2018-07-16
N.051 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2018
----------------
(வெண்பா)
ஆறுதனில் இட்டுப்பின் ஆரூர்க் குளத்தெடுக்கும்
வீறுடையார் தோழனென வேணியனாம் - பேறுடையார்
சங்கிலிக்கும் கேள்வனார் தாளிணை போற்றிசெய
நங்கலிதீர்ந் தெய்தும் நலம்.
ஆறுதனில் இட்டுப் பின் ஆரூர்க் குளத்து எடுக்கும் வீறு உடையார் - திருமுதுகுன்றத்தில் ஆற்றில் பொன்னை இட்டுப் பிறகு திருவாரூரில் கமலாலயக் குளத்தில் அப்பொன்னை எடுக்கின்ற பெருமை உடையவர்; (வீறு - தனிச்சிறப்பு);
தோழன் என வேணியன் ஆம் பேறு உடையார் - சடையை உடைய சிவபெருமானைத் தோழனாகப் பெறும் பேற்றை உடையவர்; (வேணி - சடை);
சங்கிலிக்கும் கேள்வனார் - (முன்னர்த் திருவாரூரிற் பரவையை மணந்து பின்னர்த் திருவொற்றியூரில்) சங்கிலியையும் மணந்தவர்; (கேள்வன் - கணவன்);
தாள்-இணை போற்றிசெய நம் கலி தீர்ந்து எய்தும் நலம் - அத்தகைய சுந்தரமூர்த்தி நாயனாரது இரு-திருவடிகளை வணங்கினால் நம் துன்பங்கள் தீர்ந்து நன்மை வந்து சேரும்.
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment