Tuesday, May 13, 2025

P.407 - நன்னிலம் - எல்லையிலா வினைக்கடலில்

2017-09-16

P.407 - நன்னிலம்

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.41.1 - "மண்புகார் வான்புகுவர்")


1)

எல்லையிலா வினைக்கடலில் இடர்ப்படுவேற் கிரங்காயோ

தில்லையிலே திருநட்டம் செய்கின்ற சேவடியாய்

வல்லவனே வார்சடையில் வானதியை வைத்தவனே

நல்லவர்கள் தொழுதேத்தும் நன்னிலத்துப் பெருமானே.


எல்லை இலா வினைக்கடலில் இடர்ப்படுவேற்கு இரங்காயோ - ஈசனே, கரைகாண ஒண்ணாத பெரிய வினைக்கடலில் துன்புறும் எனக்கு இரங்கி அருள்புரிவாயாக; (இடர்ப்படுவேற்கு - இடர்ப்படுவேனுக்கு);

தில்லையிலே திருநட்டம் செய்கின்ற சேவடியாய் - தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் நடராஜனே;

வல்லவனே - எல்லாம் வல்லவனே;

வார்-சடையில் வானதியை வைத்தவனே - நீள்சடையில் கங்கையை அணிந்தவனே; (வானதி - கங்கை);

நல்லவர்கள் தொழுதேத்தும் நன்னிலத்துப் பெருமானே - நல்லோர் வழிபடும் நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


2)

நாநலத்தால் உனையோதும் ஞானத்தைத் தந்தருளாய்

பூநலத்தை நாடியளி பொருந்துகொன்றைத் தாரினனே

கூனிலைத்த சந்திரனைக் குளிர்சடைமேல் புனைந்தவனே

நானிலத்தோர் தொழுதேத்தும் நன்னிலத்துப் பெருமானே.


நா நலத்தால் உனை ஓதும் ஞானத்தைத் தந்தருளாய் - என் நாவைக்கொண்டு உன்னைத் துதிக்கின்ற அறிவைத் தந்து அருள்வாயாக;

பூ நலத்தை நாடி அளி பொருந்து கொன்றைத்-தாரினனே - பூக்களின் தேனை நாடி வண்டுகள் அடையும் கொன்றைமாலையை அணிந்தவனே; (தார் - மாலை);

கூன் நிலைத்த சந்திரனைக் குளிர்-சடைமேல் புனைந்தவனே - வளைந்த பிறையைக் (கங்கையைத் தாங்கிய) குளிர்ந்த சடையின்மேல் அணிந்தவனே; (கூன் - வளைவு); (சம்பந்தர் தேவாரம் - 1.118.4 - "கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்");

நானிலத்தோர் தொழுதேத்தும் நன்னிலத்துப் பெருமானே - உலகத்தோர் வழிபடும் நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


3)

பூரணநின் புகழ்பாடும் போதத்தைத் தந்தருளாய்

வாரணத்தின் உரிமூடு மார்பினில்வெண் ணூலினனே

ஆரணத்துப் பொருளானே அன்றொருகண் இடந்திட்ட

நாரணனுக் காழிதந்த நன்னிலத்துப் பெருமானே.


பூரண, நின் புகழ் பாடும் போதத்தைத் தந்தருளாய் - பூரணனே, உன் புகழைப் பாடும் அறிவை எனக்குத் தந்து அருள்வாயாக; (போதம் - அறிவு; ஞானம்);

வாரணத்தின் உரி மூடு மார்பினில் வெண்ணூலினனே - யானைத்தோலால் மூடிய மார்பில் வெண்ணிறப் பூணூல் அணிந்தவனே; (வாரணம் - யானை); (உரி - தோல்);

ஆரணத்துப் பொருளானே - வேதப்பொருளாக விளங்குபவனே; (ஆரணம் - வேதம்);

அன்று ஒரு கண் இடந்து இட்ட நாரணனுக்கு ஆழி தந்த நன்னிலத்துப் பெருமானே - முன்னொரு சமயம் (ஆயிரம் தாமரையில் ஒரு பூக் குறையவும்) தன் கண்ணையே தோண்டிப் பூவாக இட்டு அர்ச்சித்த திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த, நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே; (ஆழி - சக்கரம்);


4)

சக்கரம்போல் சுழல்பிறவி தருவினையைத் தீர்த்தருளாய்

அக்கரவம் கொன்றையந்தார் அணிந்தவனே முக்கண்ணா

மிக்கரவம் செய்திமையோர் வேண்டவொரு தேரேறி

நக்கரணம் மூன்றெரித்த நன்னிலத்துப் பெருமானே.


சக்கரம் போல் சுழல்-பிறவி தருவினையைத் தீர்த்தருளாய் - சக்கரம் போலச் சுழன்றுகொண்டேயிருக்கும் பிறவிகளைத் தருகின்ற வினையைத் தீர்த்து அருள்வாயாக;

அக்கு அரவம் கொன்றையந் தார் அணிந்தவனே - எலும்பு, பாம்பு, கொன்றைமாலை இவற்றையெல்லாம் அணிந்தவனே; (அக்கு - எலும்பு);

முக்கண்ணா - நெற்றிக்கண்ணனே;

மிக்கரவம் செய்து இமையோர் வேண்ட, ஒரு தேர் ஏறி, நக்கு அரணம் மூன்று எரித்த நன்னிலத்துப் பெருமானே - பெருத்த ஒலியெழுப்பித் தேவர்கள் இறைஞ்சவும், அவர்களுக்கு இரங்கி, ஒரு தேரின்மேல் ஏறிச் சிரித்தே முப்புரங்களையும் எரித்த, நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே; (மிக்கரவம் - மிக்க அரவம்; தொகுத்தல் விகாரம்); (அரவம் - ஒலி); (நகுதல் - சிரித்தல்); (அரணம் - மதில்);


5)

அஞ்சுவினைத் தொடர்நீக்கி அடியேனுக் கருள்புரியாய்

வஞ்சியொரு பங்குடையாய் வஞ்சமிலா மார்க்கண்டர்

துஞ்சலிலா துயிர்வாழக் கூற்றுதைத்த தூயவனே

நஞ்சுதிகழ் மிடறுடையாய் நன்னிலத்துப் பெருமானே.


அஞ்சு வினைத்தொடர் நீக்கி அடியேனுக்கு அருள்புரியாய் - (நான்) அஞ்சுகின்ற வினைத்தொடரை அழித்து அடியேனுக்கு அருள்வாயாக;

வஞ்சி ஒரு பங்கு உடையாய் - உமையொருபங்கனே;

வஞ்சம் இலா மார்க்கண்டர் துஞ்சல் இலாது உயிர் வாழக் கூற்று உதைத்த தூயவனே - தூய அன்பினரான மார்க்கண்டேயர் என்றும் சாவாமல் உயிர்வாழும்படி காலனை உதைத்த நின்மலனே;

நஞ்சு திகழ் மிடறு உடையாய் - விஷத்தை நீலமணியாகக் கண்டத்தில் உடையவனே;

நன்னிலத்துப் பெருமானே - நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


6)

நூறுவிதக் கவலைகளால் நொந்தேனை அஞ்சலென்னாய்

ஆறுமத மத்தமணி அஞ்சடையாய் இன்பத்தேன்

ஊறுமலர்ப் பாதத்தாய் ஒண்டொடியோர் பாகத்தாய்

நாறுமலர்ப் பொழில்சூழ்ந்த நன்னிலத்துப் பெருமானே.


நூறுவிதக் கவலைகளால் நொந்தேனை அஞ்சல் என்னாய் - பல கவலைகளால் வருந்தும் அடியேனை "அஞ்சல்" என்று அருள்வாயாக;

ஆறு, மதமத்தம் அணி அம்-சடையாய் - கங்கை, ஊமத்தமலர் இவற்றை அணிந்த அழகிய சடையினனே; (மதமத்தம் - ஊமத்தை); (சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - "கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடி");

இன்பத்தேன் ஊறு மலர்ப்பாதத்தாய் - இன்பத்தேன் சுரக்கும் மலர்த்திருவடி உடையவனே;

ஒண்தொடி ஓர் பாகத்தாய் - அழகிய வளையல் அணிந்த உமையை ஒரு பாகத்தில் உடையவனே; (ஒண்டொடி- ஒண் தொடி - பெண்);

நாறு மலர்ப்பொழில் சூழ்ந்த நன்னிலத்துப் பெருமானே - மணம் கமழும் சோலை சூழ்ந்த நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


7)

இச்சகத்தில் பிறவிதரும் இருவினையைத் தீர்த்தருளாய்

உச்சிமிசைக் கூவிளமும் ஒண்பிறையும் புனைந்தவனே

பச்சிலையால் தொழுதார்க்கும் பரிந்தருளும் பரம்பரனே

நச்சரவக் கச்சினனே நன்னிலத்துப் பெருமானே.


இச்-சகத்தில் பிறவி தரும் இருவினையைத் தீர்த்தருளாய் - இவ்வுலகில் பிறவியைத் தரும் வினையை அழித்து அருள்வாயாக;

உச்சிமிசைக் கூவிளமும் ஒண்-பிறையும் புனைந்தவனே - திருமுடிமேல் வில்வமும் ஒளிவீசும் பிறையையும் அணிந்தவனே; (கூவிளம் - வில்வம்);

பச்சிலையால் தொழுதார்க்கும் பரிந்தருளும் பரம்பரனே - (மலர்களால் அன்றி) இலையையே தூவி வழிபட்டாலும் அவ்வன்பர்களுக்கு இரங்கி அருளும் பரம்பொருளே; (சுந்தரர் தேவாரம் - 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்");

நச்சு-அரவக் கச்சினனே - விஷப்பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவனே;

நன்னிலத்துப் பெருமானே - நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


8)

மேல்வினையின் வேரறுத்து மெய்யுணர்வைத் தந்தருளாய்

மால்வரையை இடந்தான்றன் வாய்பத்தும் இசைபாடக்

கால்விரலை ஊன்றியடர் கண்ணுதலே கல்லால்கீழ்

நால்வருக்கு மறைவிரித்த நன்னிலத்துப் பெருமானே.


மேல்வினையின் வேர்-அறுத்து மெய்யுணர்வைத் தந்தருளாய் - ஆகாமிய வினையை வேரோடு அழித்து மெய்ஞ்ஞானத்தைத் தந்து அருள்வாயாக; (மேல்வினை - ஆகாமியம்); (உணர்வு - அறிவு);

மால்-வரையை இடந்தான்தன் வாய் பத்தும் இசை பாடக் கால்விரலை ஊன்றி அடர் கண்ணுதலே - பெரிய மலையான கயிலையைப் பெயர்த்த இராவணனது பத்துவாய்களும் இசைபாடித் துதிக்கும்படி கால்விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய, நெற்றிக்கண்ணனே; (மால் - பெரிய); (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (அடர்த்தல் - நசுக்குதல்);

கல்லால்கீழ் நால்வருக்கு மறை விரித்த நன்னிலத்துப் பெருமானே - கல்லால மரத்தின்கீழ்ச் சனகாதியர் நால்வருக்கும் மறைப்பொருளை உபதேசித்த, நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


9)

அள்ளலிலே அழுத்துவினை அழித்தடியேற் கருள்புரியாய்

துள்ளுமறி துடிமழுவாள் சுடர்சூலம் தரித்தவனே

புள்ளிவரும் மால்பிரமன் போற்றநின்ற பரஞ்சுடரே

நள்ளிருளில் நட்ட(ம்)மகிழ் நன்னிலத்துப் பெருமானே.


அள்ளலிலே அழுத்து வினை அழித்து அடியேற்கு அருள்புரியாய் - பிறவி என்ற சேற்றில் அழுத்துகின்ற வினையை அழித்து அடியேனுக்கு அருள்வாயாக; (அள்ளல் - சேறு; நரகம்); (சுந்தரர் தேவாரம் - 7.34.8 - "பூம்புகலூரைப் பாடுமின் புலவீர்காள் அள்ளற்பட் டழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவில்லையே");

துள்ளு மறி, துடி, மழுவாள், சுடர், சூலம் தரித்தவனே - துள்ளும் மான்கன்று, உடுக்கை, மழு, நெருப்பு, திரிசூலம் இவற்றையெல்லாம் கையில் ஏந்தியவனே; (சுடர் சூலம் - 1. சுடரும் சூலமும்; 2. சுடர்கின்ற சூலம் என்று வினைத்தொகை);

புள் இவரும் மால் பிரமன் போற்ற நின்ற பரஞ்சுடரே - (கருடன் என்ற) பறவையை வாகனமாக உடைய திருமாலும் பிரமனும் துதிக்கும்படி ஓங்கிய பரஞ்சோதியே; (புள் - பறவை); (இவர்தல் - ஏறுதல்);

நள்ளிருளில் நட்டம் மகிழ் நன்னிலத்துப் பெருமானே - இருளில் (சர்வசம்ஹார காலத்தில்) திருநடம் செய்கின்ற, நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


10)

வீணரவம் செய்துழலும் மிண்டருரை பொய்விடுமின்

பேணடியார் துயர்தீர்க்கும் பேரின்பன் பெண்ணெனவும்

ஆணெனவும் ஆயபரன் அரணெய்ய அரவொன்றை

நாணெனவிற் கோத்தபிரான் நன்னிலத்துப் பெருமானே.


வீணர் அவம் செய்து (/வீண் அரவம் செய்து) உழலும் மிண்டர் உரை பொய் விடுமின் - வீணர்களும் அவமே செய்து உழல்கின்ற கல்நெஞ்சர்களுமான அவர்கள் சொல்கின்ற பொய்யை நீங்குங்கள்; ("வீண் அரவம் செய்து உழலும்" என்று பிரித்துப் பொருள்கொண்டால் - "பயனின்றிச் சத்தமிட்டுத் திரிகின்ற"); (மிண்டர் - கல் நெஞ்சர்; உருகாத மனம் உடையவர்கள்);

பேணு அடியார் துயர் தீர்க்கும் பேரின்பன் - போற்றும் பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கின்றவன், பேரின்பம் உடையவன்; பேரின்பத்தைத் தருபவன்;

பெண் எனவும் ஆண் எனவும் ஆய பரன் - அர்த்தநாரீஸ்வரன் ஆன பரமன்;

அரண் எய்ய அரவு ஒன்றை நாண் என விற் கோத்த பிரான் - முப்புரங்களை எய்வதற்காக மேருமலையை வில்லாக்கி அதில் வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டியவன்;

நன்னிலத்துப் பெருமானே - நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமான்;


11)

அம்புதொடு மன்மதனை அனங்கனென ஆக்கியவன்

கொம்பியலும் மாதினையோர் கூறுடையான் ஏறுடையான்

வம்பியலும் பாமாலை மறவாத வாயினராய்

நம்பியவர் நற்றுணைவன் நன்னிலத்துப் பெருமானே.


அம்பு தொடு மன்மதனை அனங்கன் என ஆக்கியவன் - மலர்க்கணையை ஏவிய காமனை உருவம் அற்றவன் என்று செய்தவன்; (ஆக்குதல் - செய்தல்);

கொம்பு இயலும் மாதினை ஓர் கூறு உடையான் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடையவன்; (இயல்தல் - ஒத்தல்);

ஏறு உடையான் - இடபவாகனம் உடையவன்;

வம்பு இயலும் பாமாலை மறவாத வாயினராய் நம்பியவர் நற்றுணைவன் - மணம் கமழும் தமிழ்ப்பாமாலைகளை என்றும் பாடி விரும்பி வழிபடும் அன்பர்களுக்கு நல்ல துணையாக உள்ளவன்; (வம்பு - வாசனை); (இயல்தல் - பொருந்துதல்); (நம்புதல் - 1. விரும்புதல். 2. நம்பிக்கை வைத்தல்);

நன்னிலத்துப் பெருமானே - நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment