Sunday, March 11, 2018

04.15 – குடவாயில் (குடவாசல்)


04.15 – குடவாயில் (குடவாசல்)



2013-10-07
குடவாயில் (இக்கால வழக்கில் - 'குடவாசல்')
---------------
(கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.12.1 - "மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விட முண்ட");
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா ");



* இறைவன் தன்மைகளைப் பாடும் பாடல்கள். அவனைத் தொழுக என்பது குறிப்பு.



1)
பாலற்கொலை செய்யப்படு வேகத்தொடு பாய்ந்த
காலற்கொரு கூற்றாகிய காலன்கரி காடன்
பாலைத்துறை நல்லூர்அணி பட்டீச்சரம் மேயான்
கோலப்பொழில் சூழுங்குட வாயிற்பெரு மானே.



பதம் பிரித்து:
பாலன் கொலைசெய்யப் படு வேகத்தொடு பாய்ந்த
காலற்கு ஒரு கூற்று ஆகிய காலன்; கரி காடன்;
பாலைத்துறை, நல்லூர், அணி பட்டீச்சரம் மேயான்;
கோலப் பொழில் சூழும் குடவாயிற் பெருமானே.


மார்க்கண்டேயரைக் கொல்வதற்காக மிகுந்த கோபத்தோடு மிக விரைந்து அவர்மேல் பாய்ந்த எமனுக்கே ஓர் எமன் ஆகிய காலினை உடையவன்; சுடுகாட்டில் ஆடுபவன்; திருப்பாலைத்துறை, திருநல்லூர், அழகிய பட்டீஸ்வரம் என்ற தலங்களில் உறைபவன்; அழகிய சோலை சூழ்ந்த திருக்குடவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான். அப்பெருமானைத் தொழுவோம்;


இலக்கணக் குறிப்பு :
பாலற்கொலைசெய்ய - பாலனைக் கொலைசெய்ய; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் பாலனைக் கொலைசெய்ய என்பது "பாலற்கொலைசெய்ய" என்று வரும்;
ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து:
#101. உயர்திணைப் பெயரீற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத்தொகையினும் திரியும் எனக் கொள்க.



2)
எயிலாரழல் சேரக்கணை எய்தானெரு தேறி
அயிலார்திரி சூலன்புனல் ஆருஞ்சடை அண்ணல்
மயிலாருமை மங்கைக்கொரு பங்கைத்தர வல்லான்
குயிலார்பொழில் சூழுங்குட வாயிற்பெரு மானே.



எயில் ஆரழல் சேரக் கணை எய்தான் - முப்புரங்கள் தீப்புகக் கணையை எய்தவன்;
எருதேறி - இடபவாகனன்;
அயில் ஆர் திரிசூலன் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்தியவன்;
புனல் ஆரும் சடை அண்ணல் - கங்கையைச் சடையில் உடையவன்;
மயில் ஆர் உமை மங்கைக்கு ஒரு பங்கைத் தர வல்லான் - மயில் போன்ற உமைக்கு இடப்பக்கத்தைத் தந்தவன்;
குயில் ஆர் பொழில் சூழும் குடவாயிற் பெருமானே - குயில்கள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த குடவாயிலில் உறையும் சிவபெருமான்;



3)
பார்த்தன்படை வேண்டிப்பணி பாந்தட்சடை அண்ணல்
ஓத்தின்பொருள் ஆனானொரு நால்வர்க்குரை பட்டன்
தீர்த்தன்திரு நீற்றன்சிவ லோகன்முடி வில்லாக்
கூத்தன்குளிர் சோலைக்குட வாயிற்பெரு மானே.



பார்த்தன் படை வேண்டிப் பணி பாந்தட்சடை அண்ணல் - அருச்சுனன் பாசுபட்ஹாஸ்திரம் வேண்டி வழிபட்ட பெருமான் சடையில் பாம்பை உடையவன்; (பாந்தள் - பாம்பு );
ஓத்தின் பொருள் ஆனான் - வேதத்தின் பொருள் ஆனவன்; (ஓத்து - வேதம் );
ஒரு நால்வர்க்கு உரை பட்டன் - தட்சிணாமூர்த்தி; (பட்டன் - வேதத்தில் வல்லவன்; ஆசாரியன்; புலவன் );
தீர்த்தன்; திரு நீற்றன்; சிவலோகன் - தூவபன், திருநீற்றைப் பூசியவன், சிவலோகத்தில் இருப்பவன்;
முடிவு இல்லாக் கூத்தன் - என்றும் திருக்கூத்துச் செய்பவன்;
குளிர் சோலைக் குடவாயிற் பெருமானே - குளிர்ந்த சோலை சூழ்ந்த குடவாயிலில் உறையும் சிவபெருமான்;



4)
தளமோங்கிய பூமாலைகள் சாத்தித்தொழு வார்க்கு
வளமோங்கிட வாரித்தரும் வள்ளல்கடல் நஞ்சைக்
களமாங்கொரு காரார்மணி செய்தான்கரு வண்டார்
குளிர்பூம்பொழில் சூழுங்குட வாயிற்பெரு மானே.



பதம் பிரித்து:
தளம் ஓங்கிய பூமாலைகள் சாத்தித் தொழுவார்க்கு
வளம் ஓங்கிட வாரித் தரும் வள்ளல்; கடல் நஞ்சைக்
களம் ஆங்கு ஒரு கார் ஆர் மணி செய்தான்; கரு வண்டு ஆர்
குளிர் பூம் பொழில் சூழும் குடவாயிற் பெருமானே.


தளம் ஓங்கிய பூமாலைகள் - இலைகளும் (வில்வம், வன்னி) உயர்ந்த பூக்களும் தொடுக்கப்பெற்ற மாலைகள்; ("சிறந்த இதழ்களையுடைய பூக்களால் தொடுத்த மாலைகள்" என்றும் பொருள்கொள்ளலாம்); (தளம் - இலை; பூவிதழ்);
(சம்பந்தர் தேவாரம் - 2.98.2 - "அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளம் தொடுத்துடன் சடைப்பெய்தாய்" - சிவபிரான் சடையில், அகத்திப்பூ, வன்னியிலை, கொன்றைமலர், வில்வம் என்பவற்றை அடுத்தடுத்து வைத்துத் தொடுத்த மாலையை அணிந்துளான்);
சாத்துதல் - அணிதல்; அலங்கரித்தல்;
களம் ஆங்கு - கண்டத்தில்; (களம் - கண்டம்); (ஆங்கு - அவ்விடம்; ஏழனுருபு );
கார் ஆர் மணி - கருமை பொருந்திய மணி;
கரு வண்டு ஆர் குளிர் பூம் பொழில் - கருவண்டுகள் ரீங்காரம் செய்யும் குளிர்ந்த அழகிய சோலை;



5)
நஞ்சத்தினை உண்ணத்தரு வஞ்சச்சமண் ஆதர்
அஞ்சத்தமிழ் பாடிப்பணி அப்பர்க்கருள் அண்ணல்
வஞ்சிக்கொரு பங்கைத்தரும் மைந்தன்மழு வாளன்
குஞ்சிப்பிறை கொண்டான்குட வாயிற்பெரு மானே.



பதம் பிரித்து:
நஞ்சத்தினை உண்ணத் தரு வஞ்சச் சமண் ஆதர்
அஞ்சத், தமிழ் பாடிப் பணி அப்பர்க்கு அருள் அண்ணல்;
வஞ்சிக்கு ஒரு பங்கைத் தரும் மைந்தன்; மழுவாளன்;
குஞ்சிப் பிறை கொண்டான்; குடவாயிற் பெருமானே.


ஆதர் - குருடர்; அறிவிலிகள்; தமிழ் - தேவாரம்; அப்பர் - திருநாவுக்கரசர்; வஞ்சி - பெண்; மைந்தன் - கணவன்; இளைஞன்; வீரன்; குஞ்சி - தலை;
குஞ்சிப் பிறை கொண்டான் - குஞ்சியின்கண் பிறையை அணிந்தவன்;
(இலக்கணக் குறிப்பு : ஏழாம் வேற்றுமைத் தொகையில் வரும் வலி மிகும். காட்டிடை+ சென்றான் = காட்டிடைச்சென்றான். குடி + பிறந்தார் = குடிப்பிறந்தார்.);



6)
பாரார்தொழும் ஈசன்பணி பத்தர்க்கிடர் தீர்ப்பான்
ஏரார்மணி கண்டந்திகழ் எம்மானிள நாகம்
நீரார்சடை மேலேநில வொன்றுந்நிலை செய்தான்
கூரார்மழு வாளன்குட வாயிற்பெரு மானே.



பதம் பிரித்து:
பாரார் தொழும் ஈசன்; பணி பத்தர்க்கு இடர் தீர்ப்பான்;
ஏர் ஆர் மணி கண்டம் திகழ் எம்மான்; இள நாகம்,
நீர் ஆர் சடை மேலே நிலவு ஒன்றும் நிலை செய்தான்;
கூர் ஆர் மழுவாளன்; குடவாயிற் பெருமானே.


பாரார் - உலகத்தார் ; (அப்பர் தேவாரம் - 6.22.1 - "பாரார் பரவும் பழனத் தானைப்"); ஏர் - அழகு; ஒன்றுந்நிலை - ஒன்றும் நிலை - ஓசை கருதி நகர ஒற்று விரித்தல் விகாரம்;
இள நாகம், நீர் ஆர் சடை மேலே நிலவு ஒன்றும் நிலை செய்தான் - கங்கை பொருந்திய சடைமேல் பாம்பும் சந்திரனும் சேர்ந்து இருக்குமாறு செய்தவன்;



7)
வேதத்தினன் வெண்ணூலணி மார்பன்விடை யேறி
போதைக்கழல் இட்டுப்புகழ் வார்க்குப்புகல் ஆகி
வாதைக்கிடம் ஆம்பூமிசை வாராநிலை வைத்தான்
கோதைக்கிடம் ஈந்தான்குட வாயிற்பெரு மானே.



பதம் பிரித்து:
வேதத்தினன்; வெண்ணூல் அணி மார்பன்; விடையேறி;
போதைக் கழல் இட்டுப் புகழ்வார்க்குப் புகல் ஆகி,
வாதைக்கு இடம் ஆம் பூமிசை வாரா நிலை வைத்தான்;
கோதைக்கு இடம் ஈந்தான்; குடவாயிற் பெருமானே.


போது - பூ; மலர்; புகல் ஆகி - பற்றுக்கோடு ஆகி; (புகல் - துணை; பற்றுக்கோடு); வாதை - துன்பம்; பூமிசை வாரா நிலை - பூமியின்மேல் பிறவாத நன்னிலை; கோதை - பெண்;



8)
அமரொன்றிலன் ஆட்டும்வரை மேலோர்விரல் ஊன்றிக்
கமைகொண்டொரு வாளும்தரும் ஈசன்கழ லாலே
நமனெஞ்சினில் அன்றெற்றிய நம்பன்மிக நல்லன்
குமைநஞ்சினை உண்டான்குட வாயிற்பெரு மானே.



பதம் பிரித்து:
அமர் ஒன்று இலன் ஆட்டும் வரை மேல் ஓர் விரல் ஊன்றிக்,
கமைகொண்டு ஒரு வாளும் தரும் ஈசன்; கழலாலே
நமன் நெஞ்சினில் அன்று எற்றிய நம்பன்; மிக நல்லன்;
குமை நஞ்சினை உண்டான்; குடவாயிற் பெருமானே.


அமர் ஒன்று இலன் - இராவணன் - தன்னை எவரும் எதிர்த்துப் போர் செய்யாத பெரும் வலிமை உடையவன்; சிவபெருமான் மேல் அன்பு இல்லாதவன்; (அமர் - யுத்தம்; சண்டை; விருப்பம் );
(சம்பந்தர் தேவாரம் - 1.116.8 - "செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே" - செரு இல் அரக்கன் - போரில்லாத இராவணன். திக்கு விஜயம் பண்ணிப் போரில்லாமையால் தருக்கிக் கயிலையை எடுத்தானாதலின் இங்ஙனம் கூறினார்);


கமை - அருள்; கழல் - கழல் அணிந்த திருவடி; எற்றுதல் - உதைத்தல்; நம்பன் - விரும்பத்தக்கவன்; குமைத்தல் - கொல்லுதல்;



9)
இடிபோலொலி ஏற்றின்மிசை ஏறும்பர மேட்டி
துடிபோலிடை மாதோர்புடை ஏற்றான்துணை இல்லான்
அடிமாலலர் மேலான்முடி காணாவழல் ஆனான்
கொடிமேல்விடை கொண்டான்குட வாயிற்பெரு மானே.



பதம் பிரித்து:
இடிபோல் ஒலி ஏற்றின்மிசை ஏறும் பரமேட்டி;
துடிபோல் இடை மாது ஓர் புடை ஏற்றான்; துணை இல்லான்;
அடி மால், அலர் மேலான் முடி காணா அழல் ஆனான்;
கொடிமேல் விடை கொண்டான்; குடவாயிற் பெருமானே.


பரமேட்டி - பரம்பொருள் - சிவன்; (परमेष्ठिन् - An epithet of Śiva); துடி - உடுக்கை; புடை - பக்கம்; துணை - ஒப்பு; அடி மால், அலர் மேலான் முடி காணா அழல் - திருமாலால் அடியும், பூமேல் இருக்கும் பிரமனால் முடியும் காண இயலாதபடி உயர்ந்த சோதி;



10)
ஈனத்தினை என்றுந்தவம் என்றேபுரி எத்தர்
வானத்தினை நண்ணாரவர் வாக்கிற்பொருள் இல்லை
தேனொத்தவன் அன்பர்க்கருள் தேவன்சடை மீது
கூனற்பிறை கொண்டான்குட வாயிற்பெரு மானே.



பதம் பிரித்து:
ஈனத்தினை என்றும் தவம் என்றே புரி எத்தர்,
வானத்தினை நண்ணார், அவர் வாக்கில் பொருள் இல்லை;
தேன் ஒத்தவன் அன்பர்க்கு அருள் தேவன்; சடை மீது
கூனல் பிறை கொண்டான்; குடவாயிற் பெரு மானே.


எத்தர் - வஞ்சகர்; நண்ணார் - அடையமாட்டார்; கூனற்பிறை - வளைந்த பிறைச்சந்திரன்; (கூனல் - வளைவு);



11)
ஏற்றைக்கொடி மேலேற்றிய எம்மானலை ஆர்ந்த
ஆற்றைப்பனி வெண்டிங்களை அஞ்செஞ்சடை ஏற்றான்
நீற்றைப்புனை நெற்றிப்பரன் நேயர்க்கரண் ஆகிக்
கூற்றைக்குமை காலன்குட வாயிற்பெரு மானே.



பதம் பிரித்து:
ஏற்றைக் கொடிமேல் ஏற்றிய எம்மான்; அலை ஆர்ந்த
ஆற்றைப், பனி வெண் திங்களை, அம் செஞ்சடை ஏற்றான்;
நீற்றைப் புனை நெற்றிப் பரன்; நேயர்க்கு அரண் ஆகிக்,
கூற்றைக் குமை காலன்; குடவாயிற் பெருமானே.


ஏற்றைக் கொடிமேல் ஏற்றிய எம்மான் - இடபக்கொடி உடைய எம் சுவாமி;
அலை ஆர்ந்த ஆற்றை - அலை மிக்க கங்கைநதியை; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);
பனி வெண் திங்களை - குளிர்ந்த வெண்பிறைச்சந்திரனை;
அஞ்செஞ்சடை - அம் செம் சடை - அழகிய சிவந்த சடை;
நேயர் - பக்தர் - இங்கே மார்க்கண்டேயர்;
கூற்றைக் குமை காலன் - நமனை அழித்த காலன் - காலகாலன்; (குமைத்தல் - அழித்தல்);



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) குடவாயில் - குடவாசல் கோணேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=312
-------------- --------------

No comments:

Post a Comment