Sunday, August 31, 2025

P.441 - அறையணிநல்லூர் - கண்ணமர் நுதல்காட்டி

2018-07-21

P.441 - அறையணிநல்லூர்

(அரகண்டநல்லூர். இத்தலம் திருக்கோவலூர் அருகுள்ளது)

-------------------------------

(கலிவிருத்தம் - தானன தனதான தானன தனதான)

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி")


1)

கண்ணமர் நுதல்காட்டி கானமர் பரமேட்டி

பெண்ணையின் வடபாலோர் பெண்ணை இடங்காட்டும்

அண்ணலின் இடமான அறையணி நல்லூரை

நண்ணிய அடியாரை நலிவினை நணுகாவே.


கண் அமர் நுதல் காட்டி - நெற்றிக்கண்ணன்; (காட்டி - காட்டுபவன்);

கான் அமர் பரமேட்டி - சுடுகாட்டை விரும்புகின்ற பரமன்; (பரமேட்டி - பரமேஷ்டி - பரம்பொருள்);

பெண்ணையின் வடபால் ஓர் பெண்ணை இடம் காட்டும் - பெண்ணையாற்றின் வடக்கே, உமையைத் தன் திருமேனியின் இடப்பாகமாகக் காட்டுகின்ற;

அண்ணலின் இடம் ஆன அறையணிநல்லூரை - சிவபெருமான் உறையும் தலமான அறையணிநல்லூரை;

நண்ணிய அடியாரை நலி-வினை நணுகாவே - அடைந்த அடியவர்களைத் துன்பத்தைத் தரும் தீவினை அணுகமாட்டா; (நலிதல் / நலித்தல் - வருத்துதல்); (நலிவினை - நலிக்கின்ற வினை);


2)

கறையணி மிடறானைக் கமழ்சடை அதன்மீது

பிறையணி பெருமானைப் பெண்ணையின் வடபால்தென்

அறையணி நல்லூரில் அடிகளின் அடிவாழ்த்தி

நறையணி தமிழ்பாட நலிவினை நணுகாவே.


கறை அணி மிடறானைக் - நீலகண்டனை; (மிடறு - கண்டம்);

கமழ்-சடை அதன்மீது பிறை அணி பெருமானைப் - மணம் கமழும் சடைமேல் சந்திரனை அணிந்த பெருமானை;

பெண்ணையின் வடபால் தென் அறையணிநல்லூரில் அடிகளின் அடி வாழ்த்தி - பெண்ணையாற்றின் வடகரையில் இருக்கும் அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற கடவுளின் திருவடியைப் போற்றி; (தென் - அழகிய);

நறை அணி தமிழ் பாட நலி-வினை நணுகாவே - மணம் கமழும் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபாடு செய்தால், துன்பத்தைத் தரும் தீவினைகள் அணுகமாட்டா; (நறை - தேன்; வாசனை); (நலிதல் / நலித்தல் - வருத்துதல்);


3)

மதிலவை விழவெய்த மாமலை வில்லானை

முதலிடை முடிவான மூர்த்தியை வரிவேங்கை

அதளுடை உடையானை அறையணி நல்லூர்க்கண்

ணுதலனை மறவாரை நோய்வினை நலியாவே.


மதில்அவை விழ எய்த மாமலை வில்லானை - முப்புரங்களும் அழியும்படி ஒரு கணை எய்த, மேருமலையை வில்லாக ஏந்தியவனை;

முதல் இடை முடிவு ஆன மூர்த்தியை - முதல், நடு, இறுதி ஆன இறைவனை;

வரி-வேங்கை அதள்-உடை உடையானை - கோடுகள் திகழும் புலித்தோலை உடையாக உடையவனை; (அதள் - தோல்);

அறையணிநல்லூர்க் கண்ணுதலனை மறவாரை நோய் வினை நலியாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற நெற்றிக்கண்ணனை மறவாமல் வழிபடும் அடியவர்களை நோய்களும் வினைகளும் வருத்தா; (நுதல் - நெற்றி);


4)

ஒப்பனை எனநீறும் உரகமும் அணிவானை

வைப்பனை விடமுண்ட மணிமிட றுடையானை

அப்பணி சடையானை அறையணி நல்லூரில்

அப்பனை அடைவாரை அருவினை அடையாவே.


ஒப்பனை என நீறும் உரகமும் அணிவானை - அலங்காரம் என்று திருநீற்றையும் பாம்பையும் புனைந்தவனை;

வைப்பனை - சேமநிதியாக உள்ளவன்; (வைப்பன் - சேமநிதி போன்றவன்);

விடம் உண்ட மணிமிடறு உடையானை - நஞ்சை உண்ட நீலகண்டனை;

அப்பு அணி சடையானை - சடையில் கங்கையை அணிந்தவனை; (அப்பு - நீர்);

அறையணிநல்லூரில் அப்பனை அடைவாரை அருவினை அடையாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற தந்தையைச் சரணடைந்த அடியவர்களை வினைகள் அடையா;


5)

பொங்கிள அரவோடு போழ்மதி புனைவானை

மங்கையொர் புடையானை மால்விடை உடையானை

அங்கையில் மழுவானை அறையணி நல்லூரில்

தங்கிய பெருமானைச் சார்ந்தவர் மகிழ்வாரே.


பொங்கு இள-அரவோடு போழ்-மதி புனைவானை - சீறும் இளநாகத்தையும் திங்களின் துண்டத்தையும் அணிந்தவனை; (போழ் - துண்டம்);

மங்கையொர் புடையானை - உமையை ஒரு பக்கத்தில் மகிழ்ந்தவனை;

மால்விடை உடையானை - பெரிய எருதை வாகனமாக உடையவனை; (மால் - பெருமை);

அங்கையில் மழுவானை - கையில் மழுவை ஏந்தியவனை;

அறையணிநல்லூரில் தங்கிய பெருமானைச் சார்ந்தவர் மகிழ்வாரே - அறையணிநல்லூரில் நீங்காமல் உறைகின்ற பெருமானைச் சரணடைந்த அடியவர்கள் இன்புறுவார்கள்;


6)

வெந்துயர் தருகூற்றை விழவுதை கழலானைச்

செந்தழல் உருவானைச் சேவமர் பெருமானை

ஐந்தொழில் உடையானை அறையணி நல்லூரில்

எந்தையை அடைவாரை இருவினை அடையாவே.


வெந்துயர் தரு கூற்றை விழ உதை கழலானைச் - கொடிய துன்பத்தைத் தரவல்ல நமனை விழும்படி திருவடியால் உதைத்தவனை;

செந்தழல் உருவானைச் - செந்தீப் போன்ற செம்மேனி உடையவனை;

சே அமர் பெருமானை - இடபவாகனம் உடைய பெருமானை; (சே - எருது);

ஐந்தொழில் உடையானை - பஞ்சகிருத்தியம் செய்பவனை; (பஞ்சகிருத்தியம் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல்);

அறையணிநல்லூரில் எந்தையை அடைவாரை இருவினை அடையாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற எம் தந்தையைச் சரணடைந்த அடியவர்களைக் கொடுவினை அடையமாட்டா;


7)

நெய்யணி திரிசூலம் நிழல்மழு உடையானை

மெய்யனை மிளிர்கொன்றை வெண்மதி நதிசூடும்

ஐயனை அழகாரும் அறையணி நல்லூரிற்

செய்யனை அடைவாரைச் செய்வினை சேராவே.


நெய் அணி திரிசூலம், நிழல் மழு உடையானை - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தையும் ஒளி திகழும் மழுவாயுதத்தையும் ஏந்தியவனை; (ஆயுதங்களுக்கு நெய் பூசுவது மரபு);

மெய்யனை - மெய்ப்பொருளாக உள்ளவனை;

மிளிர் கொன்றை வெண்மதி நதி சூடும் ஐயனை - விளங்கும் கொன்றைமலரையும், வெண்பிறையையும் கங்கையையும் அணிந்த தலைவனை;

அழகு ஆரும் அறையணிநல்லூரில் செய்யனை அடைவாரைச் செய்வினை சேராவே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற செம்மேனிப் பெருமானைச் சரணடைந்த அடியவர்களை முன்செய்த வினைகள் சேரமாட்டா; (செய்யன் - செம்மேனியன்);


8)

வரைபெயர் மதிகேடன் வலிகெட விரலூன்றிச்

சுர(ம்)மலி துதிகேட்டு வரமருள் பெருமானை

அரையினில் அரவார்த்த அறையணி நல்லூரெம்

அரையனை அடைவாரை அருவினை அடையாவே.


வரை பெயர் மதிகேடன் வலி கெட விரல் ஊன்றிச் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவீனனான இராவணனது வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி; (வரை - மலை); (வலி - வலிமை);

சுரம் மலி துதி கேட்டு வரம் அருள் பெருமானை - பிறகு, அவன் ஏழு சுரங்கள் பொருந்திய இன்னிசையால் துதிகள் பாடக் கேட்டு இரங்கி, அவனுக்கு வரம் அருளிய பெருமானை;

அரையினில் அரவு ஆர்த்த - அரையில் அரைநாணாகப் பாம்பைக் கட்டிய; (ஆர்த்தல் - கட்டுதல்);

அறையணிநல்லூர் எம் அரையனை அடைவாரை அருவினை அடையாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற எம் அரசனைச் சரணடைந்த அடியவர்களை வினைகள் நெருங்கமாட்டா; (அரையன் - அரசன்);


9)

கத்திடு கடல்மேலான் கடிமலர் அதன்மேலான்

எய்த்தடி தொழுதேத்த எரியென உயர்கோனை

அத்தனை அழகாரும் அறையணி நல்லூரெம்

சித்தனை வழிபாடு செய்பவர் வினைவீடே.


கத்திடு கடல்மேலான், கடிமலர் அதன்மேலான் - ஒலிக்கின்ற கடல்மேல் இருக்கும் திருமாலும், வாசத்தாமரையின்மேல் இருக்கும் பிரமனும்;

எய்த்து அடி தொழுது ஏத்த எரி என உயர் கோனை - அடிமுடி தேடிக் காணாது வருந்தித் திருவடியை வழிபடுமாறு ஜோதியாக உயர்ந்த தலைவனை; (எரி - தீ);

அத்தனை - தந்தையை;

அழகு ஆரும் அறையணிநல்லூர் எம் சித்தனை வழிபாடு செய்பவர் வினை வீடே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்றவனும் எம் சித்தத்தில் இருப்பவனுமான சிவபெருமானை வழிபடும் அடியவர்களது வினைகள் அழியும்;


10)

நீற்றினை அணியாத நீசர்கள் உரைசெய்யும்

கூற்றினை மதியேன்மின் குரவணி சடைதன்னில்

ஆற்றனை அழகாரும் அறையணி நல்லூரில்

ஏற்றனை இசைபாடி ஏத்திட வருமின்பே.


நீற்றினை அணியாத நீசர்கள் உரைசெய்யும் கூற்றினை மதியேன்மின் - திருநீற்றைப் பூசாத கீழோர்கள் சொல்கின்ற வார்த்தைகளை நீங்கள் மதிக்கவேண்டா;

குரவு அணி சடைதன்னில் ஆற்றனை - குராமலரை அணிந்த சடையில் கங்கையை உடையவனை;

அழகு ஆரும் அறையணிநல்லூரில் ஏற்றனை இசை பாடி ஏத்திட வரும் இன்பே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற இடபவாகனனை இசையோடு பாடிப் போற்றி வழிபட்டால் இன்பமே வரும்;


11)

சுறவணி கொடிவேளைச் சுட்டெரி நுதலானை

மறைசொலும் ஒருதேவை மன்னிய புகழானை

அறவனை அழகாரும் அறையணி நல்லூரில்

இறைவனை மறவாமல் எண்ணிட வருமின்பே.


சுறவு அணி கொடி வேளைச் சுட்டு எரி நுதலானை - சுறவக்கொடியை உடைய மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணனை; (சுறவு - சுறா); (சம்பந்தர் தேவாரம் - 2.23.4 - "சுறவக் கொடிகொண்டவன் நீறதுவாய் உற நெற்றிவிழித்த எம் உத்தமனே");

மறை சொலும் ஒரு தேவை - வேதங்கள்-எல்லாம் சொல்கின்ற ஒப்பற்ற தேவனை; வேதங்களைப் பாடியருளிய தேவனை; (சொலும் - சொல்லும்); (தே / தேவு - தெய்வம்);

மன்னிய புகழானை - நிலைபெற்ற புகழை உடையவனை;

அறவனை - அறத்தின் வடிவம் ஆனவனை;

அழகு ஆரும் அறையணிநல்லூரில் இறைவனை மறவாமல் எண்ணிட வரும் இன்பே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற கடவுளை மறவாமல் எண்ணி வழிபட்டால் இன்பமே வரும்;


பிற்குறிப்பு - யாப்புக்குறிப்பு:

கலிவிருத்தம் - தானன தனதான தானன தனதான - சந்தம்; இதனை "விளம் காய் விளம் காய்" என்ற வாய்பாடு போலவும் கருதலாம்;

  • தானன - என்ற இடங்கள் தனதன என்றும் வரக்கூடும்;

  • தனதான - என்ற இடங்கள் தானதன, தானான, என்றெல்லாம் வரக்கூடும்;

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி")


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment