Sunday, December 6, 2015

02.47 – வாஞ்சியம் - (ஸ்ரீவாஞ்சியம்)

02.47 – வாஞ்சியம் - (ஸ்ரீவாஞ்சியம்)



2012-05-06
வாஞ்சியம் (திருவாஞ்சியம் - ஸ்ரீவாஞ்சியம்)
--------------------
((சந்த விருத்தம் - "தானன தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 3.61.1 - "ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆரழகன்")



1)
நாலும றைப்பொருளாய் நதி சூடிய வேணியனாய்
வாலுடை ஆன்விடைமேல் வரும் மன்னவன் எம்பெருமான்
பாலுகந் தாடுமரன் பயி லும்பதி ஆவதுதான்
சேலுகள் வாவிகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.



வேணி - சடை;
வால் - வெண்மை;
ஆன்விடை - இடபம்;
(ஆன்விடை - 'ஆனேறு' பரவலாகக் காணப்படினும், 'ஆன்விடை' என்ற பிரயோகம் தேவாரத்தில் மிக அரிதே காணப்படுகின்றது.
அப்பர் தேவாரம் 6.75.2 - "கானலிளங் ....ஆனல்இளங் கடுவிடையொன் றேறி ..." - விரைந்து நடக்கும் நல்லிள ஆனேற்றை ஊர்ந்து - 'ஆன் விடை' என இயையும்);
உகத்தல் - விரும்புதல்;
ஆடுதல் - அபிஷேகம்;
பயில்தல் - தங்குதல் (To stay, abide, reside);
பதி - தலம்;
சேல் - ஒருவகை மீன்;
உகள் - உகளுதல் - தாவுதல்;
வாவி - நீர்நிலை (Tank, reservoir of water);


நால்வேதப்பொருளாய்க், கங்கையை அணிந்த சடையினனாய், வெள்விடைமேல் வரும் தலைவன்; எம்பெருமான்; பாலால் அபிஷேகம் விரும்பும் ஹரன்; அவன் எழுந்தருளும் தலம் ஆவது, சேல்மீன்கள் தாவும் குளம் சூழ்ந்த திருவாஞ்சியம்.



2)
வாணுதல் மங்கையொடே மழ வெள்விடை மேல்வருவான்
கோணுதல் அற்றவராய்க் குளிர் மாமலர் கொண்டுகழல்
பேணு மனத்தினர்பால் பிரி யம்முடை அண்ணலினூர்
சேணுயர் சோலைகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.



வாணுதல் மங்கை - வாள் நுதல் மங்கை - ஒளிபொருந்திய நெற்றியை உடையவளாகிய உமை;
மழ வெள்விடை - ளமையும் வெண்ணிறமும் உடைய ஏறு;
கோணுதல் - நெறிபிறழ்தல் (To deviate, swerve from the proper course); வெறுப்புக்கொள்ளுதல் (To have dislike or aversion);
குளிர் மா மலர் - குளிர்ந்த சிறந்த பூக்கள்;
பேணுதல் - போற்றுதல்;
பிரியம்முடை - பிரியம் உடை - ஒற்று விரித்தல் விகாரம்.
பிரியம் உடை அண்ணலின் ஊர் - அன்புடைய கடவுள் உறையும் தலம்;
சேண் உயர்தல் - விண்ணில் மிக ஓங்குதல்;



3)
பொங்கழல் தாங்கிநடம் புரி கின்றவர் பொற்சடையுள்
கங்கையை வைத்தருள்வார் கடி மாமலர் கொண்டுநிதம்
தங்கழல் போற்றடியார் தமைக் காத்தருள் சங்கரரூர்
செங்கயல் பாய்புனல்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.



பொங்கு அழல் - தீ;
கடி மா மலர் - மணம் மிகுந்த சிறந்த பூக்கள்;
தம் கழல் போற்று அடியார்தமைக் காத்து அருள் - தம் திருவடிகளைத் தொழும் அடியவர்களைக் காக்கின்ற;
சங்கரர் - ஆன்மாக்களுக்கு நன்மையைச்செய்பவர்;
செம் கயல் - சிவந்த கயல் மீன்கள்;



4)
தாரணி மார்பினனே தழல் ஏந்திய கையினனே
நீரணி செஞ்சடையாய் நிகர் அற்றவ னேயெனவே
ஆரடி வாழ்த்திடினும் அவர் தீவினை தீர்ப்பவனூர்
சீரடி யார்திரளும் திரு வாஞ்சிய நன்னகரே.



தார் அணி மார்பினனே - "மாலை அணிந்த மார்பை உடையவனே;
தழல் ஏந்திய கையினனே - தீயைக் கையில் ஏந்தியவனே;
நீர் அணி செஞ்சடையாய் - கங்கைச் சடையினனே;
நிகர் அற்றவனே எனவே - ஒப்பில்லாதவனே" என்று;
ஆர் அடி வாழ்த்திடினும் - யார் தன் அடியை வாழ்த்தினாலும்;
அவர் தீவினை தீர்ப்பவன் ஊர் - அவர்கள் தீவினைகளைத் தீர்த்தருளும் பெருமான் ஊர்;
சீர் அடியார் திரளும் திருவாஞ்சிய நன்னகரே - சிறந்த அடியவர்கள் திரண்டுவந்து சேரும் திருவாஞ்சியம்.



5)
வெய்ய வினைத்தொகுதி விட மெய்யினில் நீறணிவார்
நையும் மனத்தினராய் நலம் ஆர்கழல் போற்றிடுவார்
உய்ய அருள்புரிவான் உமை யாள்பதி தன்னிடமாம்
செய்யிடைக் கொக்கிரைதேர் திரு வாஞ்சிய நன்னகரே.



வெய்ய வினைத்தொகுதி விட மெய்யினில் நீறு அணிவார் - வெப்பமான தீவினைகள் எல்லாம் போக வேண்டி மேனியில் திருநீறு பூசுபவர்கள்;
நையும் மனத்தினராய் நலம் ஆர்கழல் போற்றிடுவார் - உருகும் மனத்தோடு நன்மை பொருந்திய திருவடிகளை வணங்குபவர்கள்;
உய்ய அருள்புரிவான் உமையாள் பதி தன் இடம் ஆம் - அவர்கள் உய்ய அருள்புரியும் உமாபதி எழுந்தருளியிருக்கும் தலம் ஆவது;
செய்யிடைக் கொக்கு இரை தேர் திருவாஞ்சிய நன்னகரே - வயல்களில்டையே கொக்குகள் இரைதேடும் திருவாஞ்சியம்.


(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.73.5 - "அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் ..... கொக்கமரும் வயல்புடைசூழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் தானே." - 'கொக்கு அமரும் வயல்' என்றது, 'நீர் நீங்காத வயல்' என்பதைக் குறித்த குறிப்புமொழி);



6)
சென்னியில் வெண்பிறையான் சிறு மான்மறி ஏந்தியவன்
பின்னிய பாம்பணிவான் பிடி போல்நடை யாள்பிரியான்
மின்னலை ஆர்சடையான் விடை ஏறிய வித்தகனூர்
தென்னைகள் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.



மான்மறி - மான்கன்று;
பிடி போல் நடையாள் - பெண்யானையைப் போல் நடை உடைய பார்வதி;
மின்னலை ஆர் சடையான் - மின்னலைப் போன்ற சடையினன்; ('மின் ஆர் சடையான், அலை ஆர் சடையான்' என்று தனித்தனியேவும் இயைத்து, 'மின்னல் ஒத்த சடையினன், அலைகள் பொருந்திய சடையினன்' என்றும் பொருள்கொள்ளலாம்);
வித்தகன் - ஞானசொரூபன்; வல்லவன்;
தென்னைகள் ஆர்பொழில்சூழ் - தென்னைமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த;



7)
ஈங்கடி போற்றிடுவார் எது வேண்டினும் ஈந்தருள்வான்
மாங்கனி பெற்றவர்தாம் மலை மேல்தலை யாலடைநாள்
பாங்கமர் பாவையிடம் பரி தாயிவர் என்றவனூர்
தீங்கனி ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.



ஈங்கு - இங்கு;
மாங்கனி பெற்றவர்தாம் மலைமேல் தலையால் அடை நாள் - முன்னொரு நாள் ஈசனை வேண்டி மாம்பழம் பெற்ற காரைக்கால் அம்மையார் (பின்னர்ப் பேயுருவம் வேண்டிப் பெற்றவர்), கயிலைமலைமேல் தலையால் ஏறி அடைந்தபோது;
பரிதல் - அன்புகொள்ளுதல்;
பாங்கு அமர் பாவையிடம் "பரி தாய் இவர்" என்றவன் ஊர் - தன் அருகில் இருக்கும் பார்வதியிடம் "அன்புடைய தாய் இவர்" என்ற பெருமான் எழுந்தருளியிருக்கும் ஊர்;
தீங்கனி ஆர்பொழில்சூழ் - இனிய பழங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த;


(பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - 58
வருமிவள் நம்மைப் பேணும் .. அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப் .. பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி .. அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம் .. உய்யவே அருளிச் செய்தார்.)



8)
குன்றன தோளுடையான் குணம் ஒன்றுமி லாஅரக்கன்
அன்றழ ஓர்விரலே அரு வெற்பதன் மேலிடுவார்
நன்றிசை கேட்டருள்வார் நரை ஏற்றினர் தம்மிடமாம்
தென்றிசைக் கோன்பணியும் திரு வாஞ்சிய நன்னகரே.



அவுணன் - அரக்கன்;
தென்றிசைக்கோன் - தென்திசைக் கோன் - தென்திசையின் தலைவன் - யமன்;


குன்று அன தோள் உடையான் குணம் ஒன்றும் இலா அரக்கன் - மலையைப்போல் வலிய புஜங்கள் உடையவனும், நற்குணம் ஒன்றும் இல்லாத அரக்கனுமான இராவணன்;
அன்று அழ ஓர் விரலே அரு வெற்பு அதன்மேல் இடுவார் - அவன் கயிலையை அசைத்தபோது, அவன் அழும்படி ஒரே ஒரு விரலை அந்த அரிய மலைமேல் வைத்தவர்;
நன்று இசை கேட்டு அருள்வார் - பின் அவன் சாமகானம் பாடி அவரை வணங்கவும், அதனைக் கேட்டு அவனுக்கு வரங்கள் அளித்தவர்;
நரை ஏற்றினர் தம் இடம் ஆம் - வெண்ணிற எருதை உடையவர்; அவர் எழுந்ருளியிருக்கும் இடம் ஆவது;
தென்திசைக் கோன் பணியும் திருவாஞ்சிய நன்னகரே - இயமன் வந்து அடிபோற்றும் திருவாஞ்சியம்.


(இக்கோயிலில் முன்னே எமனுக்குத் தனிச் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் ஈசனை எமன் வழிபட்டதைத் தலவரலாற்றிற் காண்க.)



9)
கான்மலர் கொண்டுநிதம் கழல் போற்றிடு வார்க்கினியான்
வான்மலர் மேலயனும் மணி வண்ணனும் நேடியவோர்
வான்வளர் சோதியவன் மதி சூடிய பிஞ்ஞகனூர்
தேன்மலர் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.



கான் - வாசனை; (பெரிய புராணம் - "தேனார்க்கு மலர்ச்சோலை .... கானார்க்கு மலர்த்தடஞ்சூழ் காவிரியின் கரையணைந்தார்" - கான் ஆர்க்கும் - நறுமணம் மிக்கிருக்கும்);
வான் - அழகு; ஆகாயம்;
நேடுதல் - தேடுதல்;
பிஞ்ஞகன் - தலைக்கோலம் அணிந்தவன் (பிஞ்ஞகம் - Head-ornament); அழித்தற் கடவுள் (Siva, as destroyer);


வாசமலர்களால் தினமும் திருவடியைப் போற்றுவார்களுக்கு இனியவன்; அழகிய தாமரைமேல் இருக்கும் பிரமனும் திருமாலும் தேடிய வானோங்கி வளர்ந்த சோதி அவன்; பிறைச்சந்திரனைத் தலைமேல் அணிந்த ஈசன்; அவன் எழுந்தருளியிருக்கும் ஊர் ஆவது, தேன் நிறைந்த பூக்கள் மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம்.



10)
உய்வழி தாமறியார் உரை பொய்வழி விட்டொழிமின்
மைவிழி மாதொருபால் மகிழ் கின்றவன் எம்பெருமான்
மெய்வழி ஆனவனூர் விரி பூமலி சோலைகளில்
செவ்வழி தேன்முரலும் திரு வாஞ்சிய நன்னகரே.



செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்; நல்ல மார்க்கம் (Good way, path of virtue);


உய்வழி தாம் அறியார் உரை பொய்வழி விட்டு ஒழிமின் - உய்யும் வழியை அறியாதவர்கள் சொல்லும் பொய்வழியை விட்டொழியுங்கள்;
மைவிழி மாதொருபால் மகிழ்கின்றவன் எம்பெருமான் மெய்வழி ஆனவன் ஊர் - பார்வதியை ஒரு பாகமாக உடையவன், எம்பெருமான், உண்மைநெறி ஆனவன் எழுந்தருளியிருக்கும் ஊர்;
விரி பூமலி சோலைகளில் செவ்வழி தேன்முரலும் திரு வாஞ்சிய நன்னகரே - விரிந்த பூக்கள் மலிந்த சோலைகளில் செவ்வழிப்பண்ணை வண்டுகள் ரீங்காரம் செய்யும் திருவாஞ்சியம்.



11)
உள்ளிடும் அன்பரகம் உயர் கோயில் எனத்திகழ்வான்
வெள்ளை விடைக்கொடியான் விழி மூன்றுடை யானிடமாம்
கள்ளுகு மாமலரில் கரு வண்டுகள் ஆர்பொழில்கள்
தெள்ளிய வாவிகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.



உள்ளுதல் - நினைதல்; எண்ணுதல்;
அகம் - மனம்;
உகுதல் - சுரத்தல்; (To trickle gently);
ஆர்தல் - உண்ணுதல் (To eat, to drink);
ஆர்த்தல் - ஒலித்தல்;
தெள்ளிய - தெளிந்த;


உள்ளிடும் அன்பர் அகம் உயர் கோயில் எனத் திகழ்வான் - தியானிக்கும் பக்தர்கள் மனமே சிறந்த கோயில் என்று அங்குத் திகழ்வான்;
வெள்ளை விடைக்கொடியான் விழி மூன்று உடையான் இடம் ஆம் - வெள்ளை ஏற்றுச்சின்னம் பொறித்த கொடியை உடையவன், முக்கண்ணன் எழுந்தருளியிருக்கும் தலம் ஆவது;
கள் உகு மா மலரில் கரு வண்டுகள் ஆர் பொழில்கள், தெள்ளிய வாவிகள்சூழ் திருவாஞ்சிய நன்னகரே - தேன் வடியும் சிறந்த பூக்களில் கரிய வண்டுகள் உண்டு ரீங்காரம் செய்யும் சோலைகளும், தெளிந்த நீர்நிலைகளும் சூழ்ந்த திருவாஞ்சியம்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :
  • சந்த விருத்தம் - “தானன தானதனா தன தானன தானதனா” என்ற சந்தம்.
  • அடிகளின் முதற்சீர் - தானன" என்பது "தனதன" என்றும் வரலாம்.
  • இரண்டாம் / நாலாம் சீர் - "தானதனா" என்பது "தானதானா" என்றும் வரலாம்.
  • இச்சந்தத்தைத் “தானன தானதனா தனதானன தானதனா” என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.
  • ப்பாடல்கள் கட்டளைக் கலித்துறை இலக்கணத்திற்கும் பொருந்தும் - ("தானன தானன தானன தானன தானதனா" என்று நோக்கினால்).
  • "தானன" என்ற சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், அதை அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும் - (தனதனனா / தனாதனனா).
2) சம்பந்தர் தேவாரம் - 3.61.1 -
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயி லும்பர மாபரமன்
போதிய லும்முடிமேற் புன லோடர வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும் பும்மிடம் வெண்டுறையே.
3) வாஞ்சியம் - (ஸ்ரீவாஞ்சியம்) - கோயில் தகவல்கள் :
தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=597
தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=250 )

-------- ---------------

No comments:

Post a Comment