2017-07-24
P.406 - புகலூர்
---------------------------------
(நாலடிமேல் ஈரடி வைப்பு - யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க)
முற்குறிப்புகள்:
1. படிப்போர் வசதிக்காகப் பாடல்களில் சில இடங்களில் சீர்களிடையே புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. புணர்ச்சியைக் கருத்திற்கொண்டு நோக்கினால் இப்பாடல்களில் சந்தம் கெடாமையை அறியலாம். உதாரணம்: அடிகள் அரவினொடு = அடிக ளரவினொடு; முடியில் நிலவுபுனை = முடியி னிலவுபுனை;
2. மேல்வைப்பாக வரும் இரண்டு அடிகளின் பொருளை முதற்பாடலின் விளக்கத்தில் காண்க. மற்றப் பாடல்களிலும் அதே மேல்வைப்பு அடிகளே வருகின்றன.
1)
கொடியில் எருதையுடை
அடிகள் அரவினொடு
முடியில் நிலவுபுனை ஈசன்
நெடிய கயிலைமலை வாசன்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
கொடியில் எருதையுடை அடிகள் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய கடவுள்;
அரவினொடு முடியில் நிலவு புனை ஈசன் - திருமுடிமேல் பாம்பையும் திங்களையும் அணிந்த ஈசன்;
நெடிய கயிலைமலை வாசன் - உயர்ந்த கயிலைமலையில் உறைபவன்;
அரன் ஊர் அணி ஆர் புகலூரே - ஹரன் என்ற திருநாமம் உடைய சிவபெருமான் உறையும் தலம் அழகிய திருப்புகலூர்; (அணி - அழகு);
பரவிப் பணிவார் கவலாரே - அப்பெருமானைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்குக் கவலை இல்லை; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்);
2)
குயிலை அனையமொழி
கயலை அனையவிழி
மயிலை அனையவுமை பங்கன்
கயிலை மலையிலுறை துங்கன்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
குயிலை அனைய மொழி, கயலை அனைய விழி, மயிலை அனைய உமை பங்கன் - குயில் போன்ற இன்மொழியும் கயல்மீன் போன்ற கண்ணும், மயில் போன்ற சாயலும் உடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்; (அனைய - ஒத்த);
கயிலைமலையில் உறை துங்கன் - கயிலைமலைமேல் உறைகின்ற பெரியோன்; (துங்கன் - உயர்ந்தவன்; பெரியோன்);
3)
கடலில் எழுகொடிய
விடமும் அமுதமென
மிடறு கருகவுண வல்லான்
கடையும் முதலுமவன் நல்லான்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
கடலில் எழு கொடிய விடமும் அமுதம் என, மிடறு கருக உண வல்லான் - பாற்கடலில் தோன்றிய கொடிய நஞ்சையும் அமுதம் என்று, கண்டம் கறுக்கும்படி உண்ண வல்லவன்;
கடையும் முதலும் அவன் நல்லான் - அந்தமும் ஆதியும் ஆனவன், நல்லவன்;
4)
கால காலனொரு
சூலம் ஏந்துமிறை
ஆல நீழலமர் அண்டன்
நீல வண்ணமணி கண்டன்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
காலகாலன் - காலனுக்குக் காலன் ஆனவன்;
ஒரு சூலம் ஏந்தும் இறை - சூலபாணி;
ஆல-நீழல் அமர் அண்டன் - கல்லாலின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;
நீல வண்ணமணி கண்டன் - நீலநிற மணி திகழும் கண்டத்தை உடையவன்; (வண்ணமணி - 1. வண்ண மணி; / 2. வண்ணம் அணி);
5)
ஆற்றை அஞ்சடையில்
ஏற்ற முக்கணிறை
கூற்று மாளவுதை காலன்
ஏற்றன் ஆருலவு சூலன்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
ஆற்றை அம்-சடையில் ஏற்ற முக்கண்-இறை - கங்கையை அழகிய சடையில் ஏற்ற முக்கட்பெருமான்;
கூற்று மாள உதை காலன் - நமனைக் காலால் உதைத்து அழித்தவன்;
ஏற்றன், ஆர் உலவு சூலன் - இடப-வாகனன்; கூர்மை பொருந்திய சூலத்தை உடையவன்; (ஆர் - கூர்மை);
6)
வம்பு வாளிமதன்
அம்பொன் ஆகமெரி
நம்பன் நீறுபுனை தூயன்
உம்பர் ஏத்துகயி லாயன்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
வம்பு-வாளி மதன் அம்பொன் ஆகம் எரி நம்பன் - வாசனை மிக்க அம்புகளை உடைய மன்மதனது உடலை எரித்த சிவபெருமான்; (வம்பு - வாசனை); (வாளி - அம்பு ); (ஆகம் - உடல்); (அம்பொனாகமெரி - சந்தம் கருதி ன் மிகாது வந்தது);
நீறு புனை தூயன் - திருநீற்றை அணியும் தூயவன்;
உம்பர் ஏத்து கயிலாயன் - தேவரெல்லாம் வழிபடும் கயிலைமலை நாதன்;
7)
காடு வாழுமிறை
சூடு மாலையென
ஆடு நாகமணி தேவன்
பாடு நாலுமறை நாவன்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
காடு வாழும் இறை - சுடுகாட்டில் இருக்கும் இறைவன்;
சூடு-மாலை என ஆடு-நாகம் அணி தேவன் - சூடுகின்ற மாலையாக, அசைகின்ற பாம்பை அணிந்த தேவன்;
பாடு நாலுமறை நாவன் - நால்வேதத்தைப் பாடிய திருநாவன்;
8)
மலையை எறிசிதடன்
அலற விரலையிடு
தலைவன் அரையிலதள் ஆர்த்தான்
தலையில் அரவுமதி சேர்த்தான்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
மலையை எறி-சிதடன் அலற விரலை இடு தலைவன் - கயிலைமலையைப் பெயர்த்து வீசியெறிய முயன்ற அறிவிலியான இராவணன் அலறும்படி தன் திருப்பாத-விரலை ஊன்றிய தலைவன்; (சிதடன் - அறிவிலி; குருடன்; பித்தன்);
அரையில் அதள் ஆர்த்தான் - அரையில் தோலைக் கட்டியவன்; (அதள் - தோல்); (ஆர்த்தல் - கட்டுதல்);
தலையில் அரவு மதி சேர்த்தான் - திருமுடிமேல் பாம்பையும் திங்களையும் ஒன்றாக வாழவைத்தவன்;
9)
கரியின் உரிவைபுனை
பெரியன் இருவரெதிர்
எரியின் உருவினொடு சென்றான்
அரிய அடிபணிய நின்றான்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
கரியின் உரிவை புனை பெரியன் - ஆனைத்தோலைப் புனையும் பெரியவன்;
இருவர் எதிர் எரியின் உருவினொடு சென்றான் - திருமால் பிரமன் இவர் இருவர்முன் ஜோதி வடிவினில் சென்றவன்;
அரிய அடி பணிய நின்றான் - அவ்விருவரும் அவர்களால் அறிதற்கு அரிய திருவடியைப் பணியுமாறு ஓங்கி நின்றவன்;
10)
வஞ்ச நெஞ்சருரை
நஞ்சை நீங்கிடுமின்
அஞ்சல் என்றருளும் அத்தன்
குஞ்சி மீதுமத மத்தன்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
வஞ்ச நெஞ்சர் உரை நஞ்சை நீங்கிடுமின் - மனத்தில் வஞ்சத்தை வைத்தவர்கள் சொல்லும் விஷம் கலந்த பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;
அஞ்சல் என்று அருளும் அத்தன் - அடியவர்களுக்கு அபயம் அருள்கின்ற தந்தை;
குஞ்சி மீது மதமத்தன் - திருமுடிமேல் மணம் மிக்க ஊமத்தமலரை அணிந்தவன்; (குஞ்சி - தலை; ஆண்களின் தலைமயிர்);
11)
மணியை மிடறுதனில்
அணியும் இறைமுதுமை
பிணிகள் இலனுவமன் இல்லான்
திணிய மலையுமொரு வில்லான்
.. அரனூர் அணியார் புகலூரே
.. பரவிப் பணிவார் கவலாரே.
மணியை மிடறுதனில் அணியும் இறை - கண்டத்தில் நீலமணியை அணியும் இறைவன்;
முதுமை பிணிகள் இலன் - மூப்பும் பிணியும் இல்லாதவன்; (பிணி - நோய்; பந்தம்);
உவமன் இல்லான் - உவமை அற்றவன்;
திணிய மலையும் ஒரு வில்லான் - உறுதிமிக்க மேருமலையையும் ஒரு வில்லாக ஏந்தியவன்; (திணிய - திண்ணிய);
பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:
1. நாலடிமேல் ஈரடி வைப்பு -
முதல் நாலடிகள் ஓர் எதுகை. அடுத்த ஈரடிகள் ஓர் எதுகை.
தனன தனதனன
தனன தனதனன
தனன தனதனன தானா
தனன தனதனன தானா
.. தனனா தனனா தனதானா
.. தனனா தனனா தனதானா
என்ற சந்தம்.
"தனன தனதனன" என்ற அமைப்பு "தான தானதன" என்று சில பாடல்களில் வரும்.
அடி-3 அடி-4 இவற்றில் அடி ஈற்றில் இயைபுத் தொடையும் அமைந்தது.
மேல்வைப்பாக வரும் ஈரடிகளான அடி-5 அடி-6 இவற்றில் அடி ஈற்றில் இயைபுத் தொடையும் அமைந்தது.
2. இந்தப் பாடலின் முதல் மூன்று அடிகளின் சந்தத்தைச் சேர்ந்து ஒரே அடி போல நோக்கினால் - "தனன தனதனன தனன தனதனன தனன தனதனன தானா" - என்ற சந்தம் உடைய அடி அமைப்பு - வடமொழி யாப்பில் "வனலதிகா" - vanalatikA - என்று வழங்கப்பெறுகின்றது.
3. சிருங்கேரி சங்காராசாரியர் - பாரதி தீர்த்தர் இயற்றிய ஒரு விஷ்ணு துதி -
கருட கமன தவ சரண கமல மிஹ மனஸி லஸது மம நித்யம் ||
.. மம தாபமபாகுரு தேவ
.. மம பாபமபாகுரு தேவ ||
இதன் ஓர் ஒலிவடிவம்: https://www.youtube.com/watch?v=lIRiG6DKT9o
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment