Thursday, February 20, 2025

N.043 - சுந்தரர் துதி - துயிலுங்கால் பாதமலர்

N.043 - சுந்தரர் துதி - துயிலுங்கால் பாதமலர்

2016-08-07

N.043 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2016

----------------

(நேரிசை வெண்பா)

1)

துயிலுங்கால் பாதமலர் சூட்டியருள் செய்த

அயிற்சூலம் ஏந்தியை ஆடல் பயில்வானைத்

தோழன் எனப்பெற்ற சுந்தரர்பொற் றாள்போற்றித்

தாழும் எனது தலை.


* திருவதிகைப் புறத்தே சித்தவட-மடத்தில் சுந்தரர் உறங்கிக்கொண்டிருந்தபோது இறைவன் கிழ-அந்தணர் உருவில் வந்து சுந்தரர் தலையில் தன் திருவடியை வைத்து அருளியதைச் சுட்டியது.

* சுந்தரர் தேவாரம் - 7.38.1 - "தம்மானை அறியாத சாதியார் உளரே"


துயிலுங்கால் - உறங்கும்பொழுது;

அயிற்சூலம் ஏந்தி - கூர்மை பொருந்திய சூலத்தை ஏந்தியவன்;

ஆடல் பயில்வான் - ஆடல் செய்பவன்;

பொற்றாள் - பொன் போன்ற திருவடிகள்;


2)

மழுவாளர் தாமே மறையவராய் வந்து

பழவோலை காட்டிப் பணிகொள் அழகன்

திருநாவ லூராளி செந்தமிழை நாவே

ஒருநாளும் ஓவா துரை.


மழுவாளர் தாமே மறையவராய் வந்து - மழுவாள் ஏந்தும் ஈசரே அந்தணர் உருவில் வந்து;

பழ-ஓலை காட்டிப் பணிகொள் அழகன் - ஒரு பழைய அடிமை-ஓலையைக் காட்டி ஆட்கொண்ட சுந்தரன்;

திருநாவலூராளி செந்தமிழை, நாவே, ஒரு நாளும் ஓவாது உரை - திருநாவலூர்க்கோன் ஆன சுந்தரர் பாடியருளிய தேவாரத்தை, நாக்கே, நீ நாள்தோறும் பாடு; (ஓவுதல் - ஒழிதல்; நீங்குதல்; மறத்தல்);


3)

முதலையுண்ட பிள்ளையை முக்கணுடை மூவா

முதலருளால் மீட்டளித்த மொய்ம்பர் இதழியைச்

சூடரனை ஆரூரில் தூதனுப்ப வல்லவர்

பாடல்கள் உய்க்கும் பரம்.


* புக்கொளியூர் அவிநாசியில் முதலை உண்ட பாலகனைப் பதிகம் பாடிச் சுந்தரர் மீட்டதைச்

சுட்டியது;

மொய்ம்பு - வலிமை;

இதழி - கொன்றைமலர்;

உய்த்தல் - கொண்டுபோதல்; கொடுத்தல்;

பரம் - மேலுலகம்; மோட்சம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment