Saturday, February 17, 2018

04.08 – மூவலூர்


04.08மூவலூர்



2013-08-31
மூவலூர் (மயிலாடுதுறையை அடுத்து உள்ள தலம்)
----------------------------------
(ஆசிரிய இணைக்குறட்டுறை. 1, 3ம் அடிகள் - அளவடி. 2,4ம் அடி: சிந்தடி என்ற அமைப்பு. யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க. )
(சம்பந்தர் தேவாரம் - 1.56.1 - காரார் கொன்றை கலந்த முடியினர்")



1)
அண்டத் தார்தொழும் ஆதிவெண் ணீறணி
முண்டத் தானுறை மூவலூர்
கண்டத் தன்கழல் போற்றிடு காதலர்
பண்டைத் தீவினை பாறுமே.



அண்டத்தார் - தேவர்; முண்டம் - நெற்றி; பாறுதல் - அழிதல்;


அண்டத்தார் தொழும் ஆதி - தேவர்கள் தொழும் ஆதிமூர்த்தி;
வெண்ணீறு அணி முண்டத்தான் உறை மூவலூர் - திருநீறு பூசிய நெற்றியை உடைய சிவபெருமான் உறையும் மூவலூரை;
கண்டு அத்தன் கழல் போற்றிடு காதலர் - தரிசித்து, எந்தை அவன் திருவடியைப் போற்றும் அன்பர்களுடைய;
பண்டைத் தீவினை பாறுமே - பழைய தீவினைகள் எல்லாம் அழியும்;



2)
மதில்கள் மூன்றை எரித்த மலைவில்லி
முதல்வன் மேவிய மூவலூர்
அதனை நண்ணி அரன்கழல் போற்றிடச்
சிதையும் தீவினை திண்ணமே.



மலைவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்; நண்ணி - அடைந்து; (நண்ணுதல் - கிட்டுதல்); அரன் கழல் - கழல் அணிந்த சிவன் திருவடி; சிதைதல் - அழிதல்;



3)
தீர்த்த மாம்புனல் செஞ்சடைச் சேர்த்தருள்
மூர்த்தி மேவிய மூவலூர்
பூத்தி ரள்கொடு போற்றி இருகரம்
சேர்த்த வர்க்கிடர் தீருமே.



தீர்த்தம் ஆம் புனல் - கங்கை;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.44.4 - "தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்து);



4)
ஆல நீழல் அமர்ந்தறம் சொல்லிறை
மூலன் மேவிய மூவலூர்
கோல மாமலர் கொண்டடி போற்றிடச்
சால வும்திருச் சாருமே.



ஆல நீழல் அமர்ந்து அறம் சொல் இறை - கல்லால மரத்தின்கீழ் இருந்து மறைப்பொருளை விளக்கும் தட்சிணாமூர்த்தி; மூலன் - ஆதி; எல்லாப் பொருள்கட்கும் மூலகாரணன்; கோல மாமலர் - அழகிய சிறந்த பூக்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.91.6 - "கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி..."); திரு - செல்வம்; சார்தல் - பொருந்தியிருத்தல்; சென்றடைதல்; சாலவும் திருச் சாரும் - மிகவும் செல்வம் வந்தடையும்;
('திருச் சாரும்': இலக்கணக் குறிப்பு : ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து: "115. முற்றியலுகரவீற்றுப் பெயர் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.")



5)
நேத்தி ரந்திகழ் நெற்றியன் நின்மலன்
மூத்த வன்னுறை மூவலூர்
பூத்த பூவொடு செந்தமிழ் பொன்னடிச்
சாத்து வார்வினை சாயுமே.



நேத்திரம் - கண்; நின்மலன் - நிர்மலன் - மலமற்றவன்; குற்றமற்றவன்; மூத்தவன்னுறை - னகர ஒற்று விரித்தல் விகாரம் - மூத்தவன் உறை; செந்தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன; சாத்துதல் - அணிதல்; சாய்தல் - அழிதல்;



6)
நக்கன் நான்முக னார்சிரம் ஏந்திய
முக்க ணானுறை மூவலூர்ப்
புக்கு நாண்மலர் கொண்டடி போற்றிட
மிக்க நன்மைகள் மேவுமே.



நக்கன் - நக்னன் - திகம்பரன்; நான்முகனார் - பிரமன்; முக்கணான் - முக்கண்ணான் - திரிநேத்திரன்; புக்கு - புகுந்து; மேவுதல் - அடைதல்; பொருந்துதல்;



7)
மன்ன வன்மதி சூடி மகிழ்ந்தவன்
முன்ன வன்னுறை மூவலூர்
சென்னி யால்தொழு வாரவர் தீவினை
வன்னி சேர்விற கன்னதே.



முன்னவன்னுறை - னகர ஒற்று விரித்தல் விகாரம் - முன்னவன் உறை; சென்னி - தலை; வன்னி - நெருப்பு; வன்னி சேர் விறகு அன்னது - தீச்சேர்ந்த விறகைப் போன்றது;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.3 -
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்று மில்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.)



8)
மத்தன் வாளவு ணன்முடி பத்தடர்
முத்தன் மேவிய மூவலூர்
பத்தி யோடு பரவிடு வார்கட்கு
நித்தல் நன்மை நிகழுமே.



மத்தன் - உன்மத்தன் - கிறுக்கன்; செருக்குற்றவன்; வாள் - கொடுமை; மத்தன் வாள் அவுணன் முடி பத்து அடர் - செருக்குற்றவனும் கொடியவனுமான அரக்கன் இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கிய; முத்தன் - அநாதிமுத்தன், இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன்; பத்தி - பக்தி; பரவுதல் - துதித்தல்; புகழ்தல்; நித்தல் - நித்தலும் - எந்நாளும்; நிகழ்தல் - தங்குதல்; சம்பவித்தல்; விளங்குதல்;



9)
நெடிய மாலொடு நான்முகன் நேடிய
முடிவி லானுறை மூவலூர்
கடியு லாமலர் தூவிக் கரைபவர்
செடிய வல்வினை தீருமே.



நேடுதல் - தேடுதல்; முடிவு இலான் - முடிவற்றவன்; (ஆதி அந்தம் இல்லாச் சோதி); கடி உலாம் மலர் - வாசனை கமழும் பூக்கள்; (கடி - வாசனை. உலாம் - உலாவும்); கரைதல் - உள்ளம் உருகுதல்; செடிய - துன்பம் தருவனவாகிய; (செடி - துன்பம்); வல்வினை - கொடிய வினை;
(சம்பந்தர் தேவாரம் - 3.3.7 - "அடியவர் தொழுதெழ அமரரேத்தச் செடியவல் வினைபல தீர்ப்பவனே....");



10)
சிந்தி யார்பகர் புன்னெறி செல்லன்மின்
முந்தி னானுறை மூவலூர்
சந்த மார்தமிழ் சாத்திட வல்வினை
சிந்து மேவரும் செல்வமே.



சிந்தியார் பகர் - எண்ணாதவர்கள் சொல்கின்ற; பகர்தல் - சொல்லுதல்; விற்றல்; செல்லன்மின் - சாராதீர்கள்; போகவேண்டா; முந்தினான் - எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவன் - சிவன்; சந்தம் ஆர் தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன; சிந்துதல் - அழிதல்;
(சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்...." - ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால் அறியப் பெறாதவன்);





11)
பூட்டி னான்சரம் மூன்று புரமெரி
மூட்டி னானுறை மூவலூர்
பாட்டி னால்பர விப்பணி வார்வினை
வீட்டு வான்நம் விடையனே.



பூட்டுதல் - மாட்டுதல்; சரம் - அம்பு; எரி மூட்டுதல் - தீயை மூளச் செய்தல்; பூட்டினான், மூட்டினான் - பூட்டியவன், மூட்டியவன்; வீட்டுதல் - அழித்தல்; நீக்குதல்; விடையன் - இடபவாகனன் - சிவபெருமான்;






அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
ஆசிரிய இணைக்குறட்டுறை. 1, 3ம் அடிகள் - அளவடி. 2,4ம் அடி: சிந்தடி. - என்ற அமைப்பு.
அடி 1 & 3: மா கூவிளம் கூவிளம் கூவிளம்
அடி 2 & 4: மா கூவிளம் கூவிளம்
அடி நேரசையில் தொடங்கினால், 11 / 8 எழுத்துகள். அடி நிரையசையில் தொடங்கினால் 12 / 9 எழுத்துகள்.
அடிதோறும் 2-ஆம் சீர் நேரசையில் தொடங்கும்.
2,3,4 சீர்களிடையே வெண்டளை பயிலும்.
அடிதோறும் ஈற்றுச்சீரைத் தவிர மற்ற சீர்களில் விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரலாம். அப்படி அங்கு மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.



2) சம்பந்தர் தேவாரம் - 1.56.1 -
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.



3) மூவலூர் - மார்க்கசகாயேஸ்வரர் கோயில் : http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_moovalur.htm



4) இத்தலத்தில் (மூவலூரில்) சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். ஆனால் அப்பதிகம் கிடைத்திலது. (பெரியபுராணத்தில் சம்பந்தர் புராணத்தில் 437-ஆம் பாடல் காண்க: "மூவ லூருறை முதல்வரைப் பரவிய மொழியால்...");



5) திருநாவுக்கரசர் தேவாரத்தில் இரு பாடல்களில் மூவலூர் வைப்புத் தலமாக வருகின்றது. (5.65.8 & 6.41.9). அவற்றுள் ஒன்று:
அப்பர் தேவாரம் - 5.65.8
பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே.)



----------- --------------
Tags: மூவலூர், ஆசிரிய இணைக்குறட்டுறை,




No comments:

Post a Comment