N.043 - சுந்தரர் துதி - துயிலுங்கால் பாதமலர்
2016-08-07
N.043 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2016
----------------
(நேரிசை வெண்பா)
1)
துயிலுங்கால் பாதமலர் சூட்டியருள் செய்த
அயிற்சூலம் ஏந்தியை ஆடல் பயில்வானைத்
தோழன் எனப்பெற்ற சுந்தரர்பொற் றாள்போற்றித்
தாழும் எனது தலை.
* திருவதிகைப் புறத்தே சித்தவட-மடத்தில் சுந்தரர் உறங்கிக்கொண்டிருந்தபோது இறைவன் கிழ-அந்தணர் உருவில் வந்து சுந்தரர் தலையில் தன் திருவடியை வைத்து அருளியதைச் சுட்டியது.
* சுந்தரர் தேவாரம் - 7.38.1 - "தம்மானை அறியாத சாதியார் உளரே"
துயிலுங்கால் - உறங்கும்பொழுது;
அயிற்சூலம் ஏந்தி - கூர்மை பொருந்திய சூலத்தை ஏந்தியவன்;
ஆடல் பயில்வான் - ஆடல் செய்பவன்;
பொற்றாள் - பொன் போன்ற திருவடிகள்;
2)
மழுவாளர் தாமே மறையவராய் வந்து
பழவோலை காட்டிப் பணிகொள் அழகன்
திருநாவ லூராளி செந்தமிழை நாவே
ஒருநாளும் ஓவா துரை.
மழுவாளர் தாமே மறையவராய் வந்து - மழுவாள் ஏந்தும் ஈசரே அந்தணர் உருவில் வந்து;
பழ-ஓலை காட்டிப் பணிகொள் அழகன் - ஒரு பழைய அடிமை-ஓலையைக் காட்டி ஆட்கொண்ட சுந்தரன்;
திருநாவலூராளி செந்தமிழை, நாவே, ஒரு நாளும் ஓவாது உரை - திருநாவலூர்க்கோன் ஆன சுந்தரர் பாடியருளிய தேவாரத்தை, நாக்கே, நீ நாள்தோறும் பாடு; (ஓவுதல் - ஒழிதல்; நீங்குதல்; மறத்தல்);
3)
முதலையுண்ட பிள்ளையை முக்கணுடை மூவா
முதலருளால் மீட்டளித்த மொய்ம்பர் இதழியைச்
சூடரனை ஆரூரில் தூதனுப்ப வல்லவர்
பாடல்கள் உய்க்கும் பரம்.
* புக்கொளியூர் அவிநாசியில் முதலை உண்ட பாலகனைப் பதிகம் பாடிச் சுந்தரர் மீட்டதைச்
சுட்டியது;
மொய்ம்பு - வலிமை;
இதழி - கொன்றைமலர்;
உய்த்தல் - கொண்டுபோதல்; கொடுத்தல்;
பரம் - மேலுலகம்; மோட்சம்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment