Sunday, February 2, 2025

N.042 - மாணிக்க வாசகர் துதி - குருந்தடியில்

N.042 - மாணிக்க வாசகர் துதி குருந்தடியில்

2016-07-03

N.042 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2016

----------------

1) --- நேரிசை வெண்பா ---

குருந்தடியில் ஞான குருவின் வடிவில்

பெருந்துறையில் வந்த பெருமான் திருந்தடிக்கே

கோத்தும்பி சென்றூதக் கூறியவர் தீந்தமிழை

நாத்தழுவி வாழ்தல் நலம்.


குருந்தடியில் - குருந்த-மரத்தின் கீழே;

திருந்தடி - திருந்து அடி - அழகிய திருவடி;

கோத்தும்பி சென்று ஊதக் கூறியவர் - திருவாசகத்தின் ஒரு பகுதி "திருக்கோத்தும்பி";

தீந்தமிழை நாத் தழுவி வாழ்தல் நலம் - திருவாசகத்தை நாவில் அணிந்து வாழ்வது நன்மை தரும்;


(திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.14 -

கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே

மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி

அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட

திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. )


2) --- நேரிசை வெண்பா ---

உத்தர கோசமங்கை உத்தமன்தாள் தம்மனத்தே

வைத்தமணி வாசகர் மண்ணோர்க்கு முத்தி

வழிகாட்டிச் சொன்னதமிழ் மாலைமொழி நாவே

பழிபாவம் தீரும் படி.


* "நாவே, பழி பாவம் தீரும்படி மொழி" என்ற சொற்றொடரை முதலில் வைத்துப் பொருள்கொள்க.

உத்தரகோசமங்கை - ஒரு தலத்தின் பெயர்;

முத்தி-வழி காட்டி - முக்தி-நெறியைக் காண்பித்து; முக்திக்கு வழியைக் காட்டி;

பழி - குற்றம்; குறை; பாவம்;

பாவம் - தீவினை;


(திருவாசகம் - பண்டாய நான்மறை - 8.48.7 -

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த

மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்

பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல

மருந்தினடி என்மனத்தே வைத்து. )


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment