Sunday, August 31, 2025

P.444 - அண்ணாமலை (திருவண்ணாமலை) - சுகத்தைத் தருவோனே

2018-08-16

P.444 - அண்ணாமலை (திருவண்ணாமலை)

-------------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


1)

சுகத்தைத் தருவோனே சூலப் படையானே

பகைத்த புர(ம்)மூன்றும் படர்தீப் படுமாறு

நகைத்த முக்கண்ணா நாளும் உனையெண்ணும்

அகத்தை அருளாயே அண்ணா மலையானே.


சுகத்தைத் தருவோனே - சங்கரனே;

சூலப்-படையானே - சூலபாணியே;

பகைத்த புர(ம்)மூன்றும் படர்-தீப் படுமாறு நகைத்த முக்கண்ணா - தேவர்களைப் பகைத்த முப்புரங்களும் படரும் தீயில் புக்கு அழியும்படி சிரித்த முக்கண்ணனே; (படுதல் - அழிதல்);

நாளும் உனை எண்ணும் அகத்தை அருளாயே - என்றும் உன்னை நினைகின்ற நெஞ்சை எனக்கு அருள்வாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


2)

மறியொண் மழுவேந்தீ மழவெள் விடையேறீ

பொறிகொள் அரவூரும் பொன்னார் சடைமீது

வெறிகொள் மலர்சூடீ விரும்பி உனையோதும்

அறிவை அருளாயே அண்ணா மலையானே.


மறி, ஒண் மழு ஏந்தீ - மான்கன்றையும் ஒளி திகழும் மழுவையும் ஏந்தியவனே;

மழ வெள் விடை ஏறீ - இள வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனே;

பொறிகொள் அரவு ஊரும் பொன் ஆர் சடைமீது வெறிகொள் மலர் சூடீ - புள்ளிகள் திகழும் பாம்பு ஊரும் பொற்சடைமேல் மணம் கமழும் மலர்களை அணிந்தவனே; (பொறி - புள்ளி); (ஆர்தல் - ஒத்தல்); (வெறி - மணம்);

விரும்பி உனை ஓதும் அறிவை அருளாயே - அன்போடு உன்னைப் போற்றும் அறிவை எனக்கு அருள்வாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


3)

என்பும் புனைகின்ற இறைவா எருதேறீ

துன்பம் தருகின்ற தொல்லை வினைநீக்கி

இன்பம் தரவல்ல எந்தாய் உனையேத்தும்

அன்பை அருளாயே அண்ணா மலையானே.


என்பும் புனைகின்ற இறைவா - எலும்பையும் அணிகின்ற இறைவனே; (என்பு - எலும்பு); (உம் - 1. இழிவுசிறப்பும்மை; எச்சவும்மை);

எருது-ஏறீ - இடபவாகனனே;

துன்பம் தருகின்ற தொல்லை-வினை நீக்கி - துன்பம் தருகின்ற பழைய வினைகளை அழித்து; (தொல்லை - பழைய);

இன்பம் தர-வல்ல எந்தாய் - இன்பம் தருகின்ற எந்தையே;

உனை ஏத்தும் அன்பை அருளாயே - உன்னைப் போற்றி வணங்கும் அன்பை எனக்கு அருள்வாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


4)

நாலு மறையோதும் நாவா இலையாரும்

வேலும் மழுவாளும் ஏந்தும் பெருமானே

ஏலும் வகையுன்னை ஏத்தும் மதிநல்காய்

ஆலும் மயிலாரும் அண்ணா மலையானே.


நாலு மறை ஓதும் நாவா - நான்கு வேதங்களைத் திருநாவால் பாடியருளியவனே;

இலை ஆரும் வேலும் மழுவாளும் ஏந்தும் பெருமானே - மூவிலைவேலையும் (= திரிசூலத்தையும்), மழுவையும் ஏந்தும் பெருமானே; (ஆர்தல் - நிறைதல்);

ஏலும் வகை உன்னை ஏத்தும் மதி நல்காய் - இயன்ற வகையில் உன்னைத் தொழுகின்ற அறிவை எனக்கு அருள்வாயாக;

ஆலும் மயில் ஆரும் அண்ணாமலையானே - ஆடும் மயில்கள் பொருந்தும் திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே; (ஆலுதல் - ஆடுதல்); (திருவண்ணாமலையில் ரமணாசிரமம் முதலிய இடங்களில் மயில்கள் உலவுவதைக் காணலாம்);


5)

வஞ்சி இடைமாதை வாமம் மகிழ்வோனே

மஞ்சின் நிறமேறும் மணிபோல் முனமுண்ட

நஞ்சை அணிகண்டா நமனை உதைபாதா

அஞ்சல் அருளாயே அண்ணா மலையானே.


வஞ்சி-இடை மாதை வாமம் மகிழ்வோனே - வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையை உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனே; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (வாமம் - இடப்பக்கம்);

மஞ்சின் நிறம் ஏறும் மணி போல், முனம் உண்ட நஞ்சை அணி கண்டா - முன்பு உண்ட விஷத்தை மேகம் போல் நிறம் திகழும் மணியாகக் கண்டத்தில் அணிந்தவனே; (மஞ்சு - மேகம்);

நமனை உதை-பாதா - காலனைத் திருவடியால் உதைத்தவனே;

அஞ்சல் அருளாயே - அஞ்சல் அளித்து என்னைக் காப்பாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


6)

கூறும் அடியார்தம் குறைகள் களைவோனே

சீறும் இளநாகம் சேரும் முடிதன்மேல்

ஆறும் அணிவோனே அடியேற் கருளாயே

ஆறு முகனத்தா அண்ணா மலையானே.


கூறும் அடியார்தம் குறைகள் களைவோனே - புகழ்பாடும் பக்தர்களது குறைகளைத் தீர்ப்பவனே;

சீறும் இள-நாகம் சேரும் முடிதன்மேல் ஆறும் அணிவோனே - சீறும் இளம்-பாம்பு திகழும் சென்னிமேல் கங்கையையும் அணிந்தவனே;

அடியேற்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக;

ஆறுமுகன் அத்தா - முருகனுக்கு அப்பனே; (அத்தன் - அப்பன்);

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


7)

காடும் இடமாகக் கருதி நடமாடி

ஓடும் கலனாக ஊரூர் உழல்வோனே

பாடும் அடியேனைப் பாலித் தருளாயே

ஆடும் மயிலாரும் அண்ணா மலையானே.


காடும் இடமாகக் கருதி நடம் ஆடி - சுடுகாட்டையும் நல்ல அரங்கம் என்று விரும்பித் திருநடம் செய்து;

ஓடும் கலனாக ஊர்ஊர் உழல்வோனே - பிரமனது மண்டையோடும் உண்கலன் என்று கொண்டு பல ஊர்களில் பிச்சைக்குத் திரிபவனே;

பாடும் அடியேனைப் பாலித்து அருளாயே - உன் புகழைப் பாடும் என்னைக் காத்து அருள்வாயாக;

ஆடும் மயில் ஆரும் அண்ணாமலையானே - ஆடும் மயில்கள் பொருந்தும் திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே; (ஆர்தல் - பொருந்துதல்); (திருவண்ணாமலையில் ரமணாசிரமம் முதலிய இடங்களில் மயில்கள் உலவுவதைக் காணலாம்);


8)

மலையைப் பெயர்மூடன் வாட விரல்வைத்தாய்

சிலையை வளைவித்துச் சேரார் புரமெய்தாய்

தலைமேல் பிறையானே தமியேற் கருளாயே

அலைபோல் அடியார்சேர் அண்ணா மலையானே;


மலையைப் பெயர் மூடன் வாட விரல் வைத்தாய் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவற்ற இராவணன் வாடும்படி திருவடி-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனே;

சிலையை வளைவித்துச் சேரார் புரம் எய்தாய் - மேருமலையை வில்லாக வளைத்து, அந்த வில்லை வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவனே; (சிலை - மலை; வில்); (சேரார் - பகைவர்); (அப்பர் தேவாரம் - 6.47.4 - "திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து");

தலைமேல் பிறையானே - சந்திரசேகரனே;

தமியேற்கு அருளாயே - தனித்து வாடும் அடியேனுக்கு அருள்வாயாக;

அலைபோல் அடியார் சேர் அண்ணாமலையானே - பக்தர்கள் கடல்போல் திரள்கின்ற திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே;


9)

மயலார் அயன்மாலார் வாட வளர்சோதீ

புயல்போல் நிறமாரும் பொருவில் மணிகண்டா

மயிலார் உமைகேள்வா வலிய வினைதீராய்

அயில்மூ விலைவேலா அண்ணா மலையானே;


மயல் ஆர் அயன் மாலார் வாட வளர் சோதீ - ஆணவம் மிகுந்த பிரமனும் திருமாலும் (அடிமுடி தேடிக் காணாராய்) வாடும்படி எல்லையின்றி வளர்ந்த ஜோதியே; (ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்);

புயல் போல் நிறம் ஆரும் பொருவில் மணிகண்டா - மேகம் போன்ற நிறம் பொருந்திய ஒப்பற்ற நீலமணி திகழும் கண்டத்தை உடையவனே; (பொருவில் - பொரு இல் - ஒப்பு இல்லாத);

மயில் ஆர் உமை கேள்வா - மயில் போன்ற சாயலை உடைய உமைக்குக் கணவனே; (ஆர்தல் - ஒத்தல்);

வலிய வினை தீராய் - என் வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக;

அயில்-மூவிலைவேலா - கூர்மையான திரிசூலத்தை ஏந்தியவனே;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


10)

பண்டை நெறிதன்னைப் பழித்துப் பலபொய்சொல்

மிண்டர் தமைநீங்கும் விரும்பு வரமெல்லாம்

தொண்டர்க் கருள்செய்யும் துணைவன் சுடுநீற்றன்

அண்டர் தொழுதேத்தும் அண்ணா மலையானே;


பண்டை நெறிதன்னைப் பழித்துப் பல பொய் சொல் மிண்டர்தமை நீங்கும் - தொன்மையான வேதநெறியைப் பழித்துத் தினமும் பல பொய்களைச் சொல்லும் கல்நெஞ்சர்களை நீங்குங்கள்; (மிண்டர் - கல்நெஞ்சர்);

விரும்பு வரம்-எல்லாம் தொண்டர்க்கு அருள்செய்யும் துணைவன் - வேண்டிய வரங்களையெல்லாம் பக்தர்களுக்குத் தந்தருளும் துணைவன்;

சுடு-நீற்றன் - வெந்த வெண்ணீற்றைப் பூசியவன்;

அண்டர் தொழுது ஏத்தும் அண்ணாமலையானே - தேவர்களால் வழிபடப்பெறும் திருவண்ணாமலை ஈசன்;


11)

பூதி புனைமேனிப் பூத கணநாதன்

ஓதித் தொழுவார்வான் உறையத் தருவள்ளல்

நீதி வடிவானான் நெய்பால் தயிராடி

ஆதி அழிவில்லா அண்ணா மலையானே.


பூதி புனை-மேனிப் பூதகணநாதன் - திருநீற்றைத் திருமேனிமேல் பூசிய, பூதகணத்தலைவன்; (பூதி - திருநீறு);

ஓதித் தொழுவார் வான் உறையத் தரு-வள்ளல் - துதித்து வணங்கும் பக்தர்களுக்குச் சிவலோக வாழ்வைத் தரும் வள்ளல்;

நீதி வடிவு ஆனான் - அறவடிவினன்;

நெய் பால் தயிர் ஆடி - நெய், பால், தயிர் இவற்றால் அபிஷேகம் பெறுபவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.61.2 - "பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்");

ஆதி அழிவு இல்லா அண்ணாமலையானே - ஆதியும் அந்தமும் இல்லாத இல்லாத திருவண்ணாமலை ஈசன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment