Saturday, December 19, 2015

02.50 – கருகாவூர் (திருக்கருகாவூர்)

02.50 – கருகாவூர் (திருக்கருகாவூர்)



2012-05-16
திருக்கருகாவூர்
--------------------
(பன்னிரண்டு பாடல்கள்). (12 songs in this padhigam)
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்")



1)
வன்னமயில் வாகனற்கும் மாவேழ முகத்தாற்கும்
அன்னையவள் தன்னோடும் அஞ்சடையன் அமருமிடம்
அன்னநடை மாதரொடும் அவர்கணவர் வலம்வந்து
சென்னிமிசைக் கைகூப்பும் திருக்கருகா வூர்தானே.



வன்னம் - வர்ணம்/வருணம் - அழகு;
வாகனற்கு - வாகனனுக்கு;
முகத்தாற்கு - முகத்தானுக்கு ;
அம் சடை - அழகிய சடை;
அமர்தல் - விரும்புதல்; இருத்தல்;


அழகிய மயிலை வாகனமாக உடைய முருகனுக்கும் அழகிய யானைமுகம் உடைய விநாயகனுக்கும் தாயான உமையோடு அழகிய சடையினனான சிவபெருமான் விரும்பி உறையும் தலம், அன்னம் போன்ற நடையை உடைய பெண்களும் அவர்தம் கணவர்களும் பிரதட்சிணம் செய்து உச்சிமேல் கைகூப்பி வணங்கும் திருக்கருகாவூர் ஆகும்.



2)
சார்ந்தவர்க்குத் தண்ணருள்செய் தன்மையினான் தாழ்சடையன்
ஆர்ந்தவிடம் அடைகண்டன் அன்னையொடும் அமருமிடம்
நேர்ந்துகொண்டு நாளுமிக நேரிழையார் கணவரொடு
சேர்ந்துவலம் செய்துமகிழ் திருக்கருகா வூர்தானே.



சார்ந்தவர் - சரண்புகுந்தவர்கள்;
தண்ணருள் - இனிய அருள்;
ஆர்ந்த விடம் - உண்ட நஞ்சு; (ஆர்தல் - உண்ணுதல்; பரவுதல் (To spread over));
அடை - அடைதல் / அடைத்தல்;
அன்னை - உமையம்மை;
நேர்ந்துகொள்ளுதல் - பிரார்த்தனை செய்துகொள்ளுதல் (To take a vow);
நேரிழை - பெண்; (Lady, as adorned with fine jewels);



3)
முரண்புரங்கள் மூன்றினையும் முறுவலொன்றால் எரித்தருள்வான்
இரண்டொடுமூன் றெழுத்தானான் இமையவளோ டமருமிடம்
சுருண்டகுழல் மங்கையர்கள் சுற்றத்தார் புடைசூழத்
திரண்டுவந்து துதிசெய்யும் திருக்கருகா வூர்தானே.



முரண் புரங்கள் மூன்று - பகைத்த முப்புரங்கள்;
இரண்டொடு மூன்று எழுத்து - அஞ்செழுத்து - திருவைந்தெழுத்து;
இமையவள் - இமவான் மகளான பார்வதி;
(திருப்புகழ் - பழநி - "சுருளளக பார .... இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே";
திருப்புகழ் - திருத்தணிகை - "முகத்தைமி னுக்கிக ளசடிகள் பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ளபிராமி ......" - பொருப்பில் இமக் கிரி பதி பெறும் இமையவள் - மலைகளுள் சிறந்த இமயமலை அரசன் பெற்ற இமயவல்லி);
புடைசூழ்தல் - சுற்றியிருத்தல்;



----- Q&A on this song ------
(Q: //இரண்டொடுமூன் றெழுத்தானான்// -- விளக்கியருளவும்.
A: My response:
கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்குமுன் 2008-இல் நான் இட்ட திருநாகேச்சரப் பதிகப் பாடல் ஒன்றில் - "அஞ்செழுத் தாகிய அரனே போற்றி" என்ற வரி வந்திருந்தது. அதை ஒட்டி அச்சமயம் நிகழ்ந்த ஓர் உரையாடலில் ஓர் அன்பர் அளித்த விளக்கம்:
"ஐந்தெழுத்து தமிழன்று. சமஸ்கிருதமும் அன்று. அதுவே சிவன்‍தான்!"
--------------- ---------



4)
பேயினிய உருவேண்டிப் பெற்றநல் அடியாரைத்
தாயிவரென் றுரைசெய்தான் உமையோடு தங்குமிடம்
வாயினிக்க அஞ்செழுத்தை மகிழ்ந்தோதி மைந்தரொடு
சேயிழையார் வலம்செய்யும் திருக்கருகா வூர்தானே.



பேய் இனிய உரு - இனிய பேய் உரு; (இனிது - நன்மையானது);
(பெரியபுராணம்: காரைக்கால் அம்மையார் புராணம் - 12.24.29 -
"ஈங்கிவன் ... ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர்தாள் பரவி நின்றார்.
--- பாங்கு - நன்மை);
மைந்தன் - கணவன்; மகன்;


பேய் உருவே இனிய உருவென்று ஈசனிடம் வேண்டிப் பெற்றுக்கொண்ட நல்ல பக்தர் - காரைக்கால் அம்மையார் - தலையால் கயிலைமலையில் ஏறும்போது, பார்வதி 'இவர் யார்' என்று ஈசனிடம் வினவியபோது - 'இவர் நம்மைப் பேணும் தாய்' என்று சொன்னான். அப்பெருமான் உமையம்மையோடு எழுந்தருளியிருக்கும் தலம், வாயாரத் திருவைந்தெழுத்தைச் சொல்லிப் பெண்கள் தம் கணவரோடு பிரதட்சிணம் செய்யும் திருக்கருகாவூர் ஆகும்.



5)
தீயொருகண் திகழ்பெருமான் செஞ்சடையிற் கங்கையினான்
தாயொருபங் கமர்கின்ற தந்தையவன் தங்குமிடம்
போயொருகால் பொன்னடியைப் போற்றியவர் மனமகிழ்ந்து
சேயொடுவந் தினிதேத்தும் திருக்கருகா வூர்தானே.



ஒரு கண்ணில் தீயைத் தாங்கியவன்; செஞ்சடையில் கங்கையைத் தாங்கியவன்; உமையம்மையாரைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக விரும்பும் தந்தையான சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலம், முன்னொருமுறை சென்று பொன்னடியை வாழ்த்தியவர்கள் (தாங்கள் விரும்பும் வரம் பெற்று) மனம் மகிழ்ந்து தங்கள் குழந்தையோடு வந்து வழிபாடு செய்யும் திருக்கருகாவூர் ஆகும்.



6)
பால்விரும்பும் பாலகற்குப் பாற்கடலே ஈந்தபிரான்
மால்விடைமேல் ஏறுமரன் மாதோடு மகிழுமிடம்
சூல்விளங்கித் தம்குடும்பம் தழைத்திருக்கத் துணைவரொடும்
சேல்விழியார் வலம்செய்யும் திருக்கருகா வூர்தானே.



பாலகற்கு - பாலகன்+கு - பாலகனுக்கு;
(9.29.9 - திருப்பல்லாண்டு - "பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்" - பாலை உண்பதற்கு வியாக்கிரபாத முனிவர் புதல்வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால் பெறாது அழுது வருந்த, அவனுக்குப் பாற்கடலையே அழைத்து வழங்கிய பெருமான்) ;


மால் விடை - பெரிய இடபம்; திருமாலாகிய விடை எனலும் ஆம்;
(உதாரணம்: சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்தந்தாதி - 11.6.1 - "பொன்வண்ணம் எவ்வண்ணம் .... வெள்ளிக்குன்றம் தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை ....":
திருவாசகம் - திருச்சாழல் - 8.12.15 - "கடகரியும் பரிமாவும் ... தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.")
சூல் - கருப்பம் (Conception, pregnancy);


(இலக்கணக் குறிப்பு : மகன்+கு = மகற்கு - உதாரணங்கள்:
திருக்குறள்-110: "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."
சம்பந்தர் தேவாரம் - 3.39.9: "பூமகற்கும் அரிக்குமோர்வரு புண்ணியன்னடி போற்றிலார் ......" - பூமகன் - பிரமன்)






7)
அருந்துவிடம் திகழ்கண்டன் ஆளான அடியவர்கட்கு
அருந்துணைவன் உமைபிரியா ஆகத்தன் அமருமிடம்
பொருந்துமண வாழ்வினில்நற் புத்திரபாக் கியம்வேண்டித்
திருந்திழையார் வலம்செய்யும் திருக்கருகா வூர்தானே.



அருந்துவிடம் திகழ்கண்டன் - உண்ட விஷம் நீலமணி போலத் திகழ்கின்ற கண்டத்தை உடையவன்;
ஆள் - அடிமை; (அப்பர் தேவாரம் - 6.67.1 - "ஆளான அடியவர்கட் கன்பன்" - தனக்கு அடிமையான அன்பர்களுக்குத் தானும் அன்பன்);
அடியவர்கட்கு அரும் துணைவன் - பகதர்களுக்குச் சிறந்த துணைவன்;
உமை பிரியா ஆகத்தன் அமருமிடம் - உமைபங்கன் விரும்பி உறையும் இடம்; (ஆகம் - மேனி);
பொருந்துதல் - மனம் இசைவாதல்; தகுதியாதல்;
திருந்திழை - பெண் (Woman, as adorned with jewels);



8)
வல்லரக்கன் தனையன்று மலர்விரலிட் டடர்த்தருளும்
எல்லையிலாப் புகழாளன் ஏந்திழையோ டமருமிடம்
மெல்லிடையார் அவர்கணவர் வேண்டுகிற மக்களெனும்
செல்வமுறத் தேடிவரும் திருக்கருகா வூர்தானே.



வல்லரக்கன்தனை அன்று மலர்விரல் இட்டு அடர்த்து அருளும் - வலிய இராவணனை மலர்ப்பாதத் திருவிரலை ஊன்றி நசுக்கிய; (அடர்த்தல் - நசுக்குதல்;
ஏந்திழை - பெண் (Woman beautifully decked with jewels) - இங்கே, பார்வதி;
மெல்லிடையார் அவர்கணவர் - உம்மைத்தொகை - மெல்லிய இடையை உடைய பெண்களும் அவர்கள் கணவர்களும்;



9)
அற்றையொரு வளர்தீயாய் அயன்மாலுக் கரிதானான்
நற்றவர்கள் போற்றுமரன் நங்கையொடும் அமருமிடம்
நெற்றிமிசை நீறணிந்து நெஞ்சத்தில் பேரணிந்து
சிற்றிடையார் துதிசெய்யும் திருக்கருகா வூர்தானே.



அற்றை - அன்று;


முன்னொருநாள் எல்லையின்றி வளர்ந்த சோதியாகிப் பிரமனுக்கும் திருமாலுக்கும் அடைவதற்கு அரியவன் ஆனான். நல்ல தவம்செய்வோர்கள் போற்றும் சிவபெருமான் பார்வதியோடு எழுந்தருளியிருக்கும் தலம், நெற்றியில் திருநீறும் மனத்தில் திருநாமமும் தரித்துச் சிற்றிடையுடைய பெண்கள் வழிபடும் திருக்கருகாவூர் ஆகும்.



10)
கைதவமே தவமாகக் கருதீனர் அறியாதான்
மைதவழும் கயிலாயன் மாதோடு மகிழுமிடம்
கொய்தமலர் கொண்டுபல கோதைமார் பூசனைகள்
செய்துமகிழ் வெய்துபதி திருக்கருகா வூர்தானே.



கைதவம் - வஞ்சகம்;
கருது ஈனர் - கருதுகிற இழிந்தோர்;
மை - கரிய மேகம்;
கோதைமார் - பெண்கள்;
மகிழ்வு எய்து பதி - மகிழ்ச்சி அடையும் தலம்;



11)
பெற்றமுகந் தேறுகிற பிரான்ஆறு முகத்தானைப்
பெற்றுகந்த ஈசனுமை பிரியாதான் பேணுமிடம்
சுற்றிவந்து துணையடிமேல் தூமலரின் தொடைசாத்திச்
சிற்றிடையார் துதிசெய்யும் திருக்கருகா வூர்தானே.



பெற்றம் உகந்து ஏறுகிற பிரான் - இடபத்தை வாகனமாக விரும்பும் தலைவன்;
ஆறுமுகத்தானைப் பெற்று உகந்த ஈசன் - ஆறுமுகம் உடைய முருகனைப் பெற்று மகிழ்ந்த ஈசன்;
உமை பிரியாதான் பேணும் இடம் - உமையம்மையைப் பிரியாதவன் விரும்பி எழுந்தருளியிருக்கும் தலம்;
சுற்றிவந்து துணையடிமேல் தூமலரின் தொடை சாத்திச் - பிரதட்சிணம் செய்து, இரு திருவடிகள்மேல் சிறந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைச் சாத்தி;
சிற்றிடையார் துதிசெய்யும் திருக்கருகாவூர்தானே - சிற்றிடையுடைய பெண்கள் வழிபடும் திருக்கருகாவூர் ஆகும்.



12)
மனமடிமேல் வைத்திருந்த மாணியிடம் வருநமனை
முனமடியால் உதைத்தவன்மென் முலையாளோ டமருமிடம்
தனமடிமேல் பிள்ளையொன்று தவழ்கின்ற வரம்வேண்டித்
தினமடியார் திரள்கின்ற திருக்கருகா வூர்தானே.



பதம் பிரித்து:
மனம் அடிமேல் வைத்திருந்த மாணியிடம் வருநமனை
முனம் அடியால் உதைத்தவன் மென்முலையாளோடு அமரும் இடம்
தன மடிமேல் பிள்ளை ஒன்று தவழ்கின்ற வரம் வேண்டித்
தினம் அடியார் திரள்கின்ற திருக்கருகாவூர்தானே.


மாணி - அந்தணச் சிறுவன் - இங்கே, மார்க்கண்டேயர்;
தன - தன்னுடைய; (- ஆறாம் வேற்றுமை உருபு);
இலக்கணக் குறிப்பு : தன மடிமேல் ... அடியார் - ஒருமை பன்மை மயக்கம்;


ஈசன் திருவடிமேல் தன் மனத்தை வைத்திருந்த மார்க்கண்டேயரிடம் வந்த எமனை முன்பு தன் தாளால் உதைத்த சிவபெருமான், மென்மையான முலையினளான உமையம்மையோடு விரும்பி வீற்றிருக்கும் தலம், தன் மடிமீது ஒரு பிள்ளை தவழவேண்டும் என்ற வரம்வேண்டித் தினமும் அடியார்கள் கூடுகிற திருக்கருகாவூர் ஆகும்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
  • நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.
  • அடிதோறும் 4 காய்ச்சீர்கள் ; விளச்சீர்களும் வரலாம்;
  • ஒரோவிடத்தில் மாச்சீர் வரலாம்; அப்படி மாச்சீர் வரின் அதனை அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்;
2) சம்பந்தர் தேவாரம் - 2.48.1 -
"கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் ருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் சையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே")
3) திருக்கருகாவூர் - முல்லைவனநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=672
திருக்கருகாவூர் - தேவாரம் ஆர்க் தளத்தில் : http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=72

-------------- --------------

No comments:

Post a Comment