Saturday, September 3, 2016

03.03-61 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
61) கொடு
--------------
கொடுவினையை மாய்க்கலாம்; கோபித்து வேளைச்
சுடுமிறைக்கு நெஞ்சைக் கொடு.



கொடு வினை - கொடிய வினை;
கொடுத்தல் - அளித்தல்;
வேள் - மன்மதன்;



2009-03-01
62) உமை
--------------
உமையொரு பாகத் தொருவரெம் கோவென்
றிமையவரும் சொல்வார் உமை;



பதம் பிரித்து:
"உமை ஒரு பாகத்து ஒருவர்; எம் கோ" என்று
இமையவரும் சொல்வார் உமை;


உமை - 1) உமாதேவி; பார்வதி; 2) உம்மை;
ஒருவர் - ஒப்பற்றவர்;
கோ - தலைவன்; அரசன்;
இமையவர் - தேவர்கள்;



63) படை
--------------
படைத்துப் புரந்தொடுக்கும் சூலப் படையான்
அடியார்க் கமுது படை.



பதம் பிரித்து:
படைத்துப் புரந்து ஒடுக்கும் சூலப் படையான்
அடியார்க்கு அமுது படை.


படைத்தல் - 1) சிருஷ்டித்தல்; 2) பரிமாறுதல் (To serve or distribute, as food to guests);
புரந்து - காத்து; (புரத்தல் - காத்தல்);
சூலப்படையான் - சூலாயுதன்; (படை - ஆயுதம்);
அமுது - சோறு; உணவு;



64) ஆற்று
--------------
ஆற்றுச் சடைமேல் அணிமதி சூடியைப்
போற்றி நிதம்திருத்தொண் டாற்று.



ஆற்றுச் சடை - கங்கையைத் தரித்த சடை;  அணி மதி சூடி - அழகிய பிறைச்சந்திரனைச் சூடியவன்;  நிதம் - தினமும்;  திருத்தொண்டு ஆற்று - திருப்பணி செய்;



2009-03-17
65) நினை
--------------
நினையிரந்தேன் நெஞ்சே நிமிடஅள வேனும்
தினமும் சிவனை நினை.



நினை - 1) நின்னை (உன்னை); 2) எண்ணு;
இரத்தல் - யாசித்தல்; வேண்டுதல்;
நிமிடம் - கண்ணிமைப்பொழுது;



66) கரை
------------
கரைசேர் வதற்குக் கருதினால் முக்கட்
பரனையெண்ணி நெஞ்சே கரை.



கரை சேர்தல் - பிறவிப்பெருங்கடலைக் கடத்தல்;
முக்கட் பரன் - முக்கண் உடைய பரமன் - சிவன்;
கரைதல் - உருகுதல்; அழுதல்; சொல்லுதல்; ஒலித்தல்;



67) ஒன்று
--------------
"ஒன்றாய், இரண்டாய், உளதெல்லாம் ஆனவனே"
என்றென்றே ஏத்திநெஞ்சே ஒன்று.



ஒன்று ஆய் - ஒன்று ஆகி; - ஏகன் ஆகி;
ஏத்தி - துதித்து;
ஒன்றுதல் - ஒருமுகப்படுதல் (To set one's mind solely on an object);



2009-03-27
68) நகர்
------------
நகரரவம் பூண்டான் நகைசெய் தெரித்தான்
இகலியார் மூன்று நகர்.



நகர் அரவம் பூண்டான் - ஊரும் பாம்பை அணிந்தவன்;
நகைசெய்து எரித்தான் - சிரித்து எரித்தான்;
இகலியார் - பகைவர்;



69) கோள்
----------------
கோளரவும் ஆறும் குளிர்நிலவும் சூடினான்
தாளடைந்தால் நன்றுசெய்யும் கோள்.



கோள் அரவு - கொலைத் தொழிலையுடைய பாம்பு;
கோள் - கிரகம்;



70) பரவு
--------------
பரவும் சடைமேல் பனிநிலாச் சூடும்
பரமனைப் பாடிப் பரவு.



பரவுதல் - 1) பரந்திருத்தல்; 2) புகழ்தல்;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment