Saturday, September 3, 2016

03.03-11 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
11) பாடு
-------------
பாடு தவிர மனமே பதம்தூக்கி
ஆடும் அடிகளைப் பாடு.



பாடு - 1) வருத்தம்/துன்பம்; 2) 'பாடு' என்ற ஏவல் வினை;
தவிர - நீங்க; இல்லாமல் போக;
அடிகள் - இறைவன்;



12) நிலா
-------------
நிலாவாறு பாய்ந்து வரும்ஆற்றின் நீர்நின்
றுலாவும் சடைமேல் நிலா.



பதம் பிரித்து:
நிலாவாறு பாய்ந்துவரும் ஆற்றின் நீர் நின்று
உலாவும் சடைமேல் நிலா.


நிலாவாறு - நில்லாதபடி;
நிலா - திங்கள்;



13) இரா
-------------
இராப்பகல் ஏத்தடியார் தீவினைகள் ஈசன்
அராப்புனைவான் நோக்கால் இரா.



இரா = 1) இரவு; 2) இருக்கமாட்டா (ஒழியும்);
ஏத்து அடியார் தீவினைகள் - துதிக்கின்ற அடியவர்களது பாவங்கள்;
அரா - பாம்பு;



14) இலை
--------------
இலையோ மலரோ இறைவனுக் கிட்டால்
நலம்பெறலாம்; துன்பம் இலை.



இலை - 1) வில்வம் முதலியன. 2) இல்லை.



2009-01-20
15) இரு
-------------
இருகரம் கூப்பி இறைவனைப் போற்றி
ஒருகுறை இன்றி இரு.



16) கூறு
-------------
கூறு மலைமகள் கொண்டவனை, வெண்திரு
நீறு திகழ்பவனைக் கூறு.



கூறு - 1) பாகம்; 2) "சொல்" என்ற ஏவல் வினை;



17) அறை
--------------
அறைபுனல் சூடும் அரனார் பெயரை
மறவாது நாவே அறை.



அறைதல் - 1) ஒலித்தல்; 2) சொல்லுதல்
அறை புனல் - ஒலிக்கும் நதி - கங்கை;



18) சிறை
-------------
சிறைவண் டறைஓவாச் சிற்றம் பலத்தான்
பிறைச்சடைகங் கைக்குச் சிறை.



பதம் பிரித்து:
சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலத்தான்
பிறைச்சடை கங்கைக்குச் சிறை.


சிறை- 1) சிறகு; 2) அடைக்கும் இடம்; / அணை;
அறைதல் - ஒலித்தல்;
(சம்பந்தர் தேவாரம் - 1.80.4 - "நிறைவெண் கொடிமாட ... சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய இறைவன் ...")



2009-01-22
19) கெடு
-------------
கெடுவதற்கே எண்ணுநெஞ்சே கேளறி வாயோ
அடுமெமனார் வைத்த கெடு.



பதம் பிரித்து:
கெடுவதற்கே எண்ணும் நெஞ்சே கேள்; அறிவாயோ
அடும் எமனார் வைத்த கெடு?


அடுதல் - கொல்லுதல்;
கெடு - தவணை (term, fixed time, installment);



20) படர்
-------------
படர்சடைமேல் பாம்பணிவான் பாதம் பணிந்தால்
அடையார் நமனார் படர்.



படர் - 1) படர்தல் ; 2) படைவீரர்; ஏவல்செய்வோர்;
படர்சடை - படர்ந்த சடை;
நமனார் படர் - எம தூதர்;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment