Saturday, February 17, 2018

04.12 – பாற்றுறை


04.12பாற்றுறை



2013-09-25
பாற்றுறை ( திருவானைக்காவிலிருந்து கல்லணை செல்லும் வழியில் கல்லணைக்கு அருகே 'பனையபுரம்' என்ற ஊருக்குப் பக்கத்தில் இத்தலம் உள்ளது)
----------------------------------
(கலிவிருத்தம் - 'விளம் விளம் மா விளம்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")



1)
சுழியினார் கங்கையைச் சூடும் முடியினார்
விழியினால் மன்மதன் வேவ நோக்கினார்
பழியிலார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
அழிவிலார் அடியடை அன்பர்க் கின்பமே.



சுழியின் ஆர் கங்கை - நீர்ச்சுழிகள் மிக்க கங்கை; (இன் - அசை); பழி இலார் - குற்றம் அற்றவர்; பாங்கர் - பக்கம்;



2)
திங்களும் கங்கையும் திகழும் முடியனை
அங்கையில் அழலனை ஆகத் துமையொரு
பங்கனைக் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைத்
தங்கிய சம்புவைச் சார இன்பமே.



ஆகம் - மேனி; தங்குதல் - நிலைத்து உறைதல்; சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்; சார்தல் - பொருந்துதல்;
இலக்கணக் குறிப்பு : "பாற்றுறைத் தங்கிய" - (பாற்றுறையின்கண் தங்கிய) - ஏழாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருந்தால் வலி மிகும்.



3)
விடையனை நான்மறை விரித்த ஆலனைப்
புடையினில் பெண்ணனைப் பொலியும் கூர்மழுப்
படையனைக் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைச்
சடையனை அடிதொழச் சாரும் இன்பமே.



விரித்தல் - விளக்கிச்சொல்லுதல்; ஆலன் - கல்லால மரத்தின்கீழ் இருப்பவன்; (சுந்தரர் தேவாரம் - 7.85.9 - "...கூடலை யாற்றூரில் ஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே"); புடை - பக்கம்; படை - ஆயுதம்;



4)
வடியினார் சூலமும் மழுவும் ஏந்தினார்
கொடியனார் இடுபலி கொள்ளக் கடையடை
படிறனார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைக்
குடியினார் அடிதொழக் கூடும் இன்பமே.



வடி - கூர்மை; கொடி அனார் - கொடி போன்ற பெண்கள்; இடுபலி - இடுகின்ற பிச்சை; கடை அடை - வீட்டின் வாயிலை அடைகின்ற; படிறன் - பொய்யன்; வஞ்சகன்; குடியினார் - வாழ்விடமாக உடையவர்;



5)
அம்புலி கூவிளம் அரவு சூடியைக்
கொம்பனை யாளொரு கூறு நாடியைப்
பைம்புனற் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
நம்பனை அடிதொழ நாளும் இன்பமே.



கூவிளம் - வில்வம்; சூடி - சூடியவன்; கொம்பு அனையாள் - பூங்கொம்பு போன்ற பார்வதி; நாடி - நாடியவன் - விரும்பியவன்; (ஆடுபவன் - ஆடி, சூடுபவன் - சூடி, பாடுபவன் - பாடி, என்பன போல், நாடுபவன் - நாடி); (உதாரணம்: திருவாசகம் - 8.39.2 - "சடையானே தழலாடீ"); பைம்புனல் - "பைம்புனல் என்பதில், பசுமை - புதுமையின் மேலும், குளிர்ச்சியின்மேலும் நின்றது". நம்பன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர்; விரும்பத் தக்கவன் என்பது பொருள்;



6)
குரவனார் சடைமிசைக் கோல மதியினார்
அரவனார் ஆதியும் அந்தம் ஆகிய
பரமனார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
பரவினார் பழவினை பறையும் திண்ணமே.



குரவன் - தலைவன்; கோல மதி - அழகிய பிறைச்சந்திரன்; அரவன் - பாம்பை அணிந்தவன்; பரவினார் - துதிப்பவர்கள்; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); பறைதல் - அழிதல்;



7)
சூடினார் கொன்றையைச் சுடலை தனில்நடம்
ஆடினார் அன்பருக் கன்பர் அருமறை
பாடினார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
நாடினார் பழவினை நலியும் திண்ணமே.



நாடினார் - நாடியவர்கள்; நலிதல் - அழிதல்;



8)
மதியிலாத் தசமுகன் வாட ஓர்விரல்
நுதியினால் நெரித்தருள் நோக்கும் கயிலையம்
பதியினார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மதியினார் அடிதொழ மல்கும் இன்பமே.



மதி இலாத் தசமுகன் - அறிவற்ற இராவணன்; நுதி - நுனி; அருள் நோக்குதல் - அருட்பார்வையால் நோக்குதல்; கயிலை அம் பதியினார் - அழகிய கயிலையில் உறைபவர்; (பதி - உறைவிடம்); (அம் - அழகிய; சாரியை என்றும் கொள்ளலாம்); மதியினார் - பிறை சூடியவர்; (அப்பர் தேவாரம் - 4.37.6 - "....நெய்த் தான மேய கூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே."); மல்குதல் - மிகுதல்; நிறைதல்;



9)
பூவினான் மாலிவர் போற்று சோதியான்
சேவினான் திரிபுரம் செற்ற சிலையினான்
பாவினால் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மேவினான் அடிதொழ வீடும் வினைகளே.



பூவினான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்; மால் - திருமால்; சே - எருது; சிலை - வில்; பாவினால் - பாமாலைகளைப் பாடி; மேவுதல் - உறைதல்; வீடுதல் - நீங்குதல்;



10)
பேய்மனப் பிட்டர்கள் பேசும் பொய்விடும்
ஆய்மல ராற்றொழும் அன்பர்க் கன்பினன்
பாய்புனற் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மேயவன் அடிதொழ வீடும் வினைகளே.



பிட்டர் - பிரட்டர் (பிரஷ்டர் என்ற வடசொல்லின் திரிபு) - நெறியிலிருந்து வழுவினவர்; ஆய்மலராற்றொழும் - ஆய்மலரால் தொழும் - ஆய்ந்தெடுத்த சிறந்த பூக்களால் வழிபடும்; மேயவன் - உறைபவன்;



11)
துணிமதி சூடியைச் சூலப் படையனை
அணியுமை பங்கனை அரையில் நாணெனப்
பணியணி கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மணியினை அடிதொழ மல்கும் இன்பமே.



துணிமதி - பிறைச்சந்திரன்; (துணிதல் - வெட்டுண்ணுதல்); அணி - அழகு; அரையில் நாண் என - இடுப்பில் அரைநாணாக; பணி அணி - நாகப்பாம்பை அணிந்த; (பணி - நாகம்); கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை மணியினை - கொள்ளிடக் கரையில் உள்ள திருப்பாற்றுறையில் உறைகின்ற மணி போன்றவனை;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம் - 'விளம் விளம் மா விளம்' என்ற வாய்பாடு.
மூன்றாம் சீர் (மாச்சீர்) குறில் / குறில்+ஒற்று என்று முடியும்.
இவ்வமைப்புப் பெரும்பாலும் கீழ்க்காணும் தேவாரப் பதிகங்களை ஒத்தது.
சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்"
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்"
அப்பதிகங்களில் அடிதோறும் ஈற்றுச் சீர் கூவிளம். ஆனால் இப்பதிகத்தில் அடி ஈற்றுச் சீரில் அக்கட்டுப்பாடு இன்றி எவ்வகை விளச்சீரும் வரலாம்.



2) பாற்றுறை - திமூலேஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=116



----------- --------------

No comments:

Post a Comment