Thursday, April 21, 2022

6.3.53 - சிலையுடை - பேரானை - மடக்கு

06.03 – மடக்கு

2010-04-17

6.3.53) சிலையுடை - பேரானை - மடக்கு

-------------------------

சிலையுடை என்பவர் தேறார் கயிலைச்

சிலையுடை ஈசனுக்கு வெற்பே - சிலையுடை

பேரானை ஈருரியே உய்திபெற ஆயிரத்தெண்

பேரானை நாவேநீ பேசு.


பதம் பிரித்து:

"சிலை உடை" என்பவர் தேறார்; கயிலைச்

சிலையுடை ஈசனுக்கு வெற்பே - சிலை; உடை

பேர் ஆனை ஈருரியே; உய்தி பெற, ஆயிரத்து எண்

பேரானை நாவே நீ பேசு.


சிலை - 1. விக்கிரகம்; 2. மலை; 3. வில்;

உடை - 1. உடைத்தல்; தகர்த்தல்; 2. உடைமை (The state of possessing, having, owning); 3. ஆடை;

தேறார் - அறியாதார் (Ignorant persons);

பேரானை - 1. பேர் ஆனை - பெரிய யானை; 2. பெயர்கள் உள்ளவனை;

ஈருரி - ஈர் உரி - உரித்த தோல்; (ஈர்த்தல் - உரித்தல்); (உரி - தோல்);

பேசு - துதித்தல்;


"விக்கிரகங்களை உடை" என்பவர்கள் அறிவிலார்; கயிலாய மலையில் இருக்கும் சிவபெருமானுக்கு (முப்புரம் எரித்தபொழுது) மேருமலையே வில்; பெரிய யானையின் உரித்த தோலே போர்த்தும் ஆடை; என் நாவே, நீ உய்வு பெறுவதற்கு, 1008 திருநாமங்கள் உடைய ஈசனைத் துதி.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment