N.042 - மாணிக்க வாசகர் துதி - குருந்தடியில்
2016-07-03
N.042 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2016
----------------
1) --- நேரிசை வெண்பா ---
குருந்தடியில் ஞான குருவின் வடிவில்
பெருந்துறையில் வந்த பெருமான் திருந்தடிக்கே
கோத்தும்பி சென்றூதக் கூறியவர் தீந்தமிழை
நாத்தழுவி வாழ்தல் நலம்.
குருந்தடியில் - குருந்த-மரத்தின் கீழே;
திருந்தடி - திருந்து அடி - அழகிய திருவடி;
கோத்தும்பி சென்று ஊதக் கூறியவர் - திருவாசகத்தின் ஒரு பகுதி "திருக்கோத்தும்பி";
தீந்தமிழை நாத் தழுவி வாழ்தல் நலம் - திருவாசகத்தை நாவில் அணிந்து வாழ்வது நன்மை தரும்;
(திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.14 -
கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. )
2) --- நேரிசை வெண்பா ---
உத்தர கோசமங்கை உத்தமன்தாள் தம்மனத்தே
வைத்தமணி வாசகர் மண்ணோர்க்கு முத்தி
வழிகாட்டிச் சொன்னதமிழ் மாலைமொழி நாவே
பழிபாவம் தீரும் படி.
* "நாவே, பழி பாவம் தீரும்படி மொழி" என்ற சொற்றொடரை முதலில் வைத்துப் பொருள்கொள்க.
உத்தரகோசமங்கை - ஒரு தலத்தின் பெயர்;
முத்தி-வழி காட்டி - முக்தி-நெறியைக் காண்பித்து; முக்திக்கு வழியைக் காட்டி;
பழி - குற்றம்; குறை; பாவம்;
பாவம் - தீவினை;
(திருவாசகம் - பண்டாய நான்மறை - 8.48.7 -
பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. )
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment