தானனாதன தானனா" என்ற சந்தம்.
பாடல்களில் முதற்சீர் 'தனதனாதன' என்றும் வரலாம்.
மற்ற சீர்களில், ஒரோவழி தான என்பது தனன என்று வரலாம்.



2) சம்பந்தர் தேவாரம் - 2.77.1 -
பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.



3) திருக்கண்டியூர்: அட்டவீரட்டானத் தலங்களுள் ஒன்று கண்டியூர். பிரமனின் சிரத்தைக் கொய்த தலம் இது.
4) திருவையாறு உள்ளிட்ட சப்தஸ்தானத் தலங்கள்:
  • திருவையாறு ஐயாறப்பர் கோயில்
  • திருப்பழனம்
  • திருச்சோற்றுத்துறை
  • திருவேதிகுடி
  • திருக்கண்டியூர்
  • திருப்பூந்துருத்தி
  • திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)
5) திருக்கண்டியூர் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=885

-------------- --------------

No comments:

Post a Comment