Saturday, October 3, 2015

02.26 – இலம்பையங்கோட்டூர்

02.26 – இலம்பையங்கோட்டூர்



2011-08-13
இலம்பையங்கோட்டூர்
-----------------------------
(வஞ்சி விருத்தம் - 'விளம் விளம் காய்' - என்ற அமைப்பு);
(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")



1)
கார்மலி மிடறினன் கண்ணுதலான்
பேர்பல உடையவன் பெற்றமொன்றில்
ஊர்பவன் உறைவிடம் ஒண்பொழில்சூழ்
ஏர்மலி இலம்பையங் கோட்டூரே.



கார் மலி மிடறினன் - நீலகண்டன்;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
பெற்றம் - இடபம்;
ஒண் பொழில் சூழ் - சோலைகள் சூழ்ந்த;
ஏர் - அழகு; நன்மை;
'ஏர் = கலப்பை' என்று பொருள்கொண்டு, 'ஏர் மலி இலம்பையங் கோட்டூர்' என்பதை வயல்வளம் மிக்க இலம்பையங் கோட்டூர் என்றும் பொருள்கொள்ளலாம்;



2)
பழிதுயர் பழவினை தீர்த்தருள்வான்
சுழிநதிச் சடையினன் தோற்றமிலான்
அழிவிலன் உறைவிடம் அஞ்சுரும்பார்
எழில்பொழில் இலம்பையங் கோட்டூரே.



பழி துயர் பழவினை - பழியையும் துயரையும் பழைய வினையையும்;
சுழிநதிச் சடையினன் - சுழிகள் உடைய கங்கையைச் சடையில் உடையவன்;
தோற்றம் - ஆரம்பம்;
அம் சுரும்பு ஆர் எழில் பொழில் - அழகிய வண்டினங்கள் ரீங்காரம் செய்யும் அழகிய சோலை சூழ்ந்த;



3)
கரும்பன இன்மொழிக் காரிகையை
விரும்பியொர் பங்குடை மேனியினான்
அரும்பிள மதியணி அண்ணலிடம்
இரும்பொழில் இலம்பையங் கோட்டூரே.



கரும்பு அன இன் மொழிக் காரிகை - கரும்பைப் போன்ற இனிய மொழி பேசும் பார்வதி;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கம்;
அரும்பிள மதி - அரும்பு இள மதி / அரும் பிள மதி;
அரும்பு இள மதி - அரும்புகிற/அரும்பு போன்ற பிறைச்சந்திரன்;
அரும் பிள மதி - அரிய பிளந்த மதி - அரிய பிறைச்சந்திரன்;
(பிளத்தல் - போழ்தல்; பிளமதி - பிளந்த மதி - திங்கள் துண்டம்);
சம்பந்தர் தேவாரம் - 3.4.2 - "வாழினும் சாவினும் ..... போழிள மதிவைத்த புண்ணியனே ...";
இரும் பொழில் - பெரிய சோலை;



4)
சேர்விடம் கண்டிரி தேவருய்யக்
கார்விடம் கரந்தருள் கண்டனவன்
போர்விடை மேல்வரும் புனிதனிடம்
ஏருடை இலம்பையங் கோட்டூரே.



இரிதல் - அஞ்சி ஓடுதல்;
சேர் விடம் கண்டு இரி தேவர் - திரண்ட ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்கள்;
கார் விடம் கரந்து அருள் கண்டன் அவன் - கரிய விஷத்தைக் கண்டத்தில் மறைத்து அருளிய நீலகண்டன்;



5)
கருஞ்சினக் களிற்றுரிப் போர்வையினான்
அருஞ்சரத் தாலெயில் அன்றெரித்தான்
பெருஞ்சுடர் ஆயவன் பேணுமிடம்
இருஞ்சுனை இலம்பையங் கோட்டூரே.



கரும் சினக் களிற்று உரிப் போர்வையினான் - கரிய சினம் மிக்க யானையின் தோலைப் போர்த்தியவன்;
அரும் சரத்தால் எயில் அன்று எரித்தான் - அரிய அம்பு ஒன்றால் முப்புரங்களை முன்பு எரித்தவன்;
பேணுதல் - விரும்புதல்;
இரும் சுனை - பெரிய நீர்நிலைகள்;



6)
பாடிய அடியரின் பல்பிணிகள்
ஓடிட அருளரன் உறையுமிடம்
நீடிய பொழிலிடை நீலவண்டு
கூடிடும் இலம்பையங் கோட்டூரே.



நீடிய பொழில் - நீண்ட சோலைகள்;
நீல வண்டு - கரிய வண்டுகள்;



7)
அளிகிற அன்பருக் கண்மையனாய்க்
களிதரும் கண்ணுதற் கடவுளிடம்
தெளிநறை மிகமகிழ் தேனினமார்
குளிர்பொழில் இலம்பையங் கோட்டூரே.



அளிகிற அன்பருக்கு அண்மையனாய்க் களிதரும் கண்ணுதற் கடவுள் - குழையும் மனத்தை உடைய பக்தர்களுக்கு அருகிருந்து அவர்களுக்கு இன்பம் தருபவன் நெற்றிக்கண் உடைய கடவுள்;
தெளி நறை மிக மகிழ் தேன் இனம் ஆர் குளிர் பொழில் - தெளிந்த தேனை மிக மகிழும் வண்டினங்கள் ரீங்காரம் செய்யும் குளிர்ந்த சோலைகள்;



8)
தசமுகன் ஓவெனத் தானலற
அசைமலை மேல்விரல் அன்றுவைத்த
பசுபதி ஊர்குயில் பண்பயில
இசைமலி இலம்பையங் கோட்டூரே.



தசமுகன் - பத்துத்தலைகளை உடைய இராவணன்;
அசைமலை - அசைந்த மலை/அசைத்த மலை - இராவணன் அசைத்த கயிலைமலை;
பசுபதி ஊர் - பசுபதியாகிய சிவபெருமான் உறையும் தலம்;
பயில்தல் - ஒலித்தல்;
குயில் பண் பயில இசை மலி - குயில்கள் பண்களைப் பாட இசை மிகுந்த;

9)
தென்பரங் குன்றினன் தேடிருவர்
முன்பெரி யாயுயர் மூலனவன்
என்பணி இறையிடம் வண்டினங்கள்
இன்புறும் இலம்பையங் கோட்டூரே.



தென் பரங்குன்றினன் - அழகிய திருப்பரங்குன்றத்தில் உறையும் சிவபெருமான்;
தேடு இருவர் முன்பு எரியாய் உயர் மூலன் - தேடிய பிரமன் திருமால் இவர்கள் முன் சோதியாகி உயர்ந்த முதற்பொருள்;
மூலன் - அநாதிகாரணன்; முதற்பொருள்;
என்பு அணி இறை இடம் - எலும்பை ஆபரணமாகப் பூணும் இறைவன் உறையும் தலம்;



10)
வசைமொழி மதத்தினர் வல்வினைதீர்
திசையினை அறிகிலர் தேடிவந்து
நசையுடை யார்க்கருள் நம்பனிடம்
இசையுடை இலம்பையங் கோட்டூரே.



வல்வினை தீர் திசையினை அறிகிலர் - தங்களுடைய வலிய வினைகளைத் தீர்க்கும் வழியை அறியாதவர்கள்;
நசை - அன்பு;
நம்பன் - சிவன்;
தேடிவந்து நசை உடையார்க்கு அருள் நம்பன் இடம் - அன்பு உடையவர்களைத் தேடிவந்து அவர்களுக்கு அருளும் சிவன் உறையும் தலம்;
இசை - சங்கீதம் (பக்தர்களின் பாடல், வண்டின் ரீங்காரம்); புகழ்;
(சம்பந்தர் தேவாரம் - 2.40.6 -
"எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கேஎன்று அருள்புரியும் எம்பெருமான் .....")



11)
தோத்திரம் செய்பவர் தொல்வினையைத்
தீர்த்தருள் செய்கிற செல்வனிடம்
தேத்தென என்றளி இன்னிசையால்
ஏத்திடும் இலம்பையங் கோட்டூரே.



தொல்வினை - பழவினை;
தேத் தென - வண்டுகளின் ரீங்காரத்தைக் குறிக்கும் சொற்றொடர்;
அளி - வண்டு;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இலம்பையங்கோட்டூர் - (எலுமியன்கோட்டூர்) - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=69

-------------- --------------

No comments:

Post a Comment