Sunday, August 31, 2025

P.445 - ஆமூர் (திருவாமூர்) - அஞ்செழுத்தை ஓதிநிதம்

2018-08-22

P.445 - ஆமூர் (திருவாமூர்)

-------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

அஞ்செழுத்தை ஓதிநிதம் அடிபணியும் அன்புடையார்

அஞ்சுவினை அவைநீக்கி ஆனந்தம் தருமீசன்

செஞ்சொலுரை வாகீசர் சிந்தைதனை நீங்காதான்

அஞ்சிறைவண் டார்பொழில்சூழ் ஆமூரெம் பசுபதியே.


அஞ்செழுத்தை ஓதி நிதம் அடிபணியும் அன்பு உடையார் - திருவைந்தெழுத்தைத் தினமும் ஓதி வழிபடும் பக்தர்கள்;

அஞ்சு-வினை அவை நீக்கி ஆனந்தம் தரும் ஈசன் - அவர்கள் அஞ்சுகின்ற வினைகளை நீக்கி அவர்களுக்கு இன்பத்தை நல்கும் ஈசன்;

செஞ்சொல் உரை வாகீசர் சிந்தைதனை நீங்காதான் - தேவாரம் பாடிய திருநாவுக்கரசரது நெஞ்சில் நீங்காமல் உறைந்தவன்; (* திருவாமூர் - திருநாவுக்கரசர் அவதரித்த தலம்); (* பசுபதீஸ்வரர் - இத்தலத்து ஈசன் திருநாமம்);

ஞ்சிறை வண்டு ஆர்-பொழில் சூழ் ஆமூர் எம் பசுபதியே - அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாமூரில் எழுந்தருளியுள்ள எம் பசுபதி; (அம் - அழகு); (சிறை - இறகு);


2)

தணிமனத்துத் தவசீலர் தாள்பரவ நின்றபரன்

மணிமிளிரும் கண்டத்தன் வானவரும் தானவரும்

பணியுமிறை பாய்புனலைப் படர்சடையில் தாங்குமரன்

அணிபொழிலில் வண்டறையும் ஆமூரெம் பசுபதியே.


தணி-மனத்துத் தவசீலர் தாள் பரவ நின்ற பரன் - அடங்கிய மனத்தை உடைய தவசீலர்கள் தன் திருவடியைத் துதிக்க நின்ற பரமன்;

மணி மிளிரும் கண்டத்தன் - நீலகண்டன்;

வானவரும் தானவரும் பணியும் இறை - தேவரும் அசுரரும் வழிபடும் இறைவன்; (தானவர் - அசுரர்);

பாய்-புனலைப் படர்-சடையில் தாங்கும் அமரன் - வானிலிருந்து பாய்ந்த கங்கையைப் படர்ந்த சடையில் தாங்கிய ஹரன்;

அணி பொழிலில் வண்டு அறையும் ஆமூர் எம் பசுபதியே - அழகிய சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற திருவாமூரில் எழுந்தருளியுள்ள எம் பசுபதி;


3)

அழலாரும் ஆகத்தில் ஆயிழையோர் பாகத்தன்

நிழலாரும் வெண்மழுவன் நிலவேறும் சடைதன்னுள்

சுழலாரும் கங்கையினான் துடியேந்தும் அங்கையினான்

அழகாரும் பொழில்சூழ்ந்த ஆமூரெம் பசுபதியே.


அழல் ஆரும் ஆகத்தில் ஆயிழை ஓர் பாகத்தன் - தீப் போன்ற செம்மேனியில் உமையை ஒரு பாகமாக உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்); (ஆகம் - மேனி); (ஆயிழை - பெண்);

நிழல் ஆரும் வெண்மழுவன் - ஒளி திகழும் வெண்மழுவை ஏந்தியவன்; (நிழல் - ஒளி); (ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்);

நிலவு ஏறும் சடைதன்னுள் சுழல் ஆரும் கங்கையினான் - சந்திரன் ஏறிய சடையுள் சுழல் மிக்க கங்கையை உடையவன்; (நிலவு - நிலா - சந்திரன்);

துடி ஏந்தும் அங்கையினான் - கையில் உடுக்கையை ஏந்தியவன்; (துடி - உடுக்கை)

அழகு ஆரும் பொழில் சூழ்ந்த ஆமூர் எம் பசுபதியே - அழகிய சோலை சூழ்ந்த திருவாமூரில் எழுந்தருளியுள்ள எம் பசுபதி;


4)

பாலனுயிர் கொல்வதற்குப் பாசத்தோ டோடிவந்த

காலனுயிர் வீடவுதை கண்ணுதலான் மண்முதலாம்

ஞாலமெலாம் படைத்தருளும் நாதன்முன் முனிநால்வர்க்(கு)

ஆலதன்கீழ் அறஞ்சொன்ன ஆமூரெம் பசுபதியே.


