2017-09-21
V.044 - பாந்தளணி வேந்தனெரி - தனிப்பாடல்
---------------------------------
(வெண்பா - முற்றெதுகை & முடுகு)
பாந்தளணி வேந்தனெரி ஆர்ந்தரணம் தீய்ந்தழிய
ஏந்துமலை ஏந்தியவன் தீந்தமிழை ஆய்ந்தபரன்
காந்திமலி மாந்துறையில் ஏந்தலடி சேர்ந்துவினை
தீர்ந்துபயம் மாய்ந்துமகிழ் மாந்து.
பாந்தள் அணி வேந்தன் - பாம்பை அணியும் மன்னன்;
எரி ஆர்ந்து அரணம் தீய்ந்து அழிய ஏந்து மலை ஏந்தியவன் - தீப் பொருந்தி முப்புரங்கள் கருகி அழிய உயர்ந்த மலையை வில்லாக ஏந்தியவன்;
தீம்-தமிழை ஆய்ந்த பரன் - சங்கப்புலவனாக வந்த பரமன்;
காந்தி மலி மாந்துறையில் ஏந்தல் அடி சேர்ந்து, வினை தீர்ந்து, பயம் மாய்ந்து, மகிழ் மாந்து - அழகிய மாந்துறையில் உறைகின்ற பெரியோனான சிவபெருமான் திருவடியை அடைந்து, வினைகள் தீர்ந்து, அச்சம் அழிந்து, இன்புறுவாயாக.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment