Saturday, February 17, 2018

04.10 – பூவாளூர்


04.10பூவாளூர்



2013-09-04
பூவாளூர் (இத்தலம் லால்குடிக்கு அருகு உள்ளது )
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - "கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்")



1)
கானாறு கணையெய்த காமனுடல் பொடிசெய்தாய்
வானாறு மதித்துண்டம் வார்சடையில் வைத்துகந்தாய்
ஊனாறு சிரமேந்தீ உன்னடியேற் கருள்புரியாய்
பூநாறு பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



கான் - மணம்; வாசனை; நாறுதல் - மணம் வீசுதல்; வானாறு - வான் ஆறு - கங்கை; வார்தல் - நீள்தல்; ஏந்தீ - ஏந்தியே - ஏந்தியவனே என்ற விளி;
கான் நாறு கணை எய்த காமன் உடல் பொடி செய்தாய் - மணம் வீசும் மலர்க்கணையை எய்த மன்மதன் உடலை எரித்துச் சாம்பலாக்கியவனே;
வானாறு மதித்துண்டம் வார்சடையில் வைத்து உகந்தாய் - கங்கையையும் பிறைச்சந்திரனையும் நீண்ட சடையில் சூடி மகிழ்ந்தவனே;
ஊன் நாறு சிரம் ஏந்தீ; உன் அடியேற்கு அருள்புரியாய் - புலால் நாற்றம் வீசும் பிரமன் தலையை ஏந்தியவனே; உன் பக்தனான எனக்கு அருள்புரிவாயாக;
பூ நாறு பொழில் ஆரும் பூவாளுர் மேயவனே - பூக்கள் மணம் வீசும் சோலைகள் பொருந்திய பூவாளூர் என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.



2)
நற்றவனே நாளுமுனை நம்பியடி பணிவார்கட்
குற்றவனே ஊர்விடையொன் றுகந்தேறும் கொற்றவனே
சொற்றமிழால் துணையடியே துதிப்பேற்கும் அருள்புரியாய்
புற்றரவா பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



நம்புதல் - விரும்புதல்; உற்றவன் - உற்ற துணையாக இருப்பவன்; கொற்றவன் - அரசன்; சொற்றமிழ் - சொல் + தமிழ்; துணையடி - இரு திருவடிகள்; துதிப்பேற்கும் - துதிக்கின்ற அடியேனுக்கும்; புற்றரவா - புற்றில் வாழும் தன்மை உடைய அரவத்தை அணிந்தவனே;



3)
பண்ணியலும் பாடலுக்கு மிழலைதனில் படியருள்வாய்
தண்ணியலும் சந்திரனைச் சடைவைத்தாய் அடிபரவில்
பண்ணியவல் வினைதீர்ப்பாய் பணிந்தேற்குப் பரிந்தருளாய்
புண்ணியனே பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



* அடி-1 திருவீழிமிழலையில் சம்பந்த்ருக்கும் அப்பருக்கும் தினமும் படிக்காசு அருளியதைச் சுட்டியது.
தண் - குளிர்ச்சி; பரவில் - பரவினால்; துதித்தால்; பணிந்தேற்கு - பணிந்து தொழும் எனக்கு; பரிதல் - இரங்குதல்;



4)
முன்னிடையாய் முடிவானாய் மூவாத முக்கண்ணா
மின்னிடையாள் பங்கினனே வெள்விடையாய் மழுப்படையாய்
என்னுடையாய் என்றுன்னை ஏத்தலல்லால் மற்றறியேன்
புன்சடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



முன் இடை ஆய் முடிவு ஆனாய் - முதல், நடு ஆகி முடிவு ஆனவனே;
மூவாத முக்கண்ணா - என்றும் இளமையோடு இருக்கும் முக்கண்ணனே;
மின் இடையாள் பங்கினனே - மின்னற்கொடி போல் நுண்ணிய இடையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்தவனே;
வெள் விடையாய் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவனே;
மழுப்படையாய் - மழுவாயுதத்தை ஏந்தியவனே;
என் உடையாய் என்று உன்னை ஏத்தல் அல்லால் மற்று அறியேன் - 'என் சுவாமீ ' என்று உன்னைத் துதித்தல் அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன்;
புன்சடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே - செஞ்சடை உடையவனே; சோலைகள் பொருந்திய பூவாளூர் என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே. (அருள்புரிவாயாக).



5)
துரிசடையா நெஞ்சத்தார் துதிசெய்து மகிழ்கின்ற
பரிசுடையாய் பாரிடங்கள் முழவார்க்கப் பல்பிணங்கள்
எரிசுடலை யிடையாடீ இணையடியை மறவேனே
புரிசடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



துரிசு - குற்றம்; பரிசு - குணம்; பெருமை; பாரிடம் - பூதம்; முழவு ஆர்க்க - முழவுகளை ஒலிக்க; பல்பிணங்கள் எரி சுடலையிடை ஆடீ - பல பிணங்கள் எரியும் சுடலையில் ஆடுபவனே; புரிசடையாய் - முறுக்கிய சடையை உடையவனே;



6)
கற்சிலையைக் கையேந்திக் கணையொன்றால் புரமெரித்த
அற்புதனே தொழுமிரதிக் கருள்புரிந்தாய் உன்னிரண்டு
நற்பதமே நாடிவந்தேன் நரைவிடையாய் நஞ்சுண்ணும்
பொற்புடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



கற்சிலை - கல் + சிலை - மேருமலையாகிய வில்; தொழும் இரதிக்கு அருள்புரிந்தாய் - தொழுத இரதிக்கு இரங்கி மன்மதனுக்கு உயிர்கொடுத்தவனே; (இரதிக்கு அருள்புரிந்த வரலாற்றைப் பூவாளூர்த் தலபுராணத்திற் காண்க). பொற்பு - தன்மை;



7)
நதியணியும் நாதாஉன் நாமத்தை மறவேனே
துதியடியார்க் கணியாகித் துயர்துடைப்பாய் இரதிக்குப்
பதியவனை உயிர்ப்பித்த பரிவுடையாய் பழையவனே
புதியவனே பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



இரதிக்குப் பதி - மன்மதன்;



8)
வலியதனைக் கருதிவந்து மலையெடுத்த வாளரக்கன்
மெலியவொரு விரலூன்றி மிகவுமருள் புரிந்தவனே
கலியடையா வாறென்னைக் காத்தருளாய் கண்ணுதலே
புலியதளாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



வலி அதனை - தன் வலிமையை; வாள் அரக்கன் - கொடிய இராவணன்; (வாள் - கொடுமை); மெலிதல் - வருந்துதல்; கலி - துன்பம்; புலி அதளாய் - புலித்தோலை அணிந்தவனே; (அதள் - தோல்);



9)
கருவமலி நெஞ்சினராய்க் கழலுச்சி காணமுயல்
இருவரறி தற்கரிய எரியானாய் இருள்கொண்ட
ஒருமிடறு திகழ்வோனே உனைப்பரவும் எனக்கருளாய்
பொருவிடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



கருவம் மலி நெஞ்சினராய்க் கழல் உச்சி காண முயல் இருவர் - ஆணவத்தோடு அடியும் முடியும் தேடிய திருமாலும் பிரமனும்; (கருவம் - கர்வம், செருக்கு); (அப்பர் தேவாரம் - இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - 5.95.6 - "...தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே"); ஒரு மிடறு - ஒப்பற்ற கண்டம்; பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பொருதல் - போர்செய்தல்;



10)
நள்ளார்கள் அரனடியை; நாக்கொண்டு பொய்யல்லால்
விள்ளார்கள்; அவர்பிதற்றும் வெற்றுரையைப் பொருளாகக்
கொள்ளார்கள் நன்மதியோர்; கும்பிடுவார் வினைதீர்ப்பான்
புள்ளார்பூம் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



நள்ளார்கள் - விரும்பமாட்டார்கள்; (நள்ளுதல் - நட்டல் - விரும்புதல்); நாக்கொண்டு - நாக்கால்; பொய் அல்லால் - பொய்யைத் தவிர வேறு ஒன்றும்; விள்ளார்கள் - சொல்லமாட்டார்கள்; (விள்ளுதல் - சொல்லுதல்); கொள்ளார்கள் - மதிக்கமாட்டார்கள்;
கொள்ளார்கள் நன்மதியோர் கும்பிடுவார் வினைதீர்ப்பான் - "....கொள்ளார்கள் நன்மதியோர்; நன்மதியோர் அரனடியைக் கும்பிடுவார்; கும்பிடுவார் வினைதீர்ப்பான்...." என்றும் பொருள்கொள்ளலாம்;
புள் ஆர் பூம்பொழில் - பறவைகள் ஒலிக்கும் சோலைகள்;



11)
நாகமணி மார்பினனே நயந்துண்ட நஞ்சதனால்
மேகமணி கண்டத்தாய் வெற்பரையன் மங்கையொரு
பாகமணி ஆகத்தாய் பணிவார்க்குப் பரிவாய்முப்
போகமணி வயல்சூழ்ந்த பூவாளுர் மேயவனே.



பதம் பிரித்து:
நாகம் அணி மார்பினனே; நயந்து உண்ட நஞ்சு அதனால்
மேகம் அணி கண்டத்தாய்; வெற்பு அரையன் மங்கை ஒரு
பாகம் அணி ஆகத்தாய்; பணிவார்க்குப் பரிவாய்; முப்
போகம் அணி வயல் சூழ்ந்த பூவாளுர் மேயவனே.


மேகமணி கண்டத்தாய் - மேக மணி கண்டத்தாய் / மேகம் அணி கண்டத்தாய்; (அப்பர் தேவாரம் - 6.68.4 - "ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை ... கார்மேக மிடற்றானை ..."); (திவ்வியப்பிரபந்தம் - பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - #2267 - "...மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனையான் எத்தவத்தால் காண்பன்கொல் இன்று");
முப்போகமணி வயல் - முப்போகம் அணி வயல் / முப்போக மணி வயல்;
பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவனே; விரும்பி உண்ட விடத்தால் கழுத்தில் மேகம்போல் கருமை திகழ்பவனே; மலைமகளை ஒரு பாகமாகக் கொண்ட திருமேனி உடையவனே; பணிகின்ற பக்தர்களுக்கு இரங்குபவனே; வருடத்திற்கு மூன்று போகம் விளைச்சல் திகழும் செழுமையான வயல்கள் சூழ்ந்த பூவாளுர் என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) பூவாளூர் - திருமூலநாதர் சுவாமி கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=2229



----------- --------------

No comments:

Post a Comment