பாலன் உயிர் கொல்வதற்குப் பாசத்தோடு ஓடிவந்த - மார்க்கண்டேயரது உயிரைக் கொல்வதற்காகப் பாசத்தை ஏந்தி விரைந்து அடைந்த;

காலன் உயிர் வீட உதை கண்ணுதலான் - கூற்றுவனது உயிரே நீங்குமாறு உதைத்தருளிய நெற்றிக்கண்ணன்;

மண் முதலாம் ஞாலம் எலாம் படைத்தருளும் நாதன் - பூமி முதலிய உலகங்களையெல்லாம் படைத்த தலைவன்; (ஞாலம் - உலகம்);

முன் முனி நால்வர்க்கு ஆல் அதன்கீழ் அறம் சொன்ன ஆமூர் எம் பசுபதியே - முன்னர்ச் சனகாதியர்களான நான்கு முனிவர்களுக்குக் கல்லால-மரத்தின்கீழ் அறம் உரைத்த, ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி; (ஆல் - ஆலமரம்);


5)

கானஞ்செய் வண்டமரும் கருங்குழலி ஒருபங்கன்

மானஞ்சு வன்புலியின் வரியதளை வீக்கியவன்

வானஞ்சு வன்னஞ்சை மகிழ்ந்துண்ட மணிகண்டன்

ஆனஞ்சும் ஆடியவன் ஆமூரெம் பசுபதியே.


கானம் செய் வண்டு அமரும் கருங்குழலி ஒரு பங்கன் - இசைபாடும் வண்டுகள் விரும்பும் கரிய கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (கானம் - இசைப்பாட்டு); (அமர்தல் - விரும்புதல்);

மான் அஞ்சு வன்-புலியின் வரி அதளை வீக்கியவன் - மானுக்கு அச்சம் தரும் கொடிய புலியின் வரித்தோலை ஆடையாகக் கட்டியவன்; (அதள் - தோல்); (வீக்குதல் - கட்டுதல்);

வான் அஞ்சு வன்-நஞ்சை மகிழ்ந்து உண்ட மணிகண்டன் - தேவர்கள் அஞ்சிய கொடிய விடத்தை விரும்பி உண்ட நீலகண்டன்;

ஞ்சும் ஆடியவன் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்; (ஆனஞ்சு - பஞ்சகவ்வியம்);

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


6)

ஏறணிந்த வெல்கொடியான் எழில்திகழ இடுகாட்டு

நீறணிந்த மேனியிலே நெடுவேல்போற் கண்ணியையோர்

கூறணிந்த கொள்கையினான் கொன்றைவன்னி கூவிளத்தோ(டு)

ஆறணிந்த செஞ்சடையான் ஆமூரெம் பசுபதியே.


ஏறு அணிந்த வெல்கொடியான் - வெற்றியுடைய இடபக்கொடி உடையவன்;

எழில் திகழ இடுகாட்டு நீறு அணிந்த மேனியிலே நெடுவேல் போல் கண்ணியை ஓர் கூறு அணிந்த கொள்கையினான் - அழகுறச் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய திருமேனியில் நீண்ட வேல் போன்ற கண்களையுடைய உமையை ஒரு கூறாகக் கொண்டவன்;

கொன்றை வன்னி கூவிளத்தோடு ஆறு அணிந்த செஞ்சடையான் - கொன்றைமலர், வன்னியிலை, வில்வம், கங்கை இவற்றையெல்லாம் சிவந்த சடையில் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


7)

வாடல்வெண் தலையொன்றில் மடவார்கள் இடுமூணை

நாடல்செய் மாதேவன் நக்கெயில்கள் மூன்றெரித்தான்

பாடல்கள் பாரிடங்கள் பலபாட நள்ளிருளில்

ஆடல்செய் பாதத்தன் ஆமூரெம் பசுபதியே.


வாடல் வெண்-தலை ஒன்றில் மடவார்கள் இடும் ஊணை நாடல்-செய் மாதேவன் - வற்றிய மண்டையோட்டில் பெண்கள் இடும் பிச்சையை விரும்புகின்ற மகாதேவன்; (வாடல் - வாடுதல்); (ஊண் - உணவு - பிச்சை); (நாடல் - நாடுதல்);

நக்கு எயில்கள் மூன்று எரித்தான் - சிரித்து முப்புரங்களை எரித்தவன்; (நகுதல் - சிரித்தல்);

பாடல்கள் பாரிடங்கள் பல பாட நள்ளிருளில் ஆடல்செய் பாதத்தன் - பூதகணங்கள் பாடல்கள் பாட, நள்ளிரவில் திருநடம் செய்பவன்; (பாரிடம் - பூதம்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.3 - "பூதம் பாடப் புறங்காட் டிடையாடி");

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


8)

தொட்டுமலை தூக்கியவன் தோள்நாலஞ் சடர்பாதன்

எட்டுருவம் உடையீசன் இகழ்தக்கன் தன்தலையை

வெட்டியவன் மலர்வாளி வேள்தன்னைப் பொடிசெய்தான்

அட்டபுயம் உடையண்ணல் ஆமூரெம் பசுபதியே.


தொட்டு மலை தூக்கியவன் தோள் நாலஞ்சு அடர்-பாதன் - கயிலைமலையைப் பற்றி பெயர்த்துத் தூக்கி எறிய முயன்ற இராவணனது இருபது புஜங்களையும் நசுக்கிய திருப்பாதன்; ( அடர்த்தல் - நசுக்குதல்);

எட்டு-உருவம் உடையீசன் - அட்டமூர்த்தம் உடைய ஈசன்;

இகழ்-தக்கன்-தன் தலையை வெட்டியவன் - இகழ்ந்த தக்கனது தலையை வெட்டியவன்;

மலர்-வாளி வேள்தன்னைப் பொடிசெய்தான் - மலரம்புகளை உடைய மன்மதனைச் சாம்பலாக்கியவன்; (வாளி - அம்பு); (வேள் - காமன்);

அட்ட-புயமுடை அண்ணல் - எட்டுப் புஜங்களை உடைய பெருமான்;

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


9)

முன்பிருவர் நேடவெழு முடிவில்லாப் பரஞ்சோதி

தென்புகலி மகனார்க்குத் திருமுலைப்பால் தந்தாளைத்

தன்புடையில் வைத்துகந்தான் தமிழ்பாடித் தாள்பணியும்

அன்புடையார்க் கன்புடையான் ஆமூரெம் பசுபதியே.


முன்பு இருவர் நேட எழு முடிவு இல்லாப் பரஞ்சோதி - முன்னர்ப் பிரமனும் திருமாலும் தேடும்படி உயர்ந்த எல்லையற்ற மேலான ஒளி-வடிவினன்;

தென்-புகலி மகனார்க்குத் திருமுலைப்பால் தந்தாளைத் தன் புடையில் வைத்து உகந்தான் - அழகிய சீகாழியில் அவதரித்த திருமகனாரான ஞானசம்பந்தருக்குத் திருமுலைப்பால் தந்த உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பக்கத்தில் (ஒரு கூறாக) வைத்தவன்; (தென் - அழகிய); (புகலி - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று); (புடை - பக்கம்);

தமிழ் பாடித் தாள் பணியும் அன்பு உடையார்க்கு அன்பு உடையான் - தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடி வழிபடும் அன்பர்களுக்கு அன்பன்;

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


10)

கரவுமலி நெஞ்சத்தர் கைதவத்தால் ஆள்சேர்க்க

இரவுபகல் பொய்யுரைப்பர் இவர்குழியில் வீழாதே

விரவியடி பரவியவர் வேண்டுவரம் நல்குபவன்

அரவவரை நாணுடையான் ஆமூரெம் பசுபதியே.


கரவு மலி நெஞ்சத்தர் கைதவத்தால் ஆள் சேர்க்க இரவுபகல் பொய் உரைப்பர் - பொய்ம்மை மிக்க நெஞ்சத்தை உடையவர்கள் வஞ்சனையால் கூட்டம் சேர்ப்பதற்காக இராப்பகலாகப் பொய்கள் சொல்வர்; (கரவு - பொய்; வஞ்சனை); (கைதவம் - கபடம்);

இவர் குழியில் வீழாதே - இவர்களது அவக்குழியில் விழுந்துவிடாதே / விழுந்துவிடாமல்;

விரவி அடி பரவியவர் வேண்டு வரம் நல்குபவன் - தன்னை அடைந்து போற்றி வழிபடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அளிப்பவன்; (விரவுதல் - அடைதல்);

அரவ-அரைநாண் உடையான் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


11)

கொடியிடையாள் ஒருகூறன் கூரியமூ விலைவேலன்

முடிமிசைவெண் பிறையணிந்த முக்கண்ணன் நால்வேதன்

கடிமலர்கள் பலதூவிக் காதலராய்த் தமிழ்பாடி

அடிதொழுதார் வினைதீர்ப்பான் ஆமூரெம் பசுபதியே.


கொடியிடையாள் ஒரு கூறன் - கொடி போன்ற சிற்றிடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;

கூரிய மூவிலை வேலன் - கூர்மையான, இலை போன்ற மூன்று நுனிகளை உடைய திரிசூலத்தை ஏந்தியவன்;

முடிமிசை வெண்பிறை அணிந்த முக்கண்ணன் - சென்னிமேல் வெண்திங்களை அணிந்த நெற்றிக்கண்ணன்;

நால்வேதன் - நால்வேதங்களைப் பாடியருளியவன்; நால்வேதப் பொருள் ஆனவன்;

கடிமலர்கள் பல தூவிக் காதலராய்த் தமிழ் பாடி அடிதொழுதார் வினை தீர்ப்பான் - வாசமலர்கள் பல தூவி, அன்போடு தேவாரம் திருவாசகம் பாடி வழிபடும் பக்தர்களது தீவினையைத் தீர்ப்பவன்; (கடி - வாசனை);

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.444 - அண்ணாமலை (திருவண்ணாமலை) - சுகத்தைத் தருவோனே

2018-08-16

P.444 - அண்ணாமலை (திருவண்ணாமலை)

-------------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


1)

சுகத்தைத் தருவோனே சூலப் படையானே

பகைத்த புர(ம்)மூன்றும் படர்தீப் படுமாறு

நகைத்த முக்கண்ணா நாளும் உனையெண்ணும்

அகத்தை அருளாயே அண்ணா மலையானே.


சுகத்தைத் தருவோனே - சங்கரனே;

சூலப்-படையானே - சூலபாணியே;

பகைத்த புர(ம்)மூன்றும் படர்-தீப் படுமாறு நகைத்த முக்கண்ணா - தேவர்களைப் பகைத்த முப்புரங்களும் படரும் தீயில் புக்கு அழியும்படி சிரித்த முக்கண்ணனே; (படுதல் - அழிதல்);

நாளும் உனை எண்ணும் அகத்தை அருளாயே - என்றும் உன்னை நினைகின்ற நெஞ்சை எனக்கு அருள்வாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


2)

மறியொண் மழுவேந்தீ மழவெள் விடையேறீ

பொறிகொள் அரவூரும் பொன்னார் சடைமீது

வெறிகொள் மலர்சூடீ விரும்பி உனையோதும்

அறிவை அருளாயே அண்ணா மலையானே.


மறி, ஒண் மழு ஏந்தீ - மான்கன்றையும் ஒளி திகழும் மழுவையும் ஏந்தியவனே;

மழ வெள் விடை ஏறீ - இள வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனே;

பொறிகொள் அரவு ஊரும் பொன் ஆர் சடைமீது வெறிகொள் மலர் சூடீ - புள்ளிகள் திகழும் பாம்பு ஊரும் பொற்சடைமேல் மணம் கமழும் மலர்களை அணிந்தவனே; (பொறி - புள்ளி); (ஆர்தல் - ஒத்தல்); (வெறி - மணம்);

விரும்பி உனை ஓதும் அறிவை அருளாயே - அன்போடு உன்னைப் போற்றும் அறிவை எனக்கு அருள்வாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


3)

என்பும் புனைகின்ற இறைவா எருதேறீ

துன்பம் தருகின்ற தொல்லை வினைநீக்கி

இன்பம் தரவல்ல எந்தாய் உனையேத்தும்

அன்பை அருளாயே அண்ணா மலையானே.


என்பும் புனைகின்ற இறைவா - எலும்பையும் அணிகின்ற இறைவனே; (என்பு - எலும்பு); (உம் - 1. இழிவுசிறப்பும்மை; எச்சவும்மை);

எருது-ஏறீ - இடபவாகனனே;

துன்பம் தருகின்ற தொல்லை-வினை நீக்கி - துன்பம் தருகின்ற பழைய வினைகளை அழித்து; (தொல்லை - பழைய);

இன்பம் தர-வல்ல எந்தாய் - இன்பம் தருகின்ற எந்தையே;

உனை ஏத்தும் அன்பை அருளாயே - உன்னைப் போற்றி வணங்கும் அன்பை எனக்கு அருள்வாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


4)

நாலு மறையோதும் நாவா இலையாரும்

வேலும் மழுவாளும் ஏந்தும் பெருமானே

ஏலும் வகையுன்னை ஏத்தும் மதிநல்காய்

ஆலும் மயிலாரும் அண்ணா மலையானே.


நாலு மறை ஓதும் நாவா - நான்கு வேதங்களைத் திருநாவால் பாடியருளியவனே;

இலை ஆரும் வேலும் மழுவாளும் ஏந்தும் பெருமானே - மூவிலைவேலையும் (= திரிசூலத்தையும்), மழுவையும் ஏந்தும் பெருமானே; (ஆர்தல் - நிறைதல்);

ஏலும் வகை உன்னை ஏத்தும் மதி நல்காய் - இயன்ற வகையில் உன்னைத் தொழுகின்ற அறிவை எனக்கு அருள்வாயாக;

ஆலும் மயில் ஆரும் அண்ணாமலையானே - ஆடும் மயில்கள் பொருந்தும் திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே; (ஆலுதல் - ஆடுதல்); (திருவண்ணாமலையில் ரமணாசிரமம் முதலிய இடங்களில் மயில்கள் உலவுவதைக் காணலாம்);


5)

வஞ்சி இடைமாதை வாமம் மகிழ்வோனே

மஞ்சின் நிறமேறும் மணிபோல் முனமுண்ட

நஞ்சை அணிகண்டா நமனை உதைபாதா

அஞ்சல் அருளாயே அண்ணா மலையானே.


வஞ்சி-இடை மாதை வாமம் மகிழ்வோனே - வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையை உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனே; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (வாமம் - இடப்பக்கம்);

மஞ்சின் நிறம் ஏறும் மணி போல், முனம் உண்ட நஞ்சை அணி கண்டா - முன்பு உண்ட விஷத்தை மேகம் போல் நிறம் திகழும் மணியாகக் கண்டத்தில் அணிந்தவனே; (மஞ்சு - மேகம்);

நமனை உதை-பாதா - காலனைத் திருவடியால் உதைத்தவனே;

அஞ்சல் அருளாயே - அஞ்சல் அளித்து என்னைக் காப்பாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


6)

கூறும் அடியார்தம் குறைகள் களைவோனே

சீறும் இளநாகம் சேரும் முடிதன்மேல்

ஆறும் அணிவோனே அடியேற் கருளாயே

ஆறு முகனத்தா அண்ணா மலையானே.


கூறும் அடியார்தம் குறைகள் களைவோனே - புகழ்பாடும் பக்தர்களது குறைகளைத் தீர்ப்பவனே;

சீறும் இள-நாகம் சேரும் முடிதன்மேல் ஆறும் அணிவோனே - சீறும் இளம்-பாம்பு திகழும் சென்னிமேல் கங்கையையும் அணிந்தவனே;

அடியேற்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக;

ஆறுமுகன் அத்தா - முருகனுக்கு அப்பனே; (அத்தன் - அப்பன்);

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


7)

காடும் இடமாகக் கருதி நடமாடி

ஓடும் கலனாக ஊரூர் உழல்வோனே

பாடும் அடியேனைப் பாலித் தருளாயே

ஆடும் மயிலாரும் அண்ணா மலையானே.


காடும் இடமாகக் கருதி நடம் ஆடி - சுடுகாட்டையும் நல்ல அரங்கம் என்று விரும்பித் திருநடம் செய்து;

ஓடும் கலனாக ஊர்ஊர் உழல்வோனே - பிரமனது மண்டையோடும் உண்கலன் என்று கொண்டு பல ஊர்களில் பிச்சைக்குத் திரிபவனே;

பாடும் அடியேனைப் பாலித்து அருளாயே - உன் புகழைப் பாடும் என்னைக் காத்து அருள்வாயாக;

ஆடும் மயில் ஆரும் அண்ணாமலையானே - ஆடும் மயில்கள் பொருந்தும் திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே; (ஆர்தல் - பொருந்துதல்); (திருவண்ணாமலையில் ரமணாசிரமம் முதலிய இடங்களில் மயில்கள் உலவுவதைக் காணலாம்);


8)

மலையைப் பெயர்மூடன் வாட விரல்வைத்தாய்

சிலையை வளைவித்துச் சேரார் புரமெய்தாய்

தலைமேல் பிறையானே தமியேற் கருளாயே

அலைபோல் அடியார்சேர் அண்ணா மலையானே;


மலையைப் பெயர் மூடன் வாட விரல் வைத்தாய் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவற்ற இராவணன் வாடும்படி திருவடி-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனே;

சிலையை வளைவித்துச் சேரார் புரம் எய்தாய் - மேருமலையை வில்லாக வளைத்து, அந்த வில்லை வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவனே; (சிலை - மலை; வில்); (சேரார் - பகைவர்); (அப்பர் தேவாரம் - 6.47.4 - "திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து");

தலைமேல் பிறையானே - சந்திரசேகரனே;

தமியேற்கு அருளாயே - தனித்து வாடும் அடியேனுக்கு அருள்வாயாக;

அலைபோல் அடியார் சேர் அண்ணாமலையானே - பக்தர்கள் கடல்போல் திரள்கின்ற திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே;


9)

மயலார் அயன்மாலார் வாட வளர்சோதீ

புயல்போல் நிறமாரும் பொருவில் மணிகண்டா

மயிலார் உமைகேள்வா வலிய வினைதீராய்

அயில்மூ விலைவேலா அண்ணா மலையானே;


மயல் ஆர் அயன் மாலார் வாட வளர் சோதீ - ஆணவம் மிகுந்த பிரமனும் திருமாலும் (அடிமுடி தேடிக் காணாராய்) வாடும்படி எல்லையின்றி வளர்ந்த ஜோதியே; (ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்);

புயல் போல் நிறம் ஆரும் பொருவில் மணிகண்டா - மேகம் போன்ற நிறம் பொருந்திய ஒப்பற்ற நீலமணி திகழும் கண்டத்தை உடையவனே; (பொருவில் - பொரு இல் - ஒப்பு இல்லாத);

மயில் ஆர் உமை கேள்வா - மயில் போன்ற சாயலை உடைய உமைக்குக் கணவனே; (ஆர்தல் - ஒத்தல்);

வலிய வினை தீராய் - என் வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக;

அயில்-மூவிலைவேலா - கூர்மையான திரிசூலத்தை ஏந்தியவனே;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


10)

பண்டை நெறிதன்னைப் பழித்துப் பலபொய்சொல்

மிண்டர் தமைநீங்கும் விரும்பு வரமெல்லாம்

தொண்டர்க் கருள்செய்யும் துணைவன் சுடுநீற்றன்

அண்டர் தொழுதேத்தும் அண்ணா மலையானே;


பண்டை நெறிதன்னைப் பழித்துப் பல பொய் சொல் மிண்டர்தமை நீங்கும் - தொன்மையான வேதநெறியைப் பழித்துத் தினமும் பல பொய்களைச் சொல்லும் கல்நெஞ்சர்களை நீங்குங்கள்; (மிண்டர் - கல்நெஞ்சர்);

விரும்பு வரம்-எல்லாம் தொண்டர்க்கு அருள்செய்யும் துணைவன் - வேண்டிய வரங்களையெல்லாம் பக்தர்களுக்குத் தந்தருளும் துணைவன்;

சுடு-நீற்றன் - வெந்த வெண்ணீற்றைப் பூசியவன்;

அண்டர் தொழுது ஏத்தும் அண்ணாமலையானே - தேவர்களால் வழிபடப்பெறும் திருவண்ணாமலை ஈசன்;


11)

பூதி புனைமேனிப் பூத கணநாதன்

ஓதித் தொழுவார்வான் உறையத் தருவள்ளல்

நீதி வடிவானான் நெய்பால் தயிராடி

ஆதி அழிவில்லா அண்ணா மலையானே.


பூதி புனை-மேனிப் பூதகணநாதன் - திருநீற்றைத் திருமேனிமேல் பூசிய, பூதகணத்தலைவன்; (பூதி - திருநீறு);

ஓதித் தொழுவார் வான் உறையத் தரு-வள்ளல் - துதித்து வணங்கும் பக்தர்களுக்குச் சிவலோக வாழ்வைத் தரும் வள்ளல்;

நீதி வடிவு ஆனான் - அறவடிவினன்;

நெய் பால் தயிர் ஆடி - நெய், பால், தயிர் இவற்றால் அபிஷேகம் பெறுபவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.61.2 - "பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்");

ஆதி அழிவு இல்லா அண்ணாமலையானே - ஆதியும் அந்தமும் இல்லாத இல்லாத திருவண்ணாமலை ஈசன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.443 - அண்ணாமலை (திருவண்ணாமலை) - உண்ணாமுலையாள் உடனாம்

2018-08-15

P.443 - அண்ணாமலை (திருவண்ணாமலை)

-------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா)

(சம்பந்தர் தேவாரம் - 2.18 - "சடையாய் எனுமால்")


1)

உண்ணா முலையாள் உடனாம் ஒருவன்

அண்ணா மலையான் அடியார்க் கெளியான்

பண்ணார் தமிழ்கேட் டருளும் பரமன்

எண்ணாய் மனமே இடர்தீர்ந் திடுமே.


உண்ணா முலையாள் உடனாம் ஒருவன் - உண்ணாமுலையாள் உடனாகிய ஒப்பற்றவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்");

அண்ணாமலையான் - திருவண்ணாமலையில் உறைகின்றவன்;

அடியார்க்கு எளியான் - அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்;

பண் ஆர் தமிழ் கேட்டு அருளும் பரமன் - தேவாரம் முதலிய இசைத்தமிழ்ப் பாமாலைகளைக் கேட்டு இரங்கி அருளும் பரமன்;

எண்ணாய் மனமே; இடர் தீர்ந்திடுமே - மனமே, நீ அப்பெருமானை எண்ணுவாயாக;

இடர் தீர்ந்திடுமே - உன் துன்பம் நீங்கும்;


2)

கண்ணார் நுதலன் கருமா மிடறன்

விண்ணோர் தலைவன் விடையார் கொடியான்

அண்ணா மலையான் அடிவாழ்த் திடவே

நண்ணா தறுமே நலிதீ வினையே.


கண் ஆர் நுதலன் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);

கரு மா மிடறன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

விண்ணோர் தலைவன் - தேவர்கள் தலைவன்;

விடையார் கொடியான் - இடபக்கொடி உடையவன்;

அண்ணாமலையான் - திருவண்ணாமலை ஈசன்;

அடி வாழ்த்திடவே நண்ணாது அறுமே நலி-தீவினையே - அப்பெருமானது திருவடியைப் போற்றினால் நம்மை வருத்தும் தீவினைகள் எல்லாம் அழியும்; ( நலிதல் / நலித்தல் - வருத்துதல்);


3)

தண்ணீர்ச் சடைமேல் தவழும் பிறையான்

பெண்ணார் உருவன் பெரிதிற் பெரியன்

அண்ணா மலையான் அடிவாழ்த் திடவே

திண்ணார் வினைகள் சிதையும் திடனே.


தண்ணீர்ச்-சடைமேல் தவழும் பிறையான் - குளிர்ந்த கங்கை இருக்கும் சடைமேல் தவழ்கின்ற இளந்திங்களை அணிந்தவன்;

பெண் ஆர் உருவன் - உமையொருபங்கன்;

பெரிதின் பெரியன் - எப்பொருளினும் எவரினும் பெரியவன்;

அண்ணாமலையான் அடி வாழ்த்திடவே - திருவண்ணாமலை ஈசனது திருவடியை வழிபட்டால்;

திண் ஆர் வினைகள் சிதையும் திடனே - நமது வலிய வினைகள் எல்லாம் அழிவது நிச்சயம்;


4)

அலையார் நதியைத் தலைமேல் அணிவான்

தலையே கலனாப் பலிதேர் தலைவன்

அலகில் புகழான் அருணைப் பெருமான்

மலரார் கழலே மருவாய் மனமே;


அலை ஆர் நதியைத் தலைமேல் அணிவான் - அலை மிக்க கங்கையைத் திருமுடிமேல் அணிந்தவன்;

தலையே கலனாப் பலி தேர் தலைவன் - பிரமனது மண்டையோடே உண்கலனாகப் பிச்சையேற்கும் தலைவன்; (கலனா - கலனாக); (பலி - பிச்சை);

அலகு இல் புகழான் - அளவற்ற புகழை உடையவன்; (அலகு - அளவு);

அருணைப் பெருமான் மலர் ஆர் கழலே மருவாய் மனமே - மனமே, அந்த அண்ணாமலைப் பெருமானது மலர் போன்ற திருவடியையே பொருந்துவாயாக; (அருணை - அருணாசலம் - திருவண்ணாமலை);


5)

விடமுண் மிடறன் விரிநூல் திகழும்

தடமார் பதனில் தவளப் பொடியான்

அடலே றுடையான் அருணைப் பெருமான்

உடையான் கழலுன் னவுறும் திருவே.


விடம் உண் மிடறன் - நஞ்சை உண்ட கண்டன்; (மிடறு - கண்டம்);

விரிநூல் திகழும் தட-மார்பு அதனில் தவளப்-பொடியான் - பூணூல் திகழும் அகன்ற மார்பில் வெண்ணீறு பூசியவன்; (விரி-நூல் - ஒளி பரவிய பூணூல்); (தவளம் - வெண்மை); (பொடி - திருநீறு); (சம்பந்தர் தேவாரம் - 1.107.1 - "வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பில்");

அடல்-ஏறு உடையான் - வலிய இடபத்தை வாகனமாக உடையவன்; (அடல் - வலிமை; வெற்றி);

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

உடையான் கழல் உன்ன உறும் திருவே - மனமே, நம் சுவாமியான அப்பெருமானது கழல் அணிந்த திருவடியைத் தியானித்தால் திரு வந்தடையும்; (உடையான் - சுவாமி);


6)

நமனைச் செறவல் லபிரான் நறவம்

கமழச் சடைமேல் கதிர்வெண் பிறையன்

அமரர்க் கொருகோன் அருணைப் பெருமான்

கமலக் கழலைக் கருதாய் மனமே.


நமனைச் செற-வல்ல பிரான் - காலனை உதைத்து அழித்த தலைவன்;

நறவம் கமழ் அச்-சடைமேல் கதிர்-வெண்பிறையன் - மணம் கமழும் அந்தச் சடைமேல் ஒளிவீசும் பிறையை அணிந்தவன்; (நறவம் - வாசனை);

அமரர்க்கு ஒரு கோன் - தேவாதிதேவன்; (ஒரு கோன் - ஒப்பற்ற தலைவன்);

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

கமலக்-கழலைக் கருதாய் மனமே - மனமே, அப்பெருமானது கழல் அணிந்த தாமரைமலர் போன்ற பாதத்தைத் தியானிப்பாயாக;


7)

நாகச் சடையான் நரைவெள் விடையான்

மேகத் துநிறம் விரவும் தெரிவை

ஆகத் துடையான் அருணைப் பெருமான்

சோகத் தொடர்தீர் துணைவன் மனமே.


நாகச்-சடையான் - பாம்பைச் சடையில் அணிந்தவன்;

நரை-வெள்-விடையான் - வெண்ணிற இடபத்தை வாகனமாக ஏறியவன்; (நரை - வெண்மை; நரைவெள் - ஒருபொருட்பன்மொழி);

மேகத்து நிறம் விரவும் தெரிவை ஆகத்து உடையான் - மேகம் போன்ற கரிய நிறமுடைய உமையைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன்; (தெரிவை - பெண்); (ஆகம் - மேனி);

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

சோகத்-தொடர் தீர் துணைவன் - அடியவர்களது பிறவித்தொடரைத் தீர்க்கின்ற துணைவன்;

மனமே - மனமே; "அவனைத் தொழுவாயாக" என்பது குறிப்பு;


8)

வரைதூக் கியமா மடையற் கதற

விரலூன் றியருள் விகிர்தன் விமலன்

அரவச் சடையான் அருணைப் பெருமான்

விரவித் தொழுவார் வினைதீர்ப் பவனே.


வரை தூக்கிய மா-மடையன் கதற விரல் ஊன்றியருள் விகிர்தன் - மலையைப் பெயர்த்துத் தூக்கி எறிய முயன்ற பெரிய அறிவீனனான இராவணனைக் கதறி அழும்படி திருப்பாத-விரலை ஊன்றி நசுக்கியவன், விகிர்தன் என்ற திருநாமம் உடையவன்; (வரை - மலை); (மடையன் - அறிவீனன்); (மடையற் கதற - மடையனைக் கதற; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்); (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்);

விமலன் - தூயவன்;

அரவச்-சடையான் - சடைமேல் பாம்பை அணிந்தவன்;

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

விரவித் தொழுவார் வினை தீர்ப்பவனே - அப்பெருமான், அடைந்து மனம் பொருந்தித் தொழும் பக்தர்களது வினைகளை அழிப்பவன்;


9)

எயில்மூன் றினைநக் கெரிசெய் தருளும்

கயிலைக் கிறைவன் கனலும் சுடராய்

அயன்மாற் கரியான் அருணைப் பெருமான்

கயமார் சடையன் கழல்நம் புணையே.


எயில் மூன்றினை நக்கு எரிசெய்து அருளும் கயிலைக்கு இறைவன் - முப்புரங்களைச் சிரித்து எரித்தருளிய, கயிலைநாதன்;

கனலும் சுடராய் அயன் மாற்கு அரியான் - எரிகின்ற ஜோதியாகி, (அடிமுடி தேடிய) பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாதவன்; (கனல்தல் - எரிதல்); (மாற்கு - மாலுக்கு);

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

கயம் ஆர் சடையன் - கங்கையைச் சடையில் உடையவன்; (கயம் - நீர்நிலை);

கழல் நம் புணையே - அப்பெருமானது திருவடிகள் நம்மைப் பிறவிப்-பெருங்கடலைக் கடப்பிக்கும் தெப்பம் ஆகும்; (புணை - தெப்பம்; மரக்கலம்);


10)

வழிதான் அறியார் குழிவீழ் குருடர்

பழியே பகர்வார் மொழிநீங் கிடுமின்

அழியாப் புகழான் அருணைப் பெருமான்

எழிலார் கழலேத் திடவான் எளிதே.


வழிதான் அறியார் குழி வீழ்- குருடர் - செல்லத்தக்க மார்க்கத்தை அறியாதவர்கள், குழியில் விழுகின்ற குருடர்கள்;

பழியே பகர்வார் மொழி நீங்கிடுமின் - ஓயாமல் பழிமொழிகளே பேசுபவர்களான அவர்களது பேச்சைப் பொருட்படுத்தாமல் நீங்குங்கள்; (பகர்தல் - சொல்தல்);

அழியாப் புகழான் - நிலைத்த புகழை உடையவன்;

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

எழில் ஆர் கழல் ஏத்திட வான் எளிதே - அப்பெருமானது அழகிய பாதத்தைத் துதித்தால் சிவலோகம் எளிதில் கிட்டும்;


11)

துணிவான் மதியன் சுடுநஞ் சமுதுண்

மணியார் மிடறன் வரியார் அரவை

அணியாப் புனைவான் அருணைப் பெருமான்

பணிவார் பிணிகள் பறையும் திடனே.


துணி-வான்-மதியன் - அழகிய வெண்திங்கள்-துண்டத்தை அணிந்தவன்; (துணி - துண்டம்); (வான் மதி - 1. வால் மதி; 2. வான் மதி); (வால் - வெண்மை); (வான் - வானம்; அழகிய);

சுடு-நஞ்சு அமுது உண் மணி ஆர் மிடறன் - சுட்டெரித்த ஆலகாலத்தை அமுது போல உண்ட, நீலமணி பொருந்திய கண்டத்தை உடையவன்;

வரி ஆர் அரவை அணியாப் புனைவான் - வரிகள் திகழும் பாம்பை ஆபரணமாக அணிந்தவன்;

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

பணிவார் பிணிகள் பறையும் திடனே - அப்பெருமானை வணங்கும் அடியார்களது நோய்களும் பந்தங்களும் அழிவது நிச்சயம்; (பிணி - பந்தம் - மும்மலக்கட்டு; நோய்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------