2017-07-03
P.405 - ஆலவாய் (மதுரை)
---------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)
(வடமொழி யாப்பில் - ஸ்ரக்விணீ (sragviNI - स्रग्विणी ) என்ற பெயருடைய சந்தம்)
(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமார் அகிலொடு")
(அச்யுதாஷ்டகம் - "அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்")
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
1)
பொங்கராத் தாரெனப் பூண்டவன் போற்றினார்
தங்களைக் காத்திடும் சங்கரன் மான்விழி
மங்கையோர் பங்கினான் வானிலாச் சூடினான்
அங்கையில் தீயினான் ஆலவாய் ஐயனே.
பொங்கு-அராத் தார் எனப் பூண்டவன் - சீறும் பாம்பை மாலையாக அணிந்தவன்;
போற்றினார்-தங்களைக் காத்திடும் சங்கரன் - வணங்கும் அன்பர்களைக் காக்கின்ற சங்கரன்;
மான்விழி மங்கை ஓர் பங்கினான் - மான் போன்ற பார்வையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;
வான்-நிலாச் சூடினான் - வானத்தில் விளங்கும் அழகிய வெண்-திங்களைச் சூடியவன்; (வானிலா = 1. வான் நிலா; 2. வால் நிலா); (வான் - வானம்; அழகு); (வால் - வெண்மை);
அங்கையில் தீயினான் - கையில் நெருப்பை ஏந்தியவன்;
ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
2)
ஏறுமோர் ஊர்தியா ஏறினான் எம்பிரான்
நாறுபூங் கொன்றையான் நாரியோர் கூறினன்
நீறுசேர் மேனியான் நெற்றியிற் கண்ணினான்
ஆறுசேர் வேணியான் ஆலவாய் ஐயனே.
ஏறும் ஓர் ஊர்தியா ஏறினான் எம்பிரான் - இடபத்தையும் ஒப்பற்ற வாகனமாக விரும்பி ஏறியவன் எம் தலைவன்; (ஊர்தியா - ஊர்தியாக);
நாறு-பூங்கொன்றையான் - மணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவன்;
நாரி ஓர் கூறினன் - உமையை ஒரு கூறாக உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.112.3 - "மங்கைகூறினன்");
நீறு சேர் மேனியான் - திருமேனிமேல் திருநீற்றைப் பூசியவன்;
நெற்றியில் கண்ணினான் - நெற்றிக்கண்ணன்;
ஆறு சேர் வேணியான் - கங்கையைச் சடையில் தரித்தவன்; (வேணி - சடை);
ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
3)
பூதியார் மார்புமேற் பூணநூல் தாங்கினான்
பாதியோர் பெண்ணினான் பாரிடம் கொள்ளியைச்
சோதியென் றேந்திடும் போதினிற் கூத்தினன்
ஆதியாய் அந்தமாம் ஆலவாய் ஐயனே.
பூதி ஆர் மார்புமேல் பூணநூல் தாங்கினான் - திருநீறு திகழும் மார்பின்மேல் பூணூல் அணிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.121.5 - "பொறிகிளர் பூணநூல் புரள");
பாதி ஓர் பெண்ணினான் - உமைபங்கன்;
பாரிடம் கொள்ளியைச் சோதி என்று ஏந்திடும் போதினில் கூத்தினன் - பூதகணங்கள் கொள்ளியை விளக்காக ஏந்திடும் இருளில் திருநடம் செய்பவன்; (சோதி - விளக்கு);
ஆதிஆய் அந்தம் ஆம் ஆலவாய் ஐயனே - முதல் ஆகி முடிவும் ஆகின்றவன், திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
4)
வெங்கரித் தோலினைப் போர்த்தவன் வேதமும்
அங்கமும் பாடினான் ஆலநீ ழற்பிரான்
அங்கயற் கண்ணியோர் பங்கினான் ஆரமா
அங்கமும் பூண்டவன் ஆலவாய் ஐயனே.
வெங்கரித் தோலினைப் போர்த்தவன் - கொடிய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவன்;
வேதமும் அங்கமும் பாடினான் - நால்வேதங்களையும் ஆறு-அங்கங்களையும் ஓதியவன்;
ஆலநீழல் பிரான் - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;
அங்கயற்கண்ணி ஓர் பங்கினான் - மீனாட்சியை ஒரு பங்காக உடையவன்;
ஆரமா அங்கமும் பூண்டவன் - எலும்பையும் மாலையாக அணிந்தவன்; (ஆரம் - மாலை); (அங்கம் - எலும்பு);
ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
5)
ஏகனாய் நின்றவன் வேகமார் ஏற்றினன்
நாகநாண் வீக்கினான் நம்பினார் நற்றுணை
பாகமோர் பாவையான் பார்வையால் மன்மதன்
ஆக(ம்)நீ றாக்கினான் ஆலவாய் ஐயனே.
ஏகனாய் நின்றவன் - ஒருவன் ஆனவன்; (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - அடி-5 - "ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க");
வேகம் ஆர் ஏற்றினன் - விரைந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவன்; (அப்பர் தேவாரம் - 4.66.8 - "வேகமார் விடையர் போலும்");
நாக-நாண் வீக்கினான் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (வீக்குதல் - கட்டுதல்);
நம்பினார் நற்றுணை - விரும்பி வழிபடும் அடியவர்களுக்கு நல்ல துணை; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);
பாகம் ஓர் பாவையான் - பெண்ணை ஒரு பாகத்தில் வைத்தவன்;
பார்வையால் மன்மதன் ஆகம் நீறு ஆக்கினான் - நெற்றிக்கண்ணால் பார்த்துக் காமனது உடலைச் சாம்பலாக்கியவன்;
ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
6)
காரணன் காமனைக் கண்ணினாற் காய்ந்தவன்
வாரணங் கொன்றுதோல் மார்புறப் போர்த்தவன்
ஆரணங் கொன்றிடும் பூரணன் புண்ணியன்
ஆரணம் பாடினான் ஆலவாய் ஐயனே.
காரணன் - எல்லாவற்றிற்கும் முதற்காரணம் ஆனவன்;
காமனைக் கண்ணினால் காய்ந்தவன் - மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தவன்;
வாரணம் கொன்று தோல் மார்பு உறப் போர்த்தவன் - யானையைக் கொன்று அதன் தோலை மார்பில் படும்படி போர்வையாகத் தரித்தவன்;
ஆர்-அணங்கு ஒன்றிடும் பூரணன் - (ஆரணங்கு =) அரிய தெய்வமாகிய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன், நிறைவானவன்; (அப்பர் தேவாரம் - 5.18.9 - "காரணன் கடம்பந்துறை மேவிய ஆரணங்கொரு பாலுடை மைந்தனே");
புண்ணியன் - புண்ணிய வடிவினன்;
ஆரணம் பாடினான் - வேதங்களைப் பாடியவன்; (ஆரணம் - வேதம்);
ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
7)
என்பரா மாலையான் எண்ணிலாப் பேரினான்
தென்பரங் குன்றினான் தீயினார் அம்பினால்
முன்புரஞ் சுட்டவன் மூப்பிலான் முன்னிடும்
அன்பருக் கன்பினான் ஆலவாய் ஐயனே.
என்பு அரா மாலையான் - எலும்பையும் பாம்பையும் மாலையாக அணிந்தவன்;
எண்-இலாப் பேரினான் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவன்;
தென்-பரங்குன்றினான் - அழகிய திருப்பரங்குன்றத்தில் உறைபவன்;
தீயின் ஆர் அம்பினால் முன் புரம் சுட்டவன் - தீப் பொருந்திய ஒரு கணையால் முன்பு முப்புரங்களை எரித்தவன்;
மூப்பு இலான் - என்றும் இளமையோடு இருப்பவன்;
முன்னிடும் அன்பருக்கு அன்பினான் - தியானிக்கும் அன்பர்களுக்கு அன்பு உடையவன்; (முன்னுதல் - கருதுதல்; நினைதல்);
ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
8)
மாமலைக் கீழிலங் கைக்குமன் வாடவே
தூமலர்த் தாள்விரல் வைத்தவன் தோத்திரம்
நாமமே பாடவாள் நல்கினான் தாலியா
ஆமைசேர் மார்பினான் ஆலவாய் ஐயனே.
மாமலைக்கீழ் இலங்கைக்கு மன் வாடவே - இலங்கைக்கு அரசனான இராவணன் கயிலைமலையின் கீழே வருந்தும்படி; (மன் - அரசன்);
தூ-மலர்த்தாள்-விரல் வைத்து - தூய மலர் போன்ற திருவடியின் விரல் ஒன்றை ஊன்றி (நசுக்கி);
அவன் தோத்திரம் நாமமே பாட வாள் நல்கினான் - (பின்) அந்த இராவணன் ஈசனது துதிகளையும் திருநாமத்தையும் பாடக் கேட்டு அவனுக்கு ஒரு வாளையும் கொடுத்தவன்;
தாலியா ஆமை சேர் மார்பினான் - மார்பில் ஆமையோட்டினைத் தாலியாக அணிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.53.5 - "மருப்பும் ஆமைத் தாலியார்");
ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
9)
மூத்தவன் மாலயன் வாழ்த்துமோர் தீத்திரள்
பார்த்தனைக் காக்கவோர் பன்றியைக் கொன்றவன்
தீர்த்தமார் செஞ்சடைச் சேவகன் நாகநாண்
ஆர்த்தமா வில்லினான் ஆலவாய் ஐயனே.
மூத்தவன் - மிகத் தொன்மையானவன்;
மால் அயன் வாழ்த்தும் ஓர் தீத்திரள் - திருமாலும் பிரமனும் போற்றிய ஒப்பற்ற தீப்பிழம்பு;
பார்த்தனைக் காக்க ஓர் பன்றியைக் கொன்றவன் - பன்றி உருவில் வந்த மூகாசுரனைக் கொன்று அர்ஜுனனைக் காத்தவன்;
தீர்த்தம் ஆர் செஞ்சடைச் சேவகன் - கங்கையைச் சிவந்த சடையில் தாங்கியவன், வீரன்; (தீர்த்தம் - பரிசுத்தம்; நீர்); (சேவகன் - வீரன்);
நாக-நாண் ஆர்த்த மா-வில்லினான் - மேருமலையைப் பெரிய வில்லாக வளைத்து அவ்வில்லில் வாசுகி என்ற நாகத்தை நாணாகக் கட்டியவன்;
ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
10)
பொக்கமார் நெஞ்சினார் பொய்களைத் தள்ளுமின்
முக்கணா மூவரின் முந்தினாய் என்றிடத்
துக்கமார் பாவ(ம்)மாய் தூயவன் சுந்தரன்
அக்கணிந் தாடுவான் ஆலவாய் ஐயனே.
பொக்கம் ஆர் நெஞ்சினார் பொய்களைத் தள்ளுமின் - வஞ்சம் நிறைந்த நெஞ்சத்தினர் சொல்லும் பொய்ம்மொழிகளை நீங்கள் மதிக்கவேண்டா; (பொக்கம் - வஞ்சகம்; குற்றம்);
"முக்கணா, மூவரின் முந்தினாய்" என்றிடத் - "முக்கண்ணனே, மூவரினும் மேலானவனே" என்று வாழ்த்தினால்;
துக்கம் ஆர் பாவம் மாய் தூயவன் - துக்கம் விளைக்கும் வல்வினைகளை அழித்தருளும் நிர்மலன்; (ஆர்த்தல் - பிணித்தல்); (ஆர்தல் - நிறைதல்); (மாய்த்தல் - அழித்தல்);
சுந்தரன் - அழகன்; சொக்கன்;
அக்கு அணிந்து ஆடுவான் - எலும்பை அணிந்து திருநடம் செய்பவன்; (அக்கு - எலும்பு);
ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
11)
கோளரா கூவிளம் கொன்றையார் வேணியன்
காளகண் டத்தினன் காதலார் நெஞ்சினால்
நீளவும் போற்றினார் நீரினாற் சூழ்ந்தபார்
ஆளநல் கெம்பிரான் ஆலவாய் ஐயனே.
கோள்-அரா, கூவிளம், கொன்றை ஆர் வேணியன் - கொடிய பாம்பு, வில்வம், கொன்றை இவற்றைச் சடையில் அணிந்தவன்; (கோள் - கொடிய); (கூவிளம் - வில்வம்);
காள-கண்டத்தினன் - நீலகண்டன்;
காதல் ஆர் நெஞ்சினால் நீளவும் போற்றினார் நீரினால் சூழ்ந்த பார் ஆள நல்கு எம்பிரான் - பக்தி நிறைந்த நெஞ்சத்தால் இடைவிடாது வழிபடும் அன்பர்கள் கடல் சூழ்ந்த உலகத்தை ஆளுமாறு அவர்களுக்கு அருள்புரியும் எம்பெருமான்;
ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;
பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்.
வடமொழி யாப்பில் "ஸ்ரக்விணீ" (sragviNI - स्रग्विणी ) என்ற பெயரில் அழைக்கப்பெறும் சந்தம்; அடிதோறும் "குரு-லகு-குரு" என்ற அமைப்பு நான்கு முறை வரும்.
தேவாரத்தில் - சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்"; சம்பந்தர் தேவாரம் - 3.33.3 - தாமலார் போலவே தக்கனார் வேள்வியை"
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment