Saturday, April 23, 2022

6.5.14 - மாலை - மடக்கு

06.05 – பலவகை

2010-07-04

6.5.14) மாலை - மடக்கு

----------------------------------------

(இன்னிசை வெண்பா)


மாலை அழித்து மதிதனைத் தந்தருளாய்

மாலை ஒளியாய் மணிகண்டா மார்பிலரா

மாலை அணிவாய் வணங்கித் தமிழ்மணி

மாலை புனையெனக்கு வந்து.


தம் பிரித்து:

மாலை அழித்து, மதிதனைத் தந்தருளாய்;

மாலை ஒளியாய்; மணிகண்டா; மார்பில் அரா

மாலை அணிவாய்; வணங்கித் தமிழ்-மணி-

மாலை புனை எனக்கு உவந்து.


சொற்பொருள்:

மாலை - 1. அறியாமையை; 2. சாயங்காலம்; 3. பூமாலை; வடம்; 4. பாமாலை;

மதி - அறிவு;

மணி - அழகு; இரத்தினம்;

புனைதல் - தொடுத்தல்; அணிவித்தல்;

எனக்குவந்து - 1. எனக்கு உவந்து; 2. எனக்கு வந்து;

உவத்தல் - மகிழ்தல்;


மாலை ஒளியாய்; மணிகண்டா - அந்தி வண்ணனே! நீலகண்டனே!

மார்பில் அரா மாலை அணிவாய் - மார்பில் பாம்பை மாலையாகப் பூண்டவனே!

வணங்கித் தமிழ்மணி மாலை புனை எனக்கு வந்து - உன்னைப் பணிந்து, தமிழ்ச்சொற்கள் என்ற மணிகளால் ஆன, அழகிய இரத்தின மாலை அன்ன தமிழ்ப்பாமாலை தொடுத்து அணிவிக்கும் எனக்கு உவந்து;

மாலை அழித்து மதியைத் தருவாயே - என் அறியாமையைப் போக்கி அறிவைக் கொடுத்தருள்வாயாக.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment