Saturday, September 3, 2016

03.03-31 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
31) பழம்
------------
பழம்பொரு ளாய்ப்புதுமை ஆனமுக் கண்ணன்
கழல்கற் பகத்தின் பழம்.



பழம் - 1) பழைய; 2) கனி;
பழம்பொருள் ஆய்ப் புதுமை ஆன முக்கண்ணன் - மிகத் தொன்மையானவன்; என்றும் புதியவன்;
கழல் கற்பகத்தின் பழம் - அப்பெருமான் திருவடி கற்பகக்கனியை ஒக்கும்;



32) பிடி
------------
பிடிநடையாள் ஓர்கூ றுடைய பெருமான்
அடியிணையை நன்கு பிடி.



பிடி- பெண்யானை;
பிடிநடையாள் ஓர் கூறு உடைய பெருமான் - பெண் யானையைப் போன்ற நடையை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடைய சிவபெருமான்;
பிடித்தல் - பற்றிக்கொள்ளுதல்;



33) படி
-----------
படியீவான் பால்மதியன் பஞ்சக்கா லத்தில்
அடியார் மகிழும் படி.



படி- 1) தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள்; 2) விதம்;
படி ஈந்த வரலாறு - 1) அப்பருக்கும், சம்பந்தருக்கும் திருவீழிமிழலையில் படிக்காசு அருளியது; 2) புகழ்த்துணை நாயனாருக்குப் படிக்காசு அருளியது;



34) அடை
--------------
அடைதோசை இட்டலிக் காகவே வாழா
திடைமருதன் தாளை அடை.



அடை - 1) சிற்றுண்டி வகைகளில் ஒன்று; 2) அடைதல் - சேர்தல்;
இடைமருதன் - திருவிடைமருதூர்ச் சிவன்;



35) விடை
---------------
விடையேறும் ஈசனை வேண்டினால் ஈவான்
அடைந்தார்க்கு நல்ல விடை.



விடை - 1) இடபம் (எருது); 2) பதில் (உத்தரம்);
அடைந்தார்க்கு - ஈசனைச் சரணடைந்தவர்களுக்கு;



36) அசைத்தல்
---------------
அசைத்தான் அரவை; அரக்கன் தனைச்செற்
றிசைகேட்டான் சென்னி அசைத்து.



பதம் பிரித்து:
அசைத்தான் அரவை; அரக்கன் தனைச் செற்று
இசை கேட்டான், சென்னி அசைத்து.


அசைத்தல் - 1) கட்டுதல்; 2) ஆட்டுதல்;
செறுதல் - வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்;
சென்னி - தலை;
அசைத்தான் அரவை; - பாம்பை அரையில் நாணாகக் கட்டிய பெருமான்;
அரக்கன் தனைச் செற்று இசை கேட்டான், சென்னி அசைத்து - இராவணனை நசுக்கிப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டு மகிழ்ந்தான்;

37) ஊர்
------------
ஊர்விடை யான்சுட்டான் ஓரம்பால் எவ்விடமும்
பேர்கின்ற மூவரின் ஊர்.



ஊர் விடையான் - ஊர்கின்ற விடையை உடையவன் - இடப வாகனன் - சிவன்;
பேர்தல் - செல்லுதல்;
ஊர் - புரம்;



38) உண்டு
---------------
உண்டுண் டுடல்வளர்க்க ஓடுநெஞ்சே; கார்சேரும்
கண்டனைச் சிந்தி;உய் வுண்டு.



பதம் பிரித்து:
உண்டு உண்டு உடல் வளர்க்க ஓடும் நெஞ்சே; கார் சேரும்
கண்டனைச் சிந்தி; உய்வு உண்டு.


உண்டு - 1) சாப்பிட்டு; 2) உள்ளது; கிடைக்கும்;
ஓடுநெஞ்சே - ஓடும் நெஞ்சமே;
கார் சேரும் கண்டன் - கருமை பொருந்திய மிடற்றை உடையவன் - நீலகண்டன்;



39) நீர்
-----------
நீர்பாயும் செஞ்சடை நின்மலனைப் போற்றிவினை
தீர்ந்துய் வடையலாம் நீர்.



பதம் பிரித்து:
நீர் பாயும் செஞ்சடை நின்மலனைப் போற்றி, வினை
தீர்ந்து, உய்வு அடையலாம் நீர்.


நீர் - 1) கங்கை; 2) நீங்கள்;



40) வாள்
-------------
வாளரவம் சூடி வருமண்ணல் நீறணியெண்
தோளன்கை யில்மழு வாள்.



பதம் பிரித்து:
வாள்-அரவம் சூடி வரும் அண்ணல், நீறு அணி எண்
தோளன் கையில் மழு-வாள்.

வாள் - 1) ஒளி; கொடுமை; 2) வாள் என்ற ஆயுதம்;
தோள் - புஜம்;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment