Tuesday, April 26, 2022

06.02.126 – பொது - அகமதில் ஊற்றெனத் - (வண்ணம்)

06.02.126 – பொது - அகமதில் ஊற்றெனத் - (வண்ணம்)


2010-09-14

6.2.126) அகமதில் ஊற்றெனத் - பொது

-------------------------

தனதன தாத்தனத் .. தனதான

(சருவிய சாத்திரத் திரளான - திருப்புகழ் - பொது)


அகமதி லூற்றெனத் .. தினமாசை

.. அவைமிக ஆர்த்தெழச் .. சுழலாமல்

சுகநிலை கூட்டுமத் .. திருநாமம்

.. சொலியுனை ஏத்திடப் .. பெறுவேனோ

இகலிய மாற்கயற் .. கரியானே

.. இடுபலி ஏற்றிடத் .. திரிவோனே

புகழடி யார்க்குநற் .. றுணையானாய்

.. புரிசடை மேற்பிறைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

அகம்-அதில் ஊற்று எனத் தினம் ஆசை

.. அவை மிக ஆர்த்து எழச் சுழலாமல்,

சுகநிலை கூட்டும் அத்-திருநாமம்

.. சொலி உனை ஏத்திடப் பெறுவேனோ?

இகலிய மாற்கு அயற்கு அரியானே;

.. இடுபலி ஏற்றிடத் திரிவோனே;

புகழ்-அடியார்க்கு நற்றுணை ஆனாய்;

.. புரிசடைமேற் பிறைப் பெருமானே.


அகம்-தில் ஊற்று எனத் தினம் ஆசை-அவை மிக ஆர்த்து எழச் சுழலாமல் - என் மனத்தில் ஊற்றுப் போலத் தினமும் ஆசைகள் மிக ஒலித்துப் பொங்கி எழ அதனால் வருந்திக் கலங்காமல்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (சுழல்தல் - மனம் கலங்குதல்);

சுகநிலை கூட்டும் அத்-திருநாமம் சொலினை ஏத்திடப் பெறுவேனோ - இன்பநிலையை அளிக்கும் அந்தத் திருவைந்தெழுத்தைச் சொல்லி உன்னை துதிக்க அருள்வாயாக; (சொலி - சொல்லி - இடைக்குறையாக வந்தது); (உனை - உன்னை);

இகலிய மாற்கு அயற்கு அரியானே - முரண்பட்ட திருமாலுக்கும் பிரமனுக்கும் அறிய ஒண்ணாதவனே; (இகல்தல் - மாறுபடுதல்; போட்டியிடுதல்); (மாற்கு - மால்+கு - மாலுக்கு); (அயற்கு - அயனுக்கு - பிரமனுக்கு);

இடுபலி ஏற்றிடத் திரிவோனே - பிச்சையை ஏற்க உழல்பவனே; (பலி - பிச்சை);

புகழ்-டியார்க்கு நற்றுணைனாய் - புகழும் பக்தர்களுக்கு நல்ல துணை ஆனவனே;

புரிசடைமேற் பிறைப் பெருமானே - முறுக்குண்ட சடைமேல் பிறைச்சந்திரனைச் சூடிய பெருமானே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment