Saturday, February 17, 2018

04.09 – புனவாயில் (திருப்புனவாயில்)


04.09புனவாயில் (திருப்புனவாயில்)



2013-09-02
புனவாயில் (திருப்புனவாயில் - "திருப்புனவாசல்")
----------------------------------
(அந்தாதியாக மண்டலித்து வரும் 11 பாடல்கள். முதற்பாடல் 'கள்ளார்' என்று தொடங்கி, இறுதிப்பாடல் 'அடைமின்களே' என்று முடிகின்றது.)
(ஆசிரிய இணைக்குறட்டுறை. 1, 3ம் அடிகள் - அளவடி. 2,4ம் அடி: சிந்தடி என்ற அமைப்பு. யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க. )
(சம்பந்தர் தேவாரம் - 1.56.1 - காரார் கொன்றை கலந்த முடியினர்")

1)
கள்ளார் கொன்றை கதிர்மதி சூடிய
வள்ளால் வாரிநஞ் சுண்டவா
புள்ளார் பூம்பொழில் சூழ்புன வாயிலில்
உள்ளாய் என்னுமென் உள்ளமே.



கள் ஆர் கொன்றை - தேன் மலிந்த கொன்றைமலர்; வள்ளால் - வள்ளலே என்ற விளி; (தோன்றல் - தோன்றால், அண்ணல் - அண்ணால், என்பனபோல்); வாரி - 1) கடல்; 2) அள்ளி; (வாருதல் - அள்ளுதல்); புள் - பறவை; ஆர்த்தல் - ஒலித்தல்; பூம்பொழில் - அழகிய சோலை; உள்ளாய் - உள்ளவனே; எழுந்தருளியவனே;


2)
உள்ளும் நெஞ்சில் உகந்துறை உத்தமன்
வெள்ளம் தாங்கிய வேணியன்
புள்ளி மான்கரன் பூம்புன வாயிலில்
வெள்ளை ஏறு விரும்பியே.



உள்ளுதல் - தியானித்தல்; உகத்தல் - விரும்புதல்; வெள்ளம் - கங்கை; வேணி - சடை; புள்ளிமான் கரன் - மானைக் கையில் ஏந்தியவன்;


3)
விரும்பி வாழ்த்திட வெவ்வினை தீர்ப்பவன்
சுரும்பு சேர்குழ லிக்கிடம்
தரும்ப வித்திரன் தண்புன வாயிலில்
இரும்பு னல்சடை ஏற்றியே.



சுரும்பு சேர் குழலிக்கு இடம் தரும் பவித்திரன் - வண்டுகள் சேரும் மலரணிந்த குழலியான உமைக்கு இடப்பாகம் தரும் தூயவன்; இரும் புனல் - பெரிய புனல் - கங்கை; சடை ஏற்றி - சடையில் ஏற்றியவன்;


4)
ஏற தேறிய ஏந்தலை ஒண்திரு
நீற ணிந்த நிமலனைத்
தேற லின்தெளி வைப்புன வாயிலிற்
கூற இன்பங்கள் கூடுமே.



ஏறு - இடபம்; ஏந்தல் - பெருமையுடையவன்; அரசன்; தேறல் - தேன்; கூறுதல் - புகழ்தல்; சொல்லுதல்; கூடுதல் - பொருந்துதல்; மிகுதல்; தேற லின்தெளி வைப்புன வாயிலிற் - புனவாயிலில் தேறலின் தெளிவை ;


5)
கூடு முப்புரம் செற்றவன் கொன்றையும்
சூடு மீசன் சுடலையில்
ஆடு வான்புன வாயிலை அன்பொடு
நாடு வார்வினை நாசமே.



கூடுதல் - சேர்தல்; செறுதல் - அழித்தல்;


6)
நாசம் அற்றவன் நற்றவர்க் குற்றவன்
வாசம் ஆர்தமிழ் மாலையாற்
பூச னைக்கருள் வான்புன வாயிலை
நேச மாயடை நெஞ்சமே.



நாசம் அற்றவன் - அழிவில்லாதவன்; நற்றவர்க்கு உற்றவன் - நல்ல தவம் செய்பவர்க்குத் துணை ஆனவன்; அருள்வான் - அருள்பவன்;


7)
நெஞ்சில் நாளும் நினைப்பவர்க் கன்பினன்
நஞ்சை உண்டருள் நல்லவன்
மஞ்சு சேர்பொழில் சூழ்புன வாயிலில்
மஞ்சன் தாள்தொழ வம்மினே.



மஞ்சு - மேகம்; மஞ்சன் - மைந்தன்; வம்மின் - வாருங்கள்; வருவீராக;


8)
வந்து வெற்பசை வாளரக் கன்வலி
சிந்த ஓர்விரல் வைத்தவன்
அந்தி வண்ணன் அணிபுன வாயிலைச்
சிந்தித் தார்வினை தீருமே.



வெற்பு - மலை - கயிலைமலை; வாள் அரக்கன் - கொடிய அரக்கன் - இராவணன்; வலி - வலிமை; சிந்துதல் - அழிதல்; அணி - அழகிய; சிந்தித்தார் வினை - சிந்திப்பவர்கள்தம் வினைகள்;


9)
தீரா வாதுசெய் மாலயன் தேடியும்
சேரா அந்தமில் தீயவன்
போரான் ஊர்தியன் பூம்புன வாயிலைப்
பேரான் எம்மரன் பெற்றியே



மால் அயன் - திருமாலும் பிரமனும்; சேர்தல் - அடைதல்; அந்தம் இல் தீ அவன் - முடிவில்லாத சோதி ஆனவன்; போர் ஆன் ஊர்தியன் - போர் செய்யும் ஆற்றலோடுகூடிய இடபத்தை ஊர்தியாக உடையவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.12.3 - "புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்"); பேரான் - நீங்காதவன்; (பேர்தல் - நீங்குதல்); பெற்றி - தன்மை; பெருமை;


10)
பெற்றம் ஏறியைப் பேணகி லார்மொழி
வெற்றுப் பேச்சை விடுமினே
புற்ற ராப்புனை வான்புன வாயிலைச்
சுற்று வார்க்கிலை துன்பமே.



பெற்றம் - இடபம்; பேணகிலார் - பேணமாட்டாதவர்கள் - போற்றாதவர்கள்; விடுமின் - விடுங்கள்; நீங்குவீர்; புற்று அராப் புனைவான் - புற்றி வாழும் தன்மை உடைய பாம்பை அணிபவன்; சுற்றுதல் - பிரதட்சிணம் செய்தல்;


11)
துன்பம் நல்கிடும் தொல்வினை நீங்கிட ,
என்பு பூண்டவன் ஏற்றினன்
புன்ச டைப்பரன் தென்புன வாயிலை
அன்பி னாலடை மின்களே.



தொல்வினை - பழவினை; என்பு - எலும்பு; ஏற்றினன் - இடப வாகனன்; புன்சடை - செஞ்சடை; (புன்மை - புகர் நிறம் - (tawny color)); பரன் - மேலானவன்; தென் - அழகிய; அடைமின்கள் - அடையுங்கள்; அடைவீராக;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
ஆசிரிய இணைக்குறட்டுறை. 1, 3ம் அடிகள் - அளவடி. 2,4ம் அடி: சிந்தடி. - என்ற அமைப்பு.
அடி 1 & 3: மா கூவிளம் கூவிளம் கூவிளம்
அடி 2 & 4: மா கூவிளம் கூவிளம்
அடி நேரசையில் தொடங்கினால், 11 / 8 எழுத்துகள். அடி நிரையசையில் தொடங்கினால் 12 / 9 எழுத்துகள்.
அடிதோறும் 2-ஆம் சீர் நேரசையில் தொடங்கும்.
2,3,4 சீர்களிடையே வெண்டளை பயிலும்.
அடிதோறும் ஈற்றுச்சீரைத் தவிர மற்ற சீர்களில் விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரலாம். அப்படி அங்கு மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.



2) சம்பந்தர் தேவாரம் - 1.56.1 -
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.



3) திருப்புனவாயில் - விருத்தபுரீஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=254



----------- --------------

No comments:

Post a Comment