Tuesday, April 26, 2022

06.01.123 - சிவன் - பிள்ளையார் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2010-09-11

06.01.123 - சிவன் - பிள்ளையார் - சிலேடை

-----------------------------------------------

மூத்தவனைத் தந்த முதல்வனை மாதங்க

மூர்த்தியை மோதகத்தைக் கைகாட்டிக் - காத்தருளும்

அண்ணலை நீற்றை அணிகர மைந்தனை

எண்ணி இருப்பேன் இனி.


சொற்பொருள்:

மாதங்கம் - 1. மாதங்கம் (யானை); / 2. மாது அங்கம்;

மோதகம் - 1. மோதகம் (கொழுக்கட்டை); / 2. மோது அகம்;

கரமைந்தன் - 1. கரம் ஐந்தன்; / 2. கர மைந்தன்;

கரம் - 1. கை; 2. gara. Poison; நஞ்சு.

மைந்தன் - 1. மகன்; / 2. வீரன்;


பிள்ளையார்:

மூத்தவனை - மூத்த குமாரனை;

தந்த முதல்வனை - தந்தத்தை உடைய முதற்பொருளை;

மாதங்க மூர்த்தியை - யானைமுகம் உடையவனை;

மோதகத்தைக் கைகாட்டிக் காத்தருளும் அண்ணலை - கொழுக்கட்டையைக் கையில் வைத்திருக்கும் தலைவனை;

நீற்றை அணி கரம் ஐந்தனை - திருநீற்றைப் பூசிய ஐந்து கரத்தனை;

எண்ணி இருப்பேன் இனி - என்றும் தியானிப்பேன்;


சிவன்:

மூத்தவனைத் தந்த முதல்வனை - பிள்ளையாரை ஈன்ற பெருமானை;

மாது அங்க மூர்த்தியை - உமை ஒரு பாகம் திகழும் அர்த்தநாரீஸ்வரனை;

மோது அகத்தைக் கைகாட்டிக் காத்தருளும் அண்ணலை - (ஆசைகள்) அலைமோதுகின்ற / தாக்குகின்ற மனத்தை அபய-கரத்தைக் காட்டிக் காக்கும் தலைவனை;

நீற்றை அணி கர மைந்தனை - திருநீற்றைப் பூசிய கரங்களை உடைய வீரனை;

(Note: "நீற்றை அணிகர மைந்தனை" என்ற சொற்றொடரில் "அணி" என்ற சொல்லை இருமுறை இயைத்து, "நீற்றை அணி மைந்தனை & அணி கர மைந்தனை" என்று கொண்டு, "அணிகர(ம்) மைந்தனை" = "கரம் அணி மைந்தனை" என்று சொற்களை முன்பின் ஆக்கிப் பொருள்கொள்ளுதலும் கூடும். அப்படிக் கொண்டால் - "திருநீற்றைக் கையில் பூசிய வீரனை & விடத்தை அணிந்த வீரனை");

எண்ணி இருப்பேன் இனி - என்றும் தியானிப்பேன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

1 comment: