2017-07-22
V.041 - "மனத்துக்கு ஒரு மடல்"
---------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
1)
மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த
வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்
இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்
தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?
வனமே, இனமே - இவற்றில் ஏ - வினா ஏகாரம்;
கேட்டல் - 1. செவிக்குப் புலனாக்குதல்; 2. ஏற்றுக்கொள்ளுதல்;
2)
பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற
குணங்காக்கும் மடநெஞ்சே! கூற்றுவன்றன் வரவால்வீழ்
நிணங்காக்கும் செயலொன்றே நினைந்தாயே! நரகடையா
வணங்காக்கும் மாதேவன் மலரடியை மறந்தாயே!
காத்தல் - 1. பாதுகாத்தல்; 2. அனுஷ்டித்தல்;
திரிதல் - உழல்தல்; குணம் கெடுதல்;
வீழ்தல் - விழுதல்;
நிணம் - மாமிசம்; இங்கே உடலைக் குறித்தது;
நரகு அடையா-வணம் காக்கும் - நரகத்தில் வீழாதபடி காக்கின்ற;
3)
மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்
பொருத்துவது வந்திலையே! பொருதுகின்ற என்மனமே!
வருத்துவதை விட்டொழித்தென் மாற்றத்தைக் கேள்;நல்லார்
கருத்துறையும் கருத்தனவன் கழல்வாழ்த்தக் கற்றுய்யாய்!
மாற்றுமனம் - Mind replacement;
வந்திலையே - வரவில்லையே;
பொருதுதல் - போரிடுதல்;
மாற்றத்தை - வார்த்தையை; (மாற்றம் - வார்த்தை; பரிகாரம்);
நல்லார் கருத்து உறையும் கருத்தன் அவன் கழல் வாழ்த்தக் கற்று உய்யாய் - நல்லவர்கள் சிந்தையில் உறைகின்ற தலைவனான சிவபெருமான் திருவடியை வாழ்த்தக் கற்று உய்வாயாக; (கருத்தன் - கர்த்தா - தலைவன்);
4)
காமமெனும் கடலாழ்ந்து கலங்குகின்றாய், கண்ணுதலான்
நாமமெனும் புணையிருந்தும் நாடாமல்! நச்சரவைத்
தாமமெனத் தரித்தபிரான், தாழ்சடையன், அடியார்க்குச்
சேமமெனும் நிலையருளும் சிவலோகன் நினைமனமே!
காமம் - ஆசை;
புணை - தெப்பம்;
தாமம் - கயிறு; மாலை; வடம்;
சேமம் - க்ஷேமம் - இன்பம்; நல்வாழ்வு;
5)
ஒருபோதன், உமைபங்கன், ஒளிவீசும் மழுவாளன்,
இருபோதும் எம்பெருமான் இணையடியை நீஎண்ணி
இரு,போதும்! ஒருபோதும் இடரில்லை, மடநெஞ்சே!
வருகாலம் தனில்மகிழ மடலிதனை மதிநெஞ்சே!
ஒரு போதன் - ஒப்பற்ற ஞானவடிவினன்;
இருபோதும் - 1. இரண்டு பொழுதிலும்; 2. இருப்பாயாக; அதுவே போதும்;
ஒருபோதும் இடர் இல்லை - என்றும் துன்பம் இல்லை;
வருகாலம் - வினைத்தொகை - எதிர்காலம்;
6)
கடலையன்று கடைந்தக்கால் கடுநஞ்சம் வரக்கண்டு,
"சுடலையென்றும் பிரியாதாய் துணை"யென்று சுரர்வேண்ட,
நடலையின்றி உண்டருள்செய் நம்பா,என் மனத்துக்கோர்
மடலையின்று வரைந்தேன்,இம் மடநெஞ்சை நெறிப்படுத்தாய்!
கடைந்தக்கால் - கடைந்தபொழுது;
கடுநஞ்சம் - கொடிய விஷம்;
சுடலை - சுடுகாடு;
நடலை - வஞ்சம்; பொய்; துன்பம்;
நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - விரும்பப்படுபவன்; விரும்பத்தக்கவன்;
மடல் - ஏடு; ஓலை;
வரைதல் - எழுதுதல்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment