2017-09-21
V.043 - மின்னலொத்த மென்மருங்குல் - தனிப்பாடல்
---------------------------------
(வெண்பா - முற்றெதுகை & முடுகு)
மின்னலொத்த மென்மருங்குல் அன்னையஞ்சக் குன்றசைத்த
தென்னிலங்கை மன்னரற்ற முன்னடர்த்துப் பின்னளித்த
பொன்னிறத்தன் வன்னிமத்தம் சென்னிவைத்த நன்னிலத்தன்
இன்னலத்தை உன்னிநித்தம் பன்னு.
மின்னல் ஒத்த மென்-மருங்குல் அன்னை அஞ்சக் குன்று அசைத்த – மின்னல் போன்ற நுண்ணிடையுடைய உமாதேவி அஞ்சுமாறு கயிலைமலையைப் பெயர்த்த;
தென்-இலங்கை மன் அரற்ற முன் அடர்த்துப் பின் அளித்த பொன்-நிறத்தன் - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணன் அழுது புலம்பும்படி அவனை முன்பு நசுக்கிப், பின்னர் வரம் அளித்த பெருமான், பொன் போன்ற திருமேனி உடையவன்;
வன்னி மத்தம் சென்னி வைத்த நன்னிலத்தன் இன்-நலத்தை உன்னி நித்தம் பன்னு - வன்னியிலையையும் ஊமத்தமலரையும் முடிமேல் அணிந்தவனும், நன்னிலம் என்ற தலத்தில் உறைபவமுமான, அந்தப் பெருமானது பெருமைகளை எண்ணித் தினமும் அவன் புகழைப் பாடுவாயாக.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment