Monday, April 18, 2022

6.3.52 - அகலா - மகத்தொளியாய் - மடக்கு

06.03 – மடக்கு


2010-02-27

6.3.52) அகலா - மகத்தொளியாய் - மடக்கு

-------------------------

அகலா மதியேனும் அல்லலற என்றும்

அகலா அளியெனுநெய் ஆரும் - அகலா

மகத்தொளியாய் நிற்பாய் அயன்மால் அறியா

மகத்தொளியாய் தாராய் வரம்.


பதம் பிரித்து:

அகலா மதியேனும் அல்லல் அற, என்றும்

அகலா அளி எனும் நெய் ஆரும் அகல் ஆம்

அகத்து ஒளியாய் நிற்பாய், அயன் மால் அறியா

மகத்து ஒளியாய், தாராய் வரம்.


அகல்தல் - 1. விருத்தியடைதல்; விரிதல்; 2. நீங்குதல்;

அளி - அன்பு;

அகல் - விளக்குத் தகழி;

மகத்து - பெரியது; பெருமையானது;

ஒளி - 1. வெளிச்சம்; 2. மறைத்தல் (ஒளித்தல்);

ஒளியாய் - 1. ஒளித்துக்கொள்ளாதவனே; ஒளி ஆகி; 2. ஒளி உடையவனே;


அகலா மதியேனும் அல்லல் அற - சிறுமதி உடைய அடியேனும் துன்பம் எல்லாம் தீரும்படி;

அகலா அளி எனும் நெய் ஆரும் அகல் ஆம் கத்து ஒளியாய் நிற்பாய் - நீங்காத அன்பு என்ற நெய் நிறைந்த அகல் ஆன நெஞ்சில் உன்னை மறைத்துக்கொள்ளாமல் ஒளி ஆகி நிற்பவனே; (பக்தர்களது உள்ளம் என்ற அகலில் திகழ்கின்ற ஜோதி);

அயன் மால் அறியா மகத்து ஒளியாய் - பிரமன் திருமால் இவர்களால் அறிய ஒண்ணாத பெருமையுடைய ஜோதி ஆனவனே;

தாராய் வரம் - வரம் தருவாயாக;


(அப்பர் தேவாரம் - 4.75.4 -

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக

மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரி மயக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே.

-- உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாகப், பசுஞானமான உணர்வே நெய்யாக, உயிரே திரியாகச், சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி, அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில், கடப்பமலர் மாலையை விரும்பி அணியும் முருகனுக்குத் தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம்.)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment