Tuesday, May 6, 2025

V.041 - மனமே நீ மிருகங்கள்

2017-07-22

V.041 - "மனத்துக்கு ஒரு மடல்"

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


1)

மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த

வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்

இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்

தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?


வனமே, இனமே - இவற்றில் ஏ - வினா ஏகாரம்;

கேட்டல் - 1. செவிக்குப் புலனாக்குதல்; 2. ஏற்றுக்கொள்ளுதல்;


2)

பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற

குணங்காக்கும் மடநெஞ்சே! கூற்றுவன்றன் வரவால்வீழ்

நிணங்காக்கும் செயலொன்றே நினைந்தாயே! நரகடையா

வணங்காக்கும் மாதேவன் மலரடியை மறந்தாயே!


காத்தல் - 1. பாதுகாத்தல்; 2. அனுஷ்டித்தல்;

திரிதல் - உழல்தல்; குணம் கெடுதல்;

வீழ்தல் - விழுதல்;

நிணம் - மாமிசம்; இங்கே உடலைக் குறித்தது;

நரகு அடையா-வணம் காக்கும் - நரகத்தில் வீழாதபடி காக்கின்ற;


3)

மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்

பொருத்துவது வந்திலையே! பொருதுகின்ற என்மனமே!

வருத்துவதை விட்டொழித்தென் மாற்றத்தைக் கேள்;நல்லார்

கருத்துறையும் கருத்தனவன் கழல்வாழ்த்தக் கற்றுய்யாய்!


மாற்றுமனம் - Mind replacement;

வந்திலையே - வரவில்லையே;

பொருதுதல் - போரிடுதல்;

மாற்றத்தை - வார்த்தையை; (மாற்றம் - வார்த்தை; பரிகாரம்);

நல்லார் கருத்து உறையும் கருத்தன் அவன் கழல் வாழ்த்தக் கற்று உய்யாய் - நல்லவர்கள் சிந்தையில் உறைகின்ற தலைவனான சிவபெருமான் திருவடியை வாழ்த்தக் கற்று உய்வாயாக; (கருத்தன் - கர்த்தா - தலைவன்);


4)

காமமெனும் கடலாழ்ந்து கலங்குகின்றாய், கண்ணுதலான்

நாமமெனும் புணையிருந்தும் நாடாமல்! நச்சரவைத்

தாமமெனத் தரித்தபிரான், தாழ்சடையன், அடியார்க்குச்

சேமமெனும் நிலையருளும் சிவலோகன் நினைமனமே!


காமம் - ஆசை;

புணை - தெப்பம்;

தாமம் - கயிறு; மாலை; வடம்;

சேமம் - க்ஷேமம் - இன்பம்; நல்வாழ்வு;


5)

ஒருபோதன், உமைபங்கன், ஒளிவீசும் மழுவாளன்,

இருபோதும் எம்பெருமான் இணையடியை நீஎண்ணி

இரு,போதும்! ஒருபோதும் இடரில்லை, மடநெஞ்சே!

வருகாலம் தனில்மகிழ மடலிதனை மதிநெஞ்சே!


ஒரு போதன் - ஒப்பற்ற ஞானவடிவினன்;

இருபோதும் - 1. இரண்டு பொழுதிலும்; 2. இருப்பாயாக; அதுவே போதும்;

ஒருபோதும் இடர் இல்லை - என்றும் துன்பம் இல்லை;

வருகாலம் - வினைத்தொகை - எதிர்காலம்;


6)

கடலையன்று கடைந்தக்கால் கடுநஞ்சம் வரக்கண்டு,

"சுடலையென்றும் பிரியாதாய் துணை"யென்று சுரர்வேண்ட,

நடலையின்றி உண்டருள்செய் நம்பா,என் மனத்துக்கோர்

மடலையின்று வரைந்தேன்,இம் மடநெஞ்சை நெறிப்படுத்தாய்!


கடைந்தக்கால் - கடைந்தபொழுது;

கடுநஞ்சம் - கொடிய விஷம்;

சுடலை - சுடுகாடு;

நடலை - வஞ்சம்; பொய்; துன்பம்;

நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - விரும்பப்படுபவன்; விரும்பத்தக்கவன்;

மடல் - ஏடு; ஓலை;

வரைதல் - எழுதுதல்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